Skip to main content

திருமாவின் நிலைப்பாடுகள்

Image result for திருமாவளவன்

திருமா வை.கோவின் வற்புறுத்தலால் தான் திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனும் பார்வையில் எனக்கு நம்பிக்கையில்லை. திருமாவின் நேற்றைய பேட்டி அவரது மனநிலை என்ன என்பதை காட்டி விடுகிறது. அதில் திமுக மற்றும் அதிமுகவுக்கு தன் கதவுகளை எப்போதும் திறந்து வைத்திருப்பதாய் ஒரு தோற்றத்தை கொடுக்கிறார். அதாவது, அவர் எங்கும் வெளிப்படையாய் அதிமுகவை விமர்சிக்கவில்லை. திமுகவை பாராட்டவும் இல்லை. மாறாக, அடுத்து நிகழப் போகும் உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தல்கள் பற்றி பேசுகிறார். 

இத்தேர்தல்களில் மூன்றாவது அணியின் சார்பாய் போட்டியிடும் நிலையில் தன்னால் அதிமுகவை (மக்கள் நலக்கூட்டணியின் சில தலைவர்கள் என அவர் சொல்வதை நாம் ஜெயலலிதா என்று தான் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.) பகைத்துக் கொள்ள முடியாது என்கிறார். இத்தேர்தல்களில் விசிக பெரும் வெற்றிகளை பெறப்போவதில்லை என்பதை அவர்களது சமீபத்தைய தேர்தல் சரிவுகளை வைத்து கணிக்க முடியும். ஆனால் ஒரு கட்சி தேர்தல்களில் பங்கேற்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும். இப்பணத்தை ஜெயலலிதா தான் வழங்கப் போகிறார். வெற்றியோ தோல்வியோ இத்தேர்தல் மூன்றாவது அணியினருக்கு லாபம் தரும் வியாபாரமே. ஆக, காவிரிப் பிரச்சனையை முன்னிட்டு ஜெயலலிதாவின் எரிச்சலை சம்பாதிக்கக் கூடாது என்றே அவர்கள் கவனமாய் இருப்பார்கள். திருமாவும் அப்படியே யோசிப்பார்.

 ஆனால் அவர் ஏன் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டும் படி வேண்டினார்? ஏன் அதில் பங்கெடுக்கப் போவதாய் தோற்றத்தை ஏற்படுத்தினார்? தனது பேட்டியில் ஏன் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள ஆதரவு தெரிவித்ததாய் கூறினார்? ஏன் ஸ்டாலினுக்கு தன் வருத்தத்தை தெரிவித்து கடிதம் எழுதினார்?

இங்கு தான் விசிகவின் நிலைப்பாடு வருகிறது.

இடது கட்சிகள் ஜெயலலிதா ஆதரவில் இருந்து விலகும் வாய்ப்பு இல்லை. வை.கோவுக்கும் திமுக பக்கம் ஜென்மத்தில் கரை ஒதுங்க முடியாது. ஆனால் திருமாவின் நிலை அப்படி அல்ல. விசிக தோன்றியதில் இருந்தே இரு திராவிட கட்சிகளுடனும் தேர்தல் சீட், அதிகாரம், பணம் ஆகிய தேவைகளுக்காக கூட்டணி வைக்கும் கட்டாயத்தில் அக்கட்சி இருக்கிறது. இடது கட்சிகள், வை.கோ ஆகியோருக்கு பெரும் அரசியல் கனவுகள் இல்லை. ஆனால் திருமாவுக்கு உண்டு. அவர் எப்போதும் தன்னை அரசியல் பேரம் செய்யும் ஒரு சாதகமான புள்ளியில் நிறுத்திக் கொள்ளவே விரும்புகிறார். இம்முறையும் அப்படித்தான். விசிக முழுக்க அதிமுக பக்கம் இல்லை, ஆனால் அடுத்த இரண்டு வருடங்கள் திமுகவுக்கு ஆதரவு நல்க முடியாது எனும் மறைமுக சேதியை தான் அவர் இரு கட்சிகளுக்கும் தெரிவிக்க விரும்புகிறார். அது மட்டுமல்ல, இந்த பேட்டி மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழர் நலனில் தம் கட்சியினரின் உறுதிப்பாட்டை காட்ட முடியாததன் மொத்த பழியையும் லாவகமாய் வை.கோ மீது சுமத்தி விட்டார்.

இப்படி இலையும் கீறாமல் முள்ளுக்கும் வலிக்காமல் பேசும் திறனை நான் கலைஞரிடம் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

திருமாவின் நிலைப்பாட்டில் வேறுபல எதிர்கால கணக்குகூட்டல்களும் உண்டு. அவர் ஏன் மோடியை திடீரென பாராட்டுகிறார்? ஏன் பா.ஜ.கவுடன் நெருங்க முயல்கிறார்? தமிழகத்தில் ஒரு தலித்-மத்திய சாதி இந்துக்கள் கூட்டணியிலான ஒரு இந்துத்துவா எழுச்சியை பா.ஜ.க திட்டமிடுகிறதென்றால் அது மிக புத்திசாலித்தனமான நகர்வு. அது வெற்றி பெறாமல் போகலாம். ஆனால் மதக்கலவரங்கள் ஏற்படுத்தி இங்கே இந்துத்துவாவை வளர்க்க முடியாது. இதை பா.ஜ.க தாமதமாக புரிந்து கொள்ள துவங்கி இருக்கிறது. இங்கே பெரியாரிய பகுத்தறிவுவாதம் எப்போதோ வீழ்ந்து விட்டது. இஸ்லாமியரை விரோதிகளாய் பார்க்கும் வெறுப்பு மனநிலையும் தமிழர்களிடம் வெகுவாக இல்லை. ஆக பா.ஜ.கவின் முன்னுள்ள அடுத்த வியூகம் மதவாதத்தை (இந்துத்துவா) இந்திய தேசியவாதத்தின் சாயலில் தமிழர்களுக்கு கொண்டு சேர்ப்பது. ஏற்கனவே இந்தியா முழுக்க தலித்துகள் இந்துத்துவா சாய்வு மிக்கவர்களாக இருக்கிறார்கள். தமிழகத்திலும் அம்பேத்கரிய அரசியல் விழிப்பற்ற கணிசமான இந்துக்களும் அவ்வாறே இருக்கிறார்கள். என் சொந்த ஊரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் முதுகெலும்பே தலித்துகள் தாம். வடக்கு இந்தியாவை இந்த வியூகம் மூலம் வென்ற பிறகு இப்போது பா.ஜ.க தமிழகத்தில் இதை பிரயோகிக்க போகிறது. எதிர்காலத்தில் பா.ஜ.கவும் விசிகவும் கைகோர்த்து மற்றொரு அணி உருவாக வாய்ப்புகள் உண்டு. (கொள்கைரீதியாய் இதை மக்களுக்கு விளக்கும் சிக்கல் திருமாவுக்கு உண்டு. ஆனால் அவர் அதை சாமர்த்தியமாய் சமாளிப்பார் என்றே நினைக்கிறேன்.)

இதே சூழலில் தான் ஜெயலலிதாவின் உடல்நலமின்மை, நீண்ட கால ஆஸ்பத்திரி முடக்கம் நிகழ்கிறது. ஒருவேளை ஜெயலலிதா அற்ற ஒரு அரசியல் களம் தமிழகத்தில் எதிர்காலத்தில் ஏற்பட்டால்? அப்போது பா.ஜ.கவுடன் வை.கோவும் திருமாவும் இணைந்து போட்டியிடலாம். இந்த பேரம் சரிவராவிட்டால் திருமா திமுகவுடன் இணையவும் செய்யலாம். ஏனென்றால் ஜெயலலிதா ஒருவேளை தீவிரமாய் எதிர்காலத்தில் செயல்பட முடியாமல் போனால், ஸ்டாலின் தான் ஒரே அரசியல் மையம். ஆக, திருமா ஸ்டாலின் பக்கமும் ஒரு துண்டு போட்டு வைத்திருக்கிறார்.

Comments

Unknown said…
true
thiruma cannot take any one sided view
he requiores monetary support either from aiadmk or...
stalin however will keep him in a distance to get the attention of anti dalit votes spread over in tamilnadu..
stalin had already removed parithi ilam vazhudi from dmk
thiruma knows the stalins evil nature...
let us see.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...