Skip to main content

இந்தியா எப்படி 'ஏறக்குறைய' வல்லரசு ஆனது?






ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் ஆரம்பத்தில் மேற்கண்ட கேள்வியை சற்று மாற்றிக் கேட்கிறார்கள்:

ஜமால் எப்படி மில்லியனர் ஆனான்?
இதற்கும் மேல்வரும் 4 தேர்வு வாய்ப்புகள் தாம்.

ஜமால் மும்பை கால்சென்டரில் தேனீர் வினியோகிக்கும் இளைஞன். அவனுக்கு ஒரு இளம்பருவக் காதலி. அவள் தற்போது ஒரு மாபியா தாதாவின் பிடியில். 'யார் அடுத்த மில்லியனர்' எனும் வினாடி வினா ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவளை எப்படி மீட்கிறான் என்பது அடுத்து வரும் கதை. ஜமால் சேரியில் வளர்ந்தவன் என்பதால் இந்தியாவின் சேறு சகதி குப்பை என மேலோட்டமாக சாம்பிராணி காட்டுகிறார்கள். மேற்சொன்ன கேள்விக்கான பதிலை கடைசிக் காட்சியில் தருகிறார்கள். (ஈ) எழுதப்பட்டது. வரலாற்றின் குழப்படி அல்லது விதி. இந்த பதில் இந்தியாவுக்கும் ஜமாலுக்குமாக தரப்பட்டது.

சமீப உலக வரலாற்றில் அதிரடியாய் வளர்ந்து விட்ட இந்திய மத்திய வர்க்கத்தின் குறியீடுதான் ஜமால். 3 காரணங்கள். சேரிப் பின்னணிக்கும் ஜமாலின் ஆங்கில அறிவு, பவிசு மற்றும் தோற்றப் பொலிவுக்கும் தொடர்பில்லை. தனது தேனீர் வினியோக பணிச் சட்டகத்தை மீறி அவன் ஒரு ம.வ. இளைஞனாகவே உலவுகிறான். சேரியிலிருந்து மேல்தட்டு நோக்கிய ஜமாலின் அதிவிரைவுப் பயணம் உலக மயமாக்கலின் போதான இந்திய ம.வர்க்கத்தின் பயணமே. ஜமால் போட்டிக்கான பதில்களை தனது நூதன அனுபவங்கள், கவனம் மற்றும் அதிர்ஷ்டம் கொண்டு தான் சரியாக அளிக்கிறான். கதையில் மட்டுமே சாத்தியமாகும் இந்த ஜீபூம்பா குறியீட்டுத்தனத்துக்காகவே திணிக்கப்பட்டது. வழக்கமாய் ரியாலிட்டி வினாடி வினாக்களில் முன்கூட்டி வாசித்து தயாரித்து தான் போட்டியாளர்கள் பெரும்பாலான கேள்விகளை எதிர்கொள்வது. எங்கள் ஊரில் சில்லறைத் திருட்டுகள் செய்து அல்லது கடைத் திண்ணையில் சொறிந்து கொண்டு அமர்ந்திருந்து விட்டு திடீரென வெளிநாட்டில், நகரங்களில் வேலை கிடைத்து சிறகு முளைத்த பல இளைஞர்களை எனக்கு நேரடியாய் பழக்கமுண்டு. இதுதான் (ஈ) விதி.
கடைசியாய் படத்தின் இறுதி முடிவு காட்சிகளை முடிச்சுப் போடும் வினா படத்தின் ஈடுபாடு இந்தியாவின் குப்பையும் நிழல் உலகமும் அல்ல என்பதை சுட்டுகிறது. (இந்தியர்களின் வளர்ச்சிக்குக் காரணம் உலகமயமாக்கல் என்னும் அதிர்ஷ்டம் மற்றும் சமயோசித அறிவு மட்டுமே என்னும் ஒரு குறுகலான பார்வையும் இந்த கேள்வி--பதிலின் பின்னணியில் உள்ளது.)

மூன்றாம் உலக நாடுகளை விசித்திரமானவையாய் வகைப்படுத்துவது ஒரு காலனிய மனோபாவம். படத்தின் பல காட்சிகள் இந்த நோக்கத்திற்காகவே. குறிப்பாய் ஜமால் மலத்தில் புரண்டு எழுந்து அமிதாப் பச்சனிடம் ஓடி சென்று கையெழுத்து பெறும் பிரபல காட்சி. பிரபலங்கள் மீதான அபரித மோகம் அனைத்து சமூகங்களுக்கும் பொது. அதைப் போன்றே ஒரு சமூகத்துக்கு மற்றதன் குழுச்செயல்பாடு சற்று விபரீதமாக, வேடிக்கையாக தெரியும். வெள்ளைக்கார பெண்கள் பிரபலங்களிடம் சென்று மாரில் கையெழுத்து பெறுவது கண்டு இந்தியாவின் நரைதலைகள் 'ச்சே' சொல்வதில்லையா?

இந்த காலனீய வகைமாதிரித் தன்மைகள் கொண்டு இயக்குனர் பாயல் இந்திய இளைஞன் பற்றிய ஒரு தட்டையான பிம்பத்தை உருவாக்குகிறார். அவன் மேதை அல்ல, சமயோசித அறிவு கொண்ட தந்திரசாலி; எல்லாவித வசை, அடிகளைத் தாங்கி முன்னேறுவான்; கோபத்தை விழுங்கி விட்டு முட்டாள் வியப்புடன் புன்னகைப்பான். காவலரிடம் அடி வாங்கும் போது அவன் உணர்ச்சியற்றுத் தொங்குவது, காதலி கடத்தப்பட்ட பின் தாதாவின் வீட்டு கண்ணாடி ஜன்னலை அறைந்தபடி அவன் தனியே கத்துவது போன்ற காட்சிபூர்வ வெளிப்பாடுகள் இந்த காலனிய முன்முடிவுகளை வெற்றிகரமாய் சித்தரிப்பவை. மற்றொரு காட்சி.

கால்சென்டர் ஆபரேட்டர் ஒருவன் டீ.வி பார்க்கும் பொருட்டு (?) ஜமாலை அவன் இருக்கையில் அமர்த்தி விட்டு போகிறான். அப்போது வெளிநாட்டில் இருந்து ஒரு வெள்ளைக்காரி அழைக்கிறாள். ஆரம்பத்தில் தடுமாறும் ஜமால் பிறகு சுதாரித்து அவளிடம் பேசுகிறான். அந்த பெண்ணுக்கு சந்தேகம். கேட்கிறாள்: " நீ எந்த நாட்டிலிருந்து பதில் சொல்லுகிறாய்?"
" நீங்கள் இருக்கும் தெருமுனையில் இருந்து தான் பேசுகிறேன் மேடம்"
"முகவரி சொல்"
ஜமால் கணினியில் உள்ள தகவல் வங்கி மற்றும் சுவரில் மாட்டப்பட்ட வரைபடம் ஆகியன பார்த்து இடஅமைப்பை விளக்கி அவளை சமாதானம் செய்கிறான்.

நீங்கள் இந்திய பி.பி.ஓக்களில் செய்யும் வேலையை ஒரு டீக்காரர் கூட செய்யலாம் என்கிறது இக்காட்சி. டீக்காரருக்கு ஆங்கில அறிவு எப்படி வந்தது என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். அதைவிட முக்கியமாய் பாயலிடம் நாம் மற்றொரு கேள்வி கேட்க வேண்டும்.

தேனீர்ப் பையனின் புத்திசாலித்தனம் மட்டுமே கொண்ட இந்தியர்களிடம் உங்கள் வங்கிக் கணக்கு, காப்பு நிதி விவரங்கள், மருத்துவக் குறிப்புகள், கல்வி மற்றும் வேலை விவரப் பட்டியல்கள், மென்பொருள் எழுதும், அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை திருத்தும் வேலைகளை எப்படி ஒப்படைக்கிறீர்கள்?

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இளைஞர்களுக்கு மேற்படிப்புகளில், கடுமையான உழைப்பில் ஆர்வம் குறைந்து விட்டது. எட்டு மணி நேரம் தாண்டி ஒரு நொடி கூட அலுவலகத்தில் பொறுக்க மாட்டார்கள். நாம் வேலை நாட்களில் 12 மணி நேரம் போக பண்டிகை நாட்கள், ஞாயிற்றுக் கிழமை கூட சலிக்காமல் உழைப்போம். வெள்ளைக்காரர்களின் சோம்பேறித்தனத்துக்கு ஒரு உதாரணம் தருகிறேன். என் மின்பதிப்பு நிறுவனத்தில் எல்லா புதன் கிழமையும் இங்கிலாந்தின் ராயல் சொஸைட்டி பதிப்பாளர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் முறைப்படி இங்கிருந்தபடியே உரையாடி ஆங்கில இலக்கண சந்தேகங்களை கேட்போம். கேள்விகளை முன்கூட்டியே மின்னஞ்சலில் அனுப்பி விடுவோம். ஆனால் சிரமமான கேள்விகளை முன்கூட்டியே ஆராய்ச்சி செய்யாமல் மேலோட்டமாய் பேசி சமாளிப்பார்கள். அல்லது அடுத்த சந்திப்பில் பதிலளிக்கிறோம் என்று நழுவி விடுவார்கள். அந்த பதில் எப்போதுமே வராது. அரைமணி நேரம் கூட இணையத்தில் ஆராய தயாராகாதவர்கள். வடிகட்டி, குளோரின் போட்ட சோம்பேறிகள்.

வேலைப்பற்றாக்குறை, விலைவாசி உயர்வு பற்றி வெள்ளைக்காரர்கள் சமீப காலமாய் கவலைப்படுகிறார்கள். தங்கள் நாட்டின் வேலைகள் இந்திய இளைஞர்களுக்கு போவதற்கு காரணம் சொந்த சமூகத்தின் ஒட்டுமொத்த சோம்பல், இலக்கற்ற கால வீணடிப்பு மற்றும் கல்வி போதாமை என்பதை ஏற்கும் மன நிலை அங்குள்ள பாமரகளுக்கு இல்லை. அத்தகையவர்களுக்கு காலனிய மனோபாவம் ஒட்டின ஒரு எளிய காரணம் தேவைப்படுகிறது. அதை பாலிவுட்டின் வித்தியாச மசாலா கலந்து தந்ததனால் தான் இப்படம் மேற்கில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது.

பி.பி.ஓ வளர்ச்சியால் பணம் கொழித்தவர்கள் சிலரே. பெரும்பாலானோர் பி.பி.ஓவில் சம்பாதிப்பது மாதம் 6000--20000. வீட்டு வாடகை, வங்கிக் கடன், சாப்பாடுச் செலவு போக இந்த இளைஞர்களுக்கு மிஞ்சுவது பழுதான உடலும், மனமும். கிறித்துமசுக்கு ஒருமாத விடுப்பில் செல்லும் பரங்கிக்கு இது புரியாது.

இந்திய பி.பி.ஓக்களின் வளர்ச்சி மற்றும் நிலைப்புக்கு காரணமான இந்த இரவு பகலான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை இப்படம் திரித்து சித்தரிக்கிறது. ஒரு காட்சியில் கால்சென்டர் பணியாளர்கள் வேலையை உதாசீனித்து கூட்டமாய் டீ.வி பார்க்கிறார்கள். மற்றொரு கால்சென்டர் காட்சியில் பயிலும் ஆரம்ப நிலை பணியாளர்களிடம் பயிற்சியாளர் சொலிகிறார்: "உன்னை விட ஒரு தேனீர்ப் பையனுக்கு விசய ஞானம் அதிகம்"

நமது மேல்தட்டு ஆங்கில ஊடகங்களின் விமர்சகர்கள் (அரிந்தம் சௌத்ரி உட்பட) படத்தின் வறுமை, குற்றம், பிச்சைக்காரர்கள் போன்ற வெளிப்புற மினுமினுப்புகளை மட்டுமே கண்டு சாடியுள்ளனர். ஜோசியக்காரனின் கிளிக்கும் இவர்களுக்கும் வேறுபாடில்லை. இவர்களின் டை, கோட்டை பிடுங்கி, சமீப இலங்கைத் தமிழர் படுகொலைக்கான முழு அடைப்பால் கடுப்பாகி "இந்தியாவுல பொழைக்கிறதை விட்டுட்டு ஏன் சிலோனுக்கு ஓடிப் போனானுங்க" என்று கேட்கும், மார்முடி பனியனுக்கு வெளியே பிதுங்கித் தெரியும் ஜாபர்கான் பேட்டை பெட்டிக் கடை மாமாக்களுக்கு மாட்டி விடலாம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...