முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்கவுண்டர் கொலைகளுக்கான தீர்வு என்ன?

Image result for 20 tamils encounter

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சனையை ஆந்திர அரசு × தமிழர்கள் என தமிழ் தேசிய மனப்பான்மையுடன் மட்டும் பார்க்காமல் இந்தியா முழுக்க காவல்துறை செய்து வரும் மனித உரிமை மீறல் குற்றங்களின் ஒரு பகுதியாகவும் காண வேண்டும். தமிழகத்தில் ரவுடிகளும் பிற குற்றவாளிகளும் என்கவுண்டர் செய்யப்படும் போதும் நாம் இவ்வாறே அதை எதிர்க்க வேண்டும். லாக் அப் வன்முறை உள்ளிட்ட அனைத்து வகை காவல் துறை வன்முறைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும்.


 கடந்த வருடம் ஒரு வழக்கில் பொய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒரு வேலைக்காரப் பெண் நிர்வாணப்படுத்தப்பட்டு ஆண் காவலர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட வழக்கு நினைவிருக்கும். அதே போன்று வட, வடகிழக்கு மாநிலங்களில் காவல்துறையினர் பழங்குடிகளுக்கு எதிராக செய்து வரும் குற்றங்கள். காவல் துறையின் அடிப்படையான சீரழிவை சீர்செய்வதன் மூலம் மட்டும் தான் இது போன்ற என்கவுண்டர்களை தடுக்க முடியும். அதே போல் கவுதம் மேனன் போன்றவர்கள் எடுக்கும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுகளைக் கொண்டாடும் படங்களுக்கும் நாம் தடை கோர வேண்டும்.

 உள்ளூரில் என்கவுண்டர்களை கொண்டாடும் மனநிலை
ஒழிந்தால் மட்டுமே நம் ஆட்கள் வெளிமாநிலங்களில் அவ்வாறு கொல்லப்படுவது நிற்கும். அதே போல் காவல்துறை மீதான உச்சபட்ச அதிகாரத்தை அரசிடம் இருந்து நீதிமன்றங்கள் வசம் ஒப்படைத்து, மனித உரிமை மற்றும் என்.ஜி.ஓக்கள் மூலமாக பொதுமக்களே நிர்வகிக்கும் சாத்தியங்கள் பற்றியும் நாம் பேச வேண்டும். அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் கையாளாக காவல்துறை இருக்கும் வரை அதை ஒழுங்குபடுத்தி நியாயமாக செயல்பட வைப்பது சாத்தியமே இல்லை. காவல்துறை மக்களுக்காக வேலை செய்ய அது மக்கள் பொறுப்பில் வர வேண்டும்.

 நாம் மக்களாட்சியின் கீழ் வாழ்ந்தாலும் நம் ஆட்சியாளர்களின் பொறுப்பின்மை மற்றும் தவறுகளை தட்டிக் கேட்க நமக்கு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. அதற்குப் பதிலாக அரசாங்கத்தின் பாதி அதிகாரத்தை நீதிமன்றம் மூலமாய் மக்களே திரும்ப பெறுவது தான் வழி. ஒரு வழக்கு மூலம் சுலபமாய், அரசின் குறுக்கீடின்றி ஒரு ஆணையரையே பதவி நீக்கும் அதிகாரம் நமக்கு கிடைத்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் சுலபத்தில் முடிவுக்கு வரும். நேற்று ஒரு கார் ஓட்டுநர் என்னிடம் அவர் போக்குவரத்து காவலர்களால் ஊழலின் பெயரில் அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றி புலம்பிக் கொண்டு வந்தார். இவர்களுக்கு எல்லாம் நீதி கிடைக்க எந்த உடனடி வழியும் இல்லை. நமக்கு மற்றொரு புதுவகை லோக்பால் வேண்டும்.

நிலப் பறிமுதல் சட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அரசு எப்படி தன் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக, சில கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக ஒரு சட்டத்தை திருத்த முடியும் என்பதற்கு அது ஒரு ஆதாரம். லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் ஒப்புதல் பெற்று ஒரு சட்டதிருத்தத்தை நிலுவையில் கொண்டு வரும் வழக்கத்தை மாற்றி, மூன்றாவதாக நீதிமன்றத்திடம் கொண்டு சென்று அங்கு மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பின்னரே எந்த சட்டதிருத்தமோ புது சட்டமோ கொண்டு வர முடியும் என்கிற நிலை வர வேண்டும். இப்போது நம்மிடம் செயல்படுவது மக்களாட்சி அல்ல. ஒரு மென்மையான சர்வாதிகார ஆட்சி.

ஏற்கனவே இங்கு பேசப்பட்ட லோக்பால் போன்ற எந்த நிபுணர் குழுக்களும் நடுவில் இன்றி மக்களும் நீதின்றங்களுமாய் இந்நாட்டை நிர்வகிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொரு கொடுங்குற்றம் நிகழும் போதே மீடியாவில் புலம்பிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். அதிகாரத்தின் உச்சிக்கொம்பில் இருப்பவர் காதில் இதெல்லாம் விழாது.

கருத்துகள்

Govind Veerakaran இவ்வாறு கூறியுள்ளார்…
Your point is little confusing. Do you mean to say socialism is the only solution?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...