முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நட்சத்திரத்தைச் சந்திப்பது

இரு பத்தாண்டுகளுக்கு முன்பு நான் ஒரு நாளிதழில் மொழிபெயர்ப்புப் பிரிவில் வேலை செய்தேன். பயனர்களை ஊக்கப்படுத்த ஒரு திட்டம் கொண்டு வந்தார்கள் - சில தொடர் கேள்விகளுக்கு சரியாக பதிலளித்தால் அப்போது முன்னணியில் உள்ள நடிகர் ஒருவருடன் ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்து சாப்பிடலாம். எனக்கு இது பெரிய ஹிட்டடிக்கும் என்று தோன்றியது. ஒன்று, அந்நடிகர் அப்போது பெரிய ஹிட்களைக் கொடுத்தவர். அபாரமான நடிகர். இரண்டாவது, அது பெரிய ஓட்டல். போட்டியில் நாற்பத்து சொச்சம் பேர் ஜெயித்தார்கள். எல்லாரையும் கூட்டி ரசிகர் சந்திப்பு போல ஏற்பாடு பண்ணி விருந்தும் அளிக்கலாம் என நிர்வாகம் முடிவு செய்தது. நடிகரும் ஏற்றுக்கொண்டார். இப்போது எங்கள் அணியில் இருந்து வெற்றி பெற்ற ஒவ்வொருவரையாக அழைத்து வரக் கேட்டோம். ஆனால் ஆச்சரியமாக அவர்களில் கணிசமானோர் வர மறுத்துவிட்டார்கள். அவருடன் விருந்து சாப்பிடவோ புகைப்படம் எடுக்கவோ அவ்வளவு தூரம் பயணித்து சென்னைக்கு வர முடியாது என்றார்கள். நாங்கள் திரும்பத் திரும்ப அழைத்ததில் எட்டு பேர்கள் ஒப்புக்கொண்டார்கள். அதிலும் நான்கு பேர்தாம் வந்தார்கள். கடைசியில் ரசிகர்கள் சந்திப்பு ஒருவாறு நடந்து முடிந்தது. அவர் அதன்பிறகு பல படங்களைச் செய்தார். இன்றும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

எனக்கு அந்தச் சம்பவத்தின்போது தான் நட்சத்திர பிம்பம் சிரமப்பட்டு கட்டமைக்கப்பட வேண்டியது, மிகமிகச் சிலருக்கே இயல்பாகவே பிரபல்யம் அமையும், அவர்கள் தோன்றினாலே மக்கள் திரள்வார்கள், அதுவும் சமய சந்தர்பங்களால் அமைவதுதான் என்று புரிந்தது. நல்ல கதை, இயக்கம், சகநடிகர்கள், அதிர்ஷ்டம் எல்லாம் அமையும்போது ஒருவர் நட்சத்திர நடிகர் ஆகிறார். தனியாக அவர் தோன்றினால் மதிப்பில்லை. அடுத்தடுத்த வெற்றிகள் வந்ததும் அவர் தனக்காவே படம் ஓடுகிறது என நம்ப வைக்க முயல்வார். சந்தை மதிப்பைப் பெருக்கித் தக்கவைத்த பிரயத்தனம் செய்வார். அது பல சமயங்களில் வேலையும் செய்யும்.
இன்னொன்று, நட்சத்திரங்களின் சிறப்பே அவர்கள் அரிதாகத் 'தோன்றுகிறார்கள்' என்பது. அதில் ஒரு வியப்பு உள்ளது. வியப்புதான் அவர்களது சந்தை மதிப்பு. திரையில் திடீரெனத் தோன்றும்போது வரும் வியப்பும் அத்தகையதே. அதை ரசிகர்களே ஒருபக்கம் அழிக்க விரும்ப மாட்டார்கள். இன்னொரு பக்கம், அந்த வியப்பு பல காரணங்களால் மிகப்பெரிதாக மாறும்போது அவர்களே அதைக் கலைத்து நெருங்க வேண்டும் என்றும் பெருவிருப்பம் கொள்வார்கள். தஸ்தாவஸ்கியின் "கரமசோவ் சகோதரர்கள்" நாவலில் வரும் Grand Inquisitor அத்தியாயம் இதனோடு ஒப்பிடத்தக்கது - அதில் ஏசு உயிர்த்தெழுந்து கத்தோலிக்க சாமியார் முன்வந்தால் என்னவாகும் எனும் கற்பனைக் கதையை வைத்து இவான் கடவுள் மறுப்பைப் பேச முயல்வார். ஏசுவைப் பார்க்கும் சாமியார் அவரைப் பிடித்து சிறையில் அடைக்கச் சொல்வார். அங்கு சென்று அவர் ஏசுவிடம் "அதிசயங்கள் செய்வதன் வழியாகவே ஒருவர் தெய்வமாகிறார். அதைச் செய்ய மறுத்து அல்லது அதை அன்றாட வழக்கமாக்கி நீ தெய்வீகத்தையே இல்லாமல் ஆக்குகிறாய். அதை மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நீ தொடர்ந்து பூமியில் இருந்தால் மக்கள் கலவரம் பண்ணி தம்மையே அழித்துக் கொள்வார்கள். போய் விடு அல்லது இம்மக்களைப் பயன்படுத்தி உன்னை எரித்துக் கொல்வேன்" என்பார். உச்ச நட்சத்திரங்கள் நம்மிடையே புழங்கினால், நாம் காய்கறி வாங்கும்போது பக்கத்தில் வந்து நின்று தக்காளி அரைக்கிலோ போடுங்க என்றால் நமக்கு அது பெரும் தொந்தரவாகும். அவர்களை அடுத்து திரையில் பார்க்கும்போது திடீரென எங்கிருந்தோ வருகிறார்கள் எனும் அதிசய உணர்வு அந்தளவுக்கு வராது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.