முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹெமிங்வேயின் தலைப்புகள்

குத்துச்சண்டை பழகும் ஹெமிங்வே

ஹெமிங்வே மிக அழகான கவித்துவமான தலைப்புகள் இடக் கூடியவர். எனக்கு பிரியமானவை The Sun also Rises, Men without Women, For whom the Bell Tolls, Winner Take Nothing ஆகியவை. The Sun also Rises எனக்கு மிக மிக பிடித்தமான நாவல். வாழ்க்கையை ஒரு தனித்துவமான விதிகள் கொண்ட புதிரான விளையாட்டாக சித்தரித்திருப்பார். இந்த விளையாட்டை கற்று திறமையாக ஆடுகிறவன் வாழ்க்கையை கொண்டாடுகிறான், ரசிக்கிறான், ஒருவேளை வெல்கிறான். காளைச்சண்டை, காதல், செக்ஸ், எழுத்து எல்லாமே இந்த “தீராத விளையாட்டு” தான்.


இத்தலைப்பை அவர் விவிலியத்தில் இருந்து எடுக்கிறார். என்னதான் நடந்தாலும், மாபெரும் துயரங்கள், அழிவுகள் நிகழ்ந்தாலும் அடுத்த நாள் அழகாக சூரியன் உதிக்கிறான் என்பது அவ்வரி. விவிலிய ஆங்கிலம் என்பதால் தான் “கூட” எனும் பொருளில் also வருகிறது. நவீன ஆங்கிலத்தில் இவ்வாக்கியம் The Sun Rises Too என இருக்க வேண்டும். நாவலை படிக்கிறவர்களுக்கு இது எவ்வளவு பொருத்தமான தலைப்பு என புரியும். அதாவது விவிலிய காலத்தில் என்னதான் அன்றாட துயரங்கள் இருந்தாலும் அவற்றை கடந்த ஒரு நிரந்தர இயக்கம் உள்ளது, அது தான் கடவுள் என புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஹெமிங்வேயின் காலத்தில் கடவுள் இறந்து விடுகிறார். தேவாலயத்தில் ஒரு சடங்காக மட்டும் எஞ்சி விடுகிறார். ஆனாலும் மனித பேரழிவுகளை கடந்த ஒரு மகாசம்பவமாக வாழ்வு அதற்கு வெளியே அப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. என்ன அதற்கு அர்த்தம் கற்பிக்க முடியாது. ஏன் போரில் மக்கள் மடிகிறார்கள் என்பதற்கு அர்த்தம் காண முடியாது. ஆனால் போர் ஒரு பக்கம் நொதிக்கும் போதும் இன்னொரு பக்கம் வாழ்க்கை நிதானமாக அதன் போக்கில் செல்லும் அபத்தத்தை உணர முடியும். “சூரியனும் உதிக்கத்தானே செய்கிறது” என்பதில் இந்த அபத்தத்தை உணர்ந்தவனின் நக்கல் உள்ளது.

For whom the Bell Tolls இன்னொரு அழகான தலைப்பு. இதை ரெண்டு விதமாக மொழிபெயர்க்கலாம். 1) யாருக்காக மணி ஒலிக்கப்படுகிறது? 2) மணி ஒலிக்கப்படுபவர்களுக்கு. ஆங்கில தலைப்பில் கேள்விக்குறி (?) இல்லை என்பதை கவனிக்க வேண்டும். அப்போது whom கேள்விச் சொல்லாக அன்றி pronoun ஆகிறது. இரண்டாவது மொழிபெயர்ப்பே சரி எனக் கூறுவதற்கு இதை ஒரு எளிய ஆதாரம் எனலாம். மேலும் இரண்டாவது தலைப்பில் யார் என்ற கேள்வியை விட, மணி ஒலியினால் உணர்த்தப்படுபவர்களைப் பற்றியது இந்நாவல் எனும் தொனி உள்ளது.

பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்த ஆங்கில கவிஞன் ஜான் டன்னின் ஒரு கட்டுரையில் இருந்து தலைப்பை ஹெமிங்வே எடுக்கிறார். இங்கிலாந்தில் யாராவது இறந்தால் தேவாலயத்தில் ஒற்றைமணி அடிப்பார்கள். யார் இறந்தார்கள் என்ற அர்த்தத்தில் ஒருவர் for whom the bell tolls? என கேட்கிறார். டன் அதற்கு யார் தனியாக சாவதில்லை, யார் இறந்தாலும் நம்மில் கொஞ்சமும் தான் சாகிறது என்ற பொருளில் பதில் சொல்கிறார். இது ஒரு ஆன்மீக கட்டுரை. டன்னின் பதிலும் ஆன்மீக விரிவை கோரி வாழ்வின் பதிலை அதில் தேடுவது. மனிதன் இறந்தாலும் இறப்பதில்லை, பிரம்மாண்டத்தில் கலந்து விடுகிறான். அப்படியே ஒரு மனித இழப்பு நடந்தாலும் அது தனித்து இல்லை, அதன் வழி அத்தனை பேரும் தான் எதையோ இழக்கிறோம் என கூறுகிறார் டன். ஆனால் ஹெமிங்வே இந்த தலைப்பை எடுத்தாண்டிருந்தாலும் அவருக்கு டன்னை போல் கடவுள் நம்பிக்கை இல்லை. டன் மனித இழப்பின் பொறுப்பை கடவுள் எனும் பிரம்மாண்ட்த்திடம் விட்டு விடுகிறார். ஆனால் ஹெமிங்வேயால் அது இயலாது. அவர் எப்படி புரிந்து கொள்கிறார்? ஒரு மனிதன் மரிக்கும் போது, சீரழியும் போது அதன் பொறுப்பு, காரணம் அவனை சுற்றி உள்ள அத்தனை மனிதர்களும் தான் என்கிறார். கடவுள் இல்லா உலகில் மனிதன் தனக்கே தான் பொறுப்பாக வேண்டும். அந்த மனிதனை தான் “மணி ஒலிக்கப்படுபவருக்கு” என அழைக்கிறார். கிட்டத்தட்ட ஜான் டன்னின் பொருளில், ஆனால் கொஞ்சம் மாற்றி.

ஹெமிங்வே தன் நாவலில் ஸ்பெயினில் நடக்கும் போரில் மாண்டு போகும் மக்களை பற்றி பேசுகிறார். போரில் அவர்களின் இழப்புக்கு, குற்றங்களுக்கு, இழிவுக்கு யார் காரணம் எனும் கேள்வி வரும் போது ஹெமிங்வே அவர்களே தான் என்கிறார். இப்படி அவர் யோசிப்பதற்கு ஹெமிங்வே ஒரு இருத்தலியல்வாதி என்பதும் காரணம். ஆக இந்நாவலின் தலைப்பின் ஒரு பொருள் இந்த அழிவுக்கெல்லாம் காரணமானவர்களுக்கு என்பது. சாவு மணிக்கு எல்லாருமே காரணம் என்பது.


இன்று ஹெமிங்வேயின் நினைவு தினம். அவருக்கு ஒரு எளிய வாசகனின் சமர்ப்பணம்

கருத்துகள்

azhagarasan.com இவ்வாறு கூறியுள்ளார்…
Great piece. Calm, condensed, incisive and convincing. Thought of using it for the translation class.

Best regards
Azhagarasan
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
Thanks sir
- R.Abilash
மணியோசை இவ்வாறு கூறியுள்ளார்…
Very nice dedication. true to the spirit of Hemingway's works. What's your take on Oldman and the sea? கடலும் கிழவனும் or something else?
Manikandan
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
கடலும் கிழவனும் பற்றி தனியே எழுதுகிறேன். சமீபத்தில் கூட திரும்ப படித்தேன். ஒரு நீண்ட சிறுகதை போல் தோன்றியது. அங்கங்கே ஹெமிங்வேயின் முத்திரையான சித்தரிப்புகளும் நுணுக்கங்களும் உண்டு. குறிப்பாய் கிழவன் கடலில் தன் கைகளுடன் பேசுவது, மீனுடன் பேசுவது, நட்சத்திரங்களை ஏன் மனிதன் வேட்டையாடுவதில்லை என கூறுவது. மார்க்வெஸின் Shipwrecked Sailor நாவலில் இதன் தத்துவ ஆழம் இல்லாவிட்டாலும் இதை விட பிரமாதமாக எழுதப்பட்டது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...