"தனித்தனியாக செயல்படுவதும், புறவயமான கட்டமைப்பு, அதிகாரமும் பி.ஆர்.ஓவும் இல்லாமல் இருப்பதே எழுத்தாளரின் இயல்பு. தொடர்ந்து தம் எழுத்தை மறுபரிசீலனை செய்வதும், மேம்படுத்துவதும், அடுத்தடுத்த கட்டங்களுக்கு எழுத்தைக் கொண்டு போவதுமே நோக்கம். ஏனென்றால் எழுத்தென்பது மைக்கினால் எழுதுவது அல்ல. இலக்கியம் என்பது நீ போய் சாம்பார்ல உப்பைப் போடு, அவன் போய் மேடையில குண்டு வைக்கட்டும் என்று ஆணையிடுவது அல்ல. எழுத்தாளர்கள் கூட்டத்தில் இருந்தாலும் அங்கும் தனியாகவே உணர்வர். ஏனென்றால் அவர்களின் சாராம்சமே தனிமையில், முரணில், சுயமுரணில், தீர்க்க முடியாத புதிர்களில் இருக்கிறது. எழுத்தாளர்களால் ஒரு குழுவின் மொழியில் பேச இயலாது. அப்படிப் பேச ஆரம்பித்தால் அவர்களால் எழுத்தாளராக இருக்கவும் இயலாது." என்று புரவிக் கூடுகையின் பின்பான மாலைப் பொழுதில் நண்பர் டி.ஐ அரவிந்தனின் அறையில் அமர்ந்து உரையாடுகையில் சொன்னேன். அவர் ஆமோதித்தார். எழுதுவதும் பேசுவதும் சுயமாக, தணிக்கையின்றி இருக்க வேண்டும். நன்றியுணர்வாலோ கண்காணிக்கப்படுகிறோம் எனும் எச்சரிக்கையுணர்வாலோ அவை கட்டுப்படுத்தப்படக் கூடாது. ஆனால் இன்று இலக்கியச் சூழல் அவ்வாறாகத்தான் மாறிவிட்டது, சில அற்பமான தேவைகளுக்காக, அங்கீகாரத்துக்காக சுதந்திரத்தைப் பறிகொடுக்கிறோம் என்று எங்கள் உரையாடல் நகர்ந்தது. எனக்கு அவரது "பயணம்" நாவலே இச்சூழலுக்கான உருவகக் கதை என்று தோன்றும். அதை அவரிடம் சொல்லவும் செய்திருக்கிறேன். தன் நண்பர் ஒருவர் இப்படி சட்டென அதிகாரத்தை நோக்கி நகர்ந்தபோது சர்வாதிகாரத்தைக் கையில் எடுத்ததாகவும் தலைகீழாக மாறியதாகவும் அதைக் குறித்த அதிர்ச்சியில் ஆராயும் பொருட்டு எழுதியதே அந்நாவல் என்றார். நாம் ஒன்றை நோக்கிப் பயணிக்கிறோம், ஆனால் அதற்கு நேரெதிரான இலக்கை அடைகிறோம். நாம் நமக்கே விரோதியாவதை உணராமல் வாழ்கிறோம். நாம் வெறுத்த ஒன்றாக நாமே மாறுகிறோம். இந்த உள்முரண் அந்த காலத்தில் (70-90கள்) எழுதப்பட்ட சில நாவல்களில் பேசப்பட்டுள்ளன. தகழியின் "மாடிப்படிகள்" ஒரு உதாரணம். அதிகார மோகம் ஒருவரை தன்னில் இருந்தே அந்நியமாக்கும், அந்த அந்நியமாக்கலே அவருக்கு அதிகாரத்தையும் பெற்றுத் தரும், தன்னை இழக்கிறவர், அதிகாரத்தை ஈட்டுகிறார் என்று அரசு அதிகார எந்திரத்தின் பின்னணியில் இதை தகழி சித்தரிப்பார். அரவிந்தன் இதையே ஒரு இயக்கத்தின் பின்னணியில் பேசியிருப்பார். வினோதமாக இந்த விசயம் இன்றைக்கு அதிகப் பொருத்தமானதாக மாறி இருக்கிறது. இன்று நாம் ஒரு குழுவாகவோ இப்படி நமக்கு எதிரான விசயங்களை அதிகாரத்துக்காகவும் செல்வாக்குகாகவும் செய்கிறோம். செய்கிறோம் என்பதை விட நிகழ்த்துகிறோம், நம் நிகழ்த்துதலை பண்டமாக மாற்றி விற்கிறோம், இப்படியே நம்மையே இழக்கிறோம். அன்றைய உரையாடலில் நான் இதையும் சொன்னேன்.
இதைப் போன்ற பல விசயங்களில் அரவிந்தனுக்கும் எனக்கும் ஒத்திசைவான அலைவரிசை இருக்கும். யாருக்கும் அவசியமின்றி அடிபணியக் கூடாது, யாரையும் அவமதிக்கவும் கூடாது எனும் அவரது கொள்கை எனக்குப் பிடித்தமானது.
இப்படியானவர்களை இழப்பது ஒரு கை ஒடிவதற்கு ஈடானது.
Comments