முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெய்வத்துக்கு ஸ்வந்தம் அல்லாத நாடு





கடந்த பத்திருபதாண்டுகளில் வந்துள்ள மலையாளப் படங்களுக்கு ஒரு பிரச்சினை உள்ளது. அவை பிளாஸ்டிக்காக, ஆனால் மிக புத்திசாலித்தனமாக இருக்கும். திரைக்கதையின் தந்திரங்களால் நம்மைக் கடைசி வரை பார்க்க வைக்கும், ஆனால் முடிவில் ஒரு பெரிய அதிருப்தி நம்மைக் காத்திருக்கும். அது உணர்வுரீதியான வெறுமை. என்னதான் இப்படங்களை நாம் கொண்டாடினாலும் திரும்பத் திரும்ப பார்க்க வைக்கும் ஒரு உணர்வுரீதியான ஒன்றுதல் இப்படங்களில் இருப்பதில்லை. வெற்றான புதிர்களாக இவை மாறி வருகின்றன. அதுவும் கொரோனாவுக்குப் பிறகான மலையாளப் படங்களைப் பார்க்கையில் எனக்கு சற்று பயமாகக் கூட உள்ளது - இப்படங்களைப் பார்த்து உள்வாங்கும் மலையாளிகள் எப்படி இருப்பார்கள்? சகமனிதரிடத்து ஒருவித அன்னியோன்யத்தை, பிரியத்தை, நம்பிக்கையை இழந்தவர்களால் மட்டுமே ஒரு கதையை வெற்றுத் தந்திரங்களுக்காக பார்க்க முடியும். இத்தனைக்கும் 90கள் வரை மலையாள படங்களில் உணர்ச்சிகரமான மோதல்கள் இருக்கும். விழுமியங்களின் வீழ்ச்சியும், அது ஏற்படுத்தும் கோபமும் துயரமும் இருக்கும், குடும்பம், சமூக அமைப்புகளின் (சில குறிப்பிட்ட சாதிகள், பாலினம்) சிதைவு குறித்த பதற்றம், சினம் இருக்கும். இவை முழுக்க தலைமுழுகப்பட்டது ஜித்து ஜோசப்பின் "திருஷ்யம்" படத்துடனே என நினைக்கிறேன். அது அச்சமூகத்துக்கும் தனிப்பட்ட விழுமியங்களுக்குமான இழையை அறுத்துவிடுகிறது. அப்படம் கொண்டாடப்படுகிறது. அதன் பிறகு பின்நவீன சாயல் கொண்ட படங்கள் வரத்தொடங்குகின்றன. அவை மலையாள மண்ணில் இருந்து அந்நியப்பட்டவையாக இருக்கின்றன. அப்படங்களின் ரசிகர்களும் அந்நியப்பட்டவர்களும், அந்த அந்நியமாதலைக் கொண்டாடுகிறவர்களுமே.

நல்லவேளை இந்த தலைகீழ் மாற்றம் (paradigm shift) தமிழில் முழுக்க நிகழவில்லை. தமிழில் கார்த்திக் சுப்புராஜ், தியாகராஜன் குமாரராஜா போன்றவர்கள் இதைத் துவங்கினாலும், அவர்களும் ஏதோ ஒரு இடத்தில் விழுமியங்களுடன் பரிசீலனையை மேற்கொள்கிறார்கள். "விக்ரம்" வரை அது தொடர்கிறது. மலையாளத்திலோ மக்கள் பரஸ்பரம் விலகிக் கொண்டே பரஸ்பரம் சந்தேகத்துடன் வாழும் உலகம் படங்களிலும் காட்டப்படுகிறது.

நான் பார்த்தவரையில் அமெரிக்க, பிரெஞ்சு பின்நவீன படங்களில் இந்த அந்நியமாதலின் அரசியல் பேசப்படும், இருத்தல் குறித்த விசாரணை இருக்கும், அதன் கொண்டாட்டம் இருக்கும். மலையாள சமகாலப் படங்களில் - இவற்றை அங்கு neo-noir என்று அழைத்து ஆய்வும் செய்கிறார்கள் - இவை இல்லை; அவர்களுடைய பண்பாட்டின் எந்த தொடர்ச்சியும் இல்லை. (ஆனால் கன்னடத்தில் "காந்தாராவில்" பண்பாட்டை வைத்து விளையாடுகிறார்கள்.) முழுக்க ஆழமற்றதாக, ஒரு பிணத்தை கொடூரமாக அறுத்து கூராய்வு செய்வதைப் போல உள்ளது அவலமாக உள்ளன இந்த மலையாளப் படங்கள். நான் படித்தவரையில் மலையாள இலக்கியத்தில் ஆர். உண்ணியும் டி.டி ராமகிருஷ்ணனும் இத்தகைய ஜித்து விளையாட்டுக் கதைகளை எழுதுகிறார்கள். மற்ற மலையாள பின்நவீன எழுத்தாளர்கள் அங்கு எப்படியெனத் தெரியவில்லை.
படங்களும் இலக்கியமும் ஒரு சமூகத்தின் ஆழ்மனத்தைப் பேசும் தொன்மங்கள் என எடுத்துக் கொண்டால் நவீன கேரளத்தின் ஒரு பகுதி குறித்த அச்சமூட்டும் சித்திரமே நமக்கு கிடைக்கிறது. பரதனும் பத்மராஜனும் அரவிந்தனும் உள்ளிட்ட எத்தனையோ மகத்தான இயக்குநர்கள் எடுத்த படங்கள் நம்மை இன்றும் அலைகழிக்க, யோசித்தாலே நெகிழ, வாழ்க்கை குறித்து சிந்திக்க வைக்கின்றன. அங்கிருந்து எது அவர்களை இங்கு கொண்டு வந்தது?

என்னதான் தெய்வத்திண்டே ஸ்வந்தம் நாடோ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.