Skip to main content

கண்காணிப்பு சமூகமும் வெட்டவெளியும்: எஸ்.ரா.வின் "பழைய தண்டவாளம்"

" எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் " தொகுதியிலுள்ள 90 கதைகளில் முதற் கதை " பழைய தண்டவாளம் ". நினைவு மீட்டல் பாணி கதை இது. ஒரு பழைய கூட்ஸ் பெட்டியை ஆட்கள் அகற்றுவது பற்றின தகவலிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. இந்த பெட்டி பற்றி கதைசொல்லியின் ஏக்கம், விசனம், வியப்பு மற்றும் கவித்துவம் ஆகிய பல நினைவு அடுக்குகளாய் கதை விரிகிறது. பாம்பை காமத்தின் குறியீடாய் கொண்டு எழுதப்பட்ட சில கதைகள் போல், இக்க்கதை கூட்ஸ் பெட்டியை இருண்ட ஆழ்மனதின் படிமமாக மாற்றுகிறது. கல்யாணியக்கா எனும் பாத்திரம் துணிந்து இந்த பெட்டிக்குள் புகும் தருவாயிலிருந்து இது நமக்கு புரிபடுகிறது. இந்த கல்யாணி அக்காவும், கதைசொல்லியின் நிஜ அக்காவும் எதிர்நிலை பாத்திரங்கள்.

இந்த கூட்ஸ் பெட்டியை கதைசொல்லிக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஊர்மக்கள் அணுகும், எதிர்கொள்ளும் விதங்களில் தான் கதையின் சுவாரஸ்யம் உள்ளது. அப்பாவுக்கு பெட்டியை அண்டும் " கழிசடை " ஆண்களிடமிருந்து மகளின் பரிசுத்தத்தை பாதுகாக்கும் பதற்றம் ஏற்படுகிறது. கதைசொல்லிக்கு பெட்டி வியப்பு, இருப்பின் அடையாளம், இதுபோல் பலவற்றின் அர்த்தப் பரிமாணங்கள் கொண்டது. பெட்டிக்குள் சாராய யாவாரம் வேறு நடக்கிறது. பிறகு பாம்பு பரபரப்பில் இது தடைபடுகிறது. சில பேருக்கு இப்பெட்டி போக்குவரத்து இடைஞ்சல் மட்டுமே. இறுதியில் பெட்டியை அகற்றி விடுகிறார்கள். அது இருந்த இடம் வெறிச்சோடிப் போகிறது.

" எந்த மறைப்பும் இல்லாமல் வீடு வெட்டவெளியில் தெரிந்தது ".
இப்படி மறைப்பை அகற்றி வெட்டவெளி ஆக்குவதில் ஒரு சமூக வன்முறை உள்ளது. இந்த வரியிலிருந்து கதையை சமூக--தனிமனித உறவாடலாக திருப்பிப் படிக்கலாம்.

சமீபத்தில் "ராயல் சொசைட்டி" இதழில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை படித்தேன். மேற்கில் அலுவலகங்களில் பயன்படுத்த உத்தேசிக்கப்படும் ஒரு கண்காணிப்புக் கருவியின் செயல்பாடு மற்றும் பயன்பாடு பற்றி விளக்கியிருந்தார்கள். அதன்படி ஒரு அலுவலகப் பணியாளரின் அடையாளப் பட்டியில் மைக்ரோ சிப் ஒன்றைப் பொருத்தி விடுவார்கள். பிறகு இவர் அலுவலகத்தில் எங்கே உலாத்தினாலும், இருந்தாலும் மேலாளரால் இருந்த இடத்திலே மூக்கை சொறிந்தபடி துல்லியமாய் சொல்ல முடியும்: " என்ன அரைமணியாய் ஆளைக் காணோம், டாய்லட்டில் தவமா?"; "இன்று மட்டுமே 80 நிமிடங்கள் மொத்தமாய் பிரியாவுடன் அரட்டை போலும்". இதன் அடுத்த கட்டமாய் ஒரு தனிமனிதனின் அலுவலகத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளைக் கூட கண்காணிக்க முடியும்.

தற்போதைய தமிழ்ச்சூழலில் ஒரு அரசியல் பிரமுகரைப் பற்றி ஜோக்கடிக்கக் கூட மிகுந்த ஜாக்கிரதை உணர்வு தேவைப்படுகிறது. அதிகார மையத்தில் இருப்போர் பற்றின எளிய விமர்சனத்துக்குக் கூட ஏகப்பட்ட கண்டனக் குரல்கள், வாயடைப்புகள், தணிக்கைகளை ஒருவர் எதிர்கொண்டாக வேண்டும். பேச்சும் மூச்சும் அனுமதிக்குப் பிறகே வெளியிட வேண்டும். எதிர்காலத்தில் குற்றச்செயல் தடுப்பு எனும் பெயரில் தனிமனித அந்தரங்கம், சுதந்திரம் மீதான அரசின் ஆக்கிரமிப்பு மேலும் தீவிரமாகவுள்ளது. அப்போது நம் சமூகம் மறைப்பற்ற ஒரு வெட்டவெளியாக, நிழல்களாய் துரத்தப்படும் மனிதர்களை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த பொருளில் " பழைய தண்டவாளம் " கதைக்கு சமகாலத்தன்மை உருவாகிறது.

கதையின் இறுதியான கவித்துவ வரி: " லேசாக இருட்ட ஆரம்பித்து தண்டவாளம் இருட்டில் தெரியாமல் போனது ". இப்போது நானிதைச் சொல்லும் போது இருட்டு அடர்த்தியாய் உங்களை சூழ்ந்துள்ளது. கண்களை நன்றாக மூடிக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் கண்ணால் காண்பதும் பொய் ... அது தேர்தல் ஊழலோ அல்லது சிலை நாட்டும் நாடகமோ. தீரவிசாரித்து விளக்கங்கள் வரும்வரை இறுக்க மூடிக் கொள்ளுங்கள். இருட்டில் கண்விழிப்பவன் முட்டாள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...