Skip to main content

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

 


விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.
எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான்.

இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்துகிறார்கள். இது அரசியல் இன்று நிகழ்த்து கலையாக மாறிப் போன அவலத்தினால் விளைவதுதான். ஆனால் வெளியே இருந்து கவனிப்பவர்கள் இதையெல்லாம் பகடி செய்யக் கூடாது, அவமதிக்கக்கூடாது என்று தோன்றுகிறது. நம்பிக்கை என்று வந்துவிட்டால் அது இன்னொருவருக்குப் புரியாது. நம்பிக்கையில் மற்றமைக்கு இடமே இல்லை. மொட்டையடித்து மலையேறுவோர், மாலையிட்டு விரதம் இருப்பவர்கள், மண்சோறு தின்பவர்கள் ஒருவிதத்தில் தாம் மற்றமையாக்கப்படக் கூடாது எனும் நோக்கத்திலேயே அதைச் செய்கிறார்கள். அப்படித்தான் அந்தரங்கமே அங்கு நிகழ்கிறது. இதை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புவோர் அடுத்த பத்திக்கு வாருங்கள்.

இந்த உலகில் நாம் இன்னொருவரால் பார்க்கப்பட்டு மதிப்பிடப்படுவதாலே 'இருக்க' முடிகிறது. அதாவது நாம் பார்வைக்குள்ளாகும் பொருளாக்கப்படுகிறோம் (objectification). நம்மைப் பார்க்கிறவர்கள் (subject) நம்மை ஒரு மற்றமையாக (other) மாற்றுகிறார்கள். இதை அவர்கள் தரப்பில் இருந்து நாமே பார்க்கும்போது நாம் நம்மையே பார்க்கப்படும் பொருளாக்கிறோம். இதையே சுய-அடையாளப்படுத்துதல் என்கிறோம். ஒரு பெண் தன்னைப் 'பெண்ணாகப்' பார்க்கையில் அவளுக்குள் ஒரு ஆண்-மையப் பார்வை தோன்றுகிறது. அவள் ஆணின் தரப்பில் இருந்து பெண்ணாகத் தன்னை தன்னடையாளப்படுத்துகிறாள். சாதியும் இப்படியே தோன்றுகிறது. வேலையிடத்திலும் நாம் இப்படியே தன்னடையாளப்படுத்தி தோன்ற்கிறோம். இந்த இருமுனைச் செயல்பாடு நம்மை சதா 'அம்மணமாக' உணர வைக்கிறது. எப்போதுமே கண்காணிக்கப்படுகிற நிலை. சதா யார் முன்னிலையிலாவது நிரூபிக்கும் நெருக்கடி. இதிலிருந்து தப்பிக்கும்பொருட்டே இறைவனுடனான உரையாடலுக்குத் தனிமனிதர்கள் முயல்கிறார்கள் (ஜோசியர் சொன்னதற்காகச் செய்பவர்களை நான் சொல்லவில்லை. அது நாடகம்.). விரதம், தன்னையே வருத்திக் கொள்ளுதல், அந்தரங்கமாக மண்டியிட்டு வேண்டுதல், புனித தலங்களை நாடிப் பயணித்தல் மற்றமையில்லாத ஒரு பகுதியை நோக்கிப் போகும் முயற்சிகளே. எந்திரமயமான இன்றைய உலகில் ஆன்மீகம் (அதாவது மதம்) மற்றும் கலைகள் (படைப்பாக்கம்) மட்டுமே இந்த ஒன்றுமில்லா வெளியைத் தோற்றுவிக்க அனுமதிக்கின்றன.

இந்தத் தேவை அனேகமாக எல்லாருக்குமே உள்ளது. அண்ணாமலை, விஜய் போன்றவர்களும் ரம்ஜான் அன்று மட்டும் குல்லா அணிந்து போஸ் கொடுப்பவர்களும் இத்தேவையை மற்றொரு நோக்கத்துக்காகப் பயன்படுத்தி ஒரு விளையாட்டாக்கி விடுகிறார்கள். மதத்தை அவர்கள் மீண்டும் மற்றமையாக்கல் நோக்கிக் கொண்டு வருகிறார்கள். தம்மை வழிபடுபவராகக் காட்டி பக்திக்கு நேரெதிரான வேலையைச் செய்கிறார்கள்.
விஜய்யின் காணொளியில் கூடவே ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் நடந்து வருவது சுவாரஸ்யமானது - அவர் இறைவனிடம் தன் மற்றமையை இழக்கும் பக்தரிடம் 'நீ என் கண்காணிப்பில்தான் இருக்கிறாய், உன்னை நான் 'பார்த்து' மதிப்பிடுகிறேன், அந்த அதிகாரத்தை எனக்கு இறைவன் கொடுத்திருக்கிறான்' எனக் கோருகிறவர்கள். இந்து மதமெனில் அங்கு இத்தகைய புகைப்படங்களிலும் காணொளிகளிலும் ஒரு அந்தணரும் கூட இருப்பார். இவர்கள் இருவருமே மனிதரை மீண்டும் அதிகார விளையாட்டுக்குள் மீட்டுக் கொணர்ந்து கட்டுப்படுத்துவோர். ஒரு வித்தியாசம், கிறிஸ்துவத்தில் சுயத்தைக் கடந்து போகும் நபரிடம் உன்னை இங்கே வைப்பதற்கான உரிமையை, அதிகாரத்தை நான் நீ அப்படிச் செய்யும் செயலை அங்கீகரிப்பதன் வழியாகப் பெறுகிறேன் எனக் கோருபவர்கள் பாதிரியார்கள், இந்து மதத்திலோ உன் தரிசனத்திற்கு வழிகாட்டுபவன் நான் எனக் கோருபவரே பூசாரி என்பது. ஒருவர் அங்கீகரிப்பவர், மற்றவர் வழிகாட்டி.

நோலனின் "இன்செப்ஷன்" திரைப்படத்தில் நாயகன் ஒரு சிறிய பம்பரத்தை (சின்னம்) தான் புலனுலகில்தான் இருக்கிறேன், தான் தன் கனவில் இல்லை என நினைவுபடுத்தப் பயன்படுத்துவான். இந்தப் பூசாரிகள் அத்தகைய பம்பரங்களாகவே நம்மிடையே தோன்றியிருக்க வேண்டும். போகப்போக அவர்கள் அரசியலிலும் ஆட்சி அதிகாரத்திலும் செல்வாக்கு செலுத்துபவராக மாறிப் போனார்கள். விஜய் மண்டியிட்டு நகர்ந்து போகும்போது ஒருவித அரசியல் பம்பரமாக அக்கத்தோலிக்கச் சாமியார் தோன்றுகிறார். அக்காட்சிக்கு ஒரு அரசியல் பரிமாணத்தை அவரே அளிக்கிறார். ஒருவர் குழந்தையைப் போல தவழ்ந்து தவழ்ந்து 'இறைவனிடம்' போக அவரை இன்னொருவர் கூடவே நடந்து வழிகாட்டி அழைத்துச் செல்கிறார். இவ்வளவு குறியீட்டுத்தனமான அரசியல் நாடகத்தை நீங்கள் 'அரசியலும்' பார்க்க முடியாது.

இப்படி இது அந்தரங்கமாகவும் அரசியலாகவும் ஒரே சமயத்தில் மாறுவதால் இதை அரசியல் என்று மட்டுமே பகுத்தறிவு சார்ந்து விமர்சிக்க இயலாது. காட்சிப்படுத்தப்படுவதால் இது அந்தரங்கமான செயலாகவும் இருப்பதில்லை. இரு தளங்களிலும் பொருளற்று ஒரு அறைக்குள் அமைக்கப்பட்ட ஜன்னலைப் போலாகிறது. கதவைத் திறந்தால் அடுத்த அறையே தெரியும். அங்கிருந்து பார்த்தால் இந்த அறை தெரியும். எதையொன்றையும் குறிப்பிட இயலாத ஒரு வெற்றுக்குறிப்பானாக இது மாறுகிறது.விஜய் மண்டியிட்டு போய்க்கொண்டே இருக்கிறார். அவர் அதன் முடிவில் தான் மண்டியிட்டு நடப்பதை மட்டுமே காண்கிறார். இப்படி இது ஒரு இன்செப்ஷன் காட்சியாகி விடுகிறது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...