முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு எழுத்தாளனின் அன்றாட வாழ்க்கை (3)


இப்போதைக்கு என் எழுத்தும் என் வாழ்வும் எனக்கு வேறுவேறல்ல. எழுதுவது தவிர்த்து நான் செய்யும் எதிலும் என் மனம் ஈடுபடுவதே இல்லை. எழுதும் நேரம் மட்டுமே நான் உண்மையான உலகில் இருப்பதாயும் மிச்ச நேரம் நான் முழுக்க பொய்களால் புனையப்பட்ட ஒரு மாய உலகில் வசிப்பதாயும் தோன்றுகிறது. (போதை அடிமைகளுக்கு இப்படியான பிரமைகள் இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன்.)
 ஆக நான் இப்போதெல்லாம் எழுத்தைப் பற்றி அக்கறைப்படுவதில்லை. அது என்னிடம் இருந்து (அல்லது என் வழி) பாய்கிறது. எழுதாத நேரத்துக்கான வாழ்வை சரியாய் திட்டமிட்டு நடத்துவது பற்றி மட்டுமே அக்கறைப்படுகிறேன்.
எழுத்துக்கு தோதான வேலை எது?

எழுத்தே ஒரு முழுநேர வேலை தானே. எண்பதுகளின் எழுத்தாளர்கள் பலர் எப்படி அரசு வேலை எனும் சௌகர்யத்தை அனுபவித்தார்கள், அது எப்படி அவர்களின் எழுத்து வேலையை சுலபமாக்கியது என சில நண்பர்கள் என்னிடம் சொல்வதுண்டு. அதிக சிரமமோ அதிக நேரமோ செலவிடத் தேவையில்லாத வேலை அமைவது சுகமே. ஆனால் அப்படி அமைந்தவர்கள் அனைவரும் எழுதிக் குவித்து விட்டார்கள் என்றும் கூற முடியாது. இன்று தமிழில் தொடர்ந்து எழுதும் சிலர் கடுமையாய் வேலைப்பளு கொண்ட மென்பொருள் துறையில் இயங்குகிறார்கள். வினாயக முருகன் ஒரு உதாரணம்.
நானும் மிக அதிகமாய் எழுதியது அதிக வேலைப்பளு கொண்ட வேலையில் இருந்த போதே.
ஆனால் முழுநேர எழுத்துப் பணிக்கென ஒரு அனுகூலம் உண்டு. தொடர்ந்து நீண்ட மணிப்பொழுதை ஒரே பணிக்காக செலவழிக்க முடியும். உதாரணமாய், எனது ”புரூஸ் லீ” நூலையும் ரசிகன் நாவலையும் முனைவர் பட்ட ஆய்வுக்காக வேலையை துறந்த பின்னர் தான் எழுதினேன். என் மற்ற புத்தகங்களை விட இவை சுலபமாய் அமைந்தன.
கல்லூரி ஆசிரிய வேலை எழுத்துப் பணிக்கு ஏற்றது என பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஐந்து வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் கல்லூரிப் பணிக்கு மீண்டிருக்கிறேன். ஆனால் இங்கும் ரொம்ப ரொம்ப பரபரப்பான வேலை தான். கிட்டத்தட்ட ஒரு கார்ப்பரேட் அலுவலகம் போன்ற சூழல்.
வாரம் 16 மணிநேரங்கள் பாடம் எடுக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் தொடர்ந்து மீட்டிங், நிர்வாகப் பணிகள், வகுப்புக்கான தயாரிப்பு, பரீட்சைத்தாள் திருத்துவது, இண்டெர்னல் மதிப்பெண்ணுக்கான வேலைகள் என தொடர்ந்து ஏதாவதொன்று கழுத்தில் கட்டிய கல் போல இருந்து கொண்டே இருக்கும். இதன் இடையில் நான் எப்படியாவது சில மணிநேரங்கள் எழுத கண்டு பிடித்து விடுகிறேன். ஆனாலும் தொடர்ந்து எழுத ஒரே வழி வேலை நேரம் முடிந்ததும் நூலகத்தில் போய் சரணடைவது தான்.
 பொதுவாக மாலை 4இல் இருந்து 9 வரை இவ்வாறு கழிக்கிறேன்.
வேலைக்கான நேர்முகத்தின் போது இதைப் பற்றி குறிப்பாய் கேட்டார்கள். “நீங்கள் ஒரு எழுத்தாளர். உங்களுக்கு எழுத நிறைய நேரம் தேவைப்படும். இங்கே உங்களுக்கு மூச்சு விட நேரம் இருக்காது. உங்களால் தாக்குப்பிடிக்க முடியுமா?”
நான் சொன்னேன், “எனக்கு அதிகம் நேரம் தேவையில்லை. எழுத நான்கு மணிநேரம், வாசிக்க மூன்று மணிநேரம். இங்கே தலை போகிற வேலை இருந்தாலும் நான் அதற்கான நேரத்தை கண்டைந்து விடுவேன்.”
உடனே என்னிடம் கேள்வி கேட்டவர் சிரித்தார்: “சொல்வது சுலபம். இங்கே என்னென்னமோ திட்டங்களுடன் நம்பிக்கையுடன் வந்தவர்கள் மனம் சோர்ந்து போயிருக்கிறார்கள்.”
நான் சொன்னேன் “பத்து வருடங்களுக்கு முன் என் அப்பா இறந்து போன சேதி வந்தது. நான் விமானம் பிடித்து திருவனந்தபுரம் போய், அங்கிருந்து ஒரு கார் ஏறி நாகர்கோயிலுக்கு போனேன். அவ்வருடம் நான் ஒரு நாவல் எழுத முயன்று கொண்டிருந்தேன். அந்த மாலையில் விமானத்திலும் காரிலும் நாவலின் அத்தியாயம் எழுதிக் கொண்டு தான் இருந்தேன். வீட்டுக்கு போன பின் அப்பாவின் உடல் அருகே போய் அமர்ந்து கொண்டேன். அப்போது தான் எழுதுவதை நிறுத்தினேன். ஆனால் நான் இப்போதுள்ள நிலையில் அப்பாவின் உடல் அருகே அமர்ந்தும் தடதடவென என் கீபோர்டில் தட்டிக் கொண்டு இருந்திருப்பேன்.
இன்னொரு முறை நான் நோயில் விழுந்து பத்து நாட்கள் கோமா நிலையில் இருந்தேன். சட்டென விழித்துக் கொண்டேன். அரைமணியில் நிலைப்பெற்றேன். கைகால் மூட்டுகள் இறுகி இருந்தன. ஒழுங்காய் எழுந்து அமர முடியவில்லை. ஆனாலும் உடனே இரு கட்டுரைகள் எழுதினேன். நான் எப்படி கோமாவுக்கு சென்றேன், எனக்கு நடந்த கொடூரங்கள் என்ன, மருத்துவமனைகள் நீரிழிவாளிகளை நடத்தும் விசித்திரங்கள் ஆகியவற்றைப் பற்றி.
இதை விட பெரிய துயரங்களை எல்லாம் இக்கல்லூரி எனக்கு தந்து விடாது என நம்புகிறேன்.”
அவர் “உங்கள் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்” என்றார்.
நான் அன்று கோரியதைப் போன்றே இங்குள்ள இந்த நெருக்கடியிலும் என்னால் எழுத்துக்கான நேரத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...