Skip to main content

Posts

Showing posts from April, 2025

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தத்துவத்தில் நகைமுரண்: கீர்க்கெட்காட் முன்வைக்கும் சாக்ரடீஸ்

  கீர்க்கெகாட் (1813–1855) டென்மார்க்கைச் சேர்ந்த இருத்தலியல் தத்துவவாதி. ஆதி கிரேக்க தத்துவவாதியும் தத்துவத்தின் தந்தை என அறியப்படுபவருமான சாக்ரடீஸ் தன் தத்துவ விவாதங்களில் ஒரு கருத்தை அதன் தர்க்க முரண்களை நோக்கி நகர்த்துவார். அதை மொழியில் விளக்கவே முடியாத இடமொன்று வரும். அப்போது வரும் திகைப்பை aphoria என்கிறார்கள் (நம் மொழியில் பரவசம், வெளிச்சம்; அத்வைதத்தில் பிரசன்னம், ஆன்ம தரிசனம்). சாக்ரடிஸ் இதற்கு பயன்படுத்திய முரணை அம்பலப்படுத்தும் விவாத முறையை reduction ad absurdum என்று சொல்வார்கள். அவர் முன்னிலைப்படுத்தியது நம் சிந்தனையிலும் மொழியிலும் கருத்துக்கள், நம்பிக்கைகள், விழுமியங்கள், லட்சியங்களிலும் உள்ள ‘நகைமுரணை’. இதை சாக்ரடீய நகைமுரண் (socratic irony) என்பார்கள். இதை நம்மூரில் பௌத்த தத்துவவாதி நாகார்ஜுனரும் பயன்படுத்தினார். (நாகார்ஜுனர் சாக்ரடீஸை விட பலமடங்கு மேலான ஆழமான தத்துவ விவாதங்களை எழுப்பியவர். ஆனால் அது உலகளவில் கொண்டு செல்லப்படவில்லை என்பது ஒரு துயரம்.) நாகார்ஜுனரின் வாதமுறை பிரசங்கம் என அழைக்கப்பட்டது. அதற்கு விளைவு என எளிதாகப் பொருள் சொல்லலாம். இந்த முறையை இப்படிப...

மே மாத உயிரெழுத்தில் என் கட்டுரை

  மே மாத உயிரெழுத்து இதழில் காஷ்மீர் தாக்குதல் பற்றி வித்தியாசமான கோணத்தில் கட்டுரையை எழுதியிருக்கிறேன். அதன் சில பகுதிகள் இங்கே.

சாகித்ய அகாடெமி இளம் எழுத்தாளர் விருது பெற்றோருக்கு கனவு இல்லம் - எம்.எல்.ஏ வேல்முருகன் கோரிக்கை

  சாகித்ய அகாடெமி இளம் எழுத்தாளர் விருதாளர்களுக்கும் கனவு இல்லம் திட்டத்தில் இடமளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ள, அதை ஊடகங்களிடம் பகிரவும் செய்த எம்.எல்.ஏ வேல்முருகன் அவர்களுக்கு நன்றி.

Ripley இணைத் தொடர்

  The Talented Mr Ripley 1955இல் பேட்ரிஷியா ஹைஸ்மித்தால் எழுதப்பட்டு வெளியாகி வெற்றிபெற்ற த்ரில்லர் நாவல். அது மூன்று முறைகள் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழில் "நான்" எனும் பெயரில் வெளிவந்தது. அந்நாவலின் இணையத்தொடர் "Ripley" நெட்பிளிக்ஸில் வந்துள்ளது - எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக பிரதான பாத்திரம் ரிப்ளி ஒவ்வொரு காட்சியிலும் என்ன திட்டத்தை மனத்தில் வைத்திருக்கிறார் என்று நமக்குப் புரியாதவிதத்தில் காட்சிகளை எழுதியிருப்பார்கள். இது திரில்லர் கதையை சுவாரஸ்யமாக்க முக்கியமான உத்தி. ஒவ்வொரு 20 நிமிடமும் இவர் இதைத்தான் உத்தேசித்து அமைதியாக இருந்தாரா எனத் திகைப்படைவோம். அதை வெளிப்படுத்தாமலே கதையை நகர்த்துவது தனித்திறமைதான். இத்தொடரைப் பரிந்துரைத்த அருள் எழிலனுக்கு நன்றி.

நீயா நானாவில் வெளிப்பட்ட நவீனப் பெண் மனநிலை

  இவ்வாரம் மற்றும் கடந்த வாரத்தின் நீயா நானா அத்தியாயங்கள் மிகச்சிறப்பாக வந்துள்ளன. நகரத்தை நோக்கி வரவிரும்பும், கிராமத்து ஆண்களை மணமுடிக்க விரும்பாத நவீன பெண்களிடம் கோபிநாத் நீங்கள் பட்டியலின ஆண்களை மணமுடிப்பீர்களா எனக் கேட்டது கிளாஸிக். ஒரு பெண் கூட கைதூக்கவில்லை. சந்தர்ப்பவாதம், சுயமுன்னேற்றத்தை நாம் பல சமயங்களில் சமத்துவ சிந்தனை, முற்போக்குவாதம் எனத் தவறாக நினைத்துக் கொள்கிறோம். கருணை, அன்பு, சமத்துவம் ஆகிய லட்சியங்கள் அற்றதாக இன்றைய முன்னேற்றக் கருத்தியல் மாறிவிட்டது - சமவுரிமை என்பதை பதாகையாகப் பயன்படுத்தி என்னை மற்றும் முன்னேற்றுங்கள். மற்றவர்கள் எப்படிப் போனாலும் கவலையில்லை எனும் மனநிலை வளர்கிறது. இதைப் பக்கம்பக்கமாக எழுதிக் காட்டுவதை ஒரே கேள்வியில் நீயா நானா செய்துவிட்டது. பாராட்டுகள்.

நட்சத்திரத்தைச் சந்திப்பது

இரு பத்தாண்டுகளுக்கு முன்பு நான் ஒரு நாளிதழில் மொழிபெயர்ப்புப் பிரிவில் வேலை செய்தேன். பயனர்களை ஊக்கப்படுத்த ஒரு திட்டம் கொண்டு வந்தார்கள் - சில தொடர் கேள்விகளுக்கு சரியாக பதிலளித்தால் அப்போது முன்னணியில் உள்ள நடிகர் ஒருவருடன் ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்து சாப்பிடலாம். எனக்கு இது பெரிய ஹிட்டடிக்கும் என்று தோன்றியது. ஒன்று, அந்நடிகர் அப்போது பெரிய ஹிட்களைக் கொடுத்தவர். அபாரமான நடிகர். இரண்டாவது, அது பெரிய ஓட்டல். போட்டியில் நாற்பத்து சொச்சம் பேர் ஜெயித்தார்கள். எல்லாரையும் கூட்டி ரசிகர் சந்திப்பு போல ஏற்பாடு பண்ணி விருந்தும் அளிக்கலாம் என நிர்வாகம் முடிவு செய்தது. நடிகரும் ஏற்றுக்கொண்டார். இப்போது எங்கள் அணியில் இருந்து வெற்றி பெற்ற ஒவ்வொருவரையாக அழைத்து வரக் கேட்டோம். ஆனால் ஆச்சரியமாக அவர்களில் கணிசமானோர் வர மறுத்துவிட்டார்கள். அவருடன் விருந்து சாப்பிடவோ புகைப்படம் எடுக்கவோ அவ்வளவு தூரம் பயணித்து சென்னைக்கு வர முடியாது என்றார்கள். நாங்கள் திரும்பத் திரும்ப அழைத்ததில் எட்டு பேர்கள் ஒப்புக்கொண்டார்கள். அதிலும் நான்கு பேர்தாம் வந்தார்கள். கடைசியில் ரசிகர்கள் சந்திப்பு ஒருவாறு நடந்து ம...

இரும்புக்கரம்...

  //தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் காஷ்மீரில் நடந்துள்ள இந்தத் தாக்குதல் நம் அனைவரது மனச்சாட்சியையும் உலுக்குவதாக அமைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு குல்காமில் அமர்நாத் பயணம் சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டார்கள். 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற வகையில் அப்பாவி மக்களின் மீதான இது போன்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்திய மண்ணில் குறிப்பாக, நமது இந்திய ஜனநாயகத்தில் அறவே இடமில்லை. இதனைக் கண்டிப்பதோடு நமது கடமை முடிந்துவிடவில்லை. இது போன்ற செயல்கள் நடப்பதை அறவே தடுத்தாக வேண்டும். பேரவைத் தலைவர் அவர்களே, கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அனைவரும் எழுந்து இரண்டு நிமிட அமைதி அஞ்சலியைச் செலுத்த தங்களது மேலான அனுமதியைக் கோருகிறேன். முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைத்துக் கட...

பஹல்காம் தாக்குதல்

  காஷ்மீரில் அமைதி ததும்புகிறது, அங்கு வருடத்திற்கு ரெண்டு கோடிக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் செல்கிறார்கள், கார்ப்பரேட்டுகள் பெருமுதலீடுகளைச் செய்யவிருக்கிறார்கள் எனும் செய்திகளைக் கேட்டபோது ஏதோ ஒன்று இடறலாகத் தோன்றியது. ஒரு மாநிலத்தின் எல்லா சிக்கல்களையும் சில ஆண்டுகளில் ஒழித்து சொர்க்க பூமியாக்க முடியாது. எந்த ஊரும் அதன் வரலாற்றின் தொடர்ச்சியிலே நின்றுகொண்டிருக்கிறது. வரலாறு எதையும் மறக்கவோ முழுக்க மாறவோ போவதில்லை. ஆனாலும் சற்று சபலம் ஏற்பட்டது, என் மாணவர் ஒருவர் காஷ்மீருக்கு சுற்றுலா வரும்படி கேட்டபோது. அங்கு அவரது வீட்டில் தங்கிக்கொள்ளலாம் என்று கூறியபோதும், அங்கு கிடைக்கும் இளஞ்சிவப்பு தேநீரை எனக்குப் பரிசளித்தபோதும். நல்லவேளை நான் என் விவாகரத்து செட்டில்மண்டின்போது ஏற்பட்ட கடனில் இருந்து மீளவில்லை. கடன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நான் பஞ்சப்பரதேசியாக இருப்பதனால் இம்மாதிரிப் பயணங்கள் செல்வதில்லை. இல்லாவிட்டால் காஷ்மீருக்குப் போய் ஒருவேளை சிக்கியிருப்பேன் எனத் தோன்றுகிறது, ஏனென்றால் அந்த அற்புதமான இயற்கைப் பேரெழிலின் தொட்டிலைக் காண்பது என் வாழ்நாள் கனவுகளில் ஒன்று. இந்தத் தாக...

எதிர்-ஆசான்

  ஜெயமோகனுடன் எனக்குள்ள கோட்பாட்டு, தத்துவ முரண்களை வெளிப்படையாகவே அறிவித்தே அவரை வாசித்தும் உரையாடியும் வந்திருக்கிறேன். ஜெயமோகனையும் பிறரையும் வாசித்தே இலக்கியத்துள் வந்தேன். அவருடனான ஆரம்பகால உரையாடல்கள் என்னை நெறிப்படுத்தவும், எனக்குள் நெருப்புப் பொறியொன்றை பிறப்பித்து வளர்க்கவும் உதவியது. ஆனால் அவரது கருத்துநிலைகள், நிலைப்பாடுகள் அனேகமாகத் தவறானவை எனும் முடிவுக்கு விரைவில் வந்தேன். அதைப் புரிந்துகொள்ளவும் வெளிப்படுத்தவும் எனது கோட்பாட்டு, தத்துவ, இலக்கிய வாசிப்புகள் உதவின. ஒரு விசதத்தின் உண்மைநிலையைப் புரிந்துகொள்ள வேண்டுமெனின் அவர் சொல்வதற்கு நேரெதிராகச் சிந்தித்தால்போதும் எனும் முடிவுக்கு வந்தேன். இது எனக்கு வெகுவாக உதவியது - ஒருவித எதிர் வரைபடம் அவர். அவர் கிழக்கென்றால் நாம் மேற்குக்கு சென்றுவிட வேண்டும். அவர் மேலே என்றால் கீழே போகவேண்டும். அப்போதே உண்மையை, இருத்தலின் ஆழத்தைப் புரிந்துகொள்ள இயலும். அவர் ஆசான் அல்ல, அவர் எதிர்-ஆசான். அண்மையில் நிகழ்ந்த சில சம்பவங்களின்போது அவர் அடிப்படையான அறவுணர்வு இல்லாதவர் எனும் எண்ணம் எனக்குள் வலுப்பெற்றது. இதனால் கடுமையான கசப்புணர்வு தோ...

ஷோபா சக்தியைச் சூழும் கேன்சல் கலாச்சாரவாதிகள் - ஆர். அபிலாஷ்

நூற்றுக்கும்  மேற்பட்ட பெண்ணியச் செயல்பாட்டாளர்களும் எழுத்தாளர்களுமாகக் கையெழுத்திட்டு வெளியிட்ட ஷோபா சக்திக்கு எதிரான " குற்ற அறிக்கையை " அது வெளியான சமயத்தில் உடனடியாகப் படித்தேன் . நான் அடிப்படையில் ஒழுக்கவாதியோ நியாயவாதியோ அல்லன் . அதேநேரம் எனக்குள் அபத்தமான நீதியுணர்வு உண்டு , அதை மீறும் விழைவும் உண்டு . இந்த இரண்டு எதிர்விசைகளுக்கு நடுவே நிற்கும் எழுத்தாளர் நான் . என் இடத்தில் இருந்து பார்க்கையில் அமைப்பின்மைவாதிகள் மீது தோன்றும் திகைப்பும் பயமுமே அறிக்கையில் தோன்றும் ஷோபா சக்தியின் சித்திரத்தைப் படிக்கையில் ஏற்பட்டது . அவர் கெட்டவரா எனும் அதிர்ச்சியல்ல , அது வேறொன்று - அதை இங்கு அபுனைவில் விளக்க முடியாது . ( புனைவில் மட்டுமே இயலும் .) ஷோபாவின் எதிர்வினையையும் அது வந்த உடனே படித்தேன் : அது சற்று பலவீனமானது - ஏனென்றால் ஒழுக்கமீறல் , துரோகம் போன்ற மிக அந்தரங்கமான குற்றச்சாட்டுகளை ஏற்று பின்னர் நியாயப்படுத்த முடியாது . ஒன்று , நமது கட்டுரை வடிவம் அடிப்படையில் அறம் எனும் கட்டமைப்பினுள் எழுப்...