Skip to main content

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (7)



Related image

(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)

14. முற்போக்கான மாநிலமாக அறியப்படும் கேரளாவிலும் கூட சாதிய அபிமானத்துடன் திரைப்படங்கள் வெளிவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். பெயருக்குப் பின்னால் சாதியின் பெயரைச் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் இன்னும் அங்கு ஒழியவில்லை. எனில், கதாநாயகர்களுக்குச் சாதிய அடையாளங்களுடன் பெயர் வைப்பது தவிர்க்க முடியாதது அல்லவா? இதை எப்படிப் புரிந்து கொள்வது?

ஆர். அபிலாஷ்: கேரளாவில் சாதி படிநிலை பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அது இயல்புத்தன்மை கொண்டதால் ஏற்பட்ட நிலை அது. அங்கு ஒருவரை சாதிப்பெயரால் அழைப்பது இழிவு அல்ல. ஆனாலும் ஈழவ மக்களின் அரசியல் எழுச்சி அங்கு சாதி குறித்த பிரக்ஞையை ஏற்படுத்தி உள்ளது. ராஜீவ் ரவியின்கம்மட்டிப் பாடம்ஒரு நல்ல உதாரணம்.
எது எப்படியோ, சாதியை குறிப்பிடாமல் இருப்பது சாதியை ஒழிப்பது ஆகாது. சாதியை பல விதங்களில் இந்திய சமூகம் சார்ந்திருக்கிறது. நமது குடும்பம், நிலவுடைமை, பெண்களின் மீதான சமூக கட்டுப்பாடு, நமது சுய அடையாளம், அரசியலில் நமது செல்வாக்கு என பல (சமூகக் கேடான) விசயங்கள் சாதியை நம்பி இருக்கின்றன. நீங்கள் சாதிக்கு வெளியே இருந்தால் திருமணம் செய்ய முடியுமா சொல்லுங்கள்? என்னதான் புரட்சித் திருமணம் செய்தாலும் மீள மீள சாதிக்குள் விழுந்தே ஆக வேண்டும்அப்படியான சூழல்கள் சந்தர்பங்கள் வாழ்வில் தோன்றியபடியே இருக்கும்.
ஆகையால், நாம் சாதியை மூடி மறைக்காமல் அது குறித்து சினிமாவில் இன்னும் திறந்த மனத்துடன் பேச வேண்டும் என்பதே என் விருப்பம். உதாரணமாய், “காதல்போன்ற படங்களில் இன்னும் நேரடியாய் சாதி கலவரங்கள், வன்முறை, ஒடுக்குமுறையை குறிப்பிட்டு விவாதிக்கக் கூடிய சூழல் இங்கு தோன்ற வேண்டும். ஒரு விசயத்தை பேசாமல் இருக்கையில் தாம் குரோதம் நொதித்து வன்முறை வளர்ந்து சமூகப் பிரச்சனைகள் வெடிக்கின்றன. ஆனால் பேச பேச நாம் ஒரு புரிந்துணர்வை எட்டி விட முடியும். இமையத்தின்பெத்தவன்கதை ஒரு அருமையான உதாரணம். நமது தணிக்கைத் துறை இவ்விசயத்தில் இன்னும் முற்போக்காய் இருக்க வேண்டும்.
15. மலையாள சினிமாவில் சமீப ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள புதிய அலைக்குப் பிறகான திரைப்படங்களின் போக்கு எப்படி இருக்கிறது?
ஆர். அபிலாஷ்: ஆமாம், வித்தியாசமான மண்ணின் மணம் கொண்ட புது நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் படங்கள் மலையாளத்தில் தற்போது வருகின்றன. பகத் பாஸில், நிவின் பாலி போன்ற நடிக்கத் தெரிந்த நட்சத்திரங்கள் இந்த புது வரவுகளின் மையத்தில் இருக்கிறார்கள். மோகன்லால், மம்முட்டியை தாண்டி நல்ல சினிமா உருவாக முடியும் என மலையாளிகள் தமக்குத் தாமே நிரூபிக்கிறார்கள்.
 மலையாள சினிமாவின் இந்த அலை என்னை ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் சில வருடங்களுக்கு முன்பு வரை படுமட்டமான படங்களின் தொடர் வருகை, மோகன்லால் போன்ற நட்சத்திரங்களின் படங்களே தோல்வி அடைவது, தமிழ் படங்கள் அங்கே வெளியாகி அமோகமாய் ஓடுவது என மலையாள சினிமா உலகமே கிட்டத்தட்ட தரைமட்டமாகும் நிலைமை ஏற்பட்டது. ஆனால் எதிர்பாரா விதத்தில் மலையாள சினிமா மீண்டும் வந்துள்ளது. மோகன்லால்புலிமுருகன்எனும் பெரிய வெற்றிப் படம் கொடுத்தார். இன்னொரு பக்கம் ராஜீவ் ரவி, திலீஷ் போத்தன், ஆஷிக் அபு, சமீர் தஹீர், ரதீஷ் அம்பத் என மாற்றுப்பட / இடைநிலை இயக்குநர்களும் வெற்றி பெறுகிறார்கள். ஆரோக்கியமான சூழல் அங்கு திரும்பி விட்டது.
இங்கு இரண்டு விசயங்களைக் குறிப்பிட வேண்டும்.
1)   என்னதான் வித்தியாசமான அபாரமான படங்களைக் கொடுத்தாலும் மலையாள சினிமாவுக்கு என்று இன்னமும் திரைமொழி உருவாகி வரவில்லை. ராஜீவ் ரவி போன்றோரின் படங்கள் மட்டுமே விதிவிலக்கு. தொழில்நுட்ப ரீதியாக நாம் அவர்களை விட வெகுவாக மேலே இருக்கிறோம்.

2) குறைந்த பட்ஜெட் படங்களை எடுப்பது அவர்களுக்கு எப்போதுமே 
வலிமை. அவர்களால் பரீட்சார்த்த முயற்சிகளை எளிதில் செய்து பார்க்க இயல்கிறது.



Comments