Skip to main content

கள்ள உறவும், நவீனப் பெண்ணுரிமையும்

திருமணத்தின் அவசியம் என்ன? பதில்களில் முக்கியமாய்ப் படுவது: (1) புணர்ச்சி; (2) குழந்தை பெற்று, பேணி, வளர்த்து, ஆளாக்கி ... மின்சாரக் கொள்ளி போட; (3) சமூக அந்தஸ்து. நண்பர் ஹமீம் முஸ்தபா 12 வருடங்களுக்கு முன் அவரது புத்தகக் கடையில் ஒரு முன்னிரவில் இலக்கியக்கூட்டத்தின் போது, சில மன்மத ரகசியங்களைக் காதோடு காதாக அலசும் போது, சற்று சத்தமாகச் சொன்னார்: 'செக்ஸுக்கு திருமணம் என்னும் லைசன்ஸ் கட்டாயம் இல்லை எனில் யாரும் கல்யாணம் செய்ய மாட்டார்கள்'.
எனக்கு பிற்பாடு தோன்றியது. திருமணத்திற்குப் பின் 'கள்ளக்காதல்' எனப்படும் வடிகால் இருப்பதால்தான் பல குடும்பங்கள் நிலைக்கின்றன. இந்த 'கள்ளக்காதல்' பல விதங்களில் இருக்கலாம். வாய்ப்புக் கிடைத்தால் வழியாத, கடலை போடாத, வேலி தாண்டாதவர்கள் எத்தனை பேர்?
அடுத்து திருமணம் என்றொரு எளிய சடங்கு இல்லை என்றால் பல பேருக்கு ஜோடியே கிடைக்காமல் போகலாம். எந்தத் திறமையோ உழைப்போ செலுத்தாமல் வெற்றி பெறும் ஒரே ஆட்டம் திருமணம்தான். குறைந்த பட்ச சம்பாத்தியமோ, குடும்பப் பின்னணியோ, குழந்தை உற்பத்தித் தகுதியை நிலை நாட்டும் அடிப்படை உடலமைப்போ போதும். இந்திய வாழ்வில் மன உறுதிக்கு அடுத்த படியாய் திருமணம் ரொம்ப அவசியம்.
நீட்சே குடியாட்சி பற்றி சொன்னது இல்லத்தரச, அரசிகளுக்கும் பொருந்தும். கல்யாண வாழ்வு பலவீனர்களுக்கான பலவீன அமைப்பு. இதன் அடி நாதமான அச்சமும் அவ நம்பிக்கையும், ஆத்திரம், பாசாங்கு என, பக்கமேளத்துக்குக் காரணமாகிறது. ஆனாலும் மற்றொரு கோணத்தில் இது நம் பாதுகாப்பற்ற தினசரி வாழ்வை போஷித்து, பாதுகாக்கிறது.
எனக்கு திருமணத்தோடான பிரச்சினை அது இயற்கைக்கு விரோதமானது என்பதே. இயற்கையைப் பொறுத்த மட்டில் நிலைப்பாட்டுக்கு, சந்ததிக்குப் போராடுவதே மானிட வாழ்வின் முக்கிய இலக்கு. நமது கல்யாண 'சௌபாக்கிய' குடும்ப, குமாஸ்தா வாழ்க்கை இந்தப் போராட்டத்தை இல்லாமல் மழுங்கடித்துவிடுகிறது. அதோடு 'கள்ளக்காதல்' இயற்கையைப் பொறுத்தமட்டில் 'நல்ல காதல்' தான். நமது ஜீன் குட்டையை வேறுபட்டதாய்த் தக்கவைக்க, பலதுணை உறவே சிறந்தது. இதற்கான இயற்கை விழைவை பிற மிருக இனங்களின் மீதான ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. குறிப்பாய் சிறுத்தை இனத்தில் ஆண் அடக்குமுறையை, அதன் மூலம் உடலுறவுக் கட்டுப்பாட்டை, தவிர்க்க, பெண்கள் தங்கள் ஆட்சி எல்லைப் பரப்புக்குள் ஆண்களைத் தற்காலிகமாய்ப் புணர்ச்சிக்கு மட்டும் அனுமதிக்கும் பழக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளதைச் சொல்லலாம். இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு. ஒரு விதக் காட்டுயிர் பெண்ணியவாதம் உள்ளதைச் சொல்கிறது. முக்கியமாய் பெண்சிறுத்தைகள் தங்கள் குட்டிகள் மாறுபட்ட ஆண்களினுடையதாய் இருப்பதையே விரும்புகின்றன. ஏனென்றால் இதன் மூலம் சந்ததியினருக்குச் சிறந்த உடல் நலம் வாய்க்கிறது. சரி, நாம் இந்த வானத்துப் பறவைகள் விதைப்பதில்லை வாழ்விலிருந்து ரொம்பவே விலகி வந்துவிட்டோம். ஆனாலும் நமது இன்றைய சூழலிலும் கள்ளக்காதலுக்குப் பயன்பாடுகள் இருக்கிறது.
முக்கியமாய் திருமணத்தைத் தக்க வைப்பதற்கு.
பல தளங்களில் பெண்கள் சரி நிகராய்ப் போட்டியிடத் தொடங்கியுள்ள இந்தக் காலகட்டத்தில் அவர்கள் மீதான பல தரப்பட்ட புகார்கள் பாலுறவுத் தகுதி பற்றியனவே. இரவில் பெண்கள் வெளியே நடப்பது அதிகப்பிரசங்கித்தனம் என்பதிலிருந்து, விவாகரத்து எண்ணிக்கை அதிகரிப்பு, ஒழுக்க மீறல், ஆண் விபச்சாரம், கள்ளத்தொடர்புகள் வரை. ஆண் விபச்சாரம் பற்றி சன் டீவி பரபரப்பு நினைவிருக்கலாம். தினத்தந்தி வகை வீட்டுப் பெண்களின் கள்ள உறவுக்கு பிறகு வருவோம். மாநகர உயர்மத்திய, உயர்த்தட்டு புத்துலக வேலைபார்க்கும் பெண்களிடையே இப்போது பிரபலமாய்ப் பேசப்படுவது emotional infedility எனப்படும் உணர்வு ரீதியான கள்ள உறவு. இவ்வகை மாநகரக் குடும்பங்களில் கணவன் மனைவிகள் நண்பன் நண்பிகள், அடக்கப்பட்ட, பகிரமுடியாத உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான கருவிகளாய் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது திருமணத்துக்குப் பிறகும் பழைய நட்புகளைத் தொடர்வதை, பழைய கணவர்கள் போல் நவீன கணவர்கள் எதிர்ப்பதில்லை. காரணம், இன்றைய சம்பாதிக்கும் பெண் தனது பலவித மானசீக, உடல் தேவைகளை வாய், கண், மூக்கு மூடி, தவிர்க்கத் தயாராய் இல்லை. அவசர, பதற்ற நகர வாழ்வில் ஒருவரை ஒருவர் ஆற அமரக் கவனிக்க முடியாமல் போகையில், அல்லது சலிப்பு தட்டும்போது இந்த நண்பர்கள், உணர்வுபூர்வ கள்ளக்காதலர்கள் பயன்படுகின்றனர். (இந்த வகைப்படாத பின்-திருமண, 'நல்ல' சம்பிரதாய நட்புகளும் நிச்சயம் உள்ளன.)
நவீனப் பெண் அடக்க விரும்பாத தேவைகளில் ஒன்று உடலுறவு. விடிகாலை முயக்கத்தின் மருத்துவப் பயன்பாடுகள், அதனால் தவிர்க்க முடிகிற நோய்கள் என்றொரு நீண்ட பட்டியலை சமீபத்தில் பத்திரிகை ஒன்றில் படித்தேன். பரிணாமப் பார்வையில் உடலுறவு மானிட இயக்கத்தின் ஒரு முக்கிய நோக்கம். ஆனால் புள்ளிவிவரப்படி இந்தியத் திருமண ஜோடிகளின் உடலுறவுக் கணக்கு மாதத்தில் சில முறைகளே. இத்தோடு ஒட்டுறவில்லாமல் வாழும் லட்சக்கணக்கான ஜோடிகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் நம் சமூகம் எத்தகையதொரு தந்தூரி அடுப்பில் வேகிறது என்பது புரியும்.
ஏஞ்சலினா லெவின் என்பவர் இங்கிலாந்தின் உயர்பதவி வகிக்கும், அல்லது சுயதொழில் புரியும் நூற்றுக்கணக்கான பெண்களிடம் திருமணத்துக்குப் பின்பான பிற ஆண் பாலுறவு பற்றி ஆய்வு செய்து சில புதிய, முக்கியமான போக்குகளை வெளியிட்டுள்ளார். இவர் உரையாடிய பெண்களில் பலருக்கு இவ்வகை உறவுகள் அவர்களது வேலையிடங்களில் வெற்றிகரமாய்ச் செயலாற்றவும், குடும்பத்தைத் தக்கவைக்கவும் பயன்படுகின்றன. இவர்கள் சமூகத்தில் திருமணமான பெண்களில் 60 சதவீதத்தினர். பொதுவாய் நிறுவனங்களில் கூட வேலைபார்க்கும் நபர்களிடம் இயல்பாய் திருமணத்துக்குப் பின் பலருக்கும் ஈர்ப்பும், அதன் விளைவாய் கள்ளக்காதலும் உருவாவதாய்ச் சொல்லப்படுவதை மறுக்கிறது இந்த ஆராய்ச்சி. பல வேலை பார்க்கும் பெண்கள் நிறுவன உறவுகளை தவிர்க்கிறார்கள். காரணம், இது அவர்கள் வேலை வளர்ச்சியை பாதிக்கும்.
பொதுவாய் நம்பப்படுவது போல் குடும்ப நண்பர்களை அணுகுவதையும் பல திருமணமானவர்கள் தவிர்க்கிறார்கள். அடுத்து கவனிக்க வேண்டியது, உடலுறவை இவர்கள் தங்கள் உரிமை என நம்புவதால், பெரும்பாலானோருக்கு 'கள்ள' உறவால் குற்ற உணர்வேதும் இல்லை.
மற்றொரு ஜெர்மானிய ஆய்வு, 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூவரில் ஒருவர் 'கள்ள' உறவுகளில் நாட்டம் காட்டுவதாய்க் கூறுகிறது. ஏஞ்சலினா பேட்டி கண்ட 52 வயது குடும்பப் பெண் ஒருவர் 27 வருட திருமண வாழ்வுக்குப் பிறகு ஒரு நாள் வெளியே புதுக் காதலன் தேட முடிவு செய்தார். . "என் கணவர் நல்லவர்தான். ஆனால் படுக்கையில் ஒன்றுக்கும் உதவாதவர். எத்தனையோ வருடங்கள் முயக்கத்தின் போது மல்லாந்து கிடந்து இங்கிலாந்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்" என்கிறார். ஒரு நாள், இணையத்தில் காதலனுக்காக விளம்பரம் கொடுத்தார். குவிந்த விண்ணப்பங்களில் பொறுக்கியெடுத்த காதலருடன் உறவு சில மாதங்கள் நீடித்தது. ஆனால் தனக்கு இந்த உறவு தோதில்லை என்று பட, முறித்துவிட்டார். ஆனால் முக்கியமாய் எந்த விசனமும் இல்லை. மற்றொரு 49 வயதுப் பெண்ணுக்கு 15 வயது மூத்த ஆர்வமற்ற கணவன். இவர் காதலனைத் தேட, திருமணமான பெண்களுக்கான ஒரு டேட்டிங் ஏஜென்சியை அணுகினார். அவர்கள் தேர்தெடுத்துத் தந்த மூன்று நபர்களுடன் 6 மாதங்கள் பழகி ஒருவரைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் உறவில் உணர்ச்சிகரமாய் ஒன்றுவதை உணர்ந்ததும், இவரும் முறித்துக் கொண்டார். இந்த ஜோடி ரத்தப் பரிசோதனை செய்து தங்களுக்குப் பால்வினை நோய் எதுவுமில்லை என உறுதி செய்து கொண்ட பின்னர் மட்டுமே உறையில்லாத உறவுக்குத் தயாராகி உள்ளனர். இந்தப் பெண் கள்ளத்தொடர்புக்குப் பின் கணவனுடனான சச்சரவுகள் குறைந்துள்ளதாய், கணவனை மேலும் எளிதாய்த் தாங்கிக்கொள்ள முடிவதாய்ச் சொல்கிறார். இவர் வாழ்வு பலதுணை உறவால் ஸ்திரப்பட்டிருப்பதாய்க் கருதுகிறார். தற்காலத் தீர்வுதான் என்றாலும் இது வசதியான, நடைமுறைக்குதவும் தீர்வு என்று விளக்குகிறார். இந்தப் பெண்கள் பலதுணை உறவை அணுகும் முறை 'தர்க்கரீதியானது', 'புத்திசாலித்தனமானது' என வர்ணிக்கும் மேரி எனும் பெண், இவ்வகை உறவுகள் சுயநம்பிக்கையை, உடலழகு மீதான கவனத்தை அதிகரிப்பதைக் குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் பெரும்பாலான மணவாழ்வுகள் சில மணி நேரங்கள், நாட்கள், மாதங்கள் அல்லது வருடங்களில் செத்துப்போய்விடுகின்றன. சமரச திருமணங்கள், பரஸ்பர விருப்பமின்மை, அவசரம், முதிர்ச்சியின்மை, பொருளாதார நெருக்கடி போன்று பல காரணங்கள். பிறகு நடப்பது ஒரு பாசாங்கு நாடகமே. உதாரணமாய், என்னோடு பணிபுரியும் பெண் ஒருவருடைய கணவன் அவரிடம் பேசுவதே இல்லை. இந்த ஈடுபாடில்லாத மணவாழ்வில் அவர்களுக்கு இரண்டாவதாய் ஒரு குழந்தை பிறக்கப் போகிறது. பெரும்பாலான நேரங்களில் இந்தப் பாசாங்கு நாடகத்தின் மற்றொரு அங்கமாய் மட்டுமே கள்ள உறவுகள் இருக்கின்றன.
நம்மூரில் கணவன்-மனைவி அறிவோடு கள்ளக் காதல் வருடக்கணக்கில் நடந்தும், சிதையாமல் தொடர்ந்து செயல்படும் பல குடும்பங்கள் உள்ளன. மீரா நாயர் காபரே நாட்டியப் பெண்கள் பற்றிய 'இந்தியன் காப்ரே' ஆவணப்படத்தில் இத்தகையதொரு 'பொறுத்துப் போகும்' குடும்பத்தைப் பதிவு செய்துள்ளார். என் நிஜவாழ்வில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். என் சித்திக்குத் தன் கணவனின் நண்பனோடு 'கள்ளத்' தொடர்பு இருந்தது. இது தெரிந்திருந்தும், கணவன் மனைவி பிரியவில்லை. குடும்பம் நிலைத்தது. ஊர்வாய் ஓயாமல் வம்பு பேசியும், தன் சக ஊழியரான இந்த நண்பரோடு சித்தப்பா நெருக்கமாகவே இருந்தார். முடிவாய் இருவரும் மதுபோதையில் சேர்ந்து பைக்கில் செல்லும் போது விபத்தில் இணைந்தே இறந்தனர்.
மாறாய், கள்ளத் தொடர்பு விளைவான வன்முறைகளையும் நம் சமூகத்தில் ஏகத்துக்குக் காணலாம். மாலைமலரில் வேலைசெய்யும் போது, கணிசமான கள்ளத்தொடர்பு-பிரச்சினை-கொலை செய்திகளைக் கண்ணெரியப் படித்து எழுதியிருக்கிறேன். திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் வாழ்ந்த போது பக்கத்துத் தெருவில் ஒரு விபரீத சம்பவம் நடந்தது. 55 வயதுக்கு மேற்பட்ட தன் மனைவியை 20 வருடங்களாகக் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டதிற்காக வயதான கணவன் வெட்டிக் கொன்றார்.
அன்று எழுந்த பல கேள்விகளுக்கு விடை இல்லை. இத்தனை வருடங்கள் ஏன் பொறுத்தார், 30 வருடங்கள் வளர்த்தெடுத்த குடும்ப வாழ்வு ஒரே நாளில் திடீரென ஏன் அழிய வேண்டும் அல்லது இந்நாள் வரை இந்த வன்முறை வெடிக்கக் காத்திருந்ததா?
இந்த இருவகை நபர்களும் ஒருவிதத்தில் ஒருவர்தான் எனப்படுகிறது

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...