Skip to main content

வெறுப்பு நேசம் எனும் புதிர்கள்

ஒரு மனிதரை வெறுக்கிறோமா நேசிக்கிறோமா என்பது தான் மிக்கபெரிய புதிர் என்று நினைக்கிறேன்.

அப்பாவை நேசிப்பதை ஒரு இயல்பு மீறிய செயலாகவே நம்பி வந்துள்ளேன். பதின்பருவத்தில் ஆளுமை முதிரத் தொடங்கனதில் இருந்தே அவருடன் முரண்பட்டு வந்திருக்கிறேன். பிறகு அவரது வன்மத்தை வெறுக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் என் ஆளுமையில் தெரிந்த அவரது குணாதசியங்களை வெறுக்க முனைந்தேன். சில வருடங்களுக்கு முன் அப்பா இறந்து போனார். அப்போது அவரை செத்துப் போக மாட்டாரா என்று ஏங்கிய நாட்கள் நினைவு வந்து திகைப்பூட்டின.

என் இளமையில் அப்பா மாலைகளில் ரொம்ப கொடுமைகள் செய்வார். காலையில் போதை தெளிந்து சவரம் குளியலுக்கு பின் பதிவிசாக நல்ல அப்பாவாக அவர் அலுவலகம் கிளம்பிய பின் நான் அம்மா அக்கா சேர்ந்து அவரது துஷ்டத்தனத்தை குறித்து புகார் பேசி மனதை ஆற்றுவோம். புகார் படலம் முடிந்ததும் எனக்குள் சிறு குற்றவுணர்வு ஏற்படும். காலையில் அப்பாவிடம் எப்போதும் ஒரு புன்னகை இருக்கும். மிக சுறுசுறுப்பாக இயங்குவார். உட்காரவே மாட்டார். நடந்து கொண்டே செய்தி படிப்பார். நின்று கொண்டே சன் செய்திகள் கேட்பார். என்னை கண்டிப்பதானாலும் மிகக்குறைவான வார்த்தைகளே பேசுவார். வீட்டுக்கு யாராவது தேடி வந்தால் வாசலில் நிற்க வைத்து அவர் பாட்டுக்கு அரை மணிக்கு குறையாது பேசுவார். தினசரி சவரம் செய்து மோவாய் கறுத்திருக்கும். உலாவியபடியே அதில் எலுமிச்சம் தோல் வேறு பிசிறு படிய தேய்ப்பார். அடி, மிதி, கெட்ட வார்த்தைகளின் அப்பா மாலையிலே தோன்றுவார். அவருக்கு எதிராய் காலையின் பரிசுத்த வேளையில் ரகசிய கூட்டத்தை அவரது வீட்டுக்குள்ளே நிகழ்த்துவது தோதாக படவில்லை.



ஒரு மாலையில் டியூசன் முடித்து வீட்டுக்கு வந்தபோது அம்மா உடம்பெல்லாம் புலித்தடங்களுடன் தலையை பிடித்தபடி சுவரில் சாய்ந்திருந்தாள். குரல் அடைத்திருந்ததால் அவளால் அழ முடியவில்லை. எங்கள் வீட்டில் புதிதாய் நட்டு தினமும் தண்ணீர் விட்டு நான் வளர்த்திருந்த முருங்கைக்காய் தோற்றமுள்ள குரோட்டன் செடியை பிடுங்கி அப்பா விளாசி இருந்தார். நான் சென்று பார்த்த போது அவர் மகிழ்ச்சியாக எம்.ஜி.ஆர் பாட்டு பாடிக் கொண்டிருந்தார். ஆவேசமாக குரோட்டன்ஸ்களை பிழுது வீச மட்டுமே என்னால் முடிந்தது. பிறகு அவைகளை நறுக்கென்று முறித்தேன். அவருக்கு புற்று நோய் வரட்டும் என்று சபித்தேன். அம்மாவும் அக்காவும் கூட இதுபோல் சபித்திருக்கிறார்கள். காரணம் அப்பா வழி பாட்டி புற்று நோயால் மரித்திருந்தாள்.

அப்பா இறந்த போது என்னால் துளி கண்ணீர் கூட சிந்த முடியவில்லை. ஓரிரவு முழுக்க அவரது பிணமிருந்த கண்ணாடிப்பெட்டியை வெறித்தபடி அவரைக் குறித்து சிந்தித்தபடி இருந்தேன். சில மாதங்கள் தொடர்ந்து நள்ளிரவில் கனவில் தோன்றினார். பிறகு விழித்துக் கிடப்பேன். ஒவ்வொரு இரவும் தூங்க முயலும் போதே வியர்க்க ஆரம்பிக்கும்.

அப்பா குறித்த எந்த உவப்பான நினைவுகளும் தோன்றியதில்லை. அவை நிச்சயம் உள்ளே இருக்கும். ஆனால் மேல்தட்டின் முரண்பாடுகளும் கசப்பும் அவற்றை மேலெழாதபடி தடுக்கின்றன. ஒருவரது ஆளுமையின் பிரச்சனைகள் பெரும்பாலும் தன் பெற்றோரின் தவறான பாதிப்புகளால் ஏற்படுவதே என்று ஒரு கோட்பாடை வேறு வகுத்து வைத்திருந்தேன். அப்பாவிடம் இருந்து மீள்வதே என் வாழ்க்கைக் கடன். எப்போது யோசித்தாலும் அவரது தீமைகள், குறைபாடுகள், தவறுகள் வரிசையாக தோன்றும். உச்சி வெயிலின் தகிப்பில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு நிற்கையில் அவரைக் குறித்து நினைப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தேன்.



கடந்த சில நாட்களாக அப்பா கனவில் தோன்றிக் கொண்டிருக்கிறார். அப்போது நன்மை—தீமையின் இரு துருவங்களில் அவர் இல்லை. நடுவில் இருக்கிறார். மிக எளிதான செயல்களில் ஈடுபடுகிறார். அவற்றை ஒரு சிறுவனின் மிகை-ஆதர்சத்துடன் வியப்பாக கவனித்தபடி இருக்கிறேன். அவரது சாதாரண நடவடிக்கைகள் எனக்கு சாதனைகளாக பட்டிருக்க வேண்டும். சில கனவுகளில் அவர் என்ன செய்தார் என்பது நினைவில் இல்லை. எனக்கு கனவு மனநிலையை விட, முடிந்த பின்னான பிரக்ஞை மீதே ஆர்வம். அப்பா வந்து போன பின் மனதில் அலாதியான பூரிப்பு மற்றும் இனிமை. அப்பா ஒரு உற்சாக ஊக்கி ஆகி விட்டார்.

மனோதத்துவம் பேசும் அப்பா வெறுப்பு மன-இயல்பில் அவநம்பிக்கை கொள்கிறேன். அதை விட முக்கியமாய் அப்பா மீதான வெறுப்பு ஒரு பெரும் பொய். நான் அதை மிக கவனமாக கட்டுவித்து காப்பாற்றி வந்திருக்கிறேன்.

அவருக்காக என் வாசலை திறந்து வைத்திருக்கிறேன்.

Comments

அப்பா குறித்த எந்த உவப்பான நினைவுகளும் தோன்றியதில்லை. அவை நிச்சயம் உள்ளே இருக்கும். ஆனால் மேல்தட்டின் முரண்பாடுகளும் கசப்பும் அவற்றை மேலெழாதபடி தடுக்கின்றன

அதே...
உங்கள் பதிவில் அப்பாவை பற்றி படித்ததும் பலவித உணர்சிகள் ஏற்படுகின்றன.
சிறுபிராயத்தில் கொடுமைக்காரர் என்றும் இளைய பருவத்தில் யோசிக்காத முட்டாள்தனமானவர் என்றும் தோன்றியது.
அவர் கடந்த வயதுகளை நான் கடக்கும்போது, இதைபோல நடந்து கொண்டதற்குதானே அப்பாவை வெறுத்தோம்
( குறைவாக சம்பாதித்தது ,சக மனிதர்களிடம் எளிதாக ஏமாந்தது போன்ற பல ) ,
வேறு வழியில்லாமலோ தெரியாமலோ இப்போது அதையே செய்கிறோமே என்று தோன்றுகிறது.

இப்போதுதான் புரிகிறது நான் கொஞ்சம் கொஞ்சமாக என் அப்பாவாக மாறிக்கொண்டிருப்பதும் என் மகன்
சிறுவயது நானாக ஆகி கொண்டிருப்பதும் .
மாறுதல்களை ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கை தான் பார்க்க முடிகிறது.
நன்றி புன்னகை தேசமே
ஆம் கைலாஷ் அப்பாவுடன் நாம் தொடர்ந்து உரையாடியபடி உள்ளோம். அனுபவங்கள் தொடர்ந்து கற்றுத் தருகின்றன.
Unknown said…
//ஒரு மனிதரை வெறுக்கிறோமா நேசிக்கிறோமா என்பது தான் மிக்கபெரிய புதிர் என்று நினைக்கிறேன். // இது Relative ஆகத் தான் தோன்றுகிறது.

இன்றைக்கும் என்னால் அப்பாவை மன்னிக்க முடிவதில்லை. புரிந்து கொண்டிருக்கிறேன். அவர் செய்த தவறுகள் இமாலயத் தவறுகளாய் இப்போதும் தோன்றினாலும், ஏன் செய்தார் என்று இப்போது புரிந்து கொள்ள முடிகிறது... ஆனால், என் வெறுப்பை அவரால் மன்னிக்க முடியவில்லை. மன்னிக்க முடியாத தூரத்துக்கும் போய் விட்டார்.

//மனோதத்துவம் பேசும் அப்பா வெறுப்பு மன-இயல்பி// அப்படின்னா, ஒரு பெண்ணாக எங்கப்பா மேல என் கோபம் எதுக்கு? :-)

அப்பாவைப் புரிந்து கொள்ளும் பாதையில் பெரும் தூரம் வந்திட்டீங்க! வாழ்த்துகள்.
பிராயிடின் அப்பா வெறுப்பு கோட்பாடு ஒரு கோணம் மட்டுமே. கோட்பாடுகளை மீறியே வாழ்க்கை போகிறது. வெறுப்பு ஆகப்பெரிய தடை என்றாலும் தடை என்பதால் அது கடந்து விடக் கூடியதே. வாழ்க்கை நம்மை விடப் பெரியது என்ற புரிதல் மட்டும் போதும்.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...