Skip to main content

வெறுப்பு நேசம் எனும் புதிர்கள்

ஒரு மனிதரை வெறுக்கிறோமா நேசிக்கிறோமா என்பது தான் மிக்கபெரிய புதிர் என்று நினைக்கிறேன்.

அப்பாவை நேசிப்பதை ஒரு இயல்பு மீறிய செயலாகவே நம்பி வந்துள்ளேன். பதின்பருவத்தில் ஆளுமை முதிரத் தொடங்கனதில் இருந்தே அவருடன் முரண்பட்டு வந்திருக்கிறேன். பிறகு அவரது வன்மத்தை வெறுக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் என் ஆளுமையில் தெரிந்த அவரது குணாதசியங்களை வெறுக்க முனைந்தேன். சில வருடங்களுக்கு முன் அப்பா இறந்து போனார். அப்போது அவரை செத்துப் போக மாட்டாரா என்று ஏங்கிய நாட்கள் நினைவு வந்து திகைப்பூட்டின.

என் இளமையில் அப்பா மாலைகளில் ரொம்ப கொடுமைகள் செய்வார். காலையில் போதை தெளிந்து சவரம் குளியலுக்கு பின் பதிவிசாக நல்ல அப்பாவாக அவர் அலுவலகம் கிளம்பிய பின் நான் அம்மா அக்கா சேர்ந்து அவரது துஷ்டத்தனத்தை குறித்து புகார் பேசி மனதை ஆற்றுவோம். புகார் படலம் முடிந்ததும் எனக்குள் சிறு குற்றவுணர்வு ஏற்படும். காலையில் அப்பாவிடம் எப்போதும் ஒரு புன்னகை இருக்கும். மிக சுறுசுறுப்பாக இயங்குவார். உட்காரவே மாட்டார். நடந்து கொண்டே செய்தி படிப்பார். நின்று கொண்டே சன் செய்திகள் கேட்பார். என்னை கண்டிப்பதானாலும் மிகக்குறைவான வார்த்தைகளே பேசுவார். வீட்டுக்கு யாராவது தேடி வந்தால் வாசலில் நிற்க வைத்து அவர் பாட்டுக்கு அரை மணிக்கு குறையாது பேசுவார். தினசரி சவரம் செய்து மோவாய் கறுத்திருக்கும். உலாவியபடியே அதில் எலுமிச்சம் தோல் வேறு பிசிறு படிய தேய்ப்பார். அடி, மிதி, கெட்ட வார்த்தைகளின் அப்பா மாலையிலே தோன்றுவார். அவருக்கு எதிராய் காலையின் பரிசுத்த வேளையில் ரகசிய கூட்டத்தை அவரது வீட்டுக்குள்ளே நிகழ்த்துவது தோதாக படவில்லை.



ஒரு மாலையில் டியூசன் முடித்து வீட்டுக்கு வந்தபோது அம்மா உடம்பெல்லாம் புலித்தடங்களுடன் தலையை பிடித்தபடி சுவரில் சாய்ந்திருந்தாள். குரல் அடைத்திருந்ததால் அவளால் அழ முடியவில்லை. எங்கள் வீட்டில் புதிதாய் நட்டு தினமும் தண்ணீர் விட்டு நான் வளர்த்திருந்த முருங்கைக்காய் தோற்றமுள்ள குரோட்டன் செடியை பிடுங்கி அப்பா விளாசி இருந்தார். நான் சென்று பார்த்த போது அவர் மகிழ்ச்சியாக எம்.ஜி.ஆர் பாட்டு பாடிக் கொண்டிருந்தார். ஆவேசமாக குரோட்டன்ஸ்களை பிழுது வீச மட்டுமே என்னால் முடிந்தது. பிறகு அவைகளை நறுக்கென்று முறித்தேன். அவருக்கு புற்று நோய் வரட்டும் என்று சபித்தேன். அம்மாவும் அக்காவும் கூட இதுபோல் சபித்திருக்கிறார்கள். காரணம் அப்பா வழி பாட்டி புற்று நோயால் மரித்திருந்தாள்.

அப்பா இறந்த போது என்னால் துளி கண்ணீர் கூட சிந்த முடியவில்லை. ஓரிரவு முழுக்க அவரது பிணமிருந்த கண்ணாடிப்பெட்டியை வெறித்தபடி அவரைக் குறித்து சிந்தித்தபடி இருந்தேன். சில மாதங்கள் தொடர்ந்து நள்ளிரவில் கனவில் தோன்றினார். பிறகு விழித்துக் கிடப்பேன். ஒவ்வொரு இரவும் தூங்க முயலும் போதே வியர்க்க ஆரம்பிக்கும்.

அப்பா குறித்த எந்த உவப்பான நினைவுகளும் தோன்றியதில்லை. அவை நிச்சயம் உள்ளே இருக்கும். ஆனால் மேல்தட்டின் முரண்பாடுகளும் கசப்பும் அவற்றை மேலெழாதபடி தடுக்கின்றன. ஒருவரது ஆளுமையின் பிரச்சனைகள் பெரும்பாலும் தன் பெற்றோரின் தவறான பாதிப்புகளால் ஏற்படுவதே என்று ஒரு கோட்பாடை வேறு வகுத்து வைத்திருந்தேன். அப்பாவிடம் இருந்து மீள்வதே என் வாழ்க்கைக் கடன். எப்போது யோசித்தாலும் அவரது தீமைகள், குறைபாடுகள், தவறுகள் வரிசையாக தோன்றும். உச்சி வெயிலின் தகிப்பில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு நிற்கையில் அவரைக் குறித்து நினைப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தேன்.



கடந்த சில நாட்களாக அப்பா கனவில் தோன்றிக் கொண்டிருக்கிறார். அப்போது நன்மை—தீமையின் இரு துருவங்களில் அவர் இல்லை. நடுவில் இருக்கிறார். மிக எளிதான செயல்களில் ஈடுபடுகிறார். அவற்றை ஒரு சிறுவனின் மிகை-ஆதர்சத்துடன் வியப்பாக கவனித்தபடி இருக்கிறேன். அவரது சாதாரண நடவடிக்கைகள் எனக்கு சாதனைகளாக பட்டிருக்க வேண்டும். சில கனவுகளில் அவர் என்ன செய்தார் என்பது நினைவில் இல்லை. எனக்கு கனவு மனநிலையை விட, முடிந்த பின்னான பிரக்ஞை மீதே ஆர்வம். அப்பா வந்து போன பின் மனதில் அலாதியான பூரிப்பு மற்றும் இனிமை. அப்பா ஒரு உற்சாக ஊக்கி ஆகி விட்டார்.

மனோதத்துவம் பேசும் அப்பா வெறுப்பு மன-இயல்பில் அவநம்பிக்கை கொள்கிறேன். அதை விட முக்கியமாய் அப்பா மீதான வெறுப்பு ஒரு பெரும் பொய். நான் அதை மிக கவனமாக கட்டுவித்து காப்பாற்றி வந்திருக்கிறேன்.

அவருக்காக என் வாசலை திறந்து வைத்திருக்கிறேன்.

Comments

அப்பா குறித்த எந்த உவப்பான நினைவுகளும் தோன்றியதில்லை. அவை நிச்சயம் உள்ளே இருக்கும். ஆனால் மேல்தட்டின் முரண்பாடுகளும் கசப்பும் அவற்றை மேலெழாதபடி தடுக்கின்றன

அதே...
உங்கள் பதிவில் அப்பாவை பற்றி படித்ததும் பலவித உணர்சிகள் ஏற்படுகின்றன.
சிறுபிராயத்தில் கொடுமைக்காரர் என்றும் இளைய பருவத்தில் யோசிக்காத முட்டாள்தனமானவர் என்றும் தோன்றியது.
அவர் கடந்த வயதுகளை நான் கடக்கும்போது, இதைபோல நடந்து கொண்டதற்குதானே அப்பாவை வெறுத்தோம்
( குறைவாக சம்பாதித்தது ,சக மனிதர்களிடம் எளிதாக ஏமாந்தது போன்ற பல ) ,
வேறு வழியில்லாமலோ தெரியாமலோ இப்போது அதையே செய்கிறோமே என்று தோன்றுகிறது.

இப்போதுதான் புரிகிறது நான் கொஞ்சம் கொஞ்சமாக என் அப்பாவாக மாறிக்கொண்டிருப்பதும் என் மகன்
சிறுவயது நானாக ஆகி கொண்டிருப்பதும் .
மாறுதல்களை ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கை தான் பார்க்க முடிகிறது.
நன்றி புன்னகை தேசமே
ஆம் கைலாஷ் அப்பாவுடன் நாம் தொடர்ந்து உரையாடியபடி உள்ளோம். அனுபவங்கள் தொடர்ந்து கற்றுத் தருகின்றன.
Unknown said…
//ஒரு மனிதரை வெறுக்கிறோமா நேசிக்கிறோமா என்பது தான் மிக்கபெரிய புதிர் என்று நினைக்கிறேன். // இது Relative ஆகத் தான் தோன்றுகிறது.

இன்றைக்கும் என்னால் அப்பாவை மன்னிக்க முடிவதில்லை. புரிந்து கொண்டிருக்கிறேன். அவர் செய்த தவறுகள் இமாலயத் தவறுகளாய் இப்போதும் தோன்றினாலும், ஏன் செய்தார் என்று இப்போது புரிந்து கொள்ள முடிகிறது... ஆனால், என் வெறுப்பை அவரால் மன்னிக்க முடியவில்லை. மன்னிக்க முடியாத தூரத்துக்கும் போய் விட்டார்.

//மனோதத்துவம் பேசும் அப்பா வெறுப்பு மன-இயல்பி// அப்படின்னா, ஒரு பெண்ணாக எங்கப்பா மேல என் கோபம் எதுக்கு? :-)

அப்பாவைப் புரிந்து கொள்ளும் பாதையில் பெரும் தூரம் வந்திட்டீங்க! வாழ்த்துகள்.
பிராயிடின் அப்பா வெறுப்பு கோட்பாடு ஒரு கோணம் மட்டுமே. கோட்பாடுகளை மீறியே வாழ்க்கை போகிறது. வெறுப்பு ஆகப்பெரிய தடை என்றாலும் தடை என்பதால் அது கடந்து விடக் கூடியதே. வாழ்க்கை நம்மை விடப் பெரியது என்ற புரிதல் மட்டும் போதும்.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...