இவ்வாரம் மற்றும் கடந்த வாரத்தின் நீயா நானா அத்தியாயங்கள் மிகச்சிறப்பாக வந்துள்ளன. நகரத்தை நோக்கி வரவிரும்பும், கிராமத்து ஆண்களை மணமுடிக்க விரும்பாத நவீன பெண்களிடம் கோபிநாத் நீங்கள் பட்டியலின ஆண்களை மணமுடிப்பீர்களா எனக் கேட்டது கிளாஸிக். ஒரு பெண் கூட கைதூக்கவில்லை. சந்தர்ப்பவாதம், சுயமுன்னேற்றத்தை நாம் பல சமயங்களில் சமத்துவ சிந்தனை, முற்போக்குவாதம் எனத் தவறாக நினைத்துக் கொள்கிறோம். கருணை, அன்பு, சமத்துவம் ஆகிய லட்சியங்கள் அற்றதாக இன்றைய முன்னேற்றக் கருத்தியல் மாறிவிட்டது - சமவுரிமை என்பதை பதாகையாகப் பயன்படுத்தி என்னை மற்றும் முன்னேற்றுங்கள். மற்றவர்கள் எப்படிப் போனாலும் கவலையில்லை எனும் மனநிலை வளர்கிறது. இதைப் பக்கம்பக்கமாக எழுதிக் காட்டுவதை ஒரே கேள்வியில் நீயா நானா செய்துவிட்டது. பாராட்டுகள்.
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...
கருத்துகள்