ஒரு ஊரில் பெரிய அளவில் வளர்ச்சியில்லை. வறட்சியான பூமி, அதில் கொஞ்சம் விவசாயம், இருக்கிற பணத்தையும் உணவையும் வைத்து மக்கள் அங்கு வாழ்கிறார்கள். அங்கு எந்த பெரிய முன்னேற்றங்களும் வருவதில்லை. அதே நேரம் பெரிய வறுமையும் இல்லை. அவர்களுக்குப் பெரிய கவலைகளும் இல்லை. தன்னிறைவாக வாழ்கிறார்கள். அந்த ஊர் இளைஞர்களும் நவீன வேலைகளையும் வசதிகளையும் தேடி வேறு ஊருக்குப் போகிறார்கள். பருவம், வெக்கை, மழை, சடங்குகள், காலம் என எதுவுமே அங்கு மாறுவதில்லை. அப்படி இருக்க ஒருநாள் அங்கு ஒரு குஜராத்தி வருகிறார். அவர் இவர்களுக்கெல்லாம் செயலூக்கம் இல்லையே, சுயமுயற்சி இல்லையே என நினைக்கிறார். அவர் ஒரு வட்டிக் கடையை ஆரம்பித்து அங்குள்ளவர்களுக்கு ஆத்திர அவசரத்துக்கு நகை அடமானத்துக்கு கடனுதவி செய்கிறார். அவரிடம் ஓரளவுக்குப் பணம் சேர தன் ஊர்க்காரர்களை அழைத்து கூட வைத்துக்க் கொள்கிறார். அடுத்து சின்னச்சின்ன கடைகளை ஆரம்பிக்கிறார். அவர் தன் ஊர்க்காரர்கள் கடை வைக்க உதவினால் அவர்களுக்குப் பண உதவியும் ஆலோசனைகளும் தந்து அவர்கள் நிலைபெற உதவுகிறார். வியாபாரம் ஜோராக நடக்கிறது. வெளியூர்களில் இருந்து முதலீட்டைப் பெற்று பெரிய வணிக நிறுவனங்களை ஆரம்பிக்கிறார். மெல்ல மெல்ல அந்த ஊர்க்காரர்கள் குடும்பம் குடும்பமாக வந்து இந்த ஊரை ஆக்கிரமிக்கிறார்கள். அவர்கள் தம் மொழியில் பேசுவது, கோயில் கட்டுவது, கொண்டாட்டங்கள் நடத்துவது, தமக்கென ஒரு ஊரை உருவாக்குவது, தெருவுக்கு தம் மொழியில் பெயரிடுவது என அதகளம் செய்கிறார்கள். தம் கோயில் விழாவின் போதும், திருநாட்களின் போதும் கறிக்கடைகளைத் திறக்கக் கூடாது என்றவர்கள் போகப் போக புலால் உண்பதே பாவம் எனப் பிரச்சாரம் செய்யத் தொடங்குகிறார்கள். தம் மதமும் நடத்தையுமே சரி, பிறர் பிற்போக்கானவர்கள் என்று பேசுகிறார்கள். இப்போது சொந்த ஊர்க்காரர்களுக்கு அசூயையாகிறது. அவர்கள் எதிர்க்க இந்த வியாபாரி அவர்களிடம் பேசுகிறார்: "இதோ பாருங்கள் நான் முதலில் வரும்போது இந்த ஊரில் ஒன்றுமே இல்லை. உங்களை யாருமே மதிக்கவில்லை. நான் பூஜ்யத்தில் இருந்து ஒரு கட்டமைப்பை, கலாச்சாரத்தைப் புதிதாக உருவாக்குறேன். இந்த ஊருக்கு உலக வரைபடத்தில் ஒரு இடத்தை உருவாக்கி இருக்கிறேன். நான் வந்த பின்னரே பொருளாதார வளர்ச்சி இங்கு அதிகரித்திருக்கிறது. உங்களிடம் க்ரியா சக்தி இல்லை. எங்களிடம் அது அதிகமாக உள்ளது. நீங்கள் சோம்பேறிகள், நாங்கள் கடும் உழைப்பாளிகள். அதனாலே உங்களது நகைகள் பலவும் என்னிடம் அடகில் உள்ளன. உங்களில் பலரும் என்னிடம் வாங்கிய கடனைக் கூட இன்னும் திருப்பவில்லை. ஆனால் என்னை எதிர்க்க மட்டும் செய்கிறீர்கள். உங்களுக்கு கொஞ்சமாவது வெட்கம் உள்ளதா? கேவலமாக இல்லையா? எங்களுடன் இணக்கமாக உள்ளவ உங்களில் சிலருக்கு எவ்வளவு நல்ல வாய்ப்புகளைக் கொடுத்து மேடையில் அமர வைத்து அவர்களை அலங்கரித்திருக்கிறோம் எனப் பாருங்கள். உங்களால் இத்தனை நாளாய் அது முடிந்திருக்கிறதா? இல்லையே. ஒன்று அவர்களைப் போல இருங்கள் அல்லது வாயை மூடிட்டுப் போங்க."
இந்தப் பிரச்சினையே முடியாதபட்சத்தில் இன்னொரு பிரச்சினை ஆரம்பிக்கிறது. ஊரில் உள்ள கருவேல மரங்களை அரசும் தன்னார்வலர்களுமாக அகற்ற கருவேல மரங்களின் சங்கத்தினர் போராடுகிறார்கள். கருவேல மரங்கள் வந்து சாலையை ஆக்கிரமிக்கின்றன. அம்மரங்களின் தலைவர் வந்து கேட்கிறார்: "உங்கள் ஊரில் பஞ்சம் நிலவிய போது உங்கள் மண்ணைச் செழிக்க வைக்கவும் விறகுக்காகவும் என்னைக் கொண்டு வந்து வளர்த்தீர்கள். நாங்கள் எங்கள் திறமையாலும் உழைப்பாலும் வளர்ந்தோம், பெருகினோம். உங்கள் மண்ணின் மரங்கள் சோம்பேறிகள், சத்தில்லாதவர்கள், சின்ன வறட்சிக்கே பொசுங்கி விடுகிறவர்கள். அவர்கள் அழிந்தார்கள். இது எங்கள் தவறா இல்லையே. நாங்கள் இந்த நாடு முழுக்கப் பரவியுள்ளோம். எங்களைப் பாராட்டாமல் எங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளாமல் அழிப்பதால் எதாவது பயனுண்டா? இப்போது நாங்களே உங்களுக்கு அதிகமான நிழலைத் தருகிறோம், குருவிகள், புலம்பெயர் பறவைகளுக்கு கூடுகட்ட கிளைகளைத் தருகிறோம். ஏழை எளியோருக்கு விறகைத் தருகிறோம். எங்களை ஒழிப்பது அறமா? எங்களை நீங்கள் நியாயமாக விழுந்து கும்பிட வேண்டாமா? எங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டாமா? எங்களைக் கேவலமாகப் பேச உங்களுக்கு கேவலமாக இல்லையா? உங்களைப் போன்ற ஈனப்பிறவிகளை எண்ணி வெட்குகிறோம்! அடச்சே! எங்களை எதிர்த்தால் இனி இந்த ஊரே பற்றி எரியும். உங்கள் பூமி பாலைவனமாகும். நாங்கள் உலகம் முழுக்கப் பரவி இருக்கிறோம். மண் முழுக்க, காற்று முழுக்க எங்கள் விதைகளே."
இப்போது யோசியங்கள்: அவர்கள் அந்த ஊருக்குச் செய்தது நல்லதா அல்லது கேடா? உங்கள் கருத்தென்ன?
மேற்சொன்ன கதைதான் ஓஷோ அமைப்பின் கதையும். அதுதான் நம் இலக்கியச் சூழலில் உள்ள சர்வாதிகார ஒற்றை மைய அமைப்புகளின் கதையும். இவர்கள் இலக்கியச் சூழலில் வலுவான கட்டமைப்புகளை உருவாக்கி நிதியைக் கொண்டு வந்து பெரிய கூட்டங்களை நடத்துவது, பரிசளிப்பது, அதைக் கொண்டு எதேச்சதிகாரம் செய்வது, கண்காணிப்பு மையங்களை உருவாக்குவது வளர்ச்சியா பாதகமா?
Comments