Skip to main content

கிரிக்கெட்டின் மஞ்சள் அழகியல்

தற்போது நடந்து வரும் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் தொடர்களை நாம் அனைவருக்கும் கவனித்திருக்க வாய்ப்பில்லை. பரவாயில்லை, நாம் அலசப் போகும் பிரச்சனைக்கு தற்போது நடந்து முடிந்த இலங்கைத் தொடர்களே பதம். இலங்கைக்கு இந்த சுற்றுப்பயண முடிவில் திரும்ப கொண்டு செல்ல ஒன்றுமே இல்லை என்பது வருத்தம் ஏற்படுத்துகிறது. மேட்டிமை இரக்கமா? இல்லை. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஆட்டத்தரம் மற்றும் பலவீனங்களை பொறுத்தமட்டில் மிகச்சிறிய வேறுபாடே இருந்தது என்பதுதான் காரணம். கவனியுங்கள் ஒரே பலவீனங்கள் கொண்ட இரு அணிகள் மோதி விலகிய போது இரண்டும் எந்த பாதிப்பும் இன்றி அதே போல் உள்ளன. மேலும் விளங்க இத்தொடரை ஆஸி சுற்றுப்பயணங்களுடன் ஒப்பிடுங்கள். அத்தொடர்களின் முடிவில் இந்தியா பெற்றது சில அபாரமான வீச்சாளர்கள் மற்றும் மட்டையாளர்கள்: ஹர்பஜன், மிஷ்ரா, மற்றும் லக்‌ஷ்மண். கூடவே வரலாற்றை திருப்பி எழுதும் தன்னம்பிக்கை. இச்சுற்றுப் பயணம் சில இளைஞர்களை புகழ்வெளிச்சத்திற்கு நகர்த்தி உள்ளது மட்டுமே விதிவிலக்கு: லக்மல் மற்றும் கோலி. பலவீனங்களின் மோதல் சர்வதேச கிரிக்கெட்டின் ஒரு நோய்க்கூறாக உள்ளதே நான் கவனிக்க வேண்டியது.



இங்கு நாம் வழக்கம் போல் ஆடுதளங்கள் மீது குங்குமம் இட்டு பலித்தண்ணீர் தெளிக்க முடியாது. நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என்று வேறுபட்ட சர்வதேச ஆடுதளங்களில் எதிலும் அணித்தலைவர்களுக்கு எதிரணியினரை பந்து வீசி தோற்கடிக்கும் தன்னம்பிக்கை இல்லை. தற்போது நடந்து வரும் ஆஸி-மே.இ தொடரின் மூன்றாவது டெஸ்டில் 358 எண் இலக்குக்குள் ஒரு காயலாங்கடை மே.இ தீவு அணியை காலி செய்ய ஆஸி பந்துவீச்சு திணறி திண்டாடி வெறும் முப்பத்தைந்து ஓட்ட வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது டெஸ்ட் அதை விட தமாஷாக முடிந்தது. மே.இ தீவுகள் 330 இலக்கை ஆஸிக்கு தர, அதை அடையத் திணறி போராடி டிரா செய்தார்கள். தற்போது முடிந்த் முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் கடைசி விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் தென்னாப்பிரிக்கா மாவு பிசைந்தது. பாக்- நியூசிலாந்த டெஸ்ட் தொடர் ரெண்டு பக்கமும் காந்தம் ஒட்டின திராசு போல் குழப்பமான டிராவில் முடிந்தது. இந்திய-இலங்கை டெஸ்டுகளில் சற்றே மோசமாக மட்டையாடிய அணி தோற்றது. அவ்வளவே. யோசியுங்கள். உலகின் மிக முக்கியமான அணிகள் ஏறத்தாழ ஒரே காலத்தில் ஆடின இந்த தொடர்களில் மட்டையாளர்களை தொடர்ச்சியாக அச்சுறுத்தி விக்கெட்டுகள் சரித்த புல்டோசர் வீச்சாளர் ஒருவர் கூட வெளிவரவில்லை. இதே அணிகளின் கடந்த தலைமுறை வீரர்கள் பங்கேற்ற தொடர்கள் இத்தகைய விக்கெட் வேட்டையாளர்களாலே ஆக்கிரமிக்கப்பட்டன: மெக்ராத், வார்னே, சக்லைன், அக்ரம், ஆம்புரோஸ், வால்ஷ், டொனால்ட், பொலாக், முரளிதரன், கும்பிளே. இவர்கள் இல்லாத சர்வதேச கிரிக்கெட் களம் இன்று பதர் மூடின வயல்வெளியாக உள்ளது. அதில் சோம்பலாக மேயும் எருமைகள் தாம் இன்றைய அணிகள். இன்றைய டெஸ்ட் அணிகள் முன்னுள்ள ஒரே திட்டம் 500 அல்லது 600 ஓட்டங்களுக்கு மேல் திரட்டி தங்களை பத்திரப்படுத்தி, இதனால், முடிந்தால், எதிரணிக்கு மன நெருக்கடி அளித்து வெல்ல முயல்வது. இருந்தாலும் இடையிடையே பறக்கும் அதிரடி பந்து வீச்சு பொறிகளை நான் மறுக்கவில்லை தான்.

நான் குறிப்பிடுவது கிரிக்கெட்டில் ஒரு வரலாற்றுத் திருப்பம் ஏற்படுத்தி உள்ள வரலாற்று பிரச்சனை. இதற்கு 20-20\ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் ஆடுதளங்களை குறைகூறுவது எளிய பதில் மட்டுமே. மேற்குறிப்பிட்ட பந்துவீச்சு மேதைகளை நம்மால் உருவாக்க முடியாது. பிரமிள், புதுமைப்பித்தன் போல் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டு சூழலில், ஏதோ ஒரு அழுத்தம் மற்றும் காலத்தின் சூதாட்டத்தின் விளைவாக தோன்றுகிறார்கள். தன் இறகுகள் மீண்டும் முளைக்கும் என்ற நம்பிக்கையில் கிரிக்கெட் ஒரு பட்டுப்புழுவாக இலைமீது காத்திருக்கிறது.


ஒரு அணியை வெற்றி பெற வைக்க குறைந்தது மூன்று திறன் மிக்க, அனுபவசாலி வீச்சாளர்கள் வேண்டும். இன்று எந்த அணியிடமும் இத்தகைய ஆயுதம் இல்லை. நான்காவது ஒரு நாள் போட்டியை, கூடவே தொடரையும், இழந்த நிலையில் இலங்கை அணித்தலைவர் சங்கக்காரா தன் மூத்த பந்து வீச்சாளர்களை தோல்விக்கு பழி சாட்டியுள்ளதை கவனியுங்கள். சரி, அந்த மூத்த வீரர்கள் யார்? எனக்கு தெரிந்து இலங்கை அணிக்கு ஒரே ஜடாயு தான்: முத்தையா முரளிதரன். அவரும் 43,669 பந்துகள் வீசி ஓய்ந்து விட்டார். மிக சமீபமாக அணித்தலைவர் பொறுப்பேற்றுள்ள சங்கக்காராவின் அறிக்கையில் ஒரு மனக்கசப்பு மற்றும் கைவிடப்பட்ட உணர்வு உள்ளன. அனைத்து அணித்தலைவர்களின் ஒருமித்த குரல் பிரதிபலிப்பு தான் இது.


இறுதியாக, சர்வதேச அரங்கிலிருந்து இந்திய உள்ளூர் ஆட்டங்களுக்கு வருவோம். நமது உள்ளூர் ஆட்டங்கள் தற்போது நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. கிரிக்கெட் ஆர்வலர்கள் ஒரு மாற்றுப்பார்வைக்காக இவற்றை கண்ணோட்டம் விட வேண்டுகிறேன். மூத்த வீரரான அகார்க்கர் மட்டும் தான் 130-க்கு மேல் வீசும் ஒரே வேகவீச்சாளர். கர்நாடகாவின் அறிமுகவீரர் மிதுன் ஒரு விதிவிலக்கு. மிச்ச முன்னணி ”வேக” வீச்சாளர்கள் 112-120-க்குள் தான் வீசுகிறார்கள். அதை விட அவலம் இவர்களில் பெரும்பாலானோரால் இந்த வேகத்திலும் நிலையாக ஒரு நல்ல லைன் மற்றும் லங்தில் வீச முடியவில்லை. அப்படி வீசும் பட்சத்திலும் அவர்கள் பந்து வீச்சில் அச்சுறுத்தும் அம்சம் இல்லை. மும்பை, தில்லி, தமிழ்நாடு ஆகிய முன்னணி மாநில அணிகள் அனைத்திற்கும் இந்நிலை என்றால், குஜராத், உ.பி, பஞ்சாப் போன்ற அணிகளின் வீச்சு ஒரு பள்ளிக்கூட பரிசோதனை சாலையின் தவளை அறுப்புக்கு கூட தாக்குப்பிடிக்க முடியாதவை. இந்தியாவின் இரண்டாம் நிலை வேக வீச்சாளர்களான முனாப் மற்றும் தியாகி ஆகியோருக்கு சவாலாக தற்போது எந்த உள்ளூர் வீச்சாளரும் இல்லை. ஸ்ரீசாந்த் பன்றிக் காய்ச்சல் காரணமாய் விலகிய பின் ஒருநாள் தொடரில் தேர்வாளர்கள் முழுத்திறன் நிலைக்கு திரும்பாத இஷாந்தையே மீண்டும் கொண்டு வந்தனர். இரண்டு தொடர்கள் முழுக்க தியாகி ஒரு பதிலாளாகவே தொடர்ந்தார். அதாவது நமது இரண்டாம் நிலை பதில் வீரர்களால் துவளும் முதல் நிலை வீச்சாளர்களின் இடத்திற்காக கூட போட்டியிட முடியவில்லை. அணியில் பந்து வீச்சாளரின் இடம் அரசு ஆஸ்பத்திரி படுக்கை போல் ஆகிவிட்டது.


2010-ஆம் ஆண்டுக்குள் நுழையும் போது உள்ளூரிலிருந்து சர்வதேச தளம் வரை கிரிக்கெட் மஞ்சளித்து கிடக்கிறது. இது ஒரு மருந்தில்லாத நோய்க்கூறு என்பதே ஆகப்பெரும் அவலம். ஆனால் அது மட்டுமல்ல. இன்றைய அரசியல், சமூக நிகழ்வுகள் அனைத்தும் உள்ளீடற்ற கேளிக்கையாக மறக்கப்படும் போது மஞ்சள் வரும் ஆண்டின் அழகியலாகவும் இருக்கலாம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...