முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருமாவின் நிலைப்பாடுகள்

Image result for திருமாவளவன்

திருமா வை.கோவின் வற்புறுத்தலால் தான் திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனும் பார்வையில் எனக்கு நம்பிக்கையில்லை. திருமாவின் நேற்றைய பேட்டி அவரது மனநிலை என்ன என்பதை காட்டி விடுகிறது. அதில் திமுக மற்றும் அதிமுகவுக்கு தன் கதவுகளை எப்போதும் திறந்து வைத்திருப்பதாய் ஒரு தோற்றத்தை கொடுக்கிறார். அதாவது, அவர் எங்கும் வெளிப்படையாய் அதிமுகவை விமர்சிக்கவில்லை. திமுகவை பாராட்டவும் இல்லை. மாறாக, அடுத்து நிகழப் போகும் உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தல்கள் பற்றி பேசுகிறார். 

இத்தேர்தல்களில் மூன்றாவது அணியின் சார்பாய் போட்டியிடும் நிலையில் தன்னால் அதிமுகவை (மக்கள் நலக்கூட்டணியின் சில தலைவர்கள் என அவர் சொல்வதை நாம் ஜெயலலிதா என்று தான் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.) பகைத்துக் கொள்ள முடியாது என்கிறார். இத்தேர்தல்களில் விசிக பெரும் வெற்றிகளை பெறப்போவதில்லை என்பதை அவர்களது சமீபத்தைய தேர்தல் சரிவுகளை வைத்து கணிக்க முடியும். ஆனால் ஒரு கட்சி தேர்தல்களில் பங்கேற்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும். இப்பணத்தை ஜெயலலிதா தான் வழங்கப் போகிறார். வெற்றியோ தோல்வியோ இத்தேர்தல் மூன்றாவது அணியினருக்கு லாபம் தரும் வியாபாரமே. ஆக, காவிரிப் பிரச்சனையை முன்னிட்டு ஜெயலலிதாவின் எரிச்சலை சம்பாதிக்கக் கூடாது என்றே அவர்கள் கவனமாய் இருப்பார்கள். திருமாவும் அப்படியே யோசிப்பார்.

 ஆனால் அவர் ஏன் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டும் படி வேண்டினார்? ஏன் அதில் பங்கெடுக்கப் போவதாய் தோற்றத்தை ஏற்படுத்தினார்? தனது பேட்டியில் ஏன் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள ஆதரவு தெரிவித்ததாய் கூறினார்? ஏன் ஸ்டாலினுக்கு தன் வருத்தத்தை தெரிவித்து கடிதம் எழுதினார்?

இங்கு தான் விசிகவின் நிலைப்பாடு வருகிறது.

இடது கட்சிகள் ஜெயலலிதா ஆதரவில் இருந்து விலகும் வாய்ப்பு இல்லை. வை.கோவுக்கும் திமுக பக்கம் ஜென்மத்தில் கரை ஒதுங்க முடியாது. ஆனால் திருமாவின் நிலை அப்படி அல்ல. விசிக தோன்றியதில் இருந்தே இரு திராவிட கட்சிகளுடனும் தேர்தல் சீட், அதிகாரம், பணம் ஆகிய தேவைகளுக்காக கூட்டணி வைக்கும் கட்டாயத்தில் அக்கட்சி இருக்கிறது. இடது கட்சிகள், வை.கோ ஆகியோருக்கு பெரும் அரசியல் கனவுகள் இல்லை. ஆனால் திருமாவுக்கு உண்டு. அவர் எப்போதும் தன்னை அரசியல் பேரம் செய்யும் ஒரு சாதகமான புள்ளியில் நிறுத்திக் கொள்ளவே விரும்புகிறார். இம்முறையும் அப்படித்தான். விசிக முழுக்க அதிமுக பக்கம் இல்லை, ஆனால் அடுத்த இரண்டு வருடங்கள் திமுகவுக்கு ஆதரவு நல்க முடியாது எனும் மறைமுக சேதியை தான் அவர் இரு கட்சிகளுக்கும் தெரிவிக்க விரும்புகிறார். அது மட்டுமல்ல, இந்த பேட்டி மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழர் நலனில் தம் கட்சியினரின் உறுதிப்பாட்டை காட்ட முடியாததன் மொத்த பழியையும் லாவகமாய் வை.கோ மீது சுமத்தி விட்டார்.

இப்படி இலையும் கீறாமல் முள்ளுக்கும் வலிக்காமல் பேசும் திறனை நான் கலைஞரிடம் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

திருமாவின் நிலைப்பாட்டில் வேறுபல எதிர்கால கணக்குகூட்டல்களும் உண்டு. அவர் ஏன் மோடியை திடீரென பாராட்டுகிறார்? ஏன் பா.ஜ.கவுடன் நெருங்க முயல்கிறார்? தமிழகத்தில் ஒரு தலித்-மத்திய சாதி இந்துக்கள் கூட்டணியிலான ஒரு இந்துத்துவா எழுச்சியை பா.ஜ.க திட்டமிடுகிறதென்றால் அது மிக புத்திசாலித்தனமான நகர்வு. அது வெற்றி பெறாமல் போகலாம். ஆனால் மதக்கலவரங்கள் ஏற்படுத்தி இங்கே இந்துத்துவாவை வளர்க்க முடியாது. இதை பா.ஜ.க தாமதமாக புரிந்து கொள்ள துவங்கி இருக்கிறது. இங்கே பெரியாரிய பகுத்தறிவுவாதம் எப்போதோ வீழ்ந்து விட்டது. இஸ்லாமியரை விரோதிகளாய் பார்க்கும் வெறுப்பு மனநிலையும் தமிழர்களிடம் வெகுவாக இல்லை. ஆக பா.ஜ.கவின் முன்னுள்ள அடுத்த வியூகம் மதவாதத்தை (இந்துத்துவா) இந்திய தேசியவாதத்தின் சாயலில் தமிழர்களுக்கு கொண்டு சேர்ப்பது. ஏற்கனவே இந்தியா முழுக்க தலித்துகள் இந்துத்துவா சாய்வு மிக்கவர்களாக இருக்கிறார்கள். தமிழகத்திலும் அம்பேத்கரிய அரசியல் விழிப்பற்ற கணிசமான இந்துக்களும் அவ்வாறே இருக்கிறார்கள். என் சொந்த ஊரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் முதுகெலும்பே தலித்துகள் தாம். வடக்கு இந்தியாவை இந்த வியூகம் மூலம் வென்ற பிறகு இப்போது பா.ஜ.க தமிழகத்தில் இதை பிரயோகிக்க போகிறது. எதிர்காலத்தில் பா.ஜ.கவும் விசிகவும் கைகோர்த்து மற்றொரு அணி உருவாக வாய்ப்புகள் உண்டு. (கொள்கைரீதியாய் இதை மக்களுக்கு விளக்கும் சிக்கல் திருமாவுக்கு உண்டு. ஆனால் அவர் அதை சாமர்த்தியமாய் சமாளிப்பார் என்றே நினைக்கிறேன்.)

இதே சூழலில் தான் ஜெயலலிதாவின் உடல்நலமின்மை, நீண்ட கால ஆஸ்பத்திரி முடக்கம் நிகழ்கிறது. ஒருவேளை ஜெயலலிதா அற்ற ஒரு அரசியல் களம் தமிழகத்தில் எதிர்காலத்தில் ஏற்பட்டால்? அப்போது பா.ஜ.கவுடன் வை.கோவும் திருமாவும் இணைந்து போட்டியிடலாம். இந்த பேரம் சரிவராவிட்டால் திருமா திமுகவுடன் இணையவும் செய்யலாம். ஏனென்றால் ஜெயலலிதா ஒருவேளை தீவிரமாய் எதிர்காலத்தில் செயல்பட முடியாமல் போனால், ஸ்டாலின் தான் ஒரே அரசியல் மையம். ஆக, திருமா ஸ்டாலின் பக்கமும் ஒரு துண்டு போட்டு வைத்திருக்கிறார்.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
true
thiruma cannot take any one sided view
he requiores monetary support either from aiadmk or...
stalin however will keep him in a distance to get the attention of anti dalit votes spread over in tamilnadu..
stalin had already removed parithi ilam vazhudi from dmk
thiruma knows the stalins evil nature...
let us see.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...