முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்றைய ஞாயிறு

the last day by mikeshkaos

காலை எழுந்ததும்
இது ஒரு ஞாயிற்றுக்கிழமை
என நம்பத் தொடங்குகிறேன்
சோம்பல் முறித்து
கண்ணோர பீளையை துடைத்து
தடுமாறியபடி நடந்து
கழிப்பறை போகிறேன்
மூத்திரம் போகையில்
துண்டுத் துண்டுக் கனவுகள்
முட்டைகளை உடைத்து பாத்திரத்தில் ஊற்றியது போல்
ஒவ்வொன்றாய்…


எங்கோ வானொலியில் யாரோ உற்சாகமாய் தடதடத்து பேச
பறவைகள் கத்துகின்றன
சாலையில் ஒரே ஒரு ஆட்டோ மெதுவாய் நகர்ந்து போகிறது
சில்லென எதுவோ விழுந்து உடைகிறது
ஜன்னல் துண்டுக் காட்சியில்
பக்கத்து வீட்டு வரவேற்பறையில்
 கூட்டமாய் தரையில் இருந்து
சாப்பிட்டபடி
எனக்குத் தெரியாத டிவி ஒன்றைப் பார்க்க்கிறார்க்ள்
நிச்சயமாய் இது ஞாயிற்றுக் கிழமை தான்

உடம்பின் இந்த முறுக்கிக் கொள்ளும் சோம்பல்
நரம்புகளில் அதிரும் மென்வலி
இமைகளின் கனம்
ஜவ்வு போல் நீளும் நேரம்

டிவியை இயக்க
சிறப்பு நிகழ்ச்சிகள் ஒடுகின்றன
மனைவி வந்து
நேரம் ஆகி விட்டதென்கிறாள்
கடிகாரத்தைக் காட்டுகிறாள்
அவள் குளித்து
கொண்டை கட்டி
முகத்தில் களிம்பு பூசியிருக்கிறாள்
குளிர்ப்பெட்டியில் இருந்து வெளிவந்த முட்டை போல
பளிச்சென்று இருக்கிறாள்
அலுவலக ஆடை அணிந்து கொண்டு
அடிக்கடி தன் நுண்பேசியை பார்க்கிறாள்.
அவள் ஞாயிற்றுக் கிழமையில் இல்லை.
அது புதன் கிழமை என்கிறாள்.

சோபாவில் கிடக்கும் ஒரு வாரத்திற்கான நாளிதழ்க்ளை
கொத்தாய் கொண்டு வருகிறாள்
அவற்றில் போன ஞாயிறில் ஆரம்பித்து
புதன் வரை இருக்கிறது
நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு, கொடும் கொலைக்ள்
என ஆரம்பித்து
மென்மையான ஊழல்கள், அதிராத குற்றச்சாட்டுகள்
என புதன் வரும் போது
ஒரு ஆறுதலான நிலைமை தெரிகிறது
ஆனால் வியாழன், வெள்ளி, சனி எங்கே?
ஞாயிறு பத்திரிகை என்றும் தாமதம் தானே
அதுவே ஒரு ஆதாரம் அல்லவா?

அவள் புதன் பத்திரிகையின் தேதியை
நுண்பேசியை
நாட்காட்டியை
டிவியின் தகவல்பெட்டியின் விபரங்களைக்
காட்டுகிறாள்
ஒரு மணிநேரத்தில் எங்கள் வீட்டைக் கடந்து போகும்
தகர டிரம்மில் பிரம்மாண்ட எலிகள் ஓடுவதான பத்து ரயில்களின் சத்தமும் உடலைத் துளைத்து ஓடும் விசில்களும்
கேட்கும் போது உரையாடலை நிறுத்தி கூர்ந்து கவனிக்கிறோம்
ஓய்வு நாளில் இத்தனை ரயில்கள் ஓடாது தெரியுமில்லையா?
இன்றைய வேலையை காலைக்குள் முடித்து விடும்படி
என் மேலாளர் அனுப்பின குறுஞ்செய்தியைக் காட்டுகிறாள்.
நான் டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளைக் காட்ட
அது தினமும் வருவது தானே என்கிறாள்.

எனக்கு ஒரே ஆதாரம் தான்
எல்லா வேலை நாளும்
ஞாயிறு என்று பொறுமையாய் தூங்கி விட்டு
துள்ளி எழுந்து
அவசரமாய் கிளம்புவேன்
இன்று மட்டுமே
அவசரமாய் எழுந்து

பொறுமையாய் யோசிக்கிறேன்.

கருத்துகள்

Pandiaraj Jebarathinam இவ்வாறு கூறியுள்ளார்…
அவசரமாய் வாசித்துவிட்டு
பின்
மெல்ல மென்மையாக வாசிக்கிறேன்
ஞாயிற்றுக் கிழமைக்கான
ஆதாரங்களுக்காக...


நல்ல வரிகள்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.