Skip to main content

கண்காணிப்பு சமூகமும் வெட்டவெளியும்: எஸ்.ரா.வின் "பழைய தண்டவாளம்"

" எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் " தொகுதியிலுள்ள 90 கதைகளில் முதற் கதை " பழைய தண்டவாளம் ". நினைவு மீட்டல் பாணி கதை இது. ஒரு பழைய கூட்ஸ் பெட்டியை ஆட்கள் அகற்றுவது பற்றின தகவலிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. இந்த பெட்டி பற்றி கதைசொல்லியின் ஏக்கம், விசனம், வியப்பு மற்றும் கவித்துவம் ஆகிய பல நினைவு அடுக்குகளாய் கதை விரிகிறது. பாம்பை காமத்தின் குறியீடாய் கொண்டு எழுதப்பட்ட சில கதைகள் போல், இக்க்கதை கூட்ஸ் பெட்டியை இருண்ட ஆழ்மனதின் படிமமாக மாற்றுகிறது. கல்யாணியக்கா எனும் பாத்திரம் துணிந்து இந்த பெட்டிக்குள் புகும் தருவாயிலிருந்து இது நமக்கு புரிபடுகிறது. இந்த கல்யாணி அக்காவும், கதைசொல்லியின் நிஜ அக்காவும் எதிர்நிலை பாத்திரங்கள்.

இந்த கூட்ஸ் பெட்டியை கதைசொல்லிக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஊர்மக்கள் அணுகும், எதிர்கொள்ளும் விதங்களில் தான் கதையின் சுவாரஸ்யம் உள்ளது. அப்பாவுக்கு பெட்டியை அண்டும் " கழிசடை " ஆண்களிடமிருந்து மகளின் பரிசுத்தத்தை பாதுகாக்கும் பதற்றம் ஏற்படுகிறது. கதைசொல்லிக்கு பெட்டி வியப்பு, இருப்பின் அடையாளம், இதுபோல் பலவற்றின் அர்த்தப் பரிமாணங்கள் கொண்டது. பெட்டிக்குள் சாராய யாவாரம் வேறு நடக்கிறது. பிறகு பாம்பு பரபரப்பில் இது தடைபடுகிறது. சில பேருக்கு இப்பெட்டி போக்குவரத்து இடைஞ்சல் மட்டுமே. இறுதியில் பெட்டியை அகற்றி விடுகிறார்கள். அது இருந்த இடம் வெறிச்சோடிப் போகிறது.

" எந்த மறைப்பும் இல்லாமல் வீடு வெட்டவெளியில் தெரிந்தது ".
இப்படி மறைப்பை அகற்றி வெட்டவெளி ஆக்குவதில் ஒரு சமூக வன்முறை உள்ளது. இந்த வரியிலிருந்து கதையை சமூக--தனிமனித உறவாடலாக திருப்பிப் படிக்கலாம்.

சமீபத்தில் "ராயல் சொசைட்டி" இதழில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை படித்தேன். மேற்கில் அலுவலகங்களில் பயன்படுத்த உத்தேசிக்கப்படும் ஒரு கண்காணிப்புக் கருவியின் செயல்பாடு மற்றும் பயன்பாடு பற்றி விளக்கியிருந்தார்கள். அதன்படி ஒரு அலுவலகப் பணியாளரின் அடையாளப் பட்டியில் மைக்ரோ சிப் ஒன்றைப் பொருத்தி விடுவார்கள். பிறகு இவர் அலுவலகத்தில் எங்கே உலாத்தினாலும், இருந்தாலும் மேலாளரால் இருந்த இடத்திலே மூக்கை சொறிந்தபடி துல்லியமாய் சொல்ல முடியும்: " என்ன அரைமணியாய் ஆளைக் காணோம், டாய்லட்டில் தவமா?"; "இன்று மட்டுமே 80 நிமிடங்கள் மொத்தமாய் பிரியாவுடன் அரட்டை போலும்". இதன் அடுத்த கட்டமாய் ஒரு தனிமனிதனின் அலுவலகத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளைக் கூட கண்காணிக்க முடியும்.

தற்போதைய தமிழ்ச்சூழலில் ஒரு அரசியல் பிரமுகரைப் பற்றி ஜோக்கடிக்கக் கூட மிகுந்த ஜாக்கிரதை உணர்வு தேவைப்படுகிறது. அதிகார மையத்தில் இருப்போர் பற்றின எளிய விமர்சனத்துக்குக் கூட ஏகப்பட்ட கண்டனக் குரல்கள், வாயடைப்புகள், தணிக்கைகளை ஒருவர் எதிர்கொண்டாக வேண்டும். பேச்சும் மூச்சும் அனுமதிக்குப் பிறகே வெளியிட வேண்டும். எதிர்காலத்தில் குற்றச்செயல் தடுப்பு எனும் பெயரில் தனிமனித அந்தரங்கம், சுதந்திரம் மீதான அரசின் ஆக்கிரமிப்பு மேலும் தீவிரமாகவுள்ளது. அப்போது நம் சமூகம் மறைப்பற்ற ஒரு வெட்டவெளியாக, நிழல்களாய் துரத்தப்படும் மனிதர்களை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த பொருளில் " பழைய தண்டவாளம் " கதைக்கு சமகாலத்தன்மை உருவாகிறது.

கதையின் இறுதியான கவித்துவ வரி: " லேசாக இருட்ட ஆரம்பித்து தண்டவாளம் இருட்டில் தெரியாமல் போனது ". இப்போது நானிதைச் சொல்லும் போது இருட்டு அடர்த்தியாய் உங்களை சூழ்ந்துள்ளது. கண்களை நன்றாக மூடிக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் கண்ணால் காண்பதும் பொய் ... அது தேர்தல் ஊழலோ அல்லது சிலை நாட்டும் நாடகமோ. தீரவிசாரித்து விளக்கங்கள் வரும்வரை இறுக்க மூடிக் கொள்ளுங்கள். இருட்டில் கண்விழிப்பவன் முட்டாள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...