இவ்வாரம் மற்றும் கடந்த வாரத்தின் நீயா நானா அத்தியாயங்கள் மிகச்சிறப்பாக வந்துள்ளன. நகரத்தை நோக்கி வரவிரும்பும், கிராமத்து ஆண்களை மணமுடிக்க விரும்பாத நவீன பெண்களிடம் கோபிநாத் நீங்கள் பட்டியலின ஆண்களை மணமுடிப்பீர்களா எனக் கேட்டது கிளாஸிக். ஒரு பெண் கூட கைதூக்கவில்லை. சந்தர்ப்பவாதம், சுயமுன்னேற்றத்தை நாம் பல சமயங்களில் சமத்துவ சிந்தனை, முற்போக்குவாதம் எனத் தவறாக நினைத்துக் கொள்கிறோம். கருணை, அன்பு, சமத்துவம் ஆகிய லட்சியங்கள் அற்றதாக இன்றைய முன்னேற்றக் கருத்தியல் மாறிவிட்டது - சமவுரிமை என்பதை பதாகையாகப் பயன்படுத்தி என்னை மற்றும் முன்னேற்றுங்கள். மற்றவர்கள் எப்படிப் போனாலும் கவலையில்லை எனும் மனநிலை வளர்கிறது. இதைப் பக்கம்பக்கமாக எழுதிக் காட்டுவதை ஒரே கேள்வியில் நீயா நானா செய்துவிட்டது. பாராட்டுகள்.
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments