Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சுஜாதா விருது நிகழ்ச்சி 2: சில கோரிக்கைகள்



 
தமிழில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு இரு உத்தேசங்கள் இருக்கலாம். ஒரு எழுத்தாளனை வெளிச்சத்துக்கு கொண்டு வருதல். அல்லது ஏற்கனவே வெளிச்சத்தில் டாலடிக்கும் ஒருவரை மேலும் அங்கீகரித்தல். எப்படியும் வெளிச்சம் நல்லது தான். இரண்டாவதாய் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஆளுமைகள் தங்கள் அபிப்பிராயங்களை, விருப்பு வெறுப்புகளை, வாழ்க்கை நோக்கங்களை வெளிப்படுத்துதல் அல்லது ஸ்தாபித்தல். இங்கே ஒரு விஷயம் புலனாகி இருக்கும். அது விருது வாங்கும் எழுத்தாளர்களை பற்றி அல்லது அவரது புத்தகங்களை யாரும் விளக்கமாய் அணுகுவதில்லை என்பது. இரண்டாவது வருட சுஜாதா விருது நிகழ்வில் கவனிக்கத்தக்க கூர்மையான விசயங்களோடு மேற்சொன்ன முரண்பாடுகளும் இருந்தன.
நோபல் பரிசின் போது நாம் நோபல் என்ற புரவலரைப் பற்றியோ விருதை வழங்கும் ஆளுமையின் கருத்துக்களை பற்றியோ அலட்டிக் கொள்வதில்லை. நமது கவனம் முழுக்க விருது வாங்கியவரின் மீதே குவிகிறது. அவரைப் பற்றின குறிப்புகள் எழுதப்பட்டு வாசிக்கப்படுகின்றன. அவரது முக்கியமான நூல்கள் கடைகளில் புதுவரவு பகுதியில் பிரதானப்படுத்தப்படும். அவை பெருமளவில் விற்கப்படும். உலகம் பூரா மொழி பெயர்க்கப்படும். மேற்கில் ஒரு லோசாவை ஒரு விருதுக்காக மார்க்வெஸ் தேர்ந்தெடுத்து பொதுமேடையில் அரவணைத்து அரைமணிநேரம் பிரசங்கிப்பதில்லை. அல்லது விக்ரம் சேத்துக்கு விருது வழங்கும் ஒரு நிகழ்ச்சியை சல்மான் ருஷ்டி ஹைஜேக் செய்யப்போவதில்லை. அங்கே விருதை தேர்ந்தெடுக்கவும். புத்தகங்களை அறிமுகப்படுத்தி விளக்கவும் தொழில்முறை விமர்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ மனச்சாய்வுகளோ இருந்தாலும் அவர்கள் தங்கள் தொழிலை நேர்த்தியாக செய்பவர்கள். அவர்கள் எப்போதும் துணை பாத்திரங்கள். அப்படி இருப்பதில் புகார் அற்றவர்கள்.

தமிழில் அத்தொழிலை பகுதி நேரமாய் செய்வதற்கு ஒரு புனைவெழுத்தாளனோ அல்லது கவிஞனோ தான் இருக்கிறான். அவனும் இல்லாத பட்சத்தில், இரண்டாம் தரமாய், ஒரு மேடை பேச்சாளனோ, பத்திரிகையாளனோ, புரவலனோ அப்பாத்திரத்தை எடுத்துக் கொள்கிறான். இருசாராரும் விமர்சனத்தை ஒரு வேலையாக கருத மாட்டார்கள். அதனால் துணைபாத்திரத்தை ஏற்கவும் அவர்களுக்கு முடியாது. எப்போதும் இங்கு விருதுகளை தேர்ந்தெடுப்பவர்களும் மேடையில் கொடுப்பவர்களும் பேசுபவர்களும் தாம் ஒரே கதாநாயகர்கள். அவர்களது மேடையிலேயே விருதின் நிஜமான நாயகர்கள் சிறிது சிறிதாக குன்றிப் போகிறார்கள். கொஞ்ச நேரத்தில் இந்த அந்நியர்கள் ஏன் மேடையில் இங்கு ஓரமாய் தேவையின்றி அமர்ந்திருக்கிறார்கள் என்று விருதாளர்களை வியக்க தொடங்குகிறோம். சுஜாதா விருது நிகழ்வின் முக்கிய குறையாக இது இருந்தது.
உதாரணமாக விருதாளர்களில் அதிகம் அறிமுகமாகாத ஸ்ரீநேசன் யார், எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள், எந்த வகையை அல்லது பள்ளியை சார்ந்த கவிஞர் ஆகிய தகவல்கள் மேடையில் தந்திருக்க வேண்டும். இதை விளக்க வேண்டிய ஞானக்கூத்தனுக்கு முன் வந்த இந்திரா பார்த்தசாரதி ஒரு சாகித்ய அகாதமி ஜோக்கை நினைவு கூர்ந்தார். இ.பாவுக்கு சா.அ விருது கிடைத்திருப்பதை க.நா.சுவிடம் சொல்லும் ஒரு அகாதமி உதவியாளர் இ.பாவின் கிரக நிலை தான் அதற்கு காரணம் என்கிறார். ஆக இ.பாவிடம் இதை சொல்லி விட்டு அடுத்த நாள் பத்திரிகையில் கிரக ஒரு எழுத்தாளருக்கு பலன் காரணமாய் சாகித்ய அகாதமி விருது கிடைக்கப்படுவதன் விசித்திரம் பற்றி க.நா.சு எழுதினார். இந்த ஜோக் புரியாதனாலோ ஏனோ ஞானக்கூத்தன் சொல்கிறார்: “ஸ்ரீநேசன் ஏரிக்கரையில் வசிப்பவன் என்றொரு கவிதை எழுதியிருக்கிறார். அவருக்கு ஏரிக்கரையில் வசிக்கும் அந்த அம்மன் அருளால் தான் இவ்விருது கிடைத்திருக்கிறது என்று நம்புகிறேன்.
இதைத் தொடர்ந்து ஸ்ரீநேசனின் கவிதையல்லாத ஒரு கவிதையை வாசித்து அது ஏன் கவிதையாகிறது என்று சொல்லாமலேயே முடித்துக் கொண்டார். ஞானக்கூத்தனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அவர் மட்டுமே விருதாளரை பற்றி சில நிமிடங்களேனும் பேசியவர். அவரும் இப்படி ஏமாற்றி விட்டார் என்பதால் தான்.
இப்படி இந்நிகழ்ச்சியின் குணாதசியம் புரிந்த பின் நாம் இந்திய மரபுப்படி அதை ஏற்றுக் கொண்டு சமாதானம் அடைந்து மதன், பாரதி கிருஷ்ணகுமார் போன்ற பொழுதுபோக்கு பேச்சாளர்களின் உளறள்களை தாங்க தயாராகலாம். ஏன்? சாருவும், எஸ்.ராவும் பேசும் அந்த ஒரு மணிநேரத்துக்காக. இருசாராரும் நிச்சயம் ஏமாற்றவில்லை.
சாரு இம்முறை punching bag ஆக ஆர்.உண்ணியையும், மனுஷ்யபுத்திரனையும் எடுத்துக் கொண்டார். தமிழ் எழுத்தாளர்கள் பிற மொழிகளில் போதுமான அளவு அறிமுகமாகவில்லை என்பது அவரது முக்கிய புகார். தமிழில் தொழில்முறை விமர்சகர்கள் இல்லாத நிலையில் புத்தகங்களை வரலாற்றில் நிறுவும் பொறுப்பை பல்கலைக்கழக ஆய்வார்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். மலையாளத்தில் இருந்து ஏகப்பட்ட புத்தகங்களை இங்கே மொழியாக்கி கொண்டு வரும் நாம் ஏன் நம் எழுத்துக்களை ஆங்கிலத்துக்கு கொண்டு செல்வதில்லை என்றார். உண்மையில் ஆங்கிலம் தெரிந்த திறமையானவர்கள் தமிழர்களில் இருக்கிறார்கள். துரதிஷ்டவசமாக அவர்கள் இலக்கியத்துக்கு அந்நியமானவர்கள். பால் கறப்பதே தொழிலாக கொண்ட பசுவை போன்றவர்கள். ஹெமிங்வே சொல்வது போல் வீட்டுப்பசுவுக்கும் காளைச் சண்டையில் தோன்றும் காளைக்கும் உள்ள வித்தியாசம் நாய்க்கும் நரிக்குமானது. ஆகவே பல்கலைக்கழக ஆங்கில அறிவார்ந்த குமாஸ்தாக்கள் நவீன தமிழிலக்கியத்தை முன்னெடுக்க மெனெக்கட மாட்டார்கள்.
சாரு சுஜாதாவின் மொழி லாவகத்திற்கு ஏன் இங்கு ஒரு மரபு உருவாகவில்லை என்று கேட்டது சுவாரஸ்யமான கேள்வி. அதற்கு அவரே ஒரு சிறு விடையும் தந்தார். சுஜாதா வாசகர்கள் பெரும்பாலும் வெறும் ரஸிகர்கள். அவர்கள் சாம்பார் சாதத்தையும் ஞாயிற்றுக் கிழமை மேட்டினியையும் ரஸித்தது போல் சுஜாதாவையும் தரிசித்தார்கள். அவர்கள் அவரை தாண்டி வேறு யாரையும் படிக்கவில்லை. ரெய்மண்ட் கார்வரை படிப்பவர்கள் கார்வரை மட்டுமே படிக்க போவதில்லை. அவர்கள் முன்னே போய் ஹெமிங்வே பக்கமாவது வருவார்கள். தமிழில் அசோகமித்திரன் யார் என்று வினவுவார்கள். மினிமலிசம் என்றால் என்னவென்று யோசிப்பார்கள். சுஜாதாவுக்கு இந்த அதிர்ஷ்டம் நிகழவில்லை. மற்றொன்றும் உண்டு. சுஜாதாவின் உரைநடையில் சூட்சுமங்களை கவனித்து உள்வாங்குவதை விடவும் நாம் அவரை படியெடுக்க தான் ஆர்வம் காட்டினோம். தீவிர இலக்கியவாதிகள் ஏன் சுஜாதாவை புறக்கணித்தார்கள்? அவர்களுக்கு அவர் வெறும் ஜனரஞ்சகம் என்ற முன்முடிவு இருந்தது. அவரது பிரபல்யத்தின் புகைமூட்டம் மீது அச்சமும் இருந்தது.
சாரு ஆர்தர் கிளார்க்கின் “இறைவனின் ஒன்பது மில்லியன் பெயர்கள் கதையை குறிப்பிட்டு அதை சுஜாதாவின் “தேவன் வருகையோடு ஒப்பிட்டார். கடவுளை பற்றின இக்கதைகளில் “தேவன் வருகை தான் மேல் என்றார் சாரு. முன்னர் அவர் கு.பா.ரா ஆங்கிலத்தில் சென்றிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும் என்று சொன்னது போல் இருந்தது இது. ஆர்தர் கிளார்க்கின் கதை மேலும் காட்சிபூர்வமானது. கவித்துவம் செறிந்தது. சுஜாதாவினுடையது சாமர்த்தியமானது. ஆனால் இரு கதைகளின் மையமும் ஒன்றே. இதை சாரு அடையாளம் கண்டது நமக்கு நிச்சயம் புதிய திறப்புகளை தருகிறது. ஏனென்றால் எளிமையாக தோற்றமளிக்கும் இரு கதைகளும் புரிய சற்று சிரமமானவையே.
எஸ்.ரா இரண்டு விசயங்களை முன்னிறுத்தி பேசப் போவதாக தெரிவித்தார். சுஜாதா தன் உரையில் புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்துவதில் தீரா ஆர்வம் கொண்டிருந்ததால் கவிதைகள் பற்றியும், சுஜாதா நல்ல பல துப்பறியும் கதைகளை எழுதி உள்ளதால் பொதுவாக துப்பறியும் புனைவுலகம் பற்றியும். இரண்டைப் பற்றியும் பொதுவாக பேசும் போது எஸ்.ரா மற்றொரு தமிழர் முன்முடிவை சுட்டினார். அது தமிழில் பக்தி இலக்கியம் அல்லது மரபிலக்கியம் நவீன வாசகனுக்கு தேவை அற்றது என்பது. இந்த ஒவ்வாமை கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாகவே தீவிரர்களிடையே உண்டு. எஸ்.ரா அருணகிரி நாதர் வெறும் முருக பக்தி கவிஞர் அல்ல, அவரால் சொற்களை நுட்பமாய் கோர்த்து சூனியத்தை நம்முள் உருவாக்கி காட்ட முடியும் என்றார். நகுலன் கவிதைகளின் சித்துகள் ஏற்கனவே அ.கி.நாவிடம் இருந்தன என்றார். எலியட்டின் பிரபலமான மரபும் நவீன இலக்கியமும் பற்றின கட்டுரையை மேற்கோள் காட்டினார். மனுஷ்யபுத்திரனின் கதாபாத்திரத்தின் வருகை கவிதை பற்றி குறிப்பிட்டு அதன் ஒரு புதிய பரிணாமத்தை தொட்டுணர்த்தினார். அடுத்து ஏன் துப்பறியும் நிபுணர் பாத்திரம் உருவானது என்பதன் வரலாற்றுக் காரணத்தை (ஏற்கனவே அவர் ஒரு உயிர்மை கட்டுரையில் குறிப்பிட்டது) சொல்லி விட்டு துப்பறியும் புனைவுக்கு உலகம் முழுக்க முக்கியத்துவம் தரப்படுவதை குறிப்பிட்டார். நாம் அதை வெறும் ஜனரஞ்சகமாகவே இன்றும் கருதுகிறோம். ஆனால் துப்பறியும் எழுத்து குற்ற மனதின் இருண்ட பக்கங்கள் மீது விசாரணை கொள்கிறது. இதனால் அவ்வெழுத்து முக்கியமானது. சுஜாதாவின் துப்பறியும் எழுத்து இருளை நோக்கி செல்கிறதா என்று எஸ்.ரா சொல்லவில்லை; மாறாக சுஜாதா தன் கதைப்போக்கில் ஏகப்பட்ட சிறுபாத்திரங்களை நுட்பமாக சித்தரித்துள்ளதை, அவரது புனைவின் பின் பல மனவியல் சரடுகள் உள்ளதாய் சொன்னார். வெல்லக்கட்டியை இழுத்துக் கொண்டோடும் எறும்பைப் போல் அவர் பெரும்பாலும் தஸ்தாவஸ்கி பக்கமே நகர்ந்தார். உலக துப்பறியும் இலக்கியம் அல்லது தமிழ் துப்பறியும் எழுத்து பற்றி அலச அவர் முயலவில்லை அல்லது அதற்கு அவகாசம் வாய்க்க இல்லை. ஆனால் எஸ்.ராவின் பேச்சின் முக்கிய கவர்ச்சியே இந்த துண்டு துண்டான அவதானிப்புகளாய் இருந்தன.
இந்த கூட்டத்தில் அர்த்தபூர்வமாய் பேசப்பட்ட பகுதிகளில் அநேகமானவை சுஜாதா குறித்தவை என்பதால் சுஜாதாவை கவனிப்போம். சாரு இவ்வருட நிகழ்ச்சியிலும் சுஜாதா ஒரு மேதை என்பதை அழுத்தி சொன்னார். இது உண்மை இல்லை. தமிழில் அவரை விட அதிகம் சாதித்தவர்களை விட அவர் அதிக திறமையானவராக இருந்திருக்கலாம். தமிழ் இலக்கியத்தின் காம்பிளி அவர்; சச்சின் அல்ல. மேதை என்பவன் தன் கலாச்சாரம் அல்லது அறிவு வெளி மீது தன் தனித்துவமான போக்கு காரணமாகவும் புது கண்டுபிடிப்புகள் காரணமாகவும் அழுத்தமான தடங்களை பதிப்பவன். ஒரு ஓட்டத்தின் போக்கை மாற்றி அமைப்பவன். சுஜாதா தன் சிறகுகளை தானே கத்தரித்துக் கொண்டு ஒரு மட்டத்திலேயே பறந்தவர். அவரது நாடகங்களின் தொகுப்பை படிக்கும் போது இது விளங்கும். ஊஞ்சல் எழுதின அதே சுஜாதா தான் அதற்கு முன்னும் பின்னும் அசட்டுத்தனமான மத்தியவர்க்க நாடகங்களையும் எழுதுகிறார். அதை விட அசட்டுத்தனமான ஏகப்பட்ட நாவல்களையும் எழுதியுள்ளார். சுஜாதா மேதை என்பதால் அல்ல ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதாலே கூட நாம் உணர்ச்சிவசப்படாமல் சிலாகிக்காமல் அவரை படிக்க முடியும்.
சுஜாதாவின் ஒரு முக்கிய பங்களிப்பு நாம் நன்றாக அறிந்தது. அது அவர் தமிழ் உரைநடைக்கு புத்துணர்ச்சி அளித்தார் என்பது. எதையும் எதிர்பாராத விதத்தில், சுருக்கமாக, எளிதாக சொல்ல அவருக்கு முடிந்தது. அடுத்து, அவர் நவீன மனதின் பல அபத்தங்களை சிறுகதைகளில் சித்தரித்தார். கூட்டத்தில் சுஜாதா ஒரு இலக்கியவாதிதான் என்று முத்திரை விழவில்லையே என்று மாறி மாறி குத்தினவர்கள் இவ்விஷயத்தை குறிப்பிடவில்லை. தமிழ்ப் புனைவில் அவரது இடம் ஒரு நவீனத்துவவாதியாக இவ்விதம் தான் உறுதிப்படுகிறது. பாரதிகிருஷ்ணகுமார் நினைப்பது போல், அவர் சுவாரஸ்யமாக, தளுக்காக, தமாஷாக எழுதினார் என்பதால் அல்ல.
பொழுதுபோக்கு பேச்சாளர்கள் நார்ஸிஸஸ் என்ற கிரேக்க மித்தாலஜி பாத்திரம் ஒன்றை நினைவுபடுத்துகிறார்கள். அவனுக்கு எங்கு நின்றாலும் தன் அழகு மட்டும் தான் தெரியும். அவன் காதலி முன்னால் வந்து என்னைப் பார் என்று கெஞ்சுவாள். ஆனால் நார்ஸிஸஸால் அது முடியாது. தன் முன் நிற்கும் தன்னையே பார்த்து சிலாகிப்பான். அவன் எல்லாரையும் பார்ப்பான் ஆனால் யாரையும் பார்க்க முடியாது.

பத்மராஜனின் ஒரு பழைய மலையாள படமான கூடெவிடெயில் சுகாசினி ஒரு ஆங்கில பள்ளி ஆசிரியை. அவரிடம் தலைமை ஆசிரியர் தன்னை வந்து பார்க்க உத்தரவிட்டு வகுப்பிற்கு அட்டெண்டர் அனுப்புவார். அப்போது சுகாசினி பாடம் நடத்திக் கொண்டிருக்கும் இரண்டே நொடிகள் வரும். வெர்ட்ஸ்வொர்த்தின் கவிதை. அந்த ஒரு சில நொடிகள் படத்திற்கு முக்கியமே அல்ல. ஆனால் அதற்குள் சுகாசினி பாத்திரம் கற்பனாவாத கவிதை மரபு என்றால் என்ன என்று ஒரே வரியில் விளக்கி விடுவார். பத்மராஜனின் இந்த அக்கறையையும் எளிமையையும் பாருங்கள். ஆனால் ஒரு மூன்று மணிநேர நிகழ்ச்சியில் விருதாளர் அல்லது விருது பெற்ற புத்தகம் பற்றி நேர்த்தியாய் அவதானிக்க யாருக்கும் அக்கறை இல்லை. சம்மந்தமில்லாத விசயங்களை பற்றி அரை மணிநேரம் வேடிக்கைகள் உதிர்த்து விட்டு வெறுமனே ஒருவர் ஏரிக்கரையில் வசிப்பவர் என்றும் மற்றவர் பரதவர் சமூக வாழ்வியல் தகவல்களை தருகிறார் என்றோ சொல்வதல்ல ஒருவர் இப்படியான இலக்கிய நிகழ்ச்சியில் செய்ய வேண்டியது.

இப்படியான நிகழ்ச்சிகளில் யாரும் பேசட்டும். ஆனால்
பேசுவது முக்கியமானதாக நேரடியாக எளிதாக இருக்கட்டும்.
ஒரு போர்னோ படத்தில் கூட இரண்டரை மணிநேரம் நிர்வாணக் குளியலை சகித்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் பொழுதுபோக்கு பேச்சாளர்கள் வருவதற்கு முன் தங்களை கண்ணாடியில் சில மணிநேரம் பார்த்து சிலாகித்து விட்டு வரட்டும். கடவுளை பற்றி பேச அழைத்தால் “எனக்கு கடவுளை பல வருடங்களாகத் தெரியும் என்று ஆரம்பிப்பதை தவிர்க்க வேண்டும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...