Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

உலகக்கோப்பை கடாவிருந்தில் இந்தியாவும் நியுசிலாந்தும்


Image result for new zealand vs australia final

(இரண்டு வாரங்களுக்கு முன்பான கல்கியில் வெளியான கட்டுரை)
உலகக்கோப்பை அரைஇறுதியில் இந்தியாவும் இறுதியில் நியுசிலாந்தும் பூசாரி ஓங்கிய அருவா முன் நடுங்கியபடி கால்களை பின்னிக் கொண்டு நகரும் ஆட்டைப் போன்றே சென்று துண்டாகின. அந்த நொடி ஆட்டை அவிழ்த்து விட்டாலும் அது ஓடாது. தானாகவே சென்று கழுத்தைக் கொடுக்கும். அந்தளவுக்கு மனதளவில் அது தன்னை மரணத்துக்கு ஒப்புக் கொடுத்திருக்கும். கிரிக்கெட் 90% உளவியல் ஆட்டம் தான். உலகக்கோப்பையின் “நீயா நானா” கட்டத்தை அடைந்த பின் இந்தியா ஆஸ்திரேலியா எனும் அணியிடம் அல்ல, அந்த அணி மீதான தன் அச்சத்திடம் தான் மோதியது. அதனாலே தோற்றது.

 இத்தொடர் முழுக்க இந்தியா மிக சிறப்பான வீரியமாக ஒழுங்காக பந்து வீசியது. ஆனால் அரை இறுதியில் ஆஸ்திரேலியா குறித்த பீதி அவர்களின் சமநிலையை குலைத்தது. டாஸின் போது தோனியே சற்று பதற்றமாக தெரிந்தார். தன் அணியை அவரால் நிதானமாக வைத்திருக்க இயலவில்லை. Men fear death as children fear to go into dark என்றார் பேகன். குழந்தைகள் இருட்டை பார்த்து பயப்படுவது போல் வளர்ந்தவர்கள் மரணத்தை பார்த்து பயப்படுகிறார்கள். மரணம் என்ற கற்பனையை தான் அஞ்சுகிறோமே அன்றி மரணத்தை அல்ல. இந்தியா ஆஸ்திரேலியா என்கிற கற்பனையை அஞ்சி அதிகப்படியாய் முயன்றதில் பந்து வீச்சில் சொதப்பியது. மட்டையாடும் போதும் ஷிக்கர் தவன் ஏதோ 428ஐ துரத்துவது போல் ஆடினார். உண்மையான இலக்காகிய 328 என்பது ஓவருக்கு ஐந்து ஓட்டம் விதம் 35 ஓவர் வரை ஆடி விட்டு இறுதி 15 ஓவர்களில் 20-20 பாணியில் அடித்து அடைய வேண்டியதே என்று தோனி கூறினார். ஆனால் “சின்னத்தம்பி” கவுண்டமணி கண்ணுக்கு ஒரு லாரி ரெண்டு பைக்குகளாக தெரிந்தது போல முக்கியமான ஆட்டத்தில் இந்தியாவின் மட்டையாளர்கள் கண்ணுக்கு இலக்கே ரெட்டிப்பாக தெரிந்தது போலும்.
ஆஸ்திரேலியாவின் பாக்னர், வாட்ஸன் மற்றும் மேக்ஸ்வெல் வீசும் பலவீனமான 20 ஓவர்களில் எளிதாக நம் கோலியும் ரெய்னாவும் 160 ஓட்டங்கள் சுலபமாய் எடுத்திருக்கலாம். அதுவே நம்மை 338ஐ நோக்கி கொண்டு சென்றிருக்கும். ஆனால் அதற்கு நாம் ஜான்சன் மற்றும் ஸ்டார்க்குக்கு முதல் முப்பது ஓவர்களுக்குள் விக்கெட் கொடுக்காமல் இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க் தன் பலவீனமான வீச்சாளர்களை முழுவதும் வீச வைக்காமல் இறுதி வரை தவிர்த்து வந்தார். ஆனால் அவர்கள் வீச வரும் வரை விக்கெட்களை பாதுகாக்கும் பொறுமை நம்மவர்களுக்கு இல்லை.
 கோலி இரண்டே ஓவர்கள் பொறுத்திருந்தால் கிளார்க்கே ஜான்சனை வீச்சில் இருந்து அகற்றி இருப்பார். பிறகு மட்டையாடுவது சுலபமாகியிருக்கும். எப்போதும் மிகுந்த முதிர்ச்சியுடன் ஆடும் கோலி அன்று இருட்டுக்குள் பயந்த குழந்தை போல் ஆகி விட்டார். தவனும் கோலியும் வெளியேறின பின் ஆட்டம் கிட்டத்தட்ட முடிந்தே போனது. பவர் பிளேயில் ரஹானேயின் வெளியேற்றமும் பதற்றத்தின் விளைவு தான். பவர் பிளே ஆரம்பித்தாலே ரஹானே தன்னை நிரூபிக்க வேண்டும் எனும் ஆவேசம் கொண்டு தேவையின்றி வெளியேறி விடுகிறார். அவர் எப்போதும் போல் நிதானமாய் ஆடினாலே அவருக்கு நான்கு ஓட்டங்கள் எளிதில் கிட்டும்.
இந்தியாவின் மற்றொரு முக்கிய பலவீனம் இத்தொடர் முழுக்க ஜடேஜா தான். ஓரளவு நன்றாக வீசினாலும் அவரால் அடித்தாடவோ நிலைக்கவோ முடியவில்லை. அதனால் தோனி மட்டுமே இறுதி பத்து ஓவர்களில் சிக்ஸர் அடிக்க முடியும் எனும் நிலை. அவருக்கு பதில் யுவ்ராஜ், கம்பீர், உத்தப்பா, சேவாக் என யார் தோனியுடன் அந்நிலையில் இருந்திருந்தாலும் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாய் இருந்திருக்கும். ஜடேஜாவின் பத்து ஓவர்களை ரெய்னா, ரோஹித் ஆகியோர் மூலம் சமாளித்திருக்கலாம். ஆஸ்திரேலியா வாட்ஸன், மேக்ஸ்வல் மூலம் அதையே தொடர் முழுக்க செய்தது. ஆனால் ஜடேஜா தேர்வின் மூலம் தோனி ஒரு பெரிய தவறை இழைத்து விட்டார்.
யாருமே எதிர்பாராத கட்டத்தில் உலகக்கோப்பை அரை இறுதி வரை வந்ததே அற்புதம் என நாம் ஆசுவாசப்படலாம் என்றாலும் அந்த ஆட்டத்தை ஜெயிக்க நமக்கு இருந்த ஒரு நல்ல வாய்ப்பை தவற விட்டோம் என்பதே உண்மை. சொல்லப் போனால் அரை இறுதி என்பது இறுதி போலத் தான். ஏனென்றால் இறுதிப் போட்டியில் நியுசிலாந்த் நமக்கு ஒரு பொருட்டாகவே இருந்திருக்க மாட்டார்கள்.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வெல்ல நியுசிலாந்துக்கு விஜயகாந்த் முதல்வராகும் அளவு தான் வாய்ப்பு இருந்தது. ஆனாலும் அவர்கள் மிகவும் பதற்றமாக, குழப்பமாக ஆடி இறுதிப்போட்டியை ரஜினியின் கோச்சடையான் போல் ஆக்கி விட்டார்கள். மட்டையாட்டம், பந்து வீச்சு என இரண்டு தளத்திலுமே அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சவால் அளிக்கவில்லை. ஆஸ்திரேலியா முன் சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி விட்டார்கள்.

50 ஓவர் உலகக்கோப்பையை வெல்வதற்கு அனுபவமும் அந்தஸ்து தரும் தன்னம்பிக்கையும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உலகக்கோப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் நடக்கப் போகும் அடுத்த 20 ஓவர் உலகக்கோப்பைக்கு இது பொருந்தாது. ஜடேஜாவுக்கு பதில் அக்‌ஷர் பட்டேலை களமிறக்கும் பட்சத்தில் அக்கோப்பையை நாம் தூக்கிக் கொண்டு வந்து விடலாம். 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...