Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மொழித் திணிப்பு 2

இதுவரை இந்தி திணிப்பு பற்றி பேசினோம்.
இனி தமிழுக்கு வருவோம். ஐம்பதுகளுக்குப் பிறகு திராவிட கட்சிகள் தமிழ் தேசிய அலையை பரவலாக்கினார்கள். அதை அரசியல் வெற்றி சூத்திரமாக்கினார்கள். தமிழுணர்வை நம் ரத்தத்தில் கலந்தார்கள். ஆனால் தமிழ்ப்பற்று, தமிழார்வம் எத்தனை பேருக்கு இங்கு உண்டு? உண்மையை சொன்னால், வடக்கத்திய அரசு இந்தியை திணிப்பது போலத் தான் தமிழக அரசு தமிழை நம் மீது திணித்தது.

 நம் திராவிட கட்சிகளுக்கு தமிழ் என்றால் செவ்வியல் தமிழ் மட்டுமே. ஆக அவர்கள் பத்து வயதுக் குழந்தையை திருக்குறள் மனனம் செய்ய வைத்தார்கள். இந்த குழந்தைகளுக்கு இன்று புழக்கத்தில் இல்லாத பல சொற்கள் எப்படி புரியும், பள்ளியில் படிக்கும் தமிழ் அந்நியமாய் இராதா என யோசிக்கவில்லை. உதாரணமாய், பேஸ்புக்கில் புழங்கும் இன்றைய ஒரு 13 வயது பையனுக்கு திருவாசகம் கற்க வேண்டிய தேவை என்ன? அந்த தமிழ் அவனுக்கு சமிஸ்கிருதம் போலத் தோன்றாதா? நான் பள்ளி மாணவனாய் இருக்கையில் திருக்குறளை கடுமையாய் வெறுத்தேன். ஏனென்றால் எனக்கு அந்நியமான “மொழியில்” அது இருந்தது. “துப்பார்க்கு துப்பாய” என குறள் எனக்கு வேடிக்கையாய் இருந்தது. ஏன் இதையெல்லாம் படிக்க வேண்டும் என புரியவில்லை.
 இன்றும் பல தமிழ் மாணவர்களுக்கு தமிழ் கடுமையான ஒரு பாடமாய் உள்ளது. எந்த பெற்றோரிடம் விசாரித்தாலும் இதை புரிந்து கொள்ளலாம். தமிழ்ப் பாடத்தில் மதிப்பெண்கள் அதிகம் பெற நம் மாணவர்கள் திணறுகிறார்கள். ஏனென்றால் இன்று புழக்கத்தில் இல்லாத ஒரு தமிழ் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது.
ஒரு பள்ளி மாணவனாய் நான் துணைப்பாடத்தை மட்டுமே நேசித்தேன். நான் மட்டுமல்ல என் சகமாணவர்களும் தான். ஏனெனில் அதில் சிறுகதைகள் இருந்தன. அன்று நாங்கள் கதைப்புத்தகங்களை ஒளித்து வகுப்புக்கு கொண்டு வந்து படிப்போம். ஆசிரியர்கள் கண்டால் பிரம்பால் அடிப்பார்கள். இது என்ன அநியாயம்? நாம் காமிக்ஸ் மூலம் என் தமிழை கற்கக் கூடாதா? கண்ணதாசனின் ஒரு திரைப்பாடல் எனக்கு தமிழை அறிமுகம் செய்யாதா? தேவாரமும், தேம்பாவணியும் மூலம் தான் கற்க வேண்டுமா? இது ஒரு தொல் பண்பாட்டு திணிப்பு ஆகாதா?
பதினைந்து வயதுக்கு மேல் தான் எனக்கு மரபுக் கவிதை எழுதுவதிலும், மரபிலக்கியம் படிப்பதிலும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் அந்த ஆர்வம் ஏற்பட்டது கதைப்புத்தக வாசிப்பினால் தான்; தமிழ் ஐயாக்களின் உரைகளால் அல்ல. நான் விதிவிலக்கு. என்னுடன் படித்தவர்கள் தமிழை சமிஸ்கிருதம் போலத் தான் இன்றும் பார்க்கிறார்கள். “துப்பார்க்க துப்பாயவின்” திகிலை அவர்கள் இன்னும் கடக்க வில்லை.
மரபிலக்கிய அறிமுகம் அவசியம் தான். ஆனால் அது மாணவர்கள் வளர்ந்த பின் நிகழ வேண்டும். அல்லது தேவாரமும் திருவாசகமும் ஓதுவதை கேட்டு வளரும் சுழல் இருக்க வேண்டும். இல்லாத ஒன்றை திணித்தல் ஆகாது. மரபுக் கவிதை மொழியை விட நாம் எளிய உரைநடைக்கு 80% இடம் அளிக்க வேண்டும். வகுப்பில் நாடகம் போடுவது, கதை கூறுவது ஆகியவை ஊக்குவிக்கப்பட வேண்டும். குறிப்பாக தமிழய்யாக்கள் செந்தமிழில் பேசுவதை நிறுத்த வேண்டும். தமிழ் கற்பதை இயல்பாக, சுவாரஸ்யமாக, எளிதாக ஆக்க வேண்டும். அது மட்டுமல்ல தமிழ்த் தேர்வுகளில் மதிப்பெண்களை சற்று தாராளமாய் வழங்க வேண்டும். இன்று கல்லூரியில் படிக்க வரும் மாணவர்களுக்கு தமிழில் ஒரு வரி தவறில்லாமல், எழுத்துப்பிழை இன்றி எழுதத் தெரியாது. ஏனென்றால் பள்ளியில் உரைநடைத் தமிழ் சரியானபடி கற்றுவிக்கப்படுவதில்லை. சொந்தமாய் எழுதும் பயிற்சிகள் இல்லை. புரியாத தமிழில் எழுதப்பட்ட திருக்குறள் மனனம் செய்தே அவர்கள் களைத்து விடுகிறார்கள்.
 ஒரு எளிய கேள்வி: ”இயல்வது கரவேல்”. “கரவேல்” என்ற சொல்லை நீங்கள் எங்காவது தமிழகத்தில் பயன்படுத்த முடியுமா? அதை ஒரு முகநூல் பின்னூட்டத்தில் எழுத முடியுமா? டீக்கடைக்கு சென்று “கரவேல்” என சொன்னால் என்ன கிடைக்கும்? தமிழனுக்கே தெரியாத சொல் தமிழனால் பயன்படுத்த முடியாத சொல் ஏன் அவன் தொண்டையில் திணிக்கப்பட வேண்டும்? ஒரு இந்திச் சொல்லுக்கும் ”கரவேலுக்கும்” என்ன பெரிய வித்தியாசம்? ஒரு சின்ன பையனுக்கு ரெண்டும் ஒன்று தான்! மோடி இந்தியை திணித்ததற்கும் நம் திராவிட பிழம்புகள் ”கரவேலை” திணிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...