முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்கவுண்டர் கொலைகளுக்கான தீர்வு என்ன?

Image result for 20 tamils encounter

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சனையை ஆந்திர அரசு × தமிழர்கள் என தமிழ் தேசிய மனப்பான்மையுடன் மட்டும் பார்க்காமல் இந்தியா முழுக்க காவல்துறை செய்து வரும் மனித உரிமை மீறல் குற்றங்களின் ஒரு பகுதியாகவும் காண வேண்டும். தமிழகத்தில் ரவுடிகளும் பிற குற்றவாளிகளும் என்கவுண்டர் செய்யப்படும் போதும் நாம் இவ்வாறே அதை எதிர்க்க வேண்டும். லாக் அப் வன்முறை உள்ளிட்ட அனைத்து வகை காவல் துறை வன்முறைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும்.


 கடந்த வருடம் ஒரு வழக்கில் பொய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒரு வேலைக்காரப் பெண் நிர்வாணப்படுத்தப்பட்டு ஆண் காவலர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட வழக்கு நினைவிருக்கும். அதே போன்று வட, வடகிழக்கு மாநிலங்களில் காவல்துறையினர் பழங்குடிகளுக்கு எதிராக செய்து வரும் குற்றங்கள். காவல் துறையின் அடிப்படையான சீரழிவை சீர்செய்வதன் மூலம் மட்டும் தான் இது போன்ற என்கவுண்டர்களை தடுக்க முடியும். அதே போல் கவுதம் மேனன் போன்றவர்கள் எடுக்கும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுகளைக் கொண்டாடும் படங்களுக்கும் நாம் தடை கோர வேண்டும்.

 உள்ளூரில் என்கவுண்டர்களை கொண்டாடும் மனநிலை
ஒழிந்தால் மட்டுமே நம் ஆட்கள் வெளிமாநிலங்களில் அவ்வாறு கொல்லப்படுவது நிற்கும். அதே போல் காவல்துறை மீதான உச்சபட்ச அதிகாரத்தை அரசிடம் இருந்து நீதிமன்றங்கள் வசம் ஒப்படைத்து, மனித உரிமை மற்றும் என்.ஜி.ஓக்கள் மூலமாக பொதுமக்களே நிர்வகிக்கும் சாத்தியங்கள் பற்றியும் நாம் பேச வேண்டும். அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் கையாளாக காவல்துறை இருக்கும் வரை அதை ஒழுங்குபடுத்தி நியாயமாக செயல்பட வைப்பது சாத்தியமே இல்லை. காவல்துறை மக்களுக்காக வேலை செய்ய அது மக்கள் பொறுப்பில் வர வேண்டும்.

 நாம் மக்களாட்சியின் கீழ் வாழ்ந்தாலும் நம் ஆட்சியாளர்களின் பொறுப்பின்மை மற்றும் தவறுகளை தட்டிக் கேட்க நமக்கு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. அதற்குப் பதிலாக அரசாங்கத்தின் பாதி அதிகாரத்தை நீதிமன்றம் மூலமாய் மக்களே திரும்ப பெறுவது தான் வழி. ஒரு வழக்கு மூலம் சுலபமாய், அரசின் குறுக்கீடின்றி ஒரு ஆணையரையே பதவி நீக்கும் அதிகாரம் நமக்கு கிடைத்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் சுலபத்தில் முடிவுக்கு வரும். நேற்று ஒரு கார் ஓட்டுநர் என்னிடம் அவர் போக்குவரத்து காவலர்களால் ஊழலின் பெயரில் அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றி புலம்பிக் கொண்டு வந்தார். இவர்களுக்கு எல்லாம் நீதி கிடைக்க எந்த உடனடி வழியும் இல்லை. நமக்கு மற்றொரு புதுவகை லோக்பால் வேண்டும்.

நிலப் பறிமுதல் சட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அரசு எப்படி தன் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக, சில கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக ஒரு சட்டத்தை திருத்த முடியும் என்பதற்கு அது ஒரு ஆதாரம். லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் ஒப்புதல் பெற்று ஒரு சட்டதிருத்தத்தை நிலுவையில் கொண்டு வரும் வழக்கத்தை மாற்றி, மூன்றாவதாக நீதிமன்றத்திடம் கொண்டு சென்று அங்கு மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பின்னரே எந்த சட்டதிருத்தமோ புது சட்டமோ கொண்டு வர முடியும் என்கிற நிலை வர வேண்டும். இப்போது நம்மிடம் செயல்படுவது மக்களாட்சி அல்ல. ஒரு மென்மையான சர்வாதிகார ஆட்சி.

ஏற்கனவே இங்கு பேசப்பட்ட லோக்பால் போன்ற எந்த நிபுணர் குழுக்களும் நடுவில் இன்றி மக்களும் நீதின்றங்களுமாய் இந்நாட்டை நிர்வகிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொரு கொடுங்குற்றம் நிகழும் போதே மீடியாவில் புலம்பிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். அதிகாரத்தின் உச்சிக்கொம்பில் இருப்பவர் காதில் இதெல்லாம் விழாது.

கருத்துகள்

Govind Veerakaran இவ்வாறு கூறியுள்ளார்…
Your point is little confusing. Do you mean to say socialism is the only solution?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...