Skip to main content

ஒரு விபரீதக் கதை


 

ஒரு ஊரில் பெரிய அளவில் வளர்ச்சியில்லை. வறட்சியான பூமி, அதில் கொஞ்சம் விவசாயம், இருக்கிற பணத்தையும் உணவையும் வைத்து மக்கள் அங்கு வாழ்கிறார்கள். அங்கு எந்த பெரிய முன்னேற்றங்களும் வருவதில்லை. அதே நேரம் பெரிய வறுமையும் இல்லை. அவர்களுக்குப் பெரிய கவலைகளும் இல்லை. தன்னிறைவாக வாழ்கிறார்கள். அந்த ஊர் இளைஞர்களும் நவீன வேலைகளையும் வசதிகளையும் தேடி வேறு ஊருக்குப் போகிறார்கள். பருவம், வெக்கை, மழை, சடங்குகள், காலம் என எதுவுமே அங்கு மாறுவதில்லை. அப்படி இருக்க ஒருநாள் அங்கு ஒரு குஜராத்தி வருகிறார். அவர் இவர்களுக்கெல்லாம் செயலூக்கம் இல்லையே, சுயமுயற்சி இல்லையே என நினைக்கிறார். அவர் ஒரு வட்டிக் கடையை ஆரம்பித்து அங்குள்ளவர்களுக்கு ஆத்திர அவசரத்துக்கு நகை அடமானத்துக்கு கடனுதவி செய்கிறார். அவரிடம் ஓரளவுக்குப் பணம் சேர தன் ஊர்க்காரர்களை அழைத்து கூட வைத்துக்க் கொள்கிறார். அடுத்து சின்னச்சின்ன கடைகளை ஆரம்பிக்கிறார். அவர் தன் ஊர்க்காரர்கள் கடை வைக்க உதவினால் அவர்களுக்குப் பண உதவியும் ஆலோசனைகளும் தந்து அவர்கள் நிலைபெற உதவுகிறார். வியாபாரம் ஜோராக நடக்கிறது. வெளியூர்களில் இருந்து முதலீட்டைப் பெற்று பெரிய வணிக நிறுவனங்களை ஆரம்பிக்கிறார். மெல்ல மெல்ல அந்த ஊர்க்காரர்கள் குடும்பம் குடும்பமாக வந்து இந்த ஊரை ஆக்கிரமிக்கிறார்கள். அவர்கள் தம் மொழியில் பேசுவது, கோயில் கட்டுவது, கொண்டாட்டங்கள் நடத்துவது, தமக்கென ஒரு ஊரை உருவாக்குவது, தெருவுக்கு தம் மொழியில் பெயரிடுவது என அதகளம் செய்கிறார்கள். தம் கோயில் விழாவின் போதும், திருநாட்களின் போதும் கறிக்கடைகளைத் திறக்கக் கூடாது என்றவர்கள் போகப் போக புலால் உண்பதே பாவம் எனப் பிரச்சாரம் செய்யத் தொடங்குகிறார்கள். தம் மதமும் நடத்தையுமே சரி, பிறர் பிற்போக்கானவர்கள் என்று பேசுகிறார்கள். இப்போது சொந்த ஊர்க்காரர்களுக்கு அசூயையாகிறது. அவர்கள் எதிர்க்க இந்த வியாபாரி அவர்களிடம் பேசுகிறார்: "இதோ பாருங்கள் நான் முதலில் வரும்போது இந்த ஊரில் ஒன்றுமே இல்லை. உங்களை யாருமே மதிக்கவில்லை. நான் பூஜ்யத்தில் இருந்து ஒரு கட்டமைப்பை, கலாச்சாரத்தைப் புதிதாக உருவாக்குறேன். இந்த ஊருக்கு உலக வரைபடத்தில் ஒரு இடத்தை உருவாக்கி இருக்கிறேன். நான் வந்த பின்னரே பொருளாதார வளர்ச்சி இங்கு அதிகரித்திருக்கிறது. உங்களிடம் க்ரியா சக்தி இல்லை. எங்களிடம் அது அதிகமாக உள்ளது. நீங்கள் சோம்பேறிகள், நாங்கள் கடும் உழைப்பாளிகள். அதனாலே உங்களது நகைகள் பலவும் என்னிடம் அடகில் உள்ளன. உங்களில் பலரும் என்னிடம் வாங்கிய கடனைக் கூட இன்னும் திருப்பவில்லை. ஆனால் என்னை எதிர்க்க மட்டும் செய்கிறீர்கள். உங்களுக்கு கொஞ்சமாவது வெட்கம் உள்ளதா? கேவலமாக இல்லையா? எங்களுடன் இணக்கமாக உள்ளவ உங்களில் சிலருக்கு எவ்வளவு நல்ல வாய்ப்புகளைக் கொடுத்து மேடையில் அமர வைத்து அவர்களை அலங்கரித்திருக்கிறோம் எனப் பாருங்கள். உங்களால் இத்தனை நாளாய் அது முடிந்திருக்கிறதா? இல்லையே. ஒன்று அவர்களைப் போல இருங்கள் அல்லது வாயை மூடிட்டுப் போங்க."

இந்தப் பிரச்சினையே முடியாதபட்சத்தில் இன்னொரு பிரச்சினை ஆரம்பிக்கிறது. ஊரில் உள்ள கருவேல மரங்களை அரசும் தன்னார்வலர்களுமாக அகற்ற கருவேல மரங்களின் சங்கத்தினர் போராடுகிறார்கள். கருவேல மரங்கள் வந்து சாலையை ஆக்கிரமிக்கின்றன. அம்மரங்களின் தலைவர் வந்து கேட்கிறார்: "உங்கள் ஊரில் பஞ்சம் நிலவிய போது உங்கள் மண்ணைச் செழிக்க வைக்கவும் விறகுக்காகவும் என்னைக் கொண்டு வந்து வளர்த்தீர்கள். நாங்கள் எங்கள் திறமையாலும் உழைப்பாலும் வளர்ந்தோம், பெருகினோம். உங்கள் மண்ணின் மரங்கள் சோம்பேறிகள், சத்தில்லாதவர்கள், சின்ன வறட்சிக்கே பொசுங்கி விடுகிறவர்கள். அவர்கள் அழிந்தார்கள். இது எங்கள் தவறா இல்லையே. நாங்கள் இந்த நாடு முழுக்கப் பரவியுள்ளோம். எங்களைப் பாராட்டாமல் எங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளாமல் அழிப்பதால் எதாவது பயனுண்டா? இப்போது நாங்களே உங்களுக்கு அதிகமான நிழலைத் தருகிறோம், குருவிகள், புலம்பெயர் பறவைகளுக்கு கூடுகட்ட கிளைகளைத் தருகிறோம். ஏழை எளியோருக்கு விறகைத் தருகிறோம். எங்களை ஒழிப்பது அறமா? எங்களை நீங்கள் நியாயமாக விழுந்து கும்பிட வேண்டாமா? எங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டாமா? எங்களைக் கேவலமாகப் பேச உங்களுக்கு கேவலமாக இல்லையா? உங்களைப் போன்ற ஈனப்பிறவிகளை எண்ணி வெட்குகிறோம்! அடச்சே! எங்களை எதிர்த்தால் இனி இந்த ஊரே பற்றி எரியும். உங்கள் பூமி பாலைவனமாகும். நாங்கள் உலகம் முழுக்கப் பரவி இருக்கிறோம். மண் முழுக்க, காற்று முழுக்க எங்கள் விதைகளே."
இப்போது யோசியங்கள்: அவர்கள் அந்த ஊருக்குச் செய்தது நல்லதா அல்லது கேடா? உங்கள் கருத்தென்ன?
மேற்சொன்ன கதைதான் ஓஷோ அமைப்பின் கதையும். அதுதான் நம் இலக்கியச் சூழலில் உள்ள சர்வாதிகார ஒற்றை மைய அமைப்புகளின் கதையும். இவர்கள் இலக்கியச் சூழலில் வலுவான கட்டமைப்புகளை உருவாக்கி நிதியைக் கொண்டு வந்து பெரிய கூட்டங்களை நடத்துவது, பரிசளிப்பது, அதைக் கொண்டு எதேச்சதிகாரம் செய்வது, கண்காணிப்பு மையங்களை உருவாக்குவது வளர்ச்சியா பாதகமா?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...