Skip to main content

இந்தியா எப்படி 'ஏறக்குறைய' வல்லரசு ஆனது?






ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் ஆரம்பத்தில் மேற்கண்ட கேள்வியை சற்று மாற்றிக் கேட்கிறார்கள்:

ஜமால் எப்படி மில்லியனர் ஆனான்?
இதற்கும் மேல்வரும் 4 தேர்வு வாய்ப்புகள் தாம்.

ஜமால் மும்பை கால்சென்டரில் தேனீர் வினியோகிக்கும் இளைஞன். அவனுக்கு ஒரு இளம்பருவக் காதலி. அவள் தற்போது ஒரு மாபியா தாதாவின் பிடியில். 'யார் அடுத்த மில்லியனர்' எனும் வினாடி வினா ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவளை எப்படி மீட்கிறான் என்பது அடுத்து வரும் கதை. ஜமால் சேரியில் வளர்ந்தவன் என்பதால் இந்தியாவின் சேறு சகதி குப்பை என மேலோட்டமாக சாம்பிராணி காட்டுகிறார்கள். மேற்சொன்ன கேள்விக்கான பதிலை கடைசிக் காட்சியில் தருகிறார்கள். (ஈ) எழுதப்பட்டது. வரலாற்றின் குழப்படி அல்லது விதி. இந்த பதில் இந்தியாவுக்கும் ஜமாலுக்குமாக தரப்பட்டது.

சமீப உலக வரலாற்றில் அதிரடியாய் வளர்ந்து விட்ட இந்திய மத்திய வர்க்கத்தின் குறியீடுதான் ஜமால். 3 காரணங்கள். சேரிப் பின்னணிக்கும் ஜமாலின் ஆங்கில அறிவு, பவிசு மற்றும் தோற்றப் பொலிவுக்கும் தொடர்பில்லை. தனது தேனீர் வினியோக பணிச் சட்டகத்தை மீறி அவன் ஒரு ம.வ. இளைஞனாகவே உலவுகிறான். சேரியிலிருந்து மேல்தட்டு நோக்கிய ஜமாலின் அதிவிரைவுப் பயணம் உலக மயமாக்கலின் போதான இந்திய ம.வர்க்கத்தின் பயணமே. ஜமால் போட்டிக்கான பதில்களை தனது நூதன அனுபவங்கள், கவனம் மற்றும் அதிர்ஷ்டம் கொண்டு தான் சரியாக அளிக்கிறான். கதையில் மட்டுமே சாத்தியமாகும் இந்த ஜீபூம்பா குறியீட்டுத்தனத்துக்காகவே திணிக்கப்பட்டது. வழக்கமாய் ரியாலிட்டி வினாடி வினாக்களில் முன்கூட்டி வாசித்து தயாரித்து தான் போட்டியாளர்கள் பெரும்பாலான கேள்விகளை எதிர்கொள்வது. எங்கள் ஊரில் சில்லறைத் திருட்டுகள் செய்து அல்லது கடைத் திண்ணையில் சொறிந்து கொண்டு அமர்ந்திருந்து விட்டு திடீரென வெளிநாட்டில், நகரங்களில் வேலை கிடைத்து சிறகு முளைத்த பல இளைஞர்களை எனக்கு நேரடியாய் பழக்கமுண்டு. இதுதான் (ஈ) விதி.
கடைசியாய் படத்தின் இறுதி முடிவு காட்சிகளை முடிச்சுப் போடும் வினா படத்தின் ஈடுபாடு இந்தியாவின் குப்பையும் நிழல் உலகமும் அல்ல என்பதை சுட்டுகிறது. (இந்தியர்களின் வளர்ச்சிக்குக் காரணம் உலகமயமாக்கல் என்னும் அதிர்ஷ்டம் மற்றும் சமயோசித அறிவு மட்டுமே என்னும் ஒரு குறுகலான பார்வையும் இந்த கேள்வி--பதிலின் பின்னணியில் உள்ளது.)

மூன்றாம் உலக நாடுகளை விசித்திரமானவையாய் வகைப்படுத்துவது ஒரு காலனிய மனோபாவம். படத்தின் பல காட்சிகள் இந்த நோக்கத்திற்காகவே. குறிப்பாய் ஜமால் மலத்தில் புரண்டு எழுந்து அமிதாப் பச்சனிடம் ஓடி சென்று கையெழுத்து பெறும் பிரபல காட்சி. பிரபலங்கள் மீதான அபரித மோகம் அனைத்து சமூகங்களுக்கும் பொது. அதைப் போன்றே ஒரு சமூகத்துக்கு மற்றதன் குழுச்செயல்பாடு சற்று விபரீதமாக, வேடிக்கையாக தெரியும். வெள்ளைக்கார பெண்கள் பிரபலங்களிடம் சென்று மாரில் கையெழுத்து பெறுவது கண்டு இந்தியாவின் நரைதலைகள் 'ச்சே' சொல்வதில்லையா?

இந்த காலனீய வகைமாதிரித் தன்மைகள் கொண்டு இயக்குனர் பாயல் இந்திய இளைஞன் பற்றிய ஒரு தட்டையான பிம்பத்தை உருவாக்குகிறார். அவன் மேதை அல்ல, சமயோசித அறிவு கொண்ட தந்திரசாலி; எல்லாவித வசை, அடிகளைத் தாங்கி முன்னேறுவான்; கோபத்தை விழுங்கி விட்டு முட்டாள் வியப்புடன் புன்னகைப்பான். காவலரிடம் அடி வாங்கும் போது அவன் உணர்ச்சியற்றுத் தொங்குவது, காதலி கடத்தப்பட்ட பின் தாதாவின் வீட்டு கண்ணாடி ஜன்னலை அறைந்தபடி அவன் தனியே கத்துவது போன்ற காட்சிபூர்வ வெளிப்பாடுகள் இந்த காலனிய முன்முடிவுகளை வெற்றிகரமாய் சித்தரிப்பவை. மற்றொரு காட்சி.

கால்சென்டர் ஆபரேட்டர் ஒருவன் டீ.வி பார்க்கும் பொருட்டு (?) ஜமாலை அவன் இருக்கையில் அமர்த்தி விட்டு போகிறான். அப்போது வெளிநாட்டில் இருந்து ஒரு வெள்ளைக்காரி அழைக்கிறாள். ஆரம்பத்தில் தடுமாறும் ஜமால் பிறகு சுதாரித்து அவளிடம் பேசுகிறான். அந்த பெண்ணுக்கு சந்தேகம். கேட்கிறாள்: " நீ எந்த நாட்டிலிருந்து பதில் சொல்லுகிறாய்?"
" நீங்கள் இருக்கும் தெருமுனையில் இருந்து தான் பேசுகிறேன் மேடம்"
"முகவரி சொல்"
ஜமால் கணினியில் உள்ள தகவல் வங்கி மற்றும் சுவரில் மாட்டப்பட்ட வரைபடம் ஆகியன பார்த்து இடஅமைப்பை விளக்கி அவளை சமாதானம் செய்கிறான்.

நீங்கள் இந்திய பி.பி.ஓக்களில் செய்யும் வேலையை ஒரு டீக்காரர் கூட செய்யலாம் என்கிறது இக்காட்சி. டீக்காரருக்கு ஆங்கில அறிவு எப்படி வந்தது என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். அதைவிட முக்கியமாய் பாயலிடம் நாம் மற்றொரு கேள்வி கேட்க வேண்டும்.

தேனீர்ப் பையனின் புத்திசாலித்தனம் மட்டுமே கொண்ட இந்தியர்களிடம் உங்கள் வங்கிக் கணக்கு, காப்பு நிதி விவரங்கள், மருத்துவக் குறிப்புகள், கல்வி மற்றும் வேலை விவரப் பட்டியல்கள், மென்பொருள் எழுதும், அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை திருத்தும் வேலைகளை எப்படி ஒப்படைக்கிறீர்கள்?

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இளைஞர்களுக்கு மேற்படிப்புகளில், கடுமையான உழைப்பில் ஆர்வம் குறைந்து விட்டது. எட்டு மணி நேரம் தாண்டி ஒரு நொடி கூட அலுவலகத்தில் பொறுக்க மாட்டார்கள். நாம் வேலை நாட்களில் 12 மணி நேரம் போக பண்டிகை நாட்கள், ஞாயிற்றுக் கிழமை கூட சலிக்காமல் உழைப்போம். வெள்ளைக்காரர்களின் சோம்பேறித்தனத்துக்கு ஒரு உதாரணம் தருகிறேன். என் மின்பதிப்பு நிறுவனத்தில் எல்லா புதன் கிழமையும் இங்கிலாந்தின் ராயல் சொஸைட்டி பதிப்பாளர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் முறைப்படி இங்கிருந்தபடியே உரையாடி ஆங்கில இலக்கண சந்தேகங்களை கேட்போம். கேள்விகளை முன்கூட்டியே மின்னஞ்சலில் அனுப்பி விடுவோம். ஆனால் சிரமமான கேள்விகளை முன்கூட்டியே ஆராய்ச்சி செய்யாமல் மேலோட்டமாய் பேசி சமாளிப்பார்கள். அல்லது அடுத்த சந்திப்பில் பதிலளிக்கிறோம் என்று நழுவி விடுவார்கள். அந்த பதில் எப்போதுமே வராது. அரைமணி நேரம் கூட இணையத்தில் ஆராய தயாராகாதவர்கள். வடிகட்டி, குளோரின் போட்ட சோம்பேறிகள்.

வேலைப்பற்றாக்குறை, விலைவாசி உயர்வு பற்றி வெள்ளைக்காரர்கள் சமீப காலமாய் கவலைப்படுகிறார்கள். தங்கள் நாட்டின் வேலைகள் இந்திய இளைஞர்களுக்கு போவதற்கு காரணம் சொந்த சமூகத்தின் ஒட்டுமொத்த சோம்பல், இலக்கற்ற கால வீணடிப்பு மற்றும் கல்வி போதாமை என்பதை ஏற்கும் மன நிலை அங்குள்ள பாமரகளுக்கு இல்லை. அத்தகையவர்களுக்கு காலனிய மனோபாவம் ஒட்டின ஒரு எளிய காரணம் தேவைப்படுகிறது. அதை பாலிவுட்டின் வித்தியாச மசாலா கலந்து தந்ததனால் தான் இப்படம் மேற்கில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது.

பி.பி.ஓ வளர்ச்சியால் பணம் கொழித்தவர்கள் சிலரே. பெரும்பாலானோர் பி.பி.ஓவில் சம்பாதிப்பது மாதம் 6000--20000. வீட்டு வாடகை, வங்கிக் கடன், சாப்பாடுச் செலவு போக இந்த இளைஞர்களுக்கு மிஞ்சுவது பழுதான உடலும், மனமும். கிறித்துமசுக்கு ஒருமாத விடுப்பில் செல்லும் பரங்கிக்கு இது புரியாது.

இந்திய பி.பி.ஓக்களின் வளர்ச்சி மற்றும் நிலைப்புக்கு காரணமான இந்த இரவு பகலான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை இப்படம் திரித்து சித்தரிக்கிறது. ஒரு காட்சியில் கால்சென்டர் பணியாளர்கள் வேலையை உதாசீனித்து கூட்டமாய் டீ.வி பார்க்கிறார்கள். மற்றொரு கால்சென்டர் காட்சியில் பயிலும் ஆரம்ப நிலை பணியாளர்களிடம் பயிற்சியாளர் சொலிகிறார்: "உன்னை விட ஒரு தேனீர்ப் பையனுக்கு விசய ஞானம் அதிகம்"

நமது மேல்தட்டு ஆங்கில ஊடகங்களின் விமர்சகர்கள் (அரிந்தம் சௌத்ரி உட்பட) படத்தின் வறுமை, குற்றம், பிச்சைக்காரர்கள் போன்ற வெளிப்புற மினுமினுப்புகளை மட்டுமே கண்டு சாடியுள்ளனர். ஜோசியக்காரனின் கிளிக்கும் இவர்களுக்கும் வேறுபாடில்லை. இவர்களின் டை, கோட்டை பிடுங்கி, சமீப இலங்கைத் தமிழர் படுகொலைக்கான முழு அடைப்பால் கடுப்பாகி "இந்தியாவுல பொழைக்கிறதை விட்டுட்டு ஏன் சிலோனுக்கு ஓடிப் போனானுங்க" என்று கேட்கும், மார்முடி பனியனுக்கு வெளியே பிதுங்கித் தெரியும் ஜாபர்கான் பேட்டை பெட்டிக் கடை மாமாக்களுக்கு மாட்டி விடலாம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...