இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே, மத்திய வர்க்கத்தின் மீது இதனால் ஏற்பட்டுள்ள அழுத்தத்தைப் பற்றி இந்த ஆய்வு பேசுகிறது.
// The unemployment rate for graduates stands at 29.1%, nine times higher than for those who never attended school. Education, the defining aspiration of the Indian middle class, has stopped delivering on its promise.//
(https://www.bbc.com/news/articles/cvg5g3pjy06o)
யோசித்துப் பார்த்தால் இதில் ஒரு பெரிய அநீதி உள்ளது. நாம் கல்வியை அறிவு விருத்தியாக, திறன் மேம்பாடாகப் பார்க்கிறோம். லட்சியவாத தொனியில் கல்வியைக் கொண்டாடுகிறோம். ஆனால் தனியார் கல்வியின் கட்டணங்களைப் பற்றி நாம் எந்த விவாதத்திலும் பேச விரும்புவதில்லை. கல்வி ஒரு சேவையாக வழங்கப்படுவதாகப் பாவிக்கிறோம். இது உண்மையல்ல. வாழ்நாளுக்கான ஒரு முதலீடாகக் கருதியே பெற்றோர் இன்று லட்சங்களில் இருந்து கோடிகள் வரைச் செலவிடுகிறார்கள். வேலை கிடைக்கவில்லை, கிடைத்த வேலையிலும் ஊதியமாக அவர்களால் தம் முதலீட்டைத் திரும்ப எடுக்க முடியவில்லை எனில் அது ஒருவித 'மோசடிதான்'. அரசு ஒன்று தனியார் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் அல்லது நல்ல மதிப்பெண் பெற்றும் சரியான சம்பளம் பெற முடியாதோருக்கு அரசு தற்காலிக ஊதியம் வழங்க வேண்டும். நல்ல வேலைக்கான உத்தரவாதம் இல்லாதப்ட்சத்தில் யாரும் இவ்வளவு பணத்தை முதலீடு செய்யப் போவதில்லை. பணம் மட்டுமல்ல கடும் உழைப்பு, தகுதித் தேர்வுகளில் வெல்வதற்கான இடையறாத முயற்சிகள், போராட்டம் இவையெல்லாம் வெறும் சூதாட்டமாக மாறுகின்றன. எதிர்காலத்தில் செய்யறிவின் விளைவால் இன்னும் பல லட்சம் பேர்களுக்கு வேலையில்லாம போகும் எனச் சொல்லப்படுவதைப் பார்த்தால் கவலை அதிகரிக்கிறது. வாழ்க்கைப் பாட்டுக்கான செலவு, பண வீக்கம், வரிகள் மட்டும் அதிகரிக்கின்றன, வேலைகள் குறைகின்றன எனில் அரசு அங்கு குறுக்கிட்டு எதையாவது செய்ய வேண்டும். பெருவணிகர்களின் ஒப்பந்தங்களில் மட்டும் அக்கறை காட்டினால் போதாது. குறைந்தது வேலையில் தன்னியமாக்கலையாவது (automation) கட்டுப்படுத்த வேண்டும். இதனால் மட்டுமே பல லட்சம் பேர்கள் வேலை இழப்பதாக நான் இரண்டாவது கட்டுரையைப் படிக்கிறேன். பெரும்பாலான பி.பி.ஓக்களை மூடுகிறார்கள்.
எனக்கு ஒரு கேள்வி உள்ளது - சரியான வேலைகள் இல்லாதபட்சத்தில் மக்கள் தம் பிள்ளைகளுக்குச் செய்யும் கல்விச் செலவைச் சேர்த்து வைத்து ஏன் ஒரு தொழிலில் முதலீடு செய்து அதில் பயிற்சி எடுக்கக் கோரக் கூடாது? அவர்கள் பட்டப்படிப்பை தொலைதூரக் கல்வியில் பெறலாம். அப்போது அவர்கள் செய்த லட்சக்கணக்கான முதலீட்டில் ஒன்று லாபம் பெற்றிருப்பார்கள் அல்லது அனுபவத்தை அடைந்திருப்பார்கள். எப்படியும் லாபம்தான். 15,000 ரூபாய்க்கு சேல்ஸ்மேனாக இருப்பதற்கு ஒரு பட்டதாரி பானிபூரி விற்றோ கடை நடத்தியோ அதைவிட ஐந்து மடங்கு சம்பாதிக்கலாம். தோற்றாலும் அவர்கள் வேலை தேடிக் கொள்ளலாம். அனுபவமின்மை இன்று நட்டமல்ல. அனுபவம் உள்ளவர்களுக்கு மதிப்பும் இல்லை. இன்றைய பட்டதாரி வேலைகளில் வளர்ச்சியும் இருப்பதில்லை, இன்றுள்ள வேலை நாளை இருக்குமா எனும் நிச்சயமின்மை இருக்கிறது.
எனக்குத் தெரிந்த ஒரு ஐ.டி ஊழியருக்கு வேலை போனது. அவர் பெங்களூரில் இருந்து கேரளாவுக்குச் சென்றார். அங்கிருந்தே திரும்பவும் பல வேலைகள் தேடி அலைந்தார். அந்த இடைவேளையில் அவர் வாடகைக் கார் ஓட்டி சம்பாதித்தார். புது வேலை கிடைக்கும்வரை இந்த ஊதியம் அவருக்கு உதவியது. இன்னொருவர் காபி தயாரிக்கும் எந்திரத்தை விற்கும் பணியில் இருந்தவர். அவரிடம் சொந்தமாக சிறிது பணம் இருந்தது. அதை வைத்து ஒரு காபி கடை ஆரம்பிக்க முயன்றார். அவரது மனைவி சைனாவில் இருந்தார். அவரிடம் ஓரளவுக்கு முதலீடு இருந்தது. லாக்டவுனால் சைனாவில் இருந்து அவரால் அப்போது வெளியேற முடியாத நிலை. அவர் அங்கேயே ஒரு காபி கடையை நடத்தினார். அது வெற்றியும் பெற்றது. இப்போது ஆறு கடைகள் அங்கு நடக்கின்றன. பெங்களூர் மினிமலிஸ்ட் காபி என ஒரு மிகச்சிறிய கடையும் உள்ளது. அவர் சேல்ஸ்மேனாக மட்டும் இருந்திருந்தால் வேலை, அழுத்தம், பணவீக்கம், பதற்றம் என முன்னேற்றம் இன்றி இருக்க வேண்டியதுதான்.
இப்படிப் பலர் இன்று இருக்கிறார்கள். எதிர்காலத்தில் இளைஞர்களை இப்படித்தான் மாற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் எட்டு லட்சம் பட்டதாரிகள் சந்தைக்கு வேலையைத் தேடி வருவது ஆரோக்கியமான சூழல் அல்ல. அவர்களில் கால்வாசி பேர்களாவது சொந்தமாக ஒரு தொழிலை உருவாக்கவோ தற்சார்பாக இருக்கவோ முடிய வேண்டும். அல்லது கல்வி இலவசமாகவோ குறைந்த செலவானதாகவோ இருக்க வேண்டும். கல்விச் செலவுக்கும் வேலைக்குமான / ஊதியத்துக்குமான பொருத்தம் எதிர்விகிதச் சமமாக இருக்கலாகாது. குறைவாகக் கல்வியில் செலவிட்டு அதிகமாக ஊதியத்தில் பெருக்க வேண்டும். மாறாக, அதிகமாகக் கல்வியில் செலவிட்டு அதில் பாதியைக் கூட வேலையில் பெற முடியாமல் போகக் கூடாது.
Comments