Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஒரு வறண்ட நாளின் வளமையான பக்கங்கள்

இன்று எழுந்து காப்பி பல் துலக்கம் முடிந்து எழுதலாம் என்று அமர்ந்து பிடிக்காமல் இணையம் மேய்ந்து ... இதோ இப்போது இரவு 12:45-க்கு எழுதுகிறேன். காப்பிக்கும் இணையத்துக்கும் இடையே ஒரு கசப்பான ஞாபகம் தொந்தரவு செய்தது. எனது “இந்திய குறுக்குவிதிகளும் ...” கட்டுரை (http://thiruttusavi.blogspot.com/2009/11/blog-post_17.html) பற்றி புலன்விசாரித்து ஒரு நபர் என் நண்பரை அழைத்து அபிலாஷ் தெரியுமா உங்களைப் பற்றி எழுதியுள்ளாரே என்று போட்டுக் கொடுக்க நண்பர் ”என்னைப் பற்றி எழுதியதை என்னிடமே ஏன் சொல்லவில்லை” என்று கோபித்துக் கொண்டார். கட்டுரைகளில் குறிப்பிட்டதற்காக ஏற்கனவே இரண்டு நண்பர்களை இழந்த நான் நிஜமாகவே பயந்து போனேன். பதற்றத்தில் தத்துபித்தென்று உளறினேன். என் முகக்கலவரத்தை பார்த்து, என் உளறலைக் கேட்டு தவறாக ஊகித்த நண்பர் “என்னைப் பற்றி ஏதோ விவகாரமாக சொல்லியுள்ளீர்கள்” என்றார். அவரது ஆளுமை தவறாக பதிவாகி விட்டதோ என்ற கவலையில் நான் கூறிய இந்த முக்கியமான கருத்தை கவனித்தாரா தெரியவில்லை: “ நான் எழுதும் போது பார்த்தது, கேட்டு, படித்த உயிருள்ள உயிரற்ற பொருட்கள் வெறும் தரவுகள் தாம். நான் இத்தரவுகளை பற்றி எழுதுவதில்லை; ஒரு விவாதப் பொருளை, அவதானிப்பை அல்லது கற்பனையை நிறுவ இவை பயன்படுகின்றன, அவ்வளவே”. நேரடியாக / மறைமுகமாக குறிப்பிடப்படும் ஒரு தனி நபர் பற்றின சித்திரம் எத்தனை சரியானது என்பது பற்றி அந்த நபர் கவலைப்படுவது வீணானது. நம்மைப் பற்றின அடுத்தவர் மனதிலுள்ள பிம்பத்தை பற்றி எப்படி பொருட்படுத்தக் கூடாதோ அப்படியே இதுவும். பொதுவான அக்கறைகள் அல்லது தேடல் தவிர்த்து எனக்கு உங்கள் உலகம் குறித்தோ உங்களுக்கு எனது பற்றியோ கவலை இல்லை.



என்னைப் பற்றி ஜெயமோகன் தனது வலைதளத்தில் எழுதியிருந்த குறிப்பில் (http://jeyamohan.in/?p=3684) தகவல் பிழைகள் உண்டு. நான் ஏன் பொருட்படுத்த இல்லை என்றால் அவரது கட்டுரை அந்த தகவல்கள் பற்றியது அல்ல என்பதால். உதாரணமாக அவர் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் உரையாற்றின போது எனது சிவப்பு அபிமானம் காரணமாய் நான் அங்கு செல்லவில்லை என்கிறார். இரண்டுமே உண்மையல்ல. ஆனால் இப்பிழைகள் முக்கியமல்ல. காரணம் முதற்பத்தியின் கடைசி வரியில்.



நான் இதுவரை சொன்னதற்கு மற்றொரு பக்கமும் உண்டு என்பதை அறிவேன். கீஸ்லாவஸ்கி தனது Camera Buff படத்தில் படைப்புக்கும் அந்தரங்க மீறலுக்குமான உறவு பற்றி பேசியிருப்பார். இப்படத்தின் நாயகன் இனிமேல் பிறரை பதிவு செய்யக் கூடாது என்ற தீர்மானத்துடன் இறுதிக்காட்சியில் படக்கருவியை தன்னை நோக்கி திருப்பி ஓட விடுவான். ஊனம் பற்றின எனது சில கட்டுரைகளை பற்றி கூறுகையில் மனுஷ்யபுத்திரன் “இதில் பலவும் எனக்கும் நிகழ்ந்தன” என்றார். ”நீங்கள் எழுதியிருக்கலாமே” என்றேன். “பலரை காயப்படுத்த வேண்டியிருக்கும்” என்றார். விரல் சுட்டினாலே காயப்படுவது ஒருவித மனநோய். ஒரு பத்திரிகை ஆசிரியராக, பிரபல ஆளுமையாக, பிரதான கவிஞராக எத்தனை அனுபவங்களை இப்படி உறை போட்டு மூடியிருப்பார்.



சூழலின் நோய்மை எழுத்தாளனின் சுட்டு விரலை இப்படி மடித்து விடுகிறது. நான் பேசியிருந்த கருத்துக்களை மேலும் வலுவாக, நுட்பமாக அவரால் வெளிகொணர்ந்திருக்க முடியும். அக்கட்டுரைகளை நான் வலியுடன் எழுதியிருக்க வேண்டியிராது. படக்கருவியை நம்மை நோக்கி திருப்பியதும் அதில் புறவுலகின் பிம்பங்களும் விழுகின்றன. படக்கருவியின் பிம்பங்கள் தனதல்ல என்று புறவுலகம் புரிந்து கொள்ள வேண்டும்.




இன்று Terrorists, Victims and Society என்றொரு நூல் படித்தேன். அதைப் பற்றி நாளை எழுதுகிறேன். இன்று வலையில் காணக்கிடைத்ததில் இந்த இரு தளங்களை குறிப்பிட வேண்டும்:
http://cybersimman.wordpress.com/
மற்றும்
http://www.athishaonline.com/

சிம்மன் மிக எளிமையாக, நேரடியாக, சுவாரிசியமாக எழுதுகிறார். இணையம் இவரது ஏரியா. ஏழு வருடங்களுக்கு மேல் எழுதி வருவதாக தனது அறிமுகத்தில் சொல்வது அவரது அவரது மொழியின் ஒழுக்கில் தெரிகிறது. குறிப்பாக, அடுத்து எதைப் பேச வேண்டும் என்கிற குழப்பம் இல்லை. அப்புறம் உணர்ச்சிவயபடாமல் ஒரு வியப்பை தக்க வைக்கிறார். எழுத்தாளக் குறுக்கீடுகள், நெடுமூசெறிதல்கள் இல்லை.இது மாமன் மச்சான் பரிந்துரை அல்ல. தைரியமாக இவரை படியுங்கள்.

ஆதிஷா ஒரு பெண் அல்ல. அவரது அறிமுகம் படிக்காமல் நடை வைத்தே ஓரளவு இதை ஊகிக்கலாம். ஆதிஷா நிஜப்பெயரான வினோத்தின் பக்கத்து வீட்டு பெண்ணுருவமோ, பள்ளிக் காதலியோ, மாமன் மகளோ அல்ல. ஒரு பௌத்த துறவியின் பெயராம். ஹும். சரளமும், அலப்பறையும், நகைச்சுவையும் தான் இந்த ஆதிஷா. இத்தனை வீராப்பாக, ஊக்கமாக பகடி செய்பவர்களை தமிழில் அதிகம் படித்ததில்லை. இவரது ஜென் பகடி கதைகளை கட்டாயம் படியுங்கள். பொதுவாக ஞானக்கதைகளின் சொல்லலில் ஒரு போலியான பாவனை இருக்கும். அந்த இடுப்புக் குடத்தை கல்லடிப்படிப்பதில் தான் வினோத்தின் ஆர்வம். முக்கியமான முயற்சி. ஒரு கதையில் ஞானம் கேட்கும் சிஷ்யனிடம் குரு தின்ற பாத்திரத்தை அலம்பி வர சொல்கிறார். அவனுக்கு ஞானம் வருகிறது. இதன் மொழியை வட்டார வழக்கில் வசை சொற்களுடன் சரேலென்று சொல்லி முடிப்பதில் தான் அவரது நகைச்சுவை ஏற்படுகிறது. மற்றொரு கதையில் ஞானம் கிடைத்த சிஷ்யனுக்கு அது படு பேஜாராக உள்ளது.

பகடிக்கு இலக்கிய எழுத்தின் அந்தஸ்து உண்டு. ஆதிஷாவின் தேடல் தீவிரமடையும் போது அவரது இயல்பான எழுத்துத் திறன் மற்றொரு இடத்துக்கு அவரை எடுத்துச் செல்லும். அதுவரையில் ”பிட்டுப்படம் பார்ப்பது எப்படி?”, ”கொலைகாரன் காதல்” போன்ற கவனத்தை ஈர்க்கும் பதிவுகள் வீண் முயற்சிகள் என்று சொல்ல மாட்டேன்.

Comments

thoughtssharing said…
hai Abilash,
I WAS THE ONE WHO CALLED UR FRIEND TO ENQUIRE ABOUT YOU.I DIDNT CALL UR FRIEND WIH AN INTENTION TO PUT U IN TROUBLE.I FEEL BAD ABOUT THE WAY U TWISTED THIS SIMPLE THING.IT WAS NOT FOR'POTTU KODUKURURHUKU',JUST TO KNOW MORE ABOUT U AND APPRECIATE UR WRITINGS.ANYWAY,THANKS FOR MENTIONING ME AS A 'NABAR' IN UR BLOG

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...