Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சில உறவுகள் மாறுவதில்லை



மாணவர்களுக்கு ஆசிரியர் மீதுள்ள பிரியம் தனித்துவமானது. மத்திய வர்க்க இளைஞர்கள் தம் பெற்றோருக்கு இணையாகவே ஆசிரியரைப் பார்க்கிறார்கள். நான் நான்கு வருடங்களுக்கு முன்பு பயிற்று வித்த மாணவர்களை இன்றும் அடிக்கடி பல இடங்களில் சந்திக்கிறேன். நான் குருநானக்கில் வேலை செய்யும் போது அஷ்வின் மற்றும் ஆண்டனி என இரு மாணவர்கள் இலக்கிய நாட்டம் கொண்டவர்களாய் இருந்தார்கள். ஆனால் இருவரும் இலக்கிய துறை மாணவர்கள் அல்ல. நான் ஒரு நாள் வகுப்பில் நீட்சே பற்றி குறிப்பிட்டேன். வகுப்பு முடிந்ததும் அஷ்வின் என்னைத் தேடி வந்து நீட்சே நிறைய கேட்டான். இலக்கியம், தத்துவம் பற்றி பேசினான். அவன் தால்ஸ்தாயின் “போரும் வாழ்வும்” படித்து வருவது பற்றி சொன்னான். தல்ஸ்யாயின் வாசகன் என்றதுமே அவனை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. பிறகு தினமும் நாங்கள் கல்லூரி வளாகங்களில் மணிக்கணக்காய் பேசியபடி இருப்போம்.

 ஒருமுறை நான் அவனிடம் சொன்னேன் “இந்த கல்லூரியில் எண்ணூறுக்கும் மேல் மாணவர்களும் ஆசிரியர்களும் இப்போது இருக்கிறார்கள். ஆனால் நாம் இருவர் மட்டுமே “போரும் வாழ்வும்” பற்றி இந்த தருணத்தில் பேசிக் கொண்டிருக்கிறோம். நம்மைத் தவிர யாருக்கும் இந்த உலகமோ இதன் உண்மையோ மொழியோ தெரியாது. நாம் தனியான யாரும் வரமுடியாத ஒரு உலகில் இப்போது இருந்து கொண்டிருக்கிறோம். இதை நினைக்க விசித்திரமாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது”. கல்லூரி முடிந்த பின்னும் இப்போதும் நாங்கள் அடிக்கடி சந்தித்து கொள்கிறோம். போன வருடம் Great Gatsby படம் வெளியான போது இருவருமாய் பார்க்க சென்றோம். அந்நாவல் பற்றியும் படம் பற்றியும் நிறைய பேசிக் கொண்டிருந்தோம்.
 ஆண்டனி தமிழ் நவீன நூல்கள் அதிகம் படிப்பான். ரொம்ப குறைவாய் பேசுவான். என்னைப் போல அவன் அழுத்தமானவன். மனதில் பட்டதை தயங்காமல் சொல்லுவான். அதனாலும் அவனது வாசிப்பினாலும் என் நண்பனானான். கல்லூரி முடிந்ததும் என் வண்டியில் அவனை ஏற்றிக் கொண்ட நூலகம் செல்வேன். சிலநாள் என் வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருப்பான்.
கல்லூரி முடித்த பின் அவன் ஊடகவியலில் முதுகலை பட்டம் பெற்ற பின் இப்போது ஒரு டிவியில் வேலை செய்கிறான். நான் சமீபமாய் வேலைக்காய் முயன்று வந்தேன். அதை அவனிடம் குறிப்பிட்ட போது அவனாகவே முயன்று எனக்கு அவன் நிறுவனத்தில் ஒரு நேர்முகத்திற்கான வாய்ப்பு வாங்கித் தந்தான். எனக்கு உதவுவதில் அவனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. இன்று வீடு திரும்பும் வழியில் ஒரு பி.பி.ஓவில் நுழைந்து என் ரெசியூமை கொடுத்து வேலை பற்றி விசாரிக்க சென்றிருந்தேன். அங்கு பார்த்தால் என் மாணவி ஒருவரை பார்த்தேன். மிகுந்த அன்புடன் என்னிடம் வந்து விசாரித்தாள். நான் அவளை அடையாளம் கண்டு கொண்டேன் என அவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. பிறகு அவளாகவே என்னை மனிதவளத்துறைக்கு அழைத்துப் போய் அறிமுகம் செய்த தேவையான உதவிகளைச் செய்தாள். “இங்கே பயிற்சியாளர் வேலை கிடைத்தால் சேர்ந்து கொள்ளுங்கள். எனக்கு பயிற்சியாளராக நீங்கள் வந்து விடுங்கள்” என்றாள். மாணவர்கள் படித்து முடித்த பிறகு நம்மை பிறகு பார்க்கும் போதும் குழந்தைகளைப் போன்றே உணர்வதை, நம்மிடம் குழந்தைமையுடனே பேசுவதை கவனித்தேன். எவ்வளவு காலம் கடந்தாலும், எந்த இடத்துக்கு வந்தலும் சில உறவுகள் மாறுவதில்லை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...