Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

எது ஜெயமோகனை இப்படி வன்மாஞ்சலி எழுத வைக்கிறது?

 /வாழும் தமிழ் அமெரிக்கா வரை போகாமல் இருந்திருந்தால் அந்த அஞ்சலி குறிப்பிற்கும் பெரியதாக எதிர்வினை வந்திருக்காது. //

- ஒரு ஜெ.மோ ஆதரவாளர்




அமெரிக்கா வரை போவதென்றால் என்ன? அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த இலக்கியப் பரப்பையும் நோக்கிச் செல்வதா? அங்குள்ள மக்களைத் திரும்பிப் பார்க்க வைப்பதா? இல்லையே. அங்குள்ள இவர்களுடைய நண்பர்களையும் அன்பர்களையும் வைத்து கூட்டம் நடத்துவதுதானே? எனக்குத் தெரிந்து வாசக சாலை அமைப்பினர் தொடர்ச்சியாக பெங்களூரில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில் நடத்துவதை விட பெங்களூரில் கூட்டம் நடத்துவது பல மடங்கு கடினம். அவர்களுக்கு இத்தனைக்கும் எந்த நிதி ஆதாரமும் இல்லை. வி.பு குழுவுக்கோ பணக்காரர்கள், வலதுசாரி தொழிலதிபர்கள், ஆர்.எஸ்.எஸ் ஆதரவு உண்டு. வாசக சாலையிடம் அப்படி ஒன்றுமே இல்லை ஆகையால் அவர்கள் செய்த விசயங்களே ஒரு சாதனைதான். அதற்காக அவர்கள் வாசக சாலை கர்நாடகா வரைச் சென்றுவிட்டது எனக் கோரவில்லை. ஏனென்றால் கர்நாடகாவில் ஒரு தமிழ்க் கூட்டத்தை நடத்தினால் அது கர்நாடக சமூகத்தையோ பண்பாட்டையோ இலக்கியச் சூழலையோ அசைத்ததாகாது. ஆனால் வி.பு குழுவினர் இப்படியெல்லாம் சொல்வார்கள். இதற்கு ஈடான மிகையை, போலித்தனத்தை நாம் பொதுவாக இலக்கிய வெளியில் பார்க்க முடியாது. அதைக் குறிப்பிடவே இதை எழுதுகிறேன். இப்போக்கை நீங்கள் நடப்பு அரசியலில் காண முடியும். ஒரு சின்ன கிராமத்திற்கு சென்று அங்குள்ள மரக்கிளைகளிலும் கம்பங்களிலும் தம் கட்சிக்கொடியை கட்டுவார்கள். ஒரு சிறிய அறையை வாடகையை அமர்த்தி கட்சி அலுவலகம் திறப்பார்கள். மாலையில் ஒன்றிரண்டு பேர்கள் அங்கு இருப்பார்கள். வெளியே கட்சி மாநிலத்தின் கடைக்கோடி வரை பரவி விட்டது என்பார்கள். அவர்களுடைய ஆதரவாளர்கள் எங்கள் தலைவர் வந்த பின்னர் கட்சி அளப்பரிய வளர்ச்சி பெற்றுவிட்டது என்பார்கள். எதிர்க்கட்சிக்கு எங்களைக் கண்டு வயிற்றெரிச்சல், பயம் என்பார்கள். இந்தப் பேச்சை நீங்கள் இலக்கிய வெளியில் காண முடியாது. வி.பு குழுவினரிடம் காணலாம். இலக்கியம் நடைமுறை அரசியலை நோக்கிப் போகிறது என்று நான் ஏற்கனவே எழுதியது இதை வைத்துத்தான். இப்போக்கை மேலும் புரிந்துகொள்ள நீங்கள் ஓஷோவின் ஆசிரம அமைப்பு செயல்பட்ட விதத்தை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அவர்களும் ஒரு எதிரொலிக் கூடத்திற்குள் வாழ்ந்தார்கள். அவர்களும் அமெரிக்காவை நோக்கியே படையெடுத்தார்கள். அவர்களும் அரசியல் கட்சியின் செயல்பாடுகளைப் போலி செய்து அரசியலில் நுழைந்து போட்டியிட முயன்றார்கள். ஒப்பற்ற தலைவரைக் கற்பித்து அவரைப் போலி செய்தார்கள். முழுக்க மூளைச்சலவை ஆனார்கள், பிறரையும் செய்தார்கள். அந்த ஆசிரமம் முழுக்க வீழ்ந்து கலைக்கப்பட்ட பின்னர் கூட நடந்த எதையும் அவர்கள் ஒப்புக்கொள்ளாமலே இருந்தனர். பொதுவாக இதை கூட்டு உளநோய் என்பார்கள். தம்மையறியாமலே இத்தகைய எண்ணங்கள் இவர்களுடைய உடலிலும் மனதிலும் செயல்படுகின்றன.
அடுத்து அன்னாரின் கருத்துக்கு வருவோம். ஜெயமோகன் ஏற்கனவே எழுதிய பல அஞ்சலிகளுக்கும் இத்தகைய எதிர்வினைகள் வந்துள்ளன. மேற்சொன்னவர் தன் நிம்மதிக்காக அவற்றை மறந்துவிடுகிறார் போலும். அதுவும் அவருக்கு நல்லதுதான். ஆனால் அதனால் ஜெயமோகன் மீதான பொறாமையில் தாக்குகிறார்கள் என்பது உண்மையல்ல. ஜெயமோகனுக்கு மனித உடல், அதன் கீழ்மை, மனித மனம், ஆன்மாவின் மகத்துவம் குறித்து ஒரு இருமை-சார் நம்பிக்கை உள்ளது. இதை அவரது பல கதைகளில் நாம் காண முடியும். இதை ஒரு death fetish, decay fetish என்று சொல்ல முடியும். அதாவது மரணம், பிணம், நோய்மை, குறைபட்டவை மீதான மிகை பாலியல் ஈர்ப்பு. ஊனமுற்றவர்கள் ஜெயமோகனின் மனதை அதிகமாக ஈர்க்கிறார்கள். ஒரு அறையில் லேசாக ஊனத்துடன், சிறு உடல் மாறுபாட்டுடன் ஒருவர் வருகிறார் என வைப்போம். அவருடன் பேசுகிறவர்கள் அவரது ஆளுமை, பேச்சு, கருத்துக்கள், மாண்பு, உணர்வுகளை கவனிப்பார்கள்; ஜெயமோகன் கண்ணுக்கு அந்த மாறுபட்ட உடல் தன்மை மட்டுமே புலப்படும். இதை ரொமாண்டிசைஸ் பண்ணி காதலாக, காமமாகச் சித்தரித்து எசுநாரி கவபாட்டா சில நல்ல கதைகளை எழுதியிருக்கிறார். பின்நவீனத்துவாதிகள் இதை எதிர்-அழகியலாகக் காண்பதுண்டு. ஆனால் குற்றவுணர்விலும் போதாமையிலும் மகிழ்ச்சி காணும் இயல்பு கொண்ட ஜெயமோகன் இதையே அருவருப்பு, துன்பம், கழிவிரக்கம், நசிவு, கீழ்மை என மாற்றி அதில் இன்பம் காண்பார். இது ஒரு ஆளுமைப் பிரச்சினை, மனப்பாங்கு கோளாறு.
இம்மாதிரி விசயங்களை வைத்து எழுதும்போது அவருக்கு பெரிய மனத்திளைப்பு கிடைக்கிறது. அறம், ஏற்றத்தாழ்வுக்கு எதிரான கோபம், வீழ்ச்சி போன்ற பின்னணிகளை வைத்து அவர் இந்த fetish ஐ எழுதும்போது அது நமக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. அவரது "விஷ்ணுபுரத்தில்" பிரம்மாண்டம் குறித்த கவித்துவமான, பிரமிப்பான சித்தரிப்புகளில் இதே fetish உண்டு. "ஏழாம் உலகம்" இதற்குச் சிறந்த உதாரணம். அதை ரசிக்கும்போது நமக்குள் தூண்டப்படும் fetish இன்பத்தை அவர் இலக்காக்குகிறார். ஆனால் அஞ்சலி எனும் பெயரில் வன்மாஞ்சலி எழுதும்போது இதெல்லாம் அப்பட்டமாகத் தெரிந்து போகிறது, அருவருப்பாக நம் முகத்தில் வந்து அறைகிறது. மேலும் தனிமனித மாண்பு மீதான தாக்குதலாகவும் இது மாறுவதால் பலரும் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஏனென்றால் இதை நம் சட்டமே நமக்கு உத்தரவாதம் செய்கிறது. இந்த அஞ்சலியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதிமன்றம் போனால் ஜெயமோகன் சிக்கிக் கொள்வார். அவரது அதிர்ஷ்டம் இதுவரைக்கும் அப்படி நடக்கவில்லை. ஆகையால் வாசகர்களின், சக-எழுத்தாளர்களின் எதிர்வினை மிகவும் எதிர்பார்க்கத்தக்கதே. ஜெயமோகன் இதே பாணியில் மனுஷ்ய புத்திரனை அவமதித்து எழுதிய கட்டுரையைக் கொண்ட நூல் வெளியானபோது அம்மேடையில் வைத்து சாரு அதைக் கிழித்து எறிந்தாரே அதுவும் இத்தகைய தனிமனித மாண்பின் மீதான தாக்குதலை எதிர்க்கவே. இதற்கு ஒரு நீண்ட மரபு உள்ளது. ஜெயமோகனின் மேற்சொன்ன fetish தீராதவரைக்கும் அல்லது அவர் அதை தனக்குள் புதைக்காத வரைக்கும் இம்மாதிரி எதிர்ப்புகள் வந்துகொண்டே தான் இருக்கும்.
அந்த வி.பு ஆதரவாளர் அடுத்து இவ்வாறு கூறுகிறார்:
//அவர் செய்யும் சிறிய விஷயங்களின் மேல் கொள்ளும் வன்மம் அந்த பெரிய விஷயங்கள் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று நேரடிபொருள் வந்துவிடுகிறது.//
சிறிய விசயம் - பெரிய விசயம் என எப்படி முடிவு செய்கிறார்? ஒன்று மிகப்பெரிய சாதனையாக இருப்பதால் அதனுடன் ஒப்பிடுகையில் ஜெயமோகனின் குணக்கேடு சிறிய விசயம் என்கிறார். என்னால் முதலில் இந்த 'பெரிய விசயத்தையே' ஏற்க இயலாது. அது ஒரு பெரிய ஊழல், பெரிய சீரழிவு என்பேன். இதை விளக்கி பல கட்டுரைகளை நான் முதன் முதலாக வி.பு கூட்டத்தின் மேடையில் ஏறிப் பேசி அங்குள்ள பிரச்சினைகளை நேரடி அனுபவத்தில் கண்ட நாளில் இருந்தே எழுதியிருக்கிறேன். என்னுடைய இணையதளத்தில் நீங்கள் தேடிப் படிக்கலாம் (அவர்கள் செய்த தவறே என்னை அழைத்ததுதான்.). விஷ்ணுரம் கூட்டங்களில் பிரச்சினை அவை பேச்சு சுதந்திரத்துக்கு, சிந்தனைச் சுரந்திரத்துக்கு எதிரானவை, அவை சமகாலச் சிந்தனைகள், தத்துவங்களுக்கு எதிரானவை, எல்லாவற்றையும் பழமையான, நவ-செவ்வியல் கருத்துக்களாகச் சுருக்கிக் கொள்கின்றன என்பது. எல்லா விதங்களிலும் வி.பு ஒரு அரசியல் கட்சியைப் போன்றே செயல்படுகிறது. ஒற்றைப்படையான எண்ணங்கள், மையவாதப் பார்வை ஒரு பக்கமும் அமைப்பற்ற அமைப்பு எனும் போக்கு இன்னொரு பக்கமும் உள்ளது. அதாவது ஆர்.எஸ்.எஸின் பல்வேறு கிளைகளுக்கு எந்த நேரடித் தலைமையும் இராது. அவற்றை ஆரம்பிப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தலைவரே. ஆனால் அவர்கள் அவர்களுக்கு இடையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் மையத்தலைமையை, அவர்களின் வழிகாட்டுதலை ஏற்பதில் மௌன உடன்படிக்கை இருக்கும். அதனாலே அவர்கள் இலக்கியத்தின் பெயரில் நடத்துபவை ஒரு 'கலாச்சார அரசியல்' இயக்க நிகழ்வாகின்றன. அவர்களுடைய நோக்கம் இலக்கிய, அறிவியக்கத்தை ஊடுருவுவது. அவ்விதத்தில் ஜெயமோகன் இலக்கியத்தின் பால் ஈடுபாடு மிகுந்த ஒரு அரசியல்வாதி மட்டுமே. அவர் இலக்கியமா (தனித்து இயங்குவது, முரண்பட்டுச் சிந்திப்பது, சுயபரிசீலனையில் சதா இருப்பது, தன் கற்பனையைத் தன் தன்னிலையாகக் கருதுவது, தன் தேகத்தைத் தியாகம் செய்வது, தன் சுயத்தை அழிப்பது) தன் அரசியலா (அமைப்புசார் செயல்பாடு, கருத்தியலைப் பரப்புவது, கூட்டம் சேர்ப்பது, தன் தன்னிலையை மரபின் நீட்சியாகக் காண்பது, உடலைப் பேணுவது, எப்போதுமே தன் நிலையை விட்டுக் கொடுக்காமல் இருப்பது) என்று வந்தால் அரசியல் பக்கமே நிற்கிறார். ஜெயமோகன் இலக்கியவாதியே அல்லர் என்பதே என் பார்வை. அவர் இலக்கியத்தைத் தன் பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்தும் ஒரு பண்பாட்டு அரசியல்வாதி. அவரது பல கதைகளையும் நாவல்களையும் இன்றும் மீள்வாசிப்பு செய்தால் அவற்றிலுள்ள அரசியல் பிரச்சாரம் அம்பலப்படும். அவரே அதை மறைக்க உத்தேசித்ததில்லை. ஒவ்வொரு முறையும் நாட்டில் உள்ள வெகுமக்கள் அரசியல் போக்குகளை ஒட்டி அவர் தன் அரசியல் நிலைப்பாட்டை சிறியே மாற்றுவார். அது ஒரு நாவலாகும். நாம் பொதுவாக இடதுசாரி படைப்பாளிகளையே பிரச்சார எழுத்தாளர்கள் என்கிறோம். ஜெயமோகனும் வலதில் இருந்து தோன்றிய அத்தகைய ஒரு பிரச்சாரகர்தான். அவரது புனைவெழுத்தின் நுட்பங்களை நாம் வியக்கலாம், ஆனால் அவருக்கு அது பொருடல்ல, தன் அரசியலே முக்கியம் என்பதை அவரது நடத்தைகளில் காணலாம். ஜெயமோகன் தீடிரென இப்படி ஆகவில்லை, எனக்கு அவரை 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும். அப்போதிருந்தே அவரது கூட்டங்களில், முகாம்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆகையால் அப்போதிருந்தோ அதற்கு முன்பிருந்தோ அவர் இத்தகைய முயற்சிகளில்தான் இருந்தார் என்பேன். அவரது அளப்பரிய ஆற்றலில் நாம் காண்பது ஒரு அரசியல் செயல்பாட்டாளாரைத்தான், இலக்கியவாதியை அல்ல.
இடதோ வலதோ அது இங்கு என் பிரச்சினை இல்லை. ஜெயமோகன் எந்த கட்சியை சித்தாந்தத்தை ஆதரித்தாலும் அது எனக்கு பொருட்டில்லை. அவர் முழுமையாக இலக்கியத்தில் இல்லை, இலக்கியத்தை வேறெதெற்கோ பயன்படுத்துகிறார், பயன்படுத்தி இலக்கியப் போக்குகளின் திசையையே மாற்றுகிறார் என்பதே என் பிரச்சினை.
இதனாலே ஜெயமோகன் செய்வது பெரிய செயல் அல்ல, அது இலக்கியச் செயலே அல்ல என்கிறேன். அது இலக்கிய மொழியில் நடத்தப்படும் அரசியல் நிகழ்வு மட்டுமே. அதைக் குறித்து பிறருக்கு அசூயையும் கசப்பும் இல்லை எனச் சொல்கிறேன். அதை ஒரு பெரிய செயல் என்று வலதுசாரி, மையவாத கட்சிக்காரர்களும் கருதலாம். ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே ஜெயமோகனின் அதே தளத்தில்தான் உள்ளனர். அவர்களும் 'அரசியல்தான்' முக்கியம்.

Comments

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...