என்னுடைய நண்பர் ஒருவர் பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பரசியலைப் பற்றி பேசும் போது “இவர்களுக்கு இஸ்லாமியர்களிடம் என்னதான் பிரச்சினை?” என உணர்ச்சிவசப்பட்டு கேட்பார். நான் சொல்வேன், “தேர்தல் பரப்புரையில் வெறுப்பரசியல் பேசும் மோடிக்கோ அதையே கொள்கையாக கொண்டுள்ள பாஜகவிடமோ முஸ்லீம் வெறுப்பு துளியும் இல்லை.” “ஏன் அப்படி சொல்கிறாய்?”
நான் விளக்கினேன்.
பாஜகவினருக்கு தேவைப்பட்டால் அவர்கள் இஸ்லாமியருடன் கூட்டு சேர்வது, அவர்களுக்கு பல உதவிகளை அளிப்பதை பார்த்திருக்கிறேன். பாஜக கட்சி அரசியலிலும் இஸ்லாமியர் இருக்கிறார்கள். இது அதர்க்கமானது அல்லவா? இதை சந்தர்ப்பவாதம் என்றும் பார்க்க முடியாது. இஸ்லாமிய வாக்குகள் இன்றி ஜெயிக்க முடியும் எனும் போது, இஸ்லாமியரே பாஜகவுக்கு தேவையில்லை எனும் போது என்ன சந்தர்ப்பவாதம்? பல இடங்களில் பாஜக இந்துக்களையே ‘மற்றமையாக’ வைத்துள்ளது. கவனித்துப் பாருங்கள் மோடி அதிகமாக விமர்சித்து தூற்றியுள்ளது இந்துக்களையே. மோடியின் கணிசமான எதிரிகள் இந்துக்களே. அவர்களை கடுமையாக பழித்து சிறையிலும் தள்ளி உள்ளார். இஸ்லாமியர் அரிதாகத் தான் மோடியை எதிர்த்து போராடியிருக்கிறார்கள். இது அவர்கள் சிறுபான்மை என்பதால் அல்ல, பாஜகவின் செயல்திட்டம் எல்லா மதத்தினரையும் மாற்றுவதே. மாறத் தலைப்படாதவர்களை மோடியும் அவரது பக்தர்களும் வெறுக்கிறார்கள்.
இந்துக்கள் அனைவரும் தம்மவர், இஸ்லாமியர் மற்றமை என பாஜக எங்கும் கூறியதில்லை. அவர்கள் இந்துக்களையும் இஸ்லாமியரையும் பார்க்கும் விதமே வித்தியாசமானது - கடவுளை நம்பும், மதத்தை பின்பற்றும் ஒரு இந்து முதலில் தன் மதமாக பாஜகவை, தன் கொள்கையாக இந்துத்துவாவை பார்க்க வேண்டும். அடுத்து அவர் தன் தேசத்தை பாஜக சித்தரித்துக்கும் தேசமாக பார்க்க வேண்டும். இத்தேசத்தை கடவுளாகப் பார்க்க வேண்டும். அடுத்து, அவர் மோடியை தேசமாக பார்க்க வேண்டும். கடைசியில் மோடியை தெய்வமாக பார்க்க வேண்டும். கடவுளுக்காக ஊர்வலம் போவது, வழிபாடு நடத்துவது, சடங்குகள் செய்வது, விரதம் அனுஷ்டிப்பது, படையல் செய்வது எல்லாவற்றையும் பிரம்மாண்டமான அளவில் மோடிக்காக செய்ய வேண்டும். எங்கு போனாலும் எதிலும் தெய்வத்தை காண்பதைப் போல மோடியைக் காண வேண்டும். பக்தியில் உள்ள முழுமையான சராணகதியை மோடி மீதான பற்றிலும் காட்ட வேண்டும். அதாவது உணரத் தேவையில்லை, இதையெல்லாம் காட்டினால் போதும். அதாவது, இந்து மதத்தில் அந்தரங்கமாகவே பக்தி வெளிப்படும். கோயிலுக்குப் போவது கட்டாயம் அல்ல. ஆனால் கிறித்துவத்திலும் இஸ்லாத்திலும் அது நிறுவனப்படுத்தப்பட்டு வெளிமுகமாக்கப்படும். மோடி இந்து மதத்தை கிறித்துவம், இஸ்லாம் போன்று மாற்றவும் விரும்புகிறார். அவர் நம்மைப் பார்த்து என் மீது பக்தி கொள்ளுங்கள் எனக் கேட்க மாட்டார், உங்கள் பக்தியை அனுதினமும் பட்டவர்த்தமாக காட்டுங்கள் என்பார். இதைக் கேட்க அப்படியே கிறித்துவப் பிரச்சாரம் போன்றே இல்லை?
யாக்கோபு 2 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்
“ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என்கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.”
இஸ்லாமியருக்கு என்ன பிரச்சினை என்றால் அவர்களால் மோடியை ‘அல்லாவாக’ கருத முடியாது. (கிறித்துவர்களாலும் தான் முடியாது.) அதை அவர்களுடைய மார்க்கம் ஏற்காது. இந்து மதம் அந்தளவுக்கு கராறானது இல்லையென்பதால் ஓரளவுக்கு இந்துக்களால் அவ்வாறு ஏற்க முடிகிறது.
இஸ்லாமியர் தினமும் மோடியின் பெயரால் வழிபட்டு பாங்கு விளித்து
“மோடி, அவன் ஏகன்.
மோடி (எவரிடத்தும்) தேவையற்றவன்.
மோடி (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும், மோடிக்கு நிகராக எவரும் இல்லை.” என்று தினமும் சத்தமாக சொன்னால் போதும் மோடி பக்தர்கள், பாஜகவினர், மோடி இஸ்லாமியரை அணைத்து முத்தமிடுவார்கள். இஸ்லாமிய வெறுப்பு பேச்சே அதற்கு மேல் இராது. எல்லா இந்துக்களும், கிறித்துவர்களும் இதை செய்தால் இந்துத்துவாவின் செயல்திட்டம் நிறைவேறி விடும்.
உள்ளுக்குள் மோடியும் அவரைப் போன்ற இந்துத்துவர்களும் கடவுளை ஏற்காதவர்கள். மோடி கோயிலுக்குப் போவது எல்லாம் வெறும் நாடகமே. எந்த பிரச்சினை வந்தாலும் இவர்கள் கடவுளை அழைக்கவோ சரணடையவோ மாட்டார்கள். இவர்களுடைய பேட்டிகளை கவனியுங்கள், இவர்களுடன் நேரில் உரையாடிப் பாருங்கள். எளிய பக்தியே இவர்களிடம் இராது. என் தேவையை என்னால் மட்டுமே முயன்று அடைய முடியும், என்னைக் கடந்த ஒரு சக்தியால் தர முடியாது என நம்புகிறார்கள். இவர்கள் கடவுளை தேசமாகவும், தேசத் தலைவரை கடவுளாகவும் காண விரும்புகிறார்கள். பக்தி வேறு, நம்பிக்கை வேறு. தமிழிலும் கணிசமான இந்துத்துவர்களுக்கு பக்தி இல்லை, ஆனால் தீவிர மத நம்பிக்கை உள்ளது.
ஹிட்லரும் இப்படித்தான் - அவர் தீவிரமான நாத்திகவாதி. மெல்ல மெல்ல ஆட்சியைக் கைப்பற்றியதுடன் அவர் தன்னையே தேசத்தின் கடவுளாக மாற்றிக்கொண்டார். அந்த பக்தியை தன் மக்கள் வெளிப்படுத்தி பிரகடனப்படுத்த வேண்டும் என விரும்பினார்.
இஸ்லாமியரை ஒழிப்பதோ வெளியேற்றுவதோ மோடியின், ஆர்.எஸ்எஸ்ஸின் நோக்கமல்ல. அவர்களுடைய பிரச்சினை மக்களின் கடவுள் பக்தி தான். அவர்களுடைய இலக்கு இந்து மதத்தை இஸ்லாத்தையும், கிறித்துவத்தையும் போல மாற்றி, அவற்றில் இருந்து அல்லாவையும் ஏசுவையும் எல்லா இந்துக் கடவுள்களையும் வெளியேற்றி மோடியை அங்கு வைப்பதுதான். உ.தா., நீங்கள் ஜக்கி எழுப்பிய ஆதியோகி சிலையில் ஜக்கியின் சாயலைப் பார்க்க முடியும். அடுத்த சில தேர்தல்களையும் பெரும்பான்மையுடன் மோடி வென்றுவிட்டால் ராமர் சிலையில் மோடியின் சாயல் வந்துவிடும்.
இந்துத்துவர்கள் தேசத்தை கடவுளாக ஏற்காதவர்களை வெறுக்கிறார்கள். மோடி தன்னைக் கடவுளாக ஏற்காதவர்களை வெறுக்கிறார். பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸுக்குள் மோடியை கடவுளாக பார்க்காதவர்கள் இரு தரப்புகளையும் வெறுக்கிறார்கள்!
Comments