Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பெரியாரிஸ்டுகளின் சிக்கல்கள்


பெரியாரிஸ்டுகளுக்கு இரண்டு இயல்புகள் உண்டு. பேச்சின் போது மைய சாதிகளை மயிலிறகால் வருடி விடுவார்கள். உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் “பார்ப்பனிய சதி” என்பார்கள். இன்னொன்று இந்து மதத்தை பழிப்பதற்காக புராணங்கள் கதை என்றும், கடவுள்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றும் கூறுவார்கள். நேற்றைய உயிர்மை அரங்கில் வெ.மதிமாறனின் பேச்சு அப்படித் தான் இருந்தது. அவை அவருடைய கருத்துக்கள், நம்பிக்கைகள், தாராளமாய் அவர் அவற்றை எடுத்தியம்பலாம். ஆனால் எனக்கு விசித்திரமாய் பட்டது என்னவென்றால் தொண்ணூறுகள் துவங்கி அதிகாரம், ஒழுக்கம், மொழியியல், பின் அமைப்பியல் சார்ந்து தமிழில் பேசப்பட்ட எந்த புது கருத்தியலையும் அவர் சீண்டியே பார்க்கவில்லை என்பது.

 கடவுள், புராணங்கள் மட்டுமல்ல அறிவியல் கூட ஒரு கதையாடல் எனக் கூறும் இடத்துக்கு நாம் இன்று வந்திருக்கிறோம். ஒரு விவாதக் களத்தில் இன்று நீங்கள் கடவுளர்களின் கதைகள் பொய்ப்புனைவுகள் என தனியாக கூற முடியாது. ஏனென்றால் ஒரு மகத்தான கவிதை கூட ”கட்டமைக்கப்பட்டது” என கூறுகிற இடத்தில் நாம் இன்று இருக்கிறோம். வெ.மதிமாறன் போன்ற பெரியாரிஸ்டுகள் கடந்த இருபதாண்டுகள் தமிழில் வெளியாகி உள்ள தீவிர நூல்களை, குறிப்பாய் கோட்பாட்டு, தத்துவ நூல்களை, படிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நேற்று வி.மு மேடையில் பேசும் போது இந்த கதை இப்படி “கட்டமைக்கப்பட்டுள்ளது” என சாதாரணமாய் சொல்லிச் செல்லும் அளவுக்கு அவ்வார்த்தை புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் மதிமாறன் போன்றவர்கள் நவீன சிந்தனை அறியாமல் ஒரு இலக்கிய மேடையில் வந்து உளறுகிறார்கள். நம்மூரில் மட்டுமே சுத்தமாய் வாசிப்பு இல்லாதவர்களுக்கு மேடையில் நின்று பெரிய அறிவாளிகள் போல் கூப்பாடு போடும் தன்னம்பிக்கை இருக்கும்.
இந்த பிரச்சனை பற்றி சுருக்கமாய் மீண்டும் கூற விரும்புகிறேன்: இன்றுள்ள படித்த தட்டினரிடம் நீங்கள் போய் கடவுள் ஒரு பொய்ப்புனைவு என்றால் கூட அதிர்ச்சி அடைய மாட்டார்கள். நாம் ஐம்பதுகளில் வாழவில்லை. எளிய மக்கள் கூட மதத்தை ஒரு எளிய பற்றுகோலாய் வைத்திருக்கிறார்களே ஒழிய முழுமுற்றாய் அதை நம்புவதில்லை. மதத்தை மக்கள் இன்று கலாச்சார, அதிகார அடையாளமாய் பார்க்கிறார்கள். மக்களின் இன்றைய ஒரே மதம் பணம் தான். இதைப் புரிந்து கொள்ளாமல் பெரியாரிஸ்டுகள் தாமே ஒரு புராணமாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டாவது இயல்பு: பெரும்பாலான பெரியாரிஸ்டுகள் ஒழுக்கவாதிகள் (பெரியார் ஒழுக்கவாதி அல்ல என்பது இதில் ஒரு முரண்). அவர்கள் பெண்ணுடல் ஒழுக்கம் சார்ந்த மிகுந்த பதற்றம் கொண்டவர்கள். அடிப்படையில் ஆணாதிக்கவாதிகள். அதனாலே மதத்தையோ கடவுளர்களையோ பழிக்க வேண்டுமென்றால் உடனே அவர்கள் பெண்களுடன் சல்லாபிக்கிறவர்கள், நாலு பெண்டாட்டி வைத்துள்ளவர்கள் என்பார்கள். நேற்று பேசிய வெ.மதிமாறன் ராமன் உண்மையில் ஏகபத்தினி விரதன் அல்ல், அவர் எப்போதும் அந்தப்புரத்தில் நிறைய பெண்களுடன் சல்லாபித்திருந்தவர். அவருடைய முழுநேர தொழிலே பெண் போகம் தான் என்றார்.
 இங்கு இரண்டு கேள்விகள்: ராமாயணம் ஒரு பொய்ப்புனைவு என்றால் ராமன் ஒரு ஏகபத்தினி விரதன் என்பது மட்டுமல்ல போகி என்பதும் ஒரு புனைவு தானே? இவர் என்னமோ அது வரலாற்று உண்மை போல் ராமனின் பாலியல் கொண்டாட்டங்களை விவரித்துக் கொண்டே போனார். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு “அட இதெல்லாம் முன்பே தெரிந்திருந்தால் நான் ராமனின் விசிறி ஆகி இருப்பேனே” என நினைத்தேன்.) இவ்வளவு துல்லியமாய் விவரிக்க இவருக்கு எங்கிருந்து ஆதாரங்கள் கிடைத்தன? புராணத்துக்கு ஏதய்யா ஆதாரம்? ஒரு கதையை ஏன் இவர் திடீரென உண்மை போல் விவரிக்கிறார்?
வெ.மதிமாறனின் ஒரே நோக்கம் பெண்ணுடல் சார்ந்த ஒழுக்கவாதத்தை கொண்டு தன் எதிர்தரப்பை சாடுவது தான். பல பெண்களுடன் உறவு கொள்வது குற்றம் என்றால் ஒரே பெண்ணுடன் வாழ்வதே சரி என நீங்கள் கூறுகிறீர்கள் எனப் பொருள். அப்படி என்றால் ராமனின் ஏகபத்தினி விரதத்தை ராமபக்தர்களை விட பெரியாரிஸ்டுகளே அதிகம் வழிபடுகிறார்கள் என பொருள்.
வெ.மதிமாறன் போன்றவர்கள் பெரியாரை சரியாய் உள்வாங்கவில்லை என்பதற்கு இதுவே சான்று. ஏனென்றால் பாலியல் ஒழுக்கவாதத்தை கடுமையாய் எதிர்த்தவர் பெரியார். ஆனால் இவரைப் போன்ற பல பெரியாரிஸ்டுகள் கடும் ஒழுக்க போலீஸ்களாக இருக்கிறார்கள்.
நான் ஐஸ்ஹவுஸில் வாழ்ந்திருந்த காலத்தில் அங்கு அடிக்கடி பெரியாரிஸ்டுகள் வந்து மைக் போட்டு “பார்ப்பனர்களை” ஏசிக் கொண்டே இருப்பார்கள். அப்போது எனக்கு எழும் கேள்வி: தேவர் ஜெயந்தி நடக்கும் போது இதே போல் அங்கு மைக் கட்டி தேவர்களை இவர்கள் ஏசுவார்களா? கடந்த பத்து வருடங்களில் சாதிய படுகொலை நடத்தியவர்களின் இடங்களுக்கு போய் “ஏன் வன்னியர்களே” அல்லது “ஏ தேவர்களே” என கூவி திட்டுவார்களா? இல்லை. நம் மாநிலத்தில் கடந்த ஐம்பதாண்டுகளாக நடந்து வரும் கேலிக்கூத்து இந்த “பார்ப்பன” துவேச அரசியல்.
நாம் இன்று பார்ப்பனர்களை பழிக்காமல், பார்ப்பனியத்தை விமர்சிக்கிற நுணுக்கமான இடத்துக்கு வந்துள்ளோம். ஆனால் வெ.மதிமாறனைப் போன்றவர்கள் இன்னும் புராணக் காலத்தில் மரவுரி அணிந்தே திரிகிறார்கள். சமகால நடைமுறையை ஒன்று அவர்கள் கவனிப்பதில்லை; அல்லது கவனிக்காதது போல் நடிக்கிறார்கள். நேற்று மதிமாறன் இவ்வாறு கூறுகிறார்: “சில சாதிகள் தம்மை ஆண்ட சாதிகள் எனக் கூறுவது தம் சாதி மக்கள் கௌரவத்தில் உயரவில்லையே எனும் வருதத்தினால் தான். இவர்கள் எல்லோரும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்”. யார் இளவரசனையும் சங்கரையும் பட்டவர்த்தமாய் கொன்று வீசியவர்களா? கலவரம் என்ற பெயரில் சாதிப்படுகொலைகள் நடத்துபவர்களா? இவர்கள் தம் “கௌரவம்” உயரவில்லையே என்ற கவலையில் இதையெல்லாம் செய்கிறார்களா?
நேற்றைய உயிர்மை கூட்டம் அவ்வளவு அருமையாய் சுவாரஸ்யமாய் வேறு ஒரு நிலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது தான் மதிமாறன் ஆய்வகத்தில் கருத்தரித்த ஒரு டினோசர் போல் அங்கு ஆர்ப்பரித்தபடி மேடையில் ஏறினார். பல பார்வையாளர்கள் நெளியத் தொடங்கினர். எழுந்து வெளியே போயினர். அது தனக்கான கூட்டம் அல்ல என்பது கூட அவருக்கு புரியவில்லை. அல்லது அப்படியான கூட்டத்தின் முன்பு தான் அதிக சத்தமாய் பேச வேண்டும் எனும் தி.க மரபை அவர் பின்பற்றி இருக்கலாம்.
இறுதியாய் ஒன்று: இலக்கியவாதிகளுக்கு உண்மையோ பொய்யோ முக்கியம் அல்ல. அவர்களுக்கு புராணங்களில் வெளிப்படும் கற்பனைகளும், உளவியல் நுணுக்கங்களும் குறியீடுகளும் முக்கியம். கடவுளை நம்பாத இஸ்லாமியரான மனுஷ்யபுத்திரனின் சமீபத்தைய கவிதைத் தொகுப்பில் மகாபாரத்தில் இருந்து குறிப்புகள் வருகின்றன. கடவுள் நம்பிக்கை இல்லாத, இடதுசாரி பின்புலம் கொண்ட என்.டி ராஜ்குமார் தொடர்ந்து சிவன் குறித்த தொன்மங்களை கவிதை ஆக்குகிறார். கடவுளை வழிபடாத ஒரு இலக்கிய வாசகன் என்றும் மத இலக்கியத்தை வெறுக்க மாட்டான். இதையெல்லாம் நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள்? இவையெல்லாமும் ”பார்ப்பனிய சதி” என்றா?

 பெரியாரிஸுகளின் பேச்சுகள் இலக்கிய வாசகர்களுக்கு ஒவ்வாமையாய் இருப்பது இதனால் தான். அவர்கள் குடிகாரர்களைப் போல் நம் நுண்ணுணர்வின் மீது வாந்தி எடுக்கிறார்கள். பிறகு “பார் பார் எங்கள் வாந்தியை பார்” என வகுப்பெடுக்கவும் செய்கிறார்கள்.

Comments

Chitra said…
(கடவுளை வழிபடாத ஒரு இலக்கிய வாசகன் என்றும் மத இலக்கியத்தை வெறுக்க மாட்டான்.) உண்மை.

Unknown said…
பெரியாரிஸுக்களுக்கு சாட்டை அடி .
கூட்டத்துக்கு குடிச்சுட்டு வர்றது, அடிதடி, மேடையிலேயே புத்தகத்தை கிழிச்சு எறியுறது இந்த மாதிரி பல நல்ல காரியங்கள்ல ஒன்னுமே பண்ணாம போனதுதான் அவர் தப்பு, பண்ணியிருந்தா அவர் கலகக்கார இலக்கியவாதி ஆகி இருப்பார்.

இளவரசனுக்கும் சங்கருக்காகவும் குரல் கொடுத்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெரியாரிஸ்ட்டுகளும், கம்யூனிஸ்ட்டுகளும். இன்றும் சாதிமறுப்பு திருமணம் புரிபவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களும் இவர்கள்தான். தினத்தந்தியை தினமும் படிச்சா கூட தெரியும் தேவர், வன்னியர் உள்ளிட்ட ஆதிக்க சாதிகளுக்கு எதிரா யார் களமாடுகிறார்களென்று. கதையாடல், கட்டமைப்பு இன்னும் என்ன என்னவோ வாய்ப்பந்தல் போடும் கூட்டம் செய்தது என்ன? தடி தடியா இலக்கியவாதிகள் நீங்களெல்லாம் எழுதுறதுனால நம்ம தமிழ் சமூகத்துக்கு கிடைச்ச நன்மை என்ன?

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...