முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கள்ள உறவும், நவீனப் பெண்ணுரிமையும்

திருமணத்தின் அவசியம் என்ன? பதில்களில் முக்கியமாய்ப் படுவது: (1) புணர்ச்சி; (2) குழந்தை பெற்று, பேணி, வளர்த்து, ஆளாக்கி ... மின்சாரக் கொள்ளி போட; (3) சமூக அந்தஸ்து. நண்பர் ஹமீம் முஸ்தபா 12 வருடங்களுக்கு முன் அவரது புத்தகக் கடையில் ஒரு முன்னிரவில் இலக்கியக்கூட்டத்தின் போது, சில மன்மத ரகசியங்களைக் காதோடு காதாக அலசும் போது, சற்று சத்தமாகச் சொன்னார்: 'செக்ஸுக்கு திருமணம் என்னும் லைசன்ஸ் கட்டாயம் இல்லை எனில் யாரும் கல்யாணம் செய்ய மாட்டார்கள்'.
எனக்கு பிற்பாடு தோன்றியது. திருமணத்திற்குப் பின் 'கள்ளக்காதல்' எனப்படும் வடிகால் இருப்பதால்தான் பல குடும்பங்கள் நிலைக்கின்றன. இந்த 'கள்ளக்காதல்' பல விதங்களில் இருக்கலாம். வாய்ப்புக் கிடைத்தால் வழியாத, கடலை போடாத, வேலி தாண்டாதவர்கள் எத்தனை பேர்?
அடுத்து திருமணம் என்றொரு எளிய சடங்கு இல்லை என்றால் பல பேருக்கு ஜோடியே கிடைக்காமல் போகலாம். எந்தத் திறமையோ உழைப்போ செலுத்தாமல் வெற்றி பெறும் ஒரே ஆட்டம் திருமணம்தான். குறைந்த பட்ச சம்பாத்தியமோ, குடும்பப் பின்னணியோ, குழந்தை உற்பத்தித் தகுதியை நிலை நாட்டும் அடிப்படை உடலமைப்போ போதும். இந்திய வாழ்வில் மன உறுதிக்கு அடுத்த படியாய் திருமணம் ரொம்ப அவசியம்.
நீட்சே குடியாட்சி பற்றி சொன்னது இல்லத்தரச, அரசிகளுக்கும் பொருந்தும். கல்யாண வாழ்வு பலவீனர்களுக்கான பலவீன அமைப்பு. இதன் அடி நாதமான அச்சமும் அவ நம்பிக்கையும், ஆத்திரம், பாசாங்கு என, பக்கமேளத்துக்குக் காரணமாகிறது. ஆனாலும் மற்றொரு கோணத்தில் இது நம் பாதுகாப்பற்ற தினசரி வாழ்வை போஷித்து, பாதுகாக்கிறது.
எனக்கு திருமணத்தோடான பிரச்சினை அது இயற்கைக்கு விரோதமானது என்பதே. இயற்கையைப் பொறுத்த மட்டில் நிலைப்பாட்டுக்கு, சந்ததிக்குப் போராடுவதே மானிட வாழ்வின் முக்கிய இலக்கு. நமது கல்யாண 'சௌபாக்கிய' குடும்ப, குமாஸ்தா வாழ்க்கை இந்தப் போராட்டத்தை இல்லாமல் மழுங்கடித்துவிடுகிறது. அதோடு 'கள்ளக்காதல்' இயற்கையைப் பொறுத்தமட்டில் 'நல்ல காதல்' தான். நமது ஜீன் குட்டையை வேறுபட்டதாய்த் தக்கவைக்க, பலதுணை உறவே சிறந்தது. இதற்கான இயற்கை விழைவை பிற மிருக இனங்களின் மீதான ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. குறிப்பாய் சிறுத்தை இனத்தில் ஆண் அடக்குமுறையை, அதன் மூலம் உடலுறவுக் கட்டுப்பாட்டை, தவிர்க்க, பெண்கள் தங்கள் ஆட்சி எல்லைப் பரப்புக்குள் ஆண்களைத் தற்காலிகமாய்ப் புணர்ச்சிக்கு மட்டும் அனுமதிக்கும் பழக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளதைச் சொல்லலாம். இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு. ஒரு விதக் காட்டுயிர் பெண்ணியவாதம் உள்ளதைச் சொல்கிறது. முக்கியமாய் பெண்சிறுத்தைகள் தங்கள் குட்டிகள் மாறுபட்ட ஆண்களினுடையதாய் இருப்பதையே விரும்புகின்றன. ஏனென்றால் இதன் மூலம் சந்ததியினருக்குச் சிறந்த உடல் நலம் வாய்க்கிறது. சரி, நாம் இந்த வானத்துப் பறவைகள் விதைப்பதில்லை வாழ்விலிருந்து ரொம்பவே விலகி வந்துவிட்டோம். ஆனாலும் நமது இன்றைய சூழலிலும் கள்ளக்காதலுக்குப் பயன்பாடுகள் இருக்கிறது.
முக்கியமாய் திருமணத்தைத் தக்க வைப்பதற்கு.
பல தளங்களில் பெண்கள் சரி நிகராய்ப் போட்டியிடத் தொடங்கியுள்ள இந்தக் காலகட்டத்தில் அவர்கள் மீதான பல தரப்பட்ட புகார்கள் பாலுறவுத் தகுதி பற்றியனவே. இரவில் பெண்கள் வெளியே நடப்பது அதிகப்பிரசங்கித்தனம் என்பதிலிருந்து, விவாகரத்து எண்ணிக்கை அதிகரிப்பு, ஒழுக்க மீறல், ஆண் விபச்சாரம், கள்ளத்தொடர்புகள் வரை. ஆண் விபச்சாரம் பற்றி சன் டீவி பரபரப்பு நினைவிருக்கலாம். தினத்தந்தி வகை வீட்டுப் பெண்களின் கள்ள உறவுக்கு பிறகு வருவோம். மாநகர உயர்மத்திய, உயர்த்தட்டு புத்துலக வேலைபார்க்கும் பெண்களிடையே இப்போது பிரபலமாய்ப் பேசப்படுவது emotional infedility எனப்படும் உணர்வு ரீதியான கள்ள உறவு. இவ்வகை மாநகரக் குடும்பங்களில் கணவன் மனைவிகள் நண்பன் நண்பிகள், அடக்கப்பட்ட, பகிரமுடியாத உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான கருவிகளாய் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது திருமணத்துக்குப் பிறகும் பழைய நட்புகளைத் தொடர்வதை, பழைய கணவர்கள் போல் நவீன கணவர்கள் எதிர்ப்பதில்லை. காரணம், இன்றைய சம்பாதிக்கும் பெண் தனது பலவித மானசீக, உடல் தேவைகளை வாய், கண், மூக்கு மூடி, தவிர்க்கத் தயாராய் இல்லை. அவசர, பதற்ற நகர வாழ்வில் ஒருவரை ஒருவர் ஆற அமரக் கவனிக்க முடியாமல் போகையில், அல்லது சலிப்பு தட்டும்போது இந்த நண்பர்கள், உணர்வுபூர்வ கள்ளக்காதலர்கள் பயன்படுகின்றனர். (இந்த வகைப்படாத பின்-திருமண, 'நல்ல' சம்பிரதாய நட்புகளும் நிச்சயம் உள்ளன.)
நவீனப் பெண் அடக்க விரும்பாத தேவைகளில் ஒன்று உடலுறவு. விடிகாலை முயக்கத்தின் மருத்துவப் பயன்பாடுகள், அதனால் தவிர்க்க முடிகிற நோய்கள் என்றொரு நீண்ட பட்டியலை சமீபத்தில் பத்திரிகை ஒன்றில் படித்தேன். பரிணாமப் பார்வையில் உடலுறவு மானிட இயக்கத்தின் ஒரு முக்கிய நோக்கம். ஆனால் புள்ளிவிவரப்படி இந்தியத் திருமண ஜோடிகளின் உடலுறவுக் கணக்கு மாதத்தில் சில முறைகளே. இத்தோடு ஒட்டுறவில்லாமல் வாழும் லட்சக்கணக்கான ஜோடிகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் நம் சமூகம் எத்தகையதொரு தந்தூரி அடுப்பில் வேகிறது என்பது புரியும்.
ஏஞ்சலினா லெவின் என்பவர் இங்கிலாந்தின் உயர்பதவி வகிக்கும், அல்லது சுயதொழில் புரியும் நூற்றுக்கணக்கான பெண்களிடம் திருமணத்துக்குப் பின்பான பிற ஆண் பாலுறவு பற்றி ஆய்வு செய்து சில புதிய, முக்கியமான போக்குகளை வெளியிட்டுள்ளார். இவர் உரையாடிய பெண்களில் பலருக்கு இவ்வகை உறவுகள் அவர்களது வேலையிடங்களில் வெற்றிகரமாய்ச் செயலாற்றவும், குடும்பத்தைத் தக்கவைக்கவும் பயன்படுகின்றன. இவர்கள் சமூகத்தில் திருமணமான பெண்களில் 60 சதவீதத்தினர். பொதுவாய் நிறுவனங்களில் கூட வேலைபார்க்கும் நபர்களிடம் இயல்பாய் திருமணத்துக்குப் பின் பலருக்கும் ஈர்ப்பும், அதன் விளைவாய் கள்ளக்காதலும் உருவாவதாய்ச் சொல்லப்படுவதை மறுக்கிறது இந்த ஆராய்ச்சி. பல வேலை பார்க்கும் பெண்கள் நிறுவன உறவுகளை தவிர்க்கிறார்கள். காரணம், இது அவர்கள் வேலை வளர்ச்சியை பாதிக்கும்.
பொதுவாய் நம்பப்படுவது போல் குடும்ப நண்பர்களை அணுகுவதையும் பல திருமணமானவர்கள் தவிர்க்கிறார்கள். அடுத்து கவனிக்க வேண்டியது, உடலுறவை இவர்கள் தங்கள் உரிமை என நம்புவதால், பெரும்பாலானோருக்கு 'கள்ள' உறவால் குற்ற உணர்வேதும் இல்லை.
மற்றொரு ஜெர்மானிய ஆய்வு, 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூவரில் ஒருவர் 'கள்ள' உறவுகளில் நாட்டம் காட்டுவதாய்க் கூறுகிறது. ஏஞ்சலினா பேட்டி கண்ட 52 வயது குடும்பப் பெண் ஒருவர் 27 வருட திருமண வாழ்வுக்குப் பிறகு ஒரு நாள் வெளியே புதுக் காதலன் தேட முடிவு செய்தார். . "என் கணவர் நல்லவர்தான். ஆனால் படுக்கையில் ஒன்றுக்கும் உதவாதவர். எத்தனையோ வருடங்கள் முயக்கத்தின் போது மல்லாந்து கிடந்து இங்கிலாந்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்" என்கிறார். ஒரு நாள், இணையத்தில் காதலனுக்காக விளம்பரம் கொடுத்தார். குவிந்த விண்ணப்பங்களில் பொறுக்கியெடுத்த காதலருடன் உறவு சில மாதங்கள் நீடித்தது. ஆனால் தனக்கு இந்த உறவு தோதில்லை என்று பட, முறித்துவிட்டார். ஆனால் முக்கியமாய் எந்த விசனமும் இல்லை. மற்றொரு 49 வயதுப் பெண்ணுக்கு 15 வயது மூத்த ஆர்வமற்ற கணவன். இவர் காதலனைத் தேட, திருமணமான பெண்களுக்கான ஒரு டேட்டிங் ஏஜென்சியை அணுகினார். அவர்கள் தேர்தெடுத்துத் தந்த மூன்று நபர்களுடன் 6 மாதங்கள் பழகி ஒருவரைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் உறவில் உணர்ச்சிகரமாய் ஒன்றுவதை உணர்ந்ததும், இவரும் முறித்துக் கொண்டார். இந்த ஜோடி ரத்தப் பரிசோதனை செய்து தங்களுக்குப் பால்வினை நோய் எதுவுமில்லை என உறுதி செய்து கொண்ட பின்னர் மட்டுமே உறையில்லாத உறவுக்குத் தயாராகி உள்ளனர். இந்தப் பெண் கள்ளத்தொடர்புக்குப் பின் கணவனுடனான சச்சரவுகள் குறைந்துள்ளதாய், கணவனை மேலும் எளிதாய்த் தாங்கிக்கொள்ள முடிவதாய்ச் சொல்கிறார். இவர் வாழ்வு பலதுணை உறவால் ஸ்திரப்பட்டிருப்பதாய்க் கருதுகிறார். தற்காலத் தீர்வுதான் என்றாலும் இது வசதியான, நடைமுறைக்குதவும் தீர்வு என்று விளக்குகிறார். இந்தப் பெண்கள் பலதுணை உறவை அணுகும் முறை 'தர்க்கரீதியானது', 'புத்திசாலித்தனமானது' என வர்ணிக்கும் மேரி எனும் பெண், இவ்வகை உறவுகள் சுயநம்பிக்கையை, உடலழகு மீதான கவனத்தை அதிகரிப்பதைக் குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் பெரும்பாலான மணவாழ்வுகள் சில மணி நேரங்கள், நாட்கள், மாதங்கள் அல்லது வருடங்களில் செத்துப்போய்விடுகின்றன. சமரச திருமணங்கள், பரஸ்பர விருப்பமின்மை, அவசரம், முதிர்ச்சியின்மை, பொருளாதார நெருக்கடி போன்று பல காரணங்கள். பிறகு நடப்பது ஒரு பாசாங்கு நாடகமே. உதாரணமாய், என்னோடு பணிபுரியும் பெண் ஒருவருடைய கணவன் அவரிடம் பேசுவதே இல்லை. இந்த ஈடுபாடில்லாத மணவாழ்வில் அவர்களுக்கு இரண்டாவதாய் ஒரு குழந்தை பிறக்கப் போகிறது. பெரும்பாலான நேரங்களில் இந்தப் பாசாங்கு நாடகத்தின் மற்றொரு அங்கமாய் மட்டுமே கள்ள உறவுகள் இருக்கின்றன.
நம்மூரில் கணவன்-மனைவி அறிவோடு கள்ளக் காதல் வருடக்கணக்கில் நடந்தும், சிதையாமல் தொடர்ந்து செயல்படும் பல குடும்பங்கள் உள்ளன. மீரா நாயர் காபரே நாட்டியப் பெண்கள் பற்றிய 'இந்தியன் காப்ரே' ஆவணப்படத்தில் இத்தகையதொரு 'பொறுத்துப் போகும்' குடும்பத்தைப் பதிவு செய்துள்ளார். என் நிஜவாழ்வில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். என் சித்திக்குத் தன் கணவனின் நண்பனோடு 'கள்ளத்' தொடர்பு இருந்தது. இது தெரிந்திருந்தும், கணவன் மனைவி பிரியவில்லை. குடும்பம் நிலைத்தது. ஊர்வாய் ஓயாமல் வம்பு பேசியும், தன் சக ஊழியரான இந்த நண்பரோடு சித்தப்பா நெருக்கமாகவே இருந்தார். முடிவாய் இருவரும் மதுபோதையில் சேர்ந்து பைக்கில் செல்லும் போது விபத்தில் இணைந்தே இறந்தனர்.
மாறாய், கள்ளத் தொடர்பு விளைவான வன்முறைகளையும் நம் சமூகத்தில் ஏகத்துக்குக் காணலாம். மாலைமலரில் வேலைசெய்யும் போது, கணிசமான கள்ளத்தொடர்பு-பிரச்சினை-கொலை செய்திகளைக் கண்ணெரியப் படித்து எழுதியிருக்கிறேன். திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் வாழ்ந்த போது பக்கத்துத் தெருவில் ஒரு விபரீத சம்பவம் நடந்தது. 55 வயதுக்கு மேற்பட்ட தன் மனைவியை 20 வருடங்களாகக் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டதிற்காக வயதான கணவன் வெட்டிக் கொன்றார்.
அன்று எழுந்த பல கேள்விகளுக்கு விடை இல்லை. இத்தனை வருடங்கள் ஏன் பொறுத்தார், 30 வருடங்கள் வளர்த்தெடுத்த குடும்ப வாழ்வு ஒரே நாளில் திடீரென ஏன் அழிய வேண்டும் அல்லது இந்நாள் வரை இந்த வன்முறை வெடிக்கக் காத்திருந்ததா?
இந்த இருவகை நபர்களும் ஒருவிதத்தில் ஒருவர்தான் எனப்படுகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...