Skip to main content

சில உறவுகள் மாறுவதில்லை



மாணவர்களுக்கு ஆசிரியர் மீதுள்ள பிரியம் தனித்துவமானது. மத்திய வர்க்க இளைஞர்கள் தம் பெற்றோருக்கு இணையாகவே ஆசிரியரைப் பார்க்கிறார்கள். நான் நான்கு வருடங்களுக்கு முன்பு பயிற்று வித்த மாணவர்களை இன்றும் அடிக்கடி பல இடங்களில் சந்திக்கிறேன். நான் குருநானக்கில் வேலை செய்யும் போது அஷ்வின் மற்றும் ஆண்டனி என இரு மாணவர்கள் இலக்கிய நாட்டம் கொண்டவர்களாய் இருந்தார்கள். ஆனால் இருவரும் இலக்கிய துறை மாணவர்கள் அல்ல. நான் ஒரு நாள் வகுப்பில் நீட்சே பற்றி குறிப்பிட்டேன். வகுப்பு முடிந்ததும் அஷ்வின் என்னைத் தேடி வந்து நீட்சே நிறைய கேட்டான். இலக்கியம், தத்துவம் பற்றி பேசினான். அவன் தால்ஸ்தாயின் “போரும் வாழ்வும்” படித்து வருவது பற்றி சொன்னான். தல்ஸ்யாயின் வாசகன் என்றதுமே அவனை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. பிறகு தினமும் நாங்கள் கல்லூரி வளாகங்களில் மணிக்கணக்காய் பேசியபடி இருப்போம்.

 ஒருமுறை நான் அவனிடம் சொன்னேன் “இந்த கல்லூரியில் எண்ணூறுக்கும் மேல் மாணவர்களும் ஆசிரியர்களும் இப்போது இருக்கிறார்கள். ஆனால் நாம் இருவர் மட்டுமே “போரும் வாழ்வும்” பற்றி இந்த தருணத்தில் பேசிக் கொண்டிருக்கிறோம். நம்மைத் தவிர யாருக்கும் இந்த உலகமோ இதன் உண்மையோ மொழியோ தெரியாது. நாம் தனியான யாரும் வரமுடியாத ஒரு உலகில் இப்போது இருந்து கொண்டிருக்கிறோம். இதை நினைக்க விசித்திரமாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது”. கல்லூரி முடிந்த பின்னும் இப்போதும் நாங்கள் அடிக்கடி சந்தித்து கொள்கிறோம். போன வருடம் Great Gatsby படம் வெளியான போது இருவருமாய் பார்க்க சென்றோம். அந்நாவல் பற்றியும் படம் பற்றியும் நிறைய பேசிக் கொண்டிருந்தோம்.
 ஆண்டனி தமிழ் நவீன நூல்கள் அதிகம் படிப்பான். ரொம்ப குறைவாய் பேசுவான். என்னைப் போல அவன் அழுத்தமானவன். மனதில் பட்டதை தயங்காமல் சொல்லுவான். அதனாலும் அவனது வாசிப்பினாலும் என் நண்பனானான். கல்லூரி முடிந்ததும் என் வண்டியில் அவனை ஏற்றிக் கொண்ட நூலகம் செல்வேன். சிலநாள் என் வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருப்பான்.
கல்லூரி முடித்த பின் அவன் ஊடகவியலில் முதுகலை பட்டம் பெற்ற பின் இப்போது ஒரு டிவியில் வேலை செய்கிறான். நான் சமீபமாய் வேலைக்காய் முயன்று வந்தேன். அதை அவனிடம் குறிப்பிட்ட போது அவனாகவே முயன்று எனக்கு அவன் நிறுவனத்தில் ஒரு நேர்முகத்திற்கான வாய்ப்பு வாங்கித் தந்தான். எனக்கு உதவுவதில் அவனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. இன்று வீடு திரும்பும் வழியில் ஒரு பி.பி.ஓவில் நுழைந்து என் ரெசியூமை கொடுத்து வேலை பற்றி விசாரிக்க சென்றிருந்தேன். அங்கு பார்த்தால் என் மாணவி ஒருவரை பார்த்தேன். மிகுந்த அன்புடன் என்னிடம் வந்து விசாரித்தாள். நான் அவளை அடையாளம் கண்டு கொண்டேன் என அவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. பிறகு அவளாகவே என்னை மனிதவளத்துறைக்கு அழைத்துப் போய் அறிமுகம் செய்த தேவையான உதவிகளைச் செய்தாள். “இங்கே பயிற்சியாளர் வேலை கிடைத்தால் சேர்ந்து கொள்ளுங்கள். எனக்கு பயிற்சியாளராக நீங்கள் வந்து விடுங்கள்” என்றாள். மாணவர்கள் படித்து முடித்த பிறகு நம்மை பிறகு பார்க்கும் போதும் குழந்தைகளைப் போன்றே உணர்வதை, நம்மிடம் குழந்தைமையுடனே பேசுவதை கவனித்தேன். எவ்வளவு காலம் கடந்தாலும், எந்த இடத்துக்கு வந்தலும் சில உறவுகள் மாறுவதில்லை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...