Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஹெமிங்வேயின் தலைப்புகள்

குத்துச்சண்டை பழகும் ஹெமிங்வே

ஹெமிங்வே மிக அழகான கவித்துவமான தலைப்புகள் இடக் கூடியவர். எனக்கு பிரியமானவை The Sun also Rises, Men without Women, For whom the Bell Tolls, Winner Take Nothing ஆகியவை. The Sun also Rises எனக்கு மிக மிக பிடித்தமான நாவல். வாழ்க்கையை ஒரு தனித்துவமான விதிகள் கொண்ட புதிரான விளையாட்டாக சித்தரித்திருப்பார். இந்த விளையாட்டை கற்று திறமையாக ஆடுகிறவன் வாழ்க்கையை கொண்டாடுகிறான், ரசிக்கிறான், ஒருவேளை வெல்கிறான். காளைச்சண்டை, காதல், செக்ஸ், எழுத்து எல்லாமே இந்த “தீராத விளையாட்டு” தான்.


இத்தலைப்பை அவர் விவிலியத்தில் இருந்து எடுக்கிறார். என்னதான் நடந்தாலும், மாபெரும் துயரங்கள், அழிவுகள் நிகழ்ந்தாலும் அடுத்த நாள் அழகாக சூரியன் உதிக்கிறான் என்பது அவ்வரி. விவிலிய ஆங்கிலம் என்பதால் தான் “கூட” எனும் பொருளில் also வருகிறது. நவீன ஆங்கிலத்தில் இவ்வாக்கியம் The Sun Rises Too என இருக்க வேண்டும். நாவலை படிக்கிறவர்களுக்கு இது எவ்வளவு பொருத்தமான தலைப்பு என புரியும். அதாவது விவிலிய காலத்தில் என்னதான் அன்றாட துயரங்கள் இருந்தாலும் அவற்றை கடந்த ஒரு நிரந்தர இயக்கம் உள்ளது, அது தான் கடவுள் என புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஹெமிங்வேயின் காலத்தில் கடவுள் இறந்து விடுகிறார். தேவாலயத்தில் ஒரு சடங்காக மட்டும் எஞ்சி விடுகிறார். ஆனாலும் மனித பேரழிவுகளை கடந்த ஒரு மகாசம்பவமாக வாழ்வு அதற்கு வெளியே அப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. என்ன அதற்கு அர்த்தம் கற்பிக்க முடியாது. ஏன் போரில் மக்கள் மடிகிறார்கள் என்பதற்கு அர்த்தம் காண முடியாது. ஆனால் போர் ஒரு பக்கம் நொதிக்கும் போதும் இன்னொரு பக்கம் வாழ்க்கை நிதானமாக அதன் போக்கில் செல்லும் அபத்தத்தை உணர முடியும். “சூரியனும் உதிக்கத்தானே செய்கிறது” என்பதில் இந்த அபத்தத்தை உணர்ந்தவனின் நக்கல் உள்ளது.

For whom the Bell Tolls இன்னொரு அழகான தலைப்பு. இதை ரெண்டு விதமாக மொழிபெயர்க்கலாம். 1) யாருக்காக மணி ஒலிக்கப்படுகிறது? 2) மணி ஒலிக்கப்படுபவர்களுக்கு. ஆங்கில தலைப்பில் கேள்விக்குறி (?) இல்லை என்பதை கவனிக்க வேண்டும். அப்போது whom கேள்விச் சொல்லாக அன்றி pronoun ஆகிறது. இரண்டாவது மொழிபெயர்ப்பே சரி எனக் கூறுவதற்கு இதை ஒரு எளிய ஆதாரம் எனலாம். மேலும் இரண்டாவது தலைப்பில் யார் என்ற கேள்வியை விட, மணி ஒலியினால் உணர்த்தப்படுபவர்களைப் பற்றியது இந்நாவல் எனும் தொனி உள்ளது.

பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்த ஆங்கில கவிஞன் ஜான் டன்னின் ஒரு கட்டுரையில் இருந்து தலைப்பை ஹெமிங்வே எடுக்கிறார். இங்கிலாந்தில் யாராவது இறந்தால் தேவாலயத்தில் ஒற்றைமணி அடிப்பார்கள். யார் இறந்தார்கள் என்ற அர்த்தத்தில் ஒருவர் for whom the bell tolls? என கேட்கிறார். டன் அதற்கு யார் தனியாக சாவதில்லை, யார் இறந்தாலும் நம்மில் கொஞ்சமும் தான் சாகிறது என்ற பொருளில் பதில் சொல்கிறார். இது ஒரு ஆன்மீக கட்டுரை. டன்னின் பதிலும் ஆன்மீக விரிவை கோரி வாழ்வின் பதிலை அதில் தேடுவது. மனிதன் இறந்தாலும் இறப்பதில்லை, பிரம்மாண்டத்தில் கலந்து விடுகிறான். அப்படியே ஒரு மனித இழப்பு நடந்தாலும் அது தனித்து இல்லை, அதன் வழி அத்தனை பேரும் தான் எதையோ இழக்கிறோம் என கூறுகிறார் டன். ஆனால் ஹெமிங்வே இந்த தலைப்பை எடுத்தாண்டிருந்தாலும் அவருக்கு டன்னை போல் கடவுள் நம்பிக்கை இல்லை. டன் மனித இழப்பின் பொறுப்பை கடவுள் எனும் பிரம்மாண்ட்த்திடம் விட்டு விடுகிறார். ஆனால் ஹெமிங்வேயால் அது இயலாது. அவர் எப்படி புரிந்து கொள்கிறார்? ஒரு மனிதன் மரிக்கும் போது, சீரழியும் போது அதன் பொறுப்பு, காரணம் அவனை சுற்றி உள்ள அத்தனை மனிதர்களும் தான் என்கிறார். கடவுள் இல்லா உலகில் மனிதன் தனக்கே தான் பொறுப்பாக வேண்டும். அந்த மனிதனை தான் “மணி ஒலிக்கப்படுபவருக்கு” என அழைக்கிறார். கிட்டத்தட்ட ஜான் டன்னின் பொருளில், ஆனால் கொஞ்சம் மாற்றி.

ஹெமிங்வே தன் நாவலில் ஸ்பெயினில் நடக்கும் போரில் மாண்டு போகும் மக்களை பற்றி பேசுகிறார். போரில் அவர்களின் இழப்புக்கு, குற்றங்களுக்கு, இழிவுக்கு யார் காரணம் எனும் கேள்வி வரும் போது ஹெமிங்வே அவர்களே தான் என்கிறார். இப்படி அவர் யோசிப்பதற்கு ஹெமிங்வே ஒரு இருத்தலியல்வாதி என்பதும் காரணம். ஆக இந்நாவலின் தலைப்பின் ஒரு பொருள் இந்த அழிவுக்கெல்லாம் காரணமானவர்களுக்கு என்பது. சாவு மணிக்கு எல்லாருமே காரணம் என்பது.


இன்று ஹெமிங்வேயின் நினைவு தினம். அவருக்கு ஒரு எளிய வாசகனின் சமர்ப்பணம்

Comments

azhagarasan.com said…
Great piece. Calm, condensed, incisive and convincing. Thought of using it for the translation class.

Best regards
Azhagarasan
Very nice dedication. true to the spirit of Hemingway's works. What's your take on Oldman and the sea? கடலும் கிழவனும் or something else?
Manikandan
கடலும் கிழவனும் பற்றி தனியே எழுதுகிறேன். சமீபத்தில் கூட திரும்ப படித்தேன். ஒரு நீண்ட சிறுகதை போல் தோன்றியது. அங்கங்கே ஹெமிங்வேயின் முத்திரையான சித்தரிப்புகளும் நுணுக்கங்களும் உண்டு. குறிப்பாய் கிழவன் கடலில் தன் கைகளுடன் பேசுவது, மீனுடன் பேசுவது, நட்சத்திரங்களை ஏன் மனிதன் வேட்டையாடுவதில்லை என கூறுவது. மார்க்வெஸின் Shipwrecked Sailor நாவலில் இதன் தத்துவ ஆழம் இல்லாவிட்டாலும் இதை விட பிரமாதமாக எழுதப்பட்டது

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...