Skip to main content

உலகக்கோப்பை கடாவிருந்தில் இந்தியாவும் நியுசிலாந்தும்


Image result for new zealand vs australia final

(இரண்டு வாரங்களுக்கு முன்பான கல்கியில் வெளியான கட்டுரை)
உலகக்கோப்பை அரைஇறுதியில் இந்தியாவும் இறுதியில் நியுசிலாந்தும் பூசாரி ஓங்கிய அருவா முன் நடுங்கியபடி கால்களை பின்னிக் கொண்டு நகரும் ஆட்டைப் போன்றே சென்று துண்டாகின. அந்த நொடி ஆட்டை அவிழ்த்து விட்டாலும் அது ஓடாது. தானாகவே சென்று கழுத்தைக் கொடுக்கும். அந்தளவுக்கு மனதளவில் அது தன்னை மரணத்துக்கு ஒப்புக் கொடுத்திருக்கும். கிரிக்கெட் 90% உளவியல் ஆட்டம் தான். உலகக்கோப்பையின் “நீயா நானா” கட்டத்தை அடைந்த பின் இந்தியா ஆஸ்திரேலியா எனும் அணியிடம் அல்ல, அந்த அணி மீதான தன் அச்சத்திடம் தான் மோதியது. அதனாலே தோற்றது.

 இத்தொடர் முழுக்க இந்தியா மிக சிறப்பான வீரியமாக ஒழுங்காக பந்து வீசியது. ஆனால் அரை இறுதியில் ஆஸ்திரேலியா குறித்த பீதி அவர்களின் சமநிலையை குலைத்தது. டாஸின் போது தோனியே சற்று பதற்றமாக தெரிந்தார். தன் அணியை அவரால் நிதானமாக வைத்திருக்க இயலவில்லை. Men fear death as children fear to go into dark என்றார் பேகன். குழந்தைகள் இருட்டை பார்த்து பயப்படுவது போல் வளர்ந்தவர்கள் மரணத்தை பார்த்து பயப்படுகிறார்கள். மரணம் என்ற கற்பனையை தான் அஞ்சுகிறோமே அன்றி மரணத்தை அல்ல. இந்தியா ஆஸ்திரேலியா என்கிற கற்பனையை அஞ்சி அதிகப்படியாய் முயன்றதில் பந்து வீச்சில் சொதப்பியது. மட்டையாடும் போதும் ஷிக்கர் தவன் ஏதோ 428ஐ துரத்துவது போல் ஆடினார். உண்மையான இலக்காகிய 328 என்பது ஓவருக்கு ஐந்து ஓட்டம் விதம் 35 ஓவர் வரை ஆடி விட்டு இறுதி 15 ஓவர்களில் 20-20 பாணியில் அடித்து அடைய வேண்டியதே என்று தோனி கூறினார். ஆனால் “சின்னத்தம்பி” கவுண்டமணி கண்ணுக்கு ஒரு லாரி ரெண்டு பைக்குகளாக தெரிந்தது போல முக்கியமான ஆட்டத்தில் இந்தியாவின் மட்டையாளர்கள் கண்ணுக்கு இலக்கே ரெட்டிப்பாக தெரிந்தது போலும்.
ஆஸ்திரேலியாவின் பாக்னர், வாட்ஸன் மற்றும் மேக்ஸ்வெல் வீசும் பலவீனமான 20 ஓவர்களில் எளிதாக நம் கோலியும் ரெய்னாவும் 160 ஓட்டங்கள் சுலபமாய் எடுத்திருக்கலாம். அதுவே நம்மை 338ஐ நோக்கி கொண்டு சென்றிருக்கும். ஆனால் அதற்கு நாம் ஜான்சன் மற்றும் ஸ்டார்க்குக்கு முதல் முப்பது ஓவர்களுக்குள் விக்கெட் கொடுக்காமல் இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க் தன் பலவீனமான வீச்சாளர்களை முழுவதும் வீச வைக்காமல் இறுதி வரை தவிர்த்து வந்தார். ஆனால் அவர்கள் வீச வரும் வரை விக்கெட்களை பாதுகாக்கும் பொறுமை நம்மவர்களுக்கு இல்லை.
 கோலி இரண்டே ஓவர்கள் பொறுத்திருந்தால் கிளார்க்கே ஜான்சனை வீச்சில் இருந்து அகற்றி இருப்பார். பிறகு மட்டையாடுவது சுலபமாகியிருக்கும். எப்போதும் மிகுந்த முதிர்ச்சியுடன் ஆடும் கோலி அன்று இருட்டுக்குள் பயந்த குழந்தை போல் ஆகி விட்டார். தவனும் கோலியும் வெளியேறின பின் ஆட்டம் கிட்டத்தட்ட முடிந்தே போனது. பவர் பிளேயில் ரஹானேயின் வெளியேற்றமும் பதற்றத்தின் விளைவு தான். பவர் பிளே ஆரம்பித்தாலே ரஹானே தன்னை நிரூபிக்க வேண்டும் எனும் ஆவேசம் கொண்டு தேவையின்றி வெளியேறி விடுகிறார். அவர் எப்போதும் போல் நிதானமாய் ஆடினாலே அவருக்கு நான்கு ஓட்டங்கள் எளிதில் கிட்டும்.
இந்தியாவின் மற்றொரு முக்கிய பலவீனம் இத்தொடர் முழுக்க ஜடேஜா தான். ஓரளவு நன்றாக வீசினாலும் அவரால் அடித்தாடவோ நிலைக்கவோ முடியவில்லை. அதனால் தோனி மட்டுமே இறுதி பத்து ஓவர்களில் சிக்ஸர் அடிக்க முடியும் எனும் நிலை. அவருக்கு பதில் யுவ்ராஜ், கம்பீர், உத்தப்பா, சேவாக் என யார் தோனியுடன் அந்நிலையில் இருந்திருந்தாலும் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாய் இருந்திருக்கும். ஜடேஜாவின் பத்து ஓவர்களை ரெய்னா, ரோஹித் ஆகியோர் மூலம் சமாளித்திருக்கலாம். ஆஸ்திரேலியா வாட்ஸன், மேக்ஸ்வல் மூலம் அதையே தொடர் முழுக்க செய்தது. ஆனால் ஜடேஜா தேர்வின் மூலம் தோனி ஒரு பெரிய தவறை இழைத்து விட்டார்.
யாருமே எதிர்பாராத கட்டத்தில் உலகக்கோப்பை அரை இறுதி வரை வந்ததே அற்புதம் என நாம் ஆசுவாசப்படலாம் என்றாலும் அந்த ஆட்டத்தை ஜெயிக்க நமக்கு இருந்த ஒரு நல்ல வாய்ப்பை தவற விட்டோம் என்பதே உண்மை. சொல்லப் போனால் அரை இறுதி என்பது இறுதி போலத் தான். ஏனென்றால் இறுதிப் போட்டியில் நியுசிலாந்த் நமக்கு ஒரு பொருட்டாகவே இருந்திருக்க மாட்டார்கள்.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வெல்ல நியுசிலாந்துக்கு விஜயகாந்த் முதல்வராகும் அளவு தான் வாய்ப்பு இருந்தது. ஆனாலும் அவர்கள் மிகவும் பதற்றமாக, குழப்பமாக ஆடி இறுதிப்போட்டியை ரஜினியின் கோச்சடையான் போல் ஆக்கி விட்டார்கள். மட்டையாட்டம், பந்து வீச்சு என இரண்டு தளத்திலுமே அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சவால் அளிக்கவில்லை. ஆஸ்திரேலியா முன் சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி விட்டார்கள்.

50 ஓவர் உலகக்கோப்பையை வெல்வதற்கு அனுபவமும் அந்தஸ்து தரும் தன்னம்பிக்கையும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உலகக்கோப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் நடக்கப் போகும் அடுத்த 20 ஓவர் உலகக்கோப்பைக்கு இது பொருந்தாது. ஜடேஜாவுக்கு பதில் அக்‌ஷர் பட்டேலை களமிறக்கும் பட்சத்தில் அக்கோப்பையை நாம் தூக்கிக் கொண்டு வந்து விடலாம். 

Comments

// விஜயகாந்த் முதல்வராகும் அளவு தான் // ஹா... ஹா...

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...