Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஏன் நான் சீரியஸானவன் இல்லை


வணக்கம் அபிலாஷ். விஷ்ணுபுரம் விழா பற்றிய பதிவுகள் வாசித்தேன். நன்றாக எழுதியிருந்தீர்கள். ஆனால், உங்களுக்கும் கே.என் செந்திலுக்கும் நடைபெற்ற விவாதம் குறித்து எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்தேன். எழுதும் எண்ணம் இருக்கிறதா? என்னளவில் அது ஒரு முக்கியமான விவாதமாகப் படுகிறது.
இப்படிக்கு
கார்த்திக் பாலசுப்பிரமணியன்

வணக்கம் கார்த்திக்
நன்றி. கே. என் செந்திலுடன் நடந்தது ஒரு விவாதம் அல்ல என எண்ணுகிறேன். ஒரு குறுகலான சாலையில் இரண்டு கார்கள் இடமின்றி ஒன்றையொன்று மறித்து நிற்பது போன்ற சம்பவம் அது. போக இடமில்லை எனத் தெரிந்ததும் நானே ரிவர்ஸ் எடுத்து அவரைப் போக அனுமதித்தேன். நான் அவரிடம் கருத்து மோதலில் ஈடுபட முயலவில்லை. ஏனெனில் எங்கள் இடையே அது சாத்தியமில்லை என எண்ணுகிறேன்.

நாங்கள் இலக்கியம், எழுத்து, அறிவுலகம் குறித்து முழுக்க வேறுபட்ட நிலைப்பாடு கொண்டவர்கள். நான் சொல்வது அவருக்கும் அவர் கருத்துக்கள் எனக்கும் சுத்த அபத்தமாகவே தோன்றும். ஆகையால், நாங்கள் பரஸ்பரம் மரியாதையுடன் கைகுலுக்கி விடைபெறுவதே நல்லது என தோன்றியது. இப்போதும் தோன்றுகிறது.
கே. என் செந்தில் ஒரு கராறான நவீனத்துவ மனநிலை கொண்டவர். அதனாலே எனது அசோகமித்திரன் அஞ்சலிக் கட்டுரையை பற்றி விஷ்ணுபுரம் விழாவில் பேசியவர் அதன் உள்ளடக்கத்துக்கும் அதன் துவக்கத்தில் நான் பயன்படுத்திய பெண்ணுடல் பற்றின உவமைக்கும் தொடர்பில்லை என்பதை கடுமையாய் சாடினார். நவீனத்துவர்கள் எழுத்தில் வடிவ ஒழுங்கை, கச்சிதத்தை வலியுறுத்துவார்கள். கே. என் செந்திலும் அவ்வாறானவரே. ஆனால் நான் விளையாட்டுப் போக்கு கொண்ட ஒரு தலைமுறையை சேர்ந்தவன். எனக்கு ஒரு அஞ்சலிக் கட்டுரையும் கூட விளையாட்டுத்தனமாக ஆனால் நுட்பமாய் ஒரு விசயத்தை கையாளும் இடம் தான். அசோகமித்திரனின் மரணம் ஒரு ஈடு செய்ய முடியா இழப்பு, ஐயகோ என் இதயம் வெடிக்கிறதே எனும் தொனியை நான் சத்தியமாய் என் கட்டுரையில் கொண்டு வர விரும்பவில்லை. இலக்கியம் வாசிப்பதும் கிரிக்கெட் பார்ப்பதும் பக்கத்தில் பேசுகிறவர்களை ஒட்டுக் கேட்பதும் எனக்கு ஒன்று தான். அதனாலே நான் சற்றே விலகி நின்று, அசோகமித்திரனை அறியும் நோக்கம் ஒன்றையே பிரதானப்படுத்தி, அவரது தியாகம், இழப்பு, அதனாலான கசப்பு ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளி அக்கட்டுரையை எழுதினேன். அதனாலே துவக்கத்திலேயே அந்த விடலைத்தனமான தொனியை கொண்டு வந்தேன்.
கூட்டத்தில் பெண்ணுடலை தெரியாமல் உரசி விட்டு யார் அந்த பெண் என ஒரு ஆண் வியந்தபடி ரசிப்பதை நான் அசோகமித்திரனின் கதை ஒன்றை ஒரு ஆரம்ப கட்ட வாசகன் படித்து விட்டுஇக்கதை படிக்க சுவையாய் உள்ளது, ஆனால் இதில் அவர் என்னவோ சொல்ல வருகிறார், என்னவோ அழகாய் சுவாரஸ்யமாய் சொல்ல முயல்கிறார். என்ன அது? அது தான் எனக்கு சரியாய் பிடிபடவில்லை.” என நினைப்பதையும் ஒப்பிட்டிருந்தேன். இது ஒரு பொருத்தமற்ற ஒப்பீடு என நான் எண்ணவில்லை. இதற்காய் ஒருவர் கடுப்பாகி கட்டுரையை மேலும் படிக்காமல் வீசி எறிவது மிகை உணர்ச்சி என்று தான் படுகிறது.
நான் ஒரு சீரியஸான எழுத்தாளன் அல்லஎன நான் கூறியதையும் கே. என் செந்தில் அன்று கண்டித்தார். நான் எழுத்தை ஒரு தவமாய் கொள்கிறவன் தான். ஆனால் எழுதும் நடவடிக்கையை மட்டுமே அப்படி அர்ப்பணிப்புணர்வுடன் காண்கிறேன். எழுதிய விசயங்களை அல்ல.
 எனக்கு எழுதும் போதான அனுபவம், மனநிலை, புலனின்பத்துக்கு இணையான சுகம், கிளர்ச்சி, திகைப்பு தான் முக்கியம். மற்றபடி எழுதப்பட்ட படைப்புக்களை நான் ஒரு தாய் நாய் தன் குட்டிகளை பார்ப்பது போன்றே பார்க்கிறேன். ரெண்டு வாரம் முலையூட்டி விட்டு அவற்றை துரத்தி விட்டு அடுத்த குட்டிகளை வயிற்றில் சுமக்க கிளம்பி விடுவேன். என் நாவல், கதை, கட்டுரை, கவிதை பற்றி வரும் விமர்சனங்கள் என்னை பெரிதும் அசைப்பதில்லை. காரணம், அவற்றை ஒரு பாரமாய் நான் முதுகில் சுமப்பதில்லை. இன்னொரு விசயம், எழுதிய பல விசயங்களை நான் சில நாட்களிலேயே மறந்து போகிறேன். நான் முன்னர் எழுதியவற்றை யாராவது நினைவுபடுத்தி வினவினால் நான் திகைத்துப் போகிறேன்.
அடுத்து, எழுத்து என்பது நான் தரிசித்த உண்மையை நேர்மையாய் பதிவு செய்வது என நான் கருதுவதில்லை. சுந்திர ராமசாமியின் காலத்தில் மக்கள் அவ்வாறு நம்பினார்கள். கே. என் செந்திலும் அவ்வாறே சிந்திக்கிறார் (அதனாலே அவரை ஒரு நவீனத்துவாதி என கருதுகிறேன்). ஆனால் இன்றைய சிந்தனையாளர்கள் எழுத்து என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட நிரந்தரமற்ற உண்மை என கூறுகிறார்கள். நானும் அவ்வாறே நம்புகிறேன்.
எல்லாவற்றுக்கும் மையமான ஒரு நிரந்தர உண்மை உள்ளதாகவும், அதை எழுத்தில் பகர்த்துவதே நம் வேலை என கே. என் செந்திலைப் போன்றவர்கள் நம்புகிறார்கள். எதிலும் அவ்வாறு உறுதியாய் பற்றிக் கொள்ளாமல் நதியொழுக்கில் இலை போல் நகர்வதே வாழ்வில் சாத்தியமான ஒரே விசயம் என என்னைப் போன்றவர்கள் நம்புகிறோம். இப்போதைக்கு நம்ப முடிந்ததை இப்போதைக்கு நம்புகிறோம். நாளைக்கு இன்னொன்று கிடைத்தால் அதை பற்றிக் கொள்வோம். இதனாலே என் எழுத்தில் நீங்கள் முரண்களை, கருத்து நிலை மாற்றங்களை தொடர்ந்து காண முடியும்.
இன்னொன்று நான் எழுத்தாளன் தானா என்பதிலே எனக்கு ஐயம் உண்டு. என் வாசகர்கள் என்னை விட அதிகம் அறிவும் அனுபவமும் புரிதலும் கொண்டவர்களாய் இருக்கையில், என்னை ஏன் படித்து ரசிக்கிறார்கள் / வியக்கிறார்கள்? என்னை மீறி என் எழுத்தை சிறப்பாக்குவது எது? வாசகர்களா? நான் இயங்கும் மொழியின் மந்திரமா? என் எழுத்தை நான் எழுதுகிறேனா அல்லது அது என் வழி நிகழ்கிறதா? நான் எந்தளவு என் எழுத்தைப் பற்றி பொறுப்புணர்வுடன் இருக்கலாம்? என் எழுத்தின் கீழ்மைக்கும் மேன்மைக்கும் எந்தளவுக்கு நான் பொறுப்பாக வேண்டும்?

மேற்சொன்ன இவ்வளவு விசயங்களின், கேள்விகளின் அடிப்படையில் தான் நான் சீரியஸானவன் அல்லஎனும் வாக்கியத்தை ஆன் சொன்னேன். ஆனால் இவற்றில் எதையும் கே. என் செந்திலால் ஏற்க முடியாது. எழுத்தாளனை எழுத்தின் மையமாய் கருதும், அவனது பிரக்ஞை அவன் எழுத்தின் மையவிசை என நம்பும், எழுத்தில் சொல்லப்படும் உண்மைகள் நிலையானவை, பரிபூரண உண்மையை பிரதிபலிப்பதே நல்ல எழுத்து என நம்பும் நவீனத்துவர் அவர். அவருக்கு அவரது உண்மை. எனக்கு எனது. நாங்கள் விவாதிக்காமல் இருப்பதே தமிழ் இலக்கியத்துக்கு நல்லது.

Comments

கருத்து மோதல்களைத் தவிர்த்தல் நலமே.

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...