Skip to main content

யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன்



அண்மைக் காலங்களில் .பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மற்றும் இஸ்லாமியர் மீது கடுஞ்சொற்களை ஏவுவதை, வன்முறை கொப்புளிக்கும் திராவகப் பேச்சுகளை வீசுவதைப் பார்க்கிறோம். சி..ஏவுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்ட மக்களும் பெருமளவில் சுடப்பட்டதும் மோசமாய் தாக்கப்பட்டதும் கூட அவர் ஆளும் மாநிலத்தில் தான். தேர்தல் பிரச்சாரத்தில் 48 வினாடிகள் அவர் பேசினால் அதில் 9 தடவை பாகிஸ்தான் எனும் சொல்லை குறிப்பிடுகிறார் என்கிறார்கள். 2005இல் அவர் 1800 கிறித்துவர்களை இந்து மதத்துக்கு மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2014இல் அஸாம்கர்ஹில் பேசும் போதுஅவர்கள் ஒரு இந்துப்பெண்ணை கவர்ந்தால் நாம் 100 இஸ்லாமியப் பெண்களைக் கவர்வோம். அவர்கள் ஒரு இந்துவைக் கொன்றால் நாம் நூறு இஸ்லாமியரைக் கொல்வோம்என்றார். உடனே கேட்டு நின்ற கூட்டம்கொல்லுவோம் கொல்லுவோம்என உரக்கக் கத்தியது. 2014இல் அவர் பேசும் போது கௌரி, கணேஷ் மற்றும் நந்தியின் சிலைகளை ஒவ்வொரு மசூதியிலும் நிறுவுவோம் எனச் சொன்னார். சூரிய நமஸ்காரம் பண்ண விரும்பாதவர்கள் கடலில் மூழ்கி சாகட்டும், யோகா பண்ண விரும்பாதவர்கள் இந்துஸ்தானை விட்டு வெளியேறட்டும் என்றார். 2015இல் அவர் நடிகர் ஷாருக்கான் பேசுவதும் தீவிரவாதி ஹபீஸ் சயித் பேசுவதும் ஒரே மொழியே என்றார். அவர் தனது நோக்கமே .பியையும் இந்தியாவையும் ஒரு இந்து ராஷ்டிரமாக்குவது என சூளுரைத்தார். 2010இல் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்த யோகி பெண்கள் ஆண்களின் இயல்பைப் பெற்றால் அவர்கள் அரக்கிகள் ஆகி விடுவார்கள் என்றார்.


வெகு அண்மையில் பேசும் போது அவர் தெருவில் போராடும் மக்களுக்கு சொற்களின் அர்த்தம் புரியாவிட்டால் துப்பாக்கி ரவைகளின் அர்த்தம் புரியும் எனச் சொல்லி உள்ளார். இந்தஅற்புதக்கருத்துக்களை நான் பட்டியலிடக் காரணம் வேறெந்த இந்துத்துவ தலைவர் / முதல்வரையும் விட யோகி தன்னை தனியாக கொடூரமானவராகக் கட்டமைத்து வருவதை சுட்டிக் காட்டவே. அதாவது வேறு காவித் தலைவர்கள் பேசுவதற்கு சற்று தயங்குகிற மொழியில் இவர் புகுந்து விளையாடுகிறார். ஒரு தெலுங்கு பட வில்லன் கூறும் வசனங்களை தான் அணிந்துள்ள காவி உடை குறித்த கூச்சம் இல்லாமல் பேசுகிறார். ஆனால் அவர் சாதாரண வில்லன் அல்ல; மதவாதி வேடம் பூண்ட வில்லன் அல்ல. அவர் துறவாடை அணிந்த வித்தியாசமான வில்லன். நம் அரசியல் வரலாற்றில் இப்படியான ஒரு பாத்திரம் இதுவரை ஏற்பட்டதில்லை.
 இப்பேச்சுகளையும் நடவடிக்கைகளையும் யோகியின் அறியாமை, முரட்டுத்தனம், தடித்தனத்தின் விளைவானது என நாம் பார்க்கக் கூடாது. ஒரு அரசியல்வாதி தன் ஒவ்வொரு சொல்லையும் தன் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தான் உதிர்ப்பான். அவன் மிக மிக கவனமாகவே தன் பிம்பத்தை கட்டமைப்பான். யோகியின் இந்த அதீத வன்முறை பிம்பம் என்பது அவர் தெள்ளத்தெளிவாக கடந்த இரு பத்தாண்டுகளாக “செங்கல் செங்கல்லாக” வைத்து கட்டி அமைத்தது. அவரது இந்த உக்கிர சொரூபம் என்பது ஒரு சாமியார்-அரசியல்வாதி என்பதாலே கூடுதல் உக்கிரம் பெறுகிறது. இது வினோதமானது, ஆனால் உண்மை.
 ஒரு திரைப்படத்தில் பிம்பங்கள் ஒன்றின் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன - ஒரு ஆண் துப்பாக்கியுடன் நிற்கிறான், பேண்ட் சட்டை அணிந்த ஒரு பெண் துப்பாக்கியுடன் நிற்கிறாள், சேலையில் ஒரு பெண் துப்பாக்கியுடன் நிற்கிறாள், காவி உடையில் ஒரு பெண் துப்பாக்கியுடன் உக்கிரமாக பார்த்து நிற்கிறாள். இந்த கடைசி பிம்பம் தான் ரொம்ப தாக்கம் செலுத்துவதாக இருக்கும்; ஏனென்றால் அதில் ஒரு உள்முரண் உள்ளது - ஒரு பெண் துப்பாக்கி ஏந்துகிறாள் எனும் முரணுக்குள் சேலையணிந்த சாத்விகப் பெண் துப்பாக்கி ஏந்துகிறாள் எனும் கூடுதல் முரண் வந்தமர்கிறது. இதனுள் காவியாடை  அணிந்த துறவி துப்பாக்கி ஏந்துகிறாள் என்பது முரணுக்குள் முரணாக பொதியப்பட்டு தோன்றுகிறது. இப்போது பெண்ணின் இடத்தில் ஆண் துறவியை வையுங்கள். அதே தாக்கம் பலமடங்காக அமையும்.
 அமைதியாக சாத்வீகமாகத் தோன்றக் கூடியவரின் கோபமான பேச்சு நம்மை அதிகமாகத் தாக்கும். மேலும் ஒரு துறவியின் கோபம் எப்போது தனிப்பட்ட நோக்கத்தில் ஆனதாய் பார்க்கப்படாது. சமூகத்துக்காக, பண்பாட்டுக்காக, தான் நம்பும் ஒரு மேம்பட்ட கொள்கைக்காக அவர் கொதிப்பதாகவே மக்கள் பார்ப்பார்கள். மேலும் நமது கீதை சொல்வதென்ன? பற்றற்றவன் கொலை செய்தால் அது கொலை அல்ல, அது உன்னதமானது, அது ஆத்மீகமானது, அது விடுதலை மார்க்கமானது; அப்படித் தான் அர்ஜுனனின் கொலைகளை, உறவுகளைக் கொல்லும் பாதகங்களை கிருஷ்ணர் மகிமைப்படுத்துகிறார். நமது அரசியல் களத்தில் யோகி தான் நவீன அர்ஜுனன். அவரது கோபாவேசம் தூய்மையானதானதாக, அவரது சொற்களில் மினுக்கும் குற்ற மனப்பான்மை யோக்கியமானதாக பெருவாரியான வாக்காளர்களுக்கு தொனிப்பது சுலபம். அவரது கோபாவேசம் கூடுதலான கூர்மையும், தாக்கமும் பொருந்தியதாக, அச்சமூட்டுவதாக தொனிப்பதும் சுலபமே.
 வேறெந்த அரசியல் தலைவரையும் விட யோகியால் எந்த வன்முறைப் பேச்சையும் பேசி விட்டு அதன் பாவக்கறை தன் மேல் படியாமல் தாண்டி சென்றுவிட முடியும். ஏனெனில் அவர் சாதாரண பிரஜையோ சட்டத்துக்கு உட்பட்ட எளிய மனிதனோ அல்ல. அவர் ஒருயோகி”, ஒருதுறவி”, சமூகத்தின் விளிம்பில் இருப்பவர். அவருக்கு சமூகத்தின் நீதிநெறிகள் பொருந்தாது என நமது இந்திய கூட்டு மனம் நம்புகிறது. அதேநேரம் இவர் ஒரு முதல்வராக இருப்பதால் ஒரே சமயம் மதத்தின் தொல்நம்பிக்கைகள் தரும் பாதுகாப்பும், சட்டத்துக்கு அப்பாலான அதிகாரமும், அந்த சட்டத்தை கையில் வைத்து சிலம்பமாடும் தகுதியும் படைத்தவர் ஆகிறார் (இதே தர்க்கம் தான் கார்ப்பரேட் சாமியார்களுக்கும் உதவுகிறது. அவர்கள் கொள்ளையடித்தால் அது கொள்ளை அல்ல. அவர்கள் பலாத்காரம் செய்தால் அது பலாத்காரம் அல்ல. அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர்கள் குற்றவாளிகள் அல்ல).
 யோகி ஒரு சராசரி முதல்வரும் அல்ல, அரசியல் தலைவரும் அல்ல, அவர் ஒரு சராசரி துறவியும் அல்ல. இது தான் யோகி எனும் ஆபத்தான கலவை பிம்பம்
யோகி ஆட்சி செய்யும் பாணியையும் நாம் கவனிக்க வேண்டும். இப்போதைக்கு .பியில் அவர் பின்பற்றுவது மோடியின் பாணி - 36 அமைச்சர்களின் பொறுப்புகளை முதலவராக ஒரே ஆள் அவர் கையில் வைத்திருக்கிறார். அதாவது அங்கு ஒட்டுமொத்த அமைச்சரவையும் முதல்வர் தான். மோடியின் ஒற்றைப்புள்ளி அதிகார மையமாக்கலின் ஒரு கற்பனைக்கப்பாலான வடிவமாக யோகி தன்னைக் காட்டிக் கொள்கிறார். New York Times பத்திரிகையின் கண்ப்புப்படி 2024இல் இந்திய பிரதமர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்த சாத்தியமுள்ளவர் யோகி. அதாவது அமித் ஷாவின் செயல்பாடுகளில் ஆர்.எஸ்.எஸ் அதிருப்தியானால் அவரை விட அதிக வெடிமருந்துக் கொள்ளளவு கொண்ட ஆயுதக்கிடங்காக யோகி இருப்பார்.

 அமித் ஷா என்பவர் மோடி 2.0 என்றால் யோஷி 3. 0. மோடி கைத்துப்பாக்கி என்றால் ஷா மெஷின் கன். ஆனால் யோகி ஒரு அணு குண்டு. ஷாவின் பிரசித்தம் (கட்சிக்குள்ளோ மக்களிடையிலோ) குறைவதாக ஆர்.எஸ்.எஸ் நினைத்தால் அவரை விட மோசமான ஆயுதத்தையே அடுத்து கையில் எடுக்கும். அது யோகியாகவே இருக்கும். அந்த தருணத்துக்காகவே யோகி தன்னை இத்தனை ஆண்டுகளாக கூர்தீட்டி வருகிறார். யோகி பிரதமர் ஆகும் நாள் ஒன்று வருமானால் அன்று இந்த தேசம் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் சென்று விடும். அன்று நாடு முழுக்க பொருளாதாரம், முன்னேற்றம், வளர்ச்சி (சமத்துவம், மதசார்பின்மை ஆகியவற்றை எல்லாம் நான் கணக்கில் கொள்ளவே இல்லை) ஆகியவை பின்னுக்குத் தள்ளப்பட்டு விதவைகளை சிதையில் இட்டு எரிக்கு சதி போன்ற பிற்போக்கு வழமைகள் முன்னெடுக்கப்பட்டாலும் நாம் ஆச்சரியப்பட தேவையிருக்காது. ஆர்.எஸ்.எஸ் மையத்தின் ஒரு பிரச்சனை அது - நாம் அவர்களின் தேர்வுகளில் ஒவ்வொருவரையாய் நிராகரிக்கையில் அவர்கள் மேலும் மேலும் மோசமான வதைக்கருவிகளை நம் முன் நீட்டுவார்கள். ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்தியலை மொத்தமாய் நிராகரிப்பதே இப்போது மக்கள் முன்புள்ள ஒரே வழி

நன்றி: உயிர்மை.காம்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...