“ஊடகமே செய்தி” என்பது ஊடகவியல் ஆய்வாளர் மெக்லூஹலின் முக்கியமான கூற்று. அவர் சொல்ல வந்ததென்ன? டிவி ஊடகம் வந்த பின் மக்கள் இந்த உலகைப் பார்க்கும்விதமே மாறிவிட்டது, ஒரு செயல்-அதன் எதிர்வினை என்று அல்லாமல் ஒரு பிம்பம், அதனிடத்தில் மற்றொரு பிம்பம் என உலகம் மாறிவிட்டது என்கிறார். டிவியும், இன்று இணையமும் வந்த பின்னர் சொற்கள் கனமிழந்து விட்டது, கருத்துக்கள் சாரமற்று விட்டது இப்படித்தான். அந்த ஊடகம் எப்படி நம்மைக் கையாள வேண்டும் என நினைக்கிறதோ அதனுள் போகும் போது நாமும் அவ்வாறே ஆகிறோம். பிக்பாஸில் “எல்லாரும் இங்கே சமம்” என்று கூறிவிட்டு அதே நபர் “பிக்பாஸ் தேங்க்யூ” என்று சொல்லும் போது, அந்த சமத்துவமே கேலிக்கூத்தாகிறது. எல்லாரும் சமம் என்றால் பிக்பாஸ் என ஒருவர் எப்படி இருக்க முடியும்? பிக்பாஸின் விளையாட்டுகள் எனப்படும் ஒடுக்குமுறை பொழுதுபோக்கின் பகுதியாக ஒருவர் பாதி மீசையை எடுக்கிறார், ஒருவர் முகத்தில் கரியைப் பூசிக் கொள்ளுகிறார் என்றால் அங்கு அவர் அதன் அடிமைத்தனத்தைப் புரிந்து கொள்ள முடியாதபடி அதனுடன் கட்டுண்டிருக்கிறார் எனப் பொருள். அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கும் அது அடிமைத்தனம் எனத் தோன்றாது. ஏனென்றால் அவர்களும் நாமும் அப்போது அந்த ஊடகத்தின் அங்கமாகி விட்டோம். அப்படி நாம் ஆவதே அந்த ஊடகம் சொல்லும் செய்தி.
இன்னும் சொல்லப்போனால் ஊடகத்துக்கு என ஒரு தனி சேதியே கிடையாது, பிக்பாஸிலும் கருத்துக்கள் இல்லை, அந்த நிகழத்துதலின் பகுதியான வசனங்கள் மட்டுமே அவை. அதுவே ஊடகமே செய்தி என்பது.
விக்ரமன் எடுக்கிற முற்போக்கான அணுகுமுறைகளே முக்கியம், அவர் எங்கே சொல்கிறார் என்பதல்ல என்று யோசிக்கும் நண்பர்கள் மெக்லூஹன் சொல்வதை கவனிக்க வேண்டும். பிக்பாஸ் எனும் ஊடகத்தினுள் இருந்து கொண்டு நீங்கள் ‘நல்ல’ கருத்துக்களை சொல்லும் போது அக்கருத்துக்கள் உருமாறுகின்றன - பொருளற்றவையாக, விளையாட்டுத்தனமாக, மேலோட்டமானவையாக மாறுகின்றன.
பிக்பாஸில் கலந்து கொண்டு ஒரு ஊடகத்தை, வடிவத்தை சரியாக பயன்படுத்தி மாற்றத்தைக் கொண்டு வருகிறோம் என்பது சப்பைக்கட்டு, ஒரு அப்பட்டமான பொய் என்பதை இப்படி சுலபத்தில் புரிந்து கொள்ளலாம்.
Comments