முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நன்கு வெளிச்சமுள்ள ஒரு சுத்தமான இடம்



நன்கு பிந்தி விட்டிருந்தது. மின்வெளிச்சத்திற்கு குறுக்கே நின்ற மரத்தின் நிழலில் அமர்ந்திருந்த ஒரு முதியவரைத் தவிர அந்த மதுபானக் கடையிலிருந்து யாவரும் வெளியேறி விட்டிருந்தனர். அத்தெருவில் பகலில் தூசு மண்டியிருக்கும்; ஆனால் இரவில் பொழியும் பனியில் தூசி படிந்து விடும்; அம்முதியவர் நேரங்கடந்து அங்கு அமர்ந்திருக்க விரும்பினார் -- ஏனெனில் அவர் செவிடு; மேலும் அப்போது இரவில் அங்கு அமைதியாயிருந்தது; அவர் அந்த வித்தியாசத்தை உணர்ந்தார். மதுபானக் கடையிலிருந்த இரு மேஜைப் பணியாளர்களுக்கு அவர் சற்று போதையில் இருப்பது புரிந்தது. அவர் ஒரு நல்ல வாடிக்கையாளராய் இருந்த போதும், மப்பு ஏறி விட்டால் காசு தராமலேயே போய் விடுவார்; அதனால் அவரை அவர்கள் கண்காணித்தனர்.

"போன வாரம் அவர் தற்கொலை செஞ்சுக்கப் பார்த்தார்", ஒரு பணியாளன் சொன்னான்.

"ஏன்?"

"அவர் எல்லா நம்பிக்கையையும் இழந்து நொறுங்கிப் போய் விட்டார்"

"எதைப் பற்றி?"

"ஒன்றும் இல்லை"

"ஒன்றும் இல்லை என்று உனகெப்பிடி தெரியும்"

"அவரிடம் பூத்த பணம் இருக்கு"

கடைக் கதவின் அருகிலுள்ள சுவருக்கு நெருக்கமாய் இடப்பட்டிருந்த மேஜை அருகே அவர்கள் அமர்ந்திருந்து, காற்றில் மெல்ல ஆடும் மரத்தின் இலைகளின் நிழலில் முதியவர் அமர்ந்திருந்ததை தவிர பிற மேஜைகள் காலியாயிருந்த மொட்டை மாடியையும் நோட்டம் விட்டனர். தெருவில் ஒரு பெண்ணும், சிப்பாயும் கடந்து சென்றனர். அவனது சட்டை கழுத்துப் பட்டியிலுள்ள பித்தளை எண் தெருவிளக்கு வெளிச்சத்தில் ஜுவலித்தது. முக்காடு அணியாத அப்பெண் அவனோடு விரைந்தாள்.

"அவன் படை வீரங்ககிட்ட மாட்டிக்கப் போறான் பாரு"

"அவனுக்கு வேண்டியது கிடைத்த பெறவு மாட்டினாத்தான் என்ன?"

"அவன் இந்த தெருவை விட்டு இப்பவே போய் விட்டால் அவனுக்கு நல்லது. படை வீரர்கள் அவனை பிடித்து விடுவார்கள். அவங்க அஞ்சு நிமிடம் முந்திதான் போனாங்க"

"எம்பது வயசு இருக்கும் இல்லை அவருக்கு"

"எம்பதுண்ணு தான் பார்த்தா தெரியுது"

"அவரு வீட்டுக்கு போய் தொலைய மாட்டாராண்ணு தோணுது. மூணு மணிக்கு முன்னால ஒருக்காலும் தூங்க முடியறுதில்லை. அந்த நேரங்கெட்ட வேளையிலையா தூங்கப் போகிறது?"

"அவருக்கு பிடிச்சிருக்கு, ராவெல்லாம் முழிச்சிருக்காரு"

"அவரு ஒத்தக்கட்டை. நான் தனியாயில்லை. வீட்டுல ஒருத்தி எனக்காக காத்திருக்கிறாள்"

"அவருக்கும் பொண்டாட்டி இருந்தாள் "

"இப்ப அவருக்கு பொண்டாட்டி இருந்தாலும் ஒண்ணுக்கும் களியாது"

"உனக்கெப்பிடிடே அது சொல்ல ஒக்கும். பொண்டாடிக்காரி இருந்தா நல்லா இருந்திருப்பாரு"

"மருமகள் பாத்துக்கிறாள் இல்லையா. நீதானே சொன்னே, கயிறு அறுத்து காப்பாத்தினாள் என்று"

"சரிதான், இல்லேண்ணு சொன்னேனா இப்போ"

"இந்த வயசு வரைக்கும் எனக்கு வாழ வேண்டாம். மூப்பிலு ஆனாலே குணம் கெட்டுப் போய் விடும்"

"எப்பவுமே அப்பிடி அகாது. இந்த மூப்பிலப் பாரு, கண்ணியமான மனுசன். சிந்தாம குடிப்பாரு. இப்பக்கூட அவரு மப்புதான், ஆனாப் பாரு"

"எனக்கு அவரைப் பார்க்க வேண்டாம். வீட்டுக்கு போக மாட்டாராண்ணு இருக்கு. வேலை பாக்கியவள பத்தி
அவருக்கு கவலை கெடையாது"

முதியவர் தன் கோப்பையிலிருந்து தலை உயர்த்தி சதுக்கத்தைப் பார்த்தார். பின்னர் மேஜைப் பணியாளர்களை நோக்கினார்.
"இன்னொரு பிராந்தி", தன் கோப்பையைக் காட்டி அவர் சொன்னார். அவசரத்திலிருந்த மேஜைப் பணியாளன் அவரிடம் சென்றான்.

அந்த பணியாளன் கோப்பையில் மேலும் கொஞ்சம் பிராந்தி ஊற்றி, அது தளும்பி, தண்டு வழி வழிந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஏந்துத் தட்டுகளின் மேலுள்ள தட்டில் சிந்தியது.

"நன்றி" என்றார் முதியவர். மேஜைப் பணியாளன் பொத்தலை மதுபானக் கடைக்குள் திரும்ப எடுத்துச் சென்றான். அவன் தன் சக பணியாளனுடன் மேஜை அருகில் மீண்டும் அமர்ந்தான்.

"சிக்கு ஏறியாச்சு அவருக்கு", அவன் சொன்னான்.

"எல்லா ராத்திரியும் அவரு சிக்குதான்"

"எதுக்கு தற்கொலை பண்ணப் பார்த்தான்"

"எனக்கு எப்பிடி தெரியும்"

"எப்பிடி செஞ்சானாம்"

"கயித்தில தூக்கு மாட்டித் தொங்கினாரு"

"யாரு கயித்த வெட்டினது?"

"அவரோட மருமகள்"

"ஏன் அப்பிடி செய்தாள்?"

"அவரொட ஆத்துமாவுக்கு பயந்துதான்"

"எவ்வளவு பணம் வைத்திருக்கிறான்"

"பூத்த பணம் இருக்கு"

நிழலில் அமர்ந்திருந்த அந்த முதியவர் தன் கோப்பையால் ஏந்துத் தட்டை தட்டினார். இளைய பணியாளன் அவரிடம் செண்றான்.

"என்ன வேணும்?"

முதியவர் அவனை நோக்கினார். "இன்னொரு பிராந்தி", அவர் சொன்னார்.

"மப்பு ஏறீரப் போவுது", அந்த பணியாளன் சொன்னான். முதியவர் அவனைப் பார்த்தார். மேஜைப் பணியாளன் அங்கிருந்து அகன்றான்.

"ராத்திரி பூரா நவுர மாட்டான்", அவன் தன் சகபணியாளனிடம் சொன்னான்.

"இப்பவே எனக்கு தூக்கத்துல கண்ணு கறங்குது. மூணு மணிக்க முன்னால ஒரு நாளும் தூங்க முடியறதில்ல. அவன் போன வாரமே தற்கொலை பண்ணி செத்துப் போயிருக்கணும்"

அந்த பணியாளன் ஒரு பிராந்தி பொத்தலையும், மற்றொரு ஏந்துத் தட்டையும் கடையின் உள்ளிருந்த கவுண்டரிலிருந்து எடுத்துக் கொண்டு, முதியவரின் மேஜைக்கு வீறாப்பாய் நடந்து சென்றான். ஏந்துத் தட்டை கீழே வைத்துவிட்டு கோப்பையை பிராந்தியால் நிரப்பினான்.

"நீ போன வாரமே தற்கொலை செஞ்சு மண்டையப் போட்டிருக்கணும்", அவன் அந்த செவிட்டு மனிதரிடம் சொன்னான். முதியவர் தன் விரலால் சுட்டிக் காட்டி சொன்னார்.

"இன்னும் கொஞ்சம்"

"முடிஞ்சு போச்சு", முட்டாள்கள் குடிகாரர்களிடமோ, வெளிநாட்டவரிடமோ பேசுகையில் முழு வாக்கிய அமைப்பை தவிர்த்து பேசும் பாணியில் அவன் சொன்னான், "இதுக்கு மேலே இன்னிக்கு ராத்திரி கெடையாது. மூடியாச்சு"

"இன்னொண்ணு: என்றார் முதியவர்.

"இல்ல. முடிஞ்சுப் போச்சு".

மேஜைப் பணியாளன் மேஜை ஓரத்தை ஒரு துண்டால் வழித்து தலையை ஆட்டினான்.

முதியவர் எழுந்து நின்று, ஏந்துத் தட்டுகளை எண்ணி, ஜேப்பிலிருந்து தோல் பையை எடுத்து மதுவுக்கு பணம் செலுத்தி விட்டு, டிப்சாக அரை பெசட்டா விட்டுச் சென்றார்.

அந்த மேஜைப் பணியாளன் அவர் தெருவில் நடந்து போவதைப் பார்த்தான். தள்ளாடியவாறு, ஆனால், கம்பீரத்துடன், நடந்து செல்லும் மூப்பேறிய ஒரு கிழவர்.

"அவர இன்னும் கொஞ்சம் இருந்து குடிக்க விட்டிருக்கலாமில்லையா?"
அவசரமில்லாத மேஜைப் பணியாளன் கேட்டான்.

அவர்கள் ஷட்டரை மூடிக் கொண்டிருந்தனர்.

"மணி ரெண்டரை தாண்டலியே"

"எனக்கு வீட்டுக்கு தூங்கப் போணும்"

"ஒரு மணி நேரத்துல என்ன ஆவப் போவுது?"

"அவரை விட எனக்குத்தான் அதோட அருமை தெரியும்"

"ஒரு மணி நேரம் எல்லாருக்கும் ஒண்ணுதான்"

"நீயே ஒரு மூப்பிலு மாதிரிதான் பேசுகிறாய். அவருக்கு வீட்டுல குப்பி வாங்கீட்டு போய் குடிக்க வேண்டியது தானே?"

"அது இங்க மாதிரி வருமா"

"அது இல்லதான்", மனைவி உடைய மேஜைப் பணியாளன் ஒத்துக் கொண்டான். அநியாயமாக நடக்க அவனுக்கு இஷ்டமில்லைதான். ஆனால் அவன் அவசரத்திலிருந்தான்.

" சரி நீ? வழக்கமான நேரத்துக்கு முந்தி வீட்டுக்கு போக ஒனக்கு பயம் இல்லியா?"

"என்ன அசிங்கப்படுத்திறியா?"

"இல்லை, சும்மா ஒரு ஜோக்குக்கு சொன்னேன்"

"இல்லை", என்றான் அவசரத்திருந்த பணியாளன். உலோக ஷட்டர்களை இழுத்து மூடி விட்டு எழுந்தவாறே, "எனக்கு நம்பிகை இருக்கு. நிரம்பவே இருக்கு"

"ஒனக்கென்ன இளவயசு, நம்பிக்கை, வேலை எல்லாம் இருக்கு", முதிய மேஜைப் பணியாளன் சொன்னான்,
"ஒனக்குத்தான் எல்லாம் இருக்கே"

"உனக்கு என்னதான் இல்லேங்கிற?"

"வேலையைத் தவிர எல்லாம் இருக்கு"

"எனக்கு உள்ளதெல்லாம் உனக்கும் இருக்கு இல்லையா"

"இல்லை. எனக்கு எப்பவும் நம்பிக்கை இருந்ததில்லை. வயசும் ஏறீருச்சு"

"சரிதான் விடு. உௗறாமல் கடையைப் பூட்டு"

"மதுபான விடுதியில ராத்திரி ரொம்ப நேரம் இருக்க விரும்புறவங்களில் நானும் ஒருத்தன்", அந்த முதிய மேஜைப் பணியாளன் சொன்னான், " ராத்திரி தூக்கம் வராத, விளக்கு தேவப்படுகிற எல்லாரையும் சேர்த்து"

"எனக்கு வீட்டுக்குப் போயி நல்லா தூங்கணும்"

"நம்ம ரெண்டு வேரும் ரெண்டு வகையானவங்க", முதிய மேஜைப் பணியாளன் சொன்னான். அவன் வீட்டுக்குப் போக தயாராய் ஆடை அணிந்திருந்தான். "இது இளமையையும், நம்பிக்கையையும் பொறுத்த விசயம் இல்லை, அந்த சமாச்சாரங்கள் அழகாயிருந்தாலும் கூட. ஒவ்வொரு ராத்திரி இந்த மதுபான விடுதிய பூட்டும்போது இந்த இடம் யாருக்காவது தேவைப்படுமே என்று நினைச்சு மனசு வராது"

"அட, அதுக்குத்தான் ராத்திரி பூரா பிராந்திக் கடைங்க திறந்திருக்கின்றன அல்லவா"

"உனக்கு புரியாது. இது சுத்தமான, ரம்மியமான மதுபான விடுதி. நல்ல வெளிச்சமும் இருக்கு. அதோட, இப்போது இலைகளோட நிழலும் உண்டு"

"நல்லிரவு", என்றான் இளம் மேஜைப் பணியாளன்.

"நல்லிரவு", என்றான் மற்றவன். மின்சார விளக்கை அணைத்து விட்டு, அவன் தனக்குத் தானே உரையாடலை தொடர்ந்தான். வெளிச்சம் முக்கியம்தான், ஆனா அதோட அந்த இடம் சுத்தாமாவும், ரம்மியமாவும் இருக்கணும். நிச்சயமா பாட்டு வேண்டாம். இந்த நேரங்கெட்ட வேளையில பிராந்திக் கடைங்க தான் தொறந்திருக்கும் என்பதால் அங்கேயே நின்று கண்ணியமா குடிக்க முடியாது. அவனுக்கு எதைப் பாத்து பயம்?
அது பயமோ, நடுக்கமோ ஒன்றும் இல்லை. அவனுக்கு நன்றாகவே தெரந்த்ிருந்த சூன்யம்தாம் அது. அது இது மட்டும் தான்; வெளிச்சம் மட்டுந்தான் அதுக்கு வேணும்; அதோட கொஞ்சம் சுத்தமும், ஒழுங்கும்.

சிலர் அதிலேயே வாழ்ந்தும் ஒருக்காலும் உணர்ந்ததில்ல; ஆனால் அது சூனியம், அதோட பிறகு சூனியம், அதோட சூனியம், அதோட பிறகு சூனியம் என்று அவனுக்குத் தெரியும். சூனியத்திலிருக்கும் எமது சூனியமே, சூனியமே உமது நாமமாகட்டும், உமது ராஜ்ஜியமே சூனியம். சூனியத்தில் இருப்பது போல் அவர்கள் சூனியத்தில் சூனியமாவார்கள். எங்கள் சூனியத்தை நாங்கள் சூனியமாக்கும் போது எங்கள் சூனியத்தை சூனியமாக்குங்கள். சூனியத்துள் எம்மை சூனியமாக்காதீராக. ஆனால் சூனியத்திருலிருந்து எம்மை ரட்சிப்பீராக. இன்மை முழுக்க நிறைந்த இன்மையே உமக்கு ஸ்தோத்திரம். இன்மை உம்மோடு உள்ளது. அவன் புன்னகைத்தான்; ஜுவலிக்கும் நீராவி குளம்பி யந்திரம் இருந்த ஒரு பார் முன்னால் நின்றான்.

"என்ன வேணும்", என்றான் பார் பணியாளன்.

"சூனியம்"

"இன்னொரு அரைலூசு வந்தாச்சு", என்ற பார் பணியாளன், அங்கிருந்து அகன்றான்.

"ஒரு சின்ன கோப்பை", என்றான் அந்த மேஜைப் பணியாளன்.

பார் பணியாள் அவனுக்கு ஊற்றிக் கொடுத்தான்.

"வெளிச்சம் நல்ல பிரகாசமாவும், ரம்மியமாவும் இருக்கு, ஆனா பார் சுத்தமாயில்ல", என்றான் அந்த மேஜைப் பணியாளன்.

பார் பணியாள் அவனைப் பார்த்தான், ஆனால் பதில் இறுக்கவில்லை. உரையாட நேரம் இப்போது ரொம்ப பிந்தி விட்டது.

"இன்னொரு சின்ன கோப்பை வேணுமா?", பார் பணியாள் கேட்டான்.

"இல்லை, நன்றி", என்று விட்டு அந்த மேஜைப் பணியாள் வெளியேறினான். அவன் பார்களையும், பிராந்திக் கடைகளையும் வெறுத்தான். ஒரு சுத்தமான, நல்லா வெளிச்சம் இருக்கக்கூடிய மதுபான விடுதி இவை போலன்றி ரொம்பவே வித்தியாசமானது. இப்போது இன்னும் ஏதும் யோசிக்காம, அவன் தன்னோட அறைக்குப் போவான். படுக்கையில் கிடந்து கொண்டே, முடிவாக பகல் வெளிச்சத்தில தூங்க ஆரம்பிப்பான். "வேறே ஒன்றும் இல்ல, வெறுமனே தான்", அவன் தனக்குத் தானே சொன்னான், "ஓருவேளை இது தூக்கமில்லாத வியாதியா க கூட இருக்கும். பல பேருக்கு இது இருக்கும்".

தமிழில்
ஆர்.அபிலாஷ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...