Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

திருமாவின் நிலைப்பாடுகள்

Image result for திருமாவளவன்

திருமா வை.கோவின் வற்புறுத்தலால் தான் திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனும் பார்வையில் எனக்கு நம்பிக்கையில்லை. திருமாவின் நேற்றைய பேட்டி அவரது மனநிலை என்ன என்பதை காட்டி விடுகிறது. அதில் திமுக மற்றும் அதிமுகவுக்கு தன் கதவுகளை எப்போதும் திறந்து வைத்திருப்பதாய் ஒரு தோற்றத்தை கொடுக்கிறார். அதாவது, அவர் எங்கும் வெளிப்படையாய் அதிமுகவை விமர்சிக்கவில்லை. திமுகவை பாராட்டவும் இல்லை. மாறாக, அடுத்து நிகழப் போகும் உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தல்கள் பற்றி பேசுகிறார். 

இத்தேர்தல்களில் மூன்றாவது அணியின் சார்பாய் போட்டியிடும் நிலையில் தன்னால் அதிமுகவை (மக்கள் நலக்கூட்டணியின் சில தலைவர்கள் என அவர் சொல்வதை நாம் ஜெயலலிதா என்று தான் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.) பகைத்துக் கொள்ள முடியாது என்கிறார். இத்தேர்தல்களில் விசிக பெரும் வெற்றிகளை பெறப்போவதில்லை என்பதை அவர்களது சமீபத்தைய தேர்தல் சரிவுகளை வைத்து கணிக்க முடியும். ஆனால் ஒரு கட்சி தேர்தல்களில் பங்கேற்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும். இப்பணத்தை ஜெயலலிதா தான் வழங்கப் போகிறார். வெற்றியோ தோல்வியோ இத்தேர்தல் மூன்றாவது அணியினருக்கு லாபம் தரும் வியாபாரமே. ஆக, காவிரிப் பிரச்சனையை முன்னிட்டு ஜெயலலிதாவின் எரிச்சலை சம்பாதிக்கக் கூடாது என்றே அவர்கள் கவனமாய் இருப்பார்கள். திருமாவும் அப்படியே யோசிப்பார்.

 ஆனால் அவர் ஏன் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டும் படி வேண்டினார்? ஏன் அதில் பங்கெடுக்கப் போவதாய் தோற்றத்தை ஏற்படுத்தினார்? தனது பேட்டியில் ஏன் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள ஆதரவு தெரிவித்ததாய் கூறினார்? ஏன் ஸ்டாலினுக்கு தன் வருத்தத்தை தெரிவித்து கடிதம் எழுதினார்?

இங்கு தான் விசிகவின் நிலைப்பாடு வருகிறது.

இடது கட்சிகள் ஜெயலலிதா ஆதரவில் இருந்து விலகும் வாய்ப்பு இல்லை. வை.கோவுக்கும் திமுக பக்கம் ஜென்மத்தில் கரை ஒதுங்க முடியாது. ஆனால் திருமாவின் நிலை அப்படி அல்ல. விசிக தோன்றியதில் இருந்தே இரு திராவிட கட்சிகளுடனும் தேர்தல் சீட், அதிகாரம், பணம் ஆகிய தேவைகளுக்காக கூட்டணி வைக்கும் கட்டாயத்தில் அக்கட்சி இருக்கிறது. இடது கட்சிகள், வை.கோ ஆகியோருக்கு பெரும் அரசியல் கனவுகள் இல்லை. ஆனால் திருமாவுக்கு உண்டு. அவர் எப்போதும் தன்னை அரசியல் பேரம் செய்யும் ஒரு சாதகமான புள்ளியில் நிறுத்திக் கொள்ளவே விரும்புகிறார். இம்முறையும் அப்படித்தான். விசிக முழுக்க அதிமுக பக்கம் இல்லை, ஆனால் அடுத்த இரண்டு வருடங்கள் திமுகவுக்கு ஆதரவு நல்க முடியாது எனும் மறைமுக சேதியை தான் அவர் இரு கட்சிகளுக்கும் தெரிவிக்க விரும்புகிறார். அது மட்டுமல்ல, இந்த பேட்டி மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழர் நலனில் தம் கட்சியினரின் உறுதிப்பாட்டை காட்ட முடியாததன் மொத்த பழியையும் லாவகமாய் வை.கோ மீது சுமத்தி விட்டார்.

இப்படி இலையும் கீறாமல் முள்ளுக்கும் வலிக்காமல் பேசும் திறனை நான் கலைஞரிடம் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

திருமாவின் நிலைப்பாட்டில் வேறுபல எதிர்கால கணக்குகூட்டல்களும் உண்டு. அவர் ஏன் மோடியை திடீரென பாராட்டுகிறார்? ஏன் பா.ஜ.கவுடன் நெருங்க முயல்கிறார்? தமிழகத்தில் ஒரு தலித்-மத்திய சாதி இந்துக்கள் கூட்டணியிலான ஒரு இந்துத்துவா எழுச்சியை பா.ஜ.க திட்டமிடுகிறதென்றால் அது மிக புத்திசாலித்தனமான நகர்வு. அது வெற்றி பெறாமல் போகலாம். ஆனால் மதக்கலவரங்கள் ஏற்படுத்தி இங்கே இந்துத்துவாவை வளர்க்க முடியாது. இதை பா.ஜ.க தாமதமாக புரிந்து கொள்ள துவங்கி இருக்கிறது. இங்கே பெரியாரிய பகுத்தறிவுவாதம் எப்போதோ வீழ்ந்து விட்டது. இஸ்லாமியரை விரோதிகளாய் பார்க்கும் வெறுப்பு மனநிலையும் தமிழர்களிடம் வெகுவாக இல்லை. ஆக பா.ஜ.கவின் முன்னுள்ள அடுத்த வியூகம் மதவாதத்தை (இந்துத்துவா) இந்திய தேசியவாதத்தின் சாயலில் தமிழர்களுக்கு கொண்டு சேர்ப்பது. ஏற்கனவே இந்தியா முழுக்க தலித்துகள் இந்துத்துவா சாய்வு மிக்கவர்களாக இருக்கிறார்கள். தமிழகத்திலும் அம்பேத்கரிய அரசியல் விழிப்பற்ற கணிசமான இந்துக்களும் அவ்வாறே இருக்கிறார்கள். என் சொந்த ஊரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் முதுகெலும்பே தலித்துகள் தாம். வடக்கு இந்தியாவை இந்த வியூகம் மூலம் வென்ற பிறகு இப்போது பா.ஜ.க தமிழகத்தில் இதை பிரயோகிக்க போகிறது. எதிர்காலத்தில் பா.ஜ.கவும் விசிகவும் கைகோர்த்து மற்றொரு அணி உருவாக வாய்ப்புகள் உண்டு. (கொள்கைரீதியாய் இதை மக்களுக்கு விளக்கும் சிக்கல் திருமாவுக்கு உண்டு. ஆனால் அவர் அதை சாமர்த்தியமாய் சமாளிப்பார் என்றே நினைக்கிறேன்.)

இதே சூழலில் தான் ஜெயலலிதாவின் உடல்நலமின்மை, நீண்ட கால ஆஸ்பத்திரி முடக்கம் நிகழ்கிறது. ஒருவேளை ஜெயலலிதா அற்ற ஒரு அரசியல் களம் தமிழகத்தில் எதிர்காலத்தில் ஏற்பட்டால்? அப்போது பா.ஜ.கவுடன் வை.கோவும் திருமாவும் இணைந்து போட்டியிடலாம். இந்த பேரம் சரிவராவிட்டால் திருமா திமுகவுடன் இணையவும் செய்யலாம். ஏனென்றால் ஜெயலலிதா ஒருவேளை தீவிரமாய் எதிர்காலத்தில் செயல்பட முடியாமல் போனால், ஸ்டாலின் தான் ஒரே அரசியல் மையம். ஆக, திருமா ஸ்டாலின் பக்கமும் ஒரு துண்டு போட்டு வைத்திருக்கிறார்.

Comments

Unknown said…
true
thiruma cannot take any one sided view
he requiores monetary support either from aiadmk or...
stalin however will keep him in a distance to get the attention of anti dalit votes spread over in tamilnadu..
stalin had already removed parithi ilam vazhudi from dmk
thiruma knows the stalins evil nature...
let us see.

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...