முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்றைய ஞாயிறு

the last day by mikeshkaos

காலை எழுந்ததும்
இது ஒரு ஞாயிற்றுக்கிழமை
என நம்பத் தொடங்குகிறேன்
சோம்பல் முறித்து
கண்ணோர பீளையை துடைத்து
தடுமாறியபடி நடந்து
கழிப்பறை போகிறேன்
மூத்திரம் போகையில்
துண்டுத் துண்டுக் கனவுகள்
முட்டைகளை உடைத்து பாத்திரத்தில் ஊற்றியது போல்
ஒவ்வொன்றாய்…


எங்கோ வானொலியில் யாரோ உற்சாகமாய் தடதடத்து பேச
பறவைகள் கத்துகின்றன
சாலையில் ஒரே ஒரு ஆட்டோ மெதுவாய் நகர்ந்து போகிறது
சில்லென எதுவோ விழுந்து உடைகிறது
ஜன்னல் துண்டுக் காட்சியில்
பக்கத்து வீட்டு வரவேற்பறையில்
 கூட்டமாய் தரையில் இருந்து
சாப்பிட்டபடி
எனக்குத் தெரியாத டிவி ஒன்றைப் பார்க்க்கிறார்க்ள்
நிச்சயமாய் இது ஞாயிற்றுக் கிழமை தான்

உடம்பின் இந்த முறுக்கிக் கொள்ளும் சோம்பல்
நரம்புகளில் அதிரும் மென்வலி
இமைகளின் கனம்
ஜவ்வு போல் நீளும் நேரம்

டிவியை இயக்க
சிறப்பு நிகழ்ச்சிகள் ஒடுகின்றன
மனைவி வந்து
நேரம் ஆகி விட்டதென்கிறாள்
கடிகாரத்தைக் காட்டுகிறாள்
அவள் குளித்து
கொண்டை கட்டி
முகத்தில் களிம்பு பூசியிருக்கிறாள்
குளிர்ப்பெட்டியில் இருந்து வெளிவந்த முட்டை போல
பளிச்சென்று இருக்கிறாள்
அலுவலக ஆடை அணிந்து கொண்டு
அடிக்கடி தன் நுண்பேசியை பார்க்கிறாள்.
அவள் ஞாயிற்றுக் கிழமையில் இல்லை.
அது புதன் கிழமை என்கிறாள்.

சோபாவில் கிடக்கும் ஒரு வாரத்திற்கான நாளிதழ்க்ளை
கொத்தாய் கொண்டு வருகிறாள்
அவற்றில் போன ஞாயிறில் ஆரம்பித்து
புதன் வரை இருக்கிறது
நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு, கொடும் கொலைக்ள்
என ஆரம்பித்து
மென்மையான ஊழல்கள், அதிராத குற்றச்சாட்டுகள்
என புதன் வரும் போது
ஒரு ஆறுதலான நிலைமை தெரிகிறது
ஆனால் வியாழன், வெள்ளி, சனி எங்கே?
ஞாயிறு பத்திரிகை என்றும் தாமதம் தானே
அதுவே ஒரு ஆதாரம் அல்லவா?

அவள் புதன் பத்திரிகையின் தேதியை
நுண்பேசியை
நாட்காட்டியை
டிவியின் தகவல்பெட்டியின் விபரங்களைக்
காட்டுகிறாள்
ஒரு மணிநேரத்தில் எங்கள் வீட்டைக் கடந்து போகும்
தகர டிரம்மில் பிரம்மாண்ட எலிகள் ஓடுவதான பத்து ரயில்களின் சத்தமும் உடலைத் துளைத்து ஓடும் விசில்களும்
கேட்கும் போது உரையாடலை நிறுத்தி கூர்ந்து கவனிக்கிறோம்
ஓய்வு நாளில் இத்தனை ரயில்கள் ஓடாது தெரியுமில்லையா?
இன்றைய வேலையை காலைக்குள் முடித்து விடும்படி
என் மேலாளர் அனுப்பின குறுஞ்செய்தியைக் காட்டுகிறாள்.
நான் டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளைக் காட்ட
அது தினமும் வருவது தானே என்கிறாள்.

எனக்கு ஒரே ஆதாரம் தான்
எல்லா வேலை நாளும்
ஞாயிறு என்று பொறுமையாய் தூங்கி விட்டு
துள்ளி எழுந்து
அவசரமாய் கிளம்புவேன்
இன்று மட்டுமே
அவசரமாய் எழுந்து

பொறுமையாய் யோசிக்கிறேன்.

கருத்துகள்

Pandiaraj Jebarathinam இவ்வாறு கூறியுள்ளார்…
அவசரமாய் வாசித்துவிட்டு
பின்
மெல்ல மென்மையாக வாசிக்கிறேன்
ஞாயிற்றுக் கிழமைக்கான
ஆதாரங்களுக்காக...


நல்ல வரிகள்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...