Skip to main content

அந்த டீ எங்கே கிடைக்கும் பாஸ்?

(பேஸ்புக்கில் நண்பர் லஷ்மி சரவணகுமார் எழுதியதற்கு ஒரு பதில்) 

அன்புள்ள லஷ்மி சரவணகுமார்,

14 வருடங்களாக எழுதி வருகிறேன். எனக்கு யாராவது என்றாவது ஒருநாள் ‘ராயல்டி’ கொடுக்கும் போது உங்களுக்கும் அந்த ‘டீயை’ வாங்கித் தருகிறேன். அதுவரைப் பொறுக்கவும்!

உங்களுக்கு ஏற்கனவே அந்த டீ கிடைக்கிறதெனில் எனக்கும் கொஞ்சம் ஊற்றித் தரவும். 


தமிழில் மிக மிகச்சிலர் மட்டுமே ராயல்டி வாங்குகிறார்கள். மிக மிகப் பெரும்பாலானோர் எதுவுமே வாங்காமல் நீண்ட காலமாய் எழுதுகிறார்கள். நீங்கள் இப்படி பதிவிட்டு அசிங்கப்படுத்தாதீங்க. இந்த பிரச்சனை எழும் போதெல்லாம் தமிழ் எழுத்தாளன் ஒரு பிச்சைக்காரன் எனும் எண்ணம் வாசகர்களுக்கும் பொதுமக்களுக்கும் எழுகிறது; அவர்களில் ஒரு பகுதியினர் இதை உள்ளூர ரசிக்கிறார்கள் வேறு எனத் தோன்றுகிறது. அதனாலே இந்த ‘ஒப்பாரியில்’ நான் கலந்து கொள்வதில்லை. எத்தனையோ இளம் இயக்குநர்கள் நம்மிடம் ஓசியில் திரைக்கதையை எழுதி வாங்கிக் கொண்டு அப்பீட் ஆவதில்லையா? ஏனென்றால் பணமில்லை, படத்தை துவங்க வழியில்லை என்பார்கள். என்ன செய்ய முடியும், அப்படியே விட்டு விடுவதைத் தவிர? எப்போதுமே வறிய பகுதிகளில் இப்படி நீதி, அநீதி பேசுவதில் அர்த்தமிருக்காது.


மூன்று விசயங்கள்:


1) உயிர்மை பஞ்சாயத்தில் என்னை இழுக்காதீர்கள். அது என் வேலையல்ல.


2) பல பதிப்பகங்கள் மோசமான நிலையில் உள்ளன. புத்தகங்களை பாதுகாத்து வைக்க இடமில்லாமல் தவிக்கிறார்கள். வருகிற லாபம் பராமரிப்பு, அன்றாட செலவுகளுக்கே போதுமானதாக இருக்கிறது என அவர்கள் புலம்புவது உங்களுக்கும் தெரிந்திருக்கும். (இன்றுள்ள நிலையில், உயிர்மை மட்டுமல்ல ராயல்டி தராதது.)

 நூலக ஆர்டர் வாங்கும் பதிப்பகத்தார் மட்டுமே செழிக்கிறார்கள். ஆனால் அதற்கு பல லட்சம் லஞ்சம் கொடுக்க திராணி வேண்டும். புத்தகத்தை விற்று ஊரை அடித்து கொழித்திருக்கிறார்கள் என நீங்கள் சொல்வது மிகை. நிலைமை மிக மோசமாக இருக்கிறது.

என்னுடைய ஒரே அதிர்ஷ்டம் இதுவரை பணத்தைக் கொடுத்து பதிப்பிக்க நேர்ந்ததில்லை என்பதே. ஆனால் பெரும்பாலான இளைய எழுத்தாளர்களின் நிலை அதுவே - அவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

தமிழில் தொடர்ந்து இப்படி எழுதுவதன் ஒரே அனுகூலம் பதிப்பாளர்களே நம்மிடம் புத்தகம் போடக் கோரும் சிறிய திருப்தி மட்டுமே.

இப்போதைக்கு இந்த பிரச்சனை உள்ளோர் கிண்டிலில் தாராளமாய் பதிப்பிக்கலாம் - பணம் கேட்காமலே வந்து கணக்குக்கு விடும். இல்லாவிட்டால், பதிப்பாளரிடம் பிரதியைக் கொடுக்குமுன்பே முன் தொகையாக வாங்கிக் கொள்ளலாம் - இதை உங்களுக்கு சொல்லவில்லை. இதைப் படிக்கிற இளம் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமே சொல்கிறேன். 

‘புத்தகம் விற்கவில்லை, நீ எனக்குப் பணத்தைக் கொடு’ என எழுத்தாளனிடம் பதிப்பாளன் அடித்துப் பிடுங்கும் நிலை எதிர்காலத்தில் வரக் கூடாது என பிரார்த்திக்கிறேன். 

3) உங்கள் வருத்தம் புரிகிறது. அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...