Skip to main content

நகுலன்: ஒரு ஆளுமை, பல பார்வைகள் - ஆர்.அபிலாஷ்


இன்மை.காமில் நகுலன் சிறப்பிதழுக்காக அவரைப் பற்றி எழுத்தாளர்களிடம் பேட்டி எடுத்த போது இவ்வளவு வேறுபட்ட கருத்துக்கள் தமிழில் வேறெந்த கவிஞனைப் பற்றியும் எழுமா என வியப்பேற்பட்டது. சில எழுத்தாளர்களை அவர்களின் பின்புலம், சிந்தனைப்பள்ளி, அரசியல் சார்ந்து வெறுக்கலாம். படிக்கலாமலேயே நிராகரிக்கலாம். கடுமையாக திட்டலாம். அது போல் கொண்டாடலாம். ஆனால் வெவ்வேறு விதமாய் ஒருவரது கவிதைகளை வாசகன் வாசித்து அர்த்தப்படுத்துவது, அதன்வழி பல முரண்பட்ட கருத்துநிலைகளை அடைவது என்பது வேறு. நகுலனுக்கு இது நிகழ்கிறது.


குறியீட்டு கவிஞனான பிரமிளைக் கூட கிட்டத்தட்ட ஒரே அர்த்தநிலையில் தான் வாசிக்கிறோம். ஆனால் நகுலன் எழுதுகிற “ராமசந்திரனா என்று கேட்டேன்” கவிதை என் நண்பர் ஒருவருக்கு அடையாளத்தின் அபத்தம் பற்றின பிரதியாக தோன்றுகிறது. எனக்கு இது பல தரப்பட்ட சுயங்கள் தனக்குள்ளதாய் உணர்கிற ஒருவன் எதுவுமே தான் இல்லையோ, வெறும் பிம்பங்களோ என உணரும் பரிதவிப்பை பற்றிய கவிதையாக தோன்றுகிறது. இரண்டுமே சரிதான். இன்னும் பத்து பேரும் பத்து விதமாய் முற்றிலும் மாறுபட்டு தோன்றலாம். ஒருவருக்கு இது வெறும் திருகின வாக்கியங்கள், கவிதை அல்ல என தோன்றலாம். அதுவும் நியாயம் தான். இதற்கு இரு காரணங்கள்.

நகுலன் தமிழில் ஒரு தனி தத்துவத்தை உருவாக்குகிறார். நீட்சேயின் சிந்தனை, தர்க்க அறிவு, தொலைநோக்கு அவருக்கு இல்லையென்றாலும் கிட்டத்தட்ட நகுலன் அவரை மாதிரி தான். அவரைப் போன்று முன்போ பின்போ இன்னொருவர் இல்லை. அவரது அடிப்படை வினா “நான்” என்பது என்ன என்பது. நான் என்றால் தனி அடையாளம் என்று ஒரு புறமும், அது ஆன்மாவின் மீதுள்ள சட்டை என வேதாந்திகள் இன்னொரு புறமும் கூறுவார்கள். ஆனால் நகுலன் “நான்” என்பது பொய்த் தோற்றம் என்பது மட்டுமே நமது பிரச்சனை அல்ல என்கிறார். “நீ”, “நாம்”, “அவர்கள்” “அது” எல்லாமே “நானின்” பல சொரூபங்கள் என்கிறார். இது கூட மதங்களும், மேற்கத்திய, கீழைத்தேய தத்துவங்களூம் பேசின கருத்து தான். “நான் யோசிக்கிறதனால் தான் நானே இருக்கிறேன்” எனும் டெகார்டெயின் பிரபல வாக்கியம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நகுலன் அடுத்த படி போய் இவை – அதாவது நான், நீ, நாம், அவர்கள், அவன், அவள், அது, நாற்காலி, சுசீலா – எதுவுமே பொய்யில்லை என்கிறார். எல்லாமே ஒரு ஆளின் வெவ்வேறு சுயங்கள்.
இப்படி யோசிக்கிற நகுலனுக்கு அடிப்படையாய் தான் யார் என்கிற கேள்வியும் இல்லை. அதற்காய் பற்றிக் கொள்ள கொம்பாய் அவர் கடவுளை நாடுவதும் இல்லை. “இதுவும் இல்லை அதுவும் இல்லை” என சுயத்தை ஒவ்வொரு சட்டையாய் கழற்றி போட்டுக் கொண்டே போகிறார். இந்த கழற்றலின் சுதந்திரம் தான் வாழ்க்கையின் பொருளாக, ஒரு விடுதலையாக அவரிடம் இருக்கிறது.
நகுலன் எழுதிய பல சிறப்பான வரிகள் தமிழின் தனி கண்டுபிடிப்புகள். “மனம் ஊர்ந்து போகிறது, பார்க்க பயமாக உள்ளது” என்பது அதில் ஒன்று. மனம் ஊர்ந்து போவதை பார்ப்பது ஒரு ஆள். ஊர்கிற மனமும் அதே ஆள். பார்க்கையில் இது பயமான ஒன்று என நினைப்பது மூன்றாவது ஆள். இந்த வெளியில் இருக்கும் மூன்றாவது ஆளும் நகுலனே. உற்று தன் மனதை கவனித்தவர்களுக்கே மனதின் இந்த நுட்ப நடனம், தோலுப்புகள் புரியும். நகுலனிடம் அந்த அவதானிப்பு இருந்துள்ளது.

நகுலனிடம் உள்ளது ஒரு மையமற்ற சுயம். இது இன்றைய பின் – அமைப்பியல், பின்நவீனத்துவ காலத்தில் நமக்கு மிகவும் நெருக்கமாய் படுகிறது. இன்று பல்வேறு ஊடக பிம்பங்கள், அதிகார சக்திகள் நம்மை சூழ்கின்றன. நம் குரலும் பார்வையும் தொடர்ந்து அமுக்கப்படுகின்றன. இன்று நாம் நம்மை தனித்து வலியுறுத்தி ஒலிக்க வைக்க முடியாது. நான் இப்படியானவன் என கூறும் நம்பிக்கையை இழந்து விட்டோம். எந்த பிடிப்பும் அற்று வாழ்கிறோம். அதேவேளை நம்மை ஒரு அமைப்போ ஊடகமோ பக்கத்தில் உள்ள இன்னொரு ஆளோ பயன்படுத்திக் கொள்வாரோ என்கிற பயம் இன்று ஆழமாய் வேரூன்றி இருக்கிறது. அதனால் ஒலிக்கும் பல்வேறு குரல்களில் ஒன்றாய் நம்மையும் மாற்றிக் கொள்கிறோம். மீடியாவில் ஆவேசமாய் பங்கேற்கிறோம். பிறகு நம் குரல் கூச்சலில் மறைந்து போக இன்னொருவரின் குரலை மிமிக்றி பண்ணுகிறோம். இதை அடுத்து இன்னொருவரின் குரலை போல செய்கிறோம். இதற்கு முடிவில்லை. இப்படி பண்ணி பண்ணி நாம் காணாமல் போகிறோம். இதை எழுத்தில், நடிப்பில், படைப்பாக்கத்தில், மீடியாவில் எங்கும் பார்க்கிறோம். ஆனால் இப்படி போல செய்து காணாமல் போவதை விட தப்பிக்க நமக்கு வேறு வழியில்லை. இதையே தான் நகுலனும் இருப்பின் நெருக்கடியை கடக்க தத்துவார்த்தமாய் கவிதைகளில் செய்கிறார். நமக்கு நகுலன் நெருக்கமாய் இருப்பதற்கு இது ஒரு பிரதான காரணம். அவரும் நம்மைப் போல் நொடிக்கொரு சட்டை உரிக்கும் ஒரு பாம்பு.

நகுலனின் படைப்பு மொழி, பாணி முற்றிலும் புதிது. அதற்கு சித்தர் மரபின் தன்மை உள்ளதாய் சுகுமாரனும் யவனிகாவும் பேட்டியில் கூறி இருக்கிறார்கள். ஆனால் நவீன கவிதையில் அவரைப் போல் இன்னொருவரை நான் ஆங்கிலத்திலோ தமிழிலோ படித்ததில்லை. ஆனால் சு.ரா, பிரமிள் போல் சிலரை காட்ட முடியும். மனுஷ்யபுத்திரனைப் போல் ஆங்கில மெட்டாபிசிக்கல் கவிஞர்களும், சுகுமாரன், சில மலையாளக் கவிஞர்கள், உலகக்கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் நகுலன் ஒரு சுயம்பு. அதனாலே அவர் தனதான தடத்தை தோற்றுவிக்கையில் நிறைய சறுக்கி இருக்கிறார். அவரது தொகுப்பில் பெரும்பாலானவை அப்படி சறுக்கி விழுந்த கவிதைகளே. சிலதோ அழகான கவிதைக்கான சில உதிரி வரிகளாக இருக்கும். ஆனால் அது ஒரு சுயம்பு கவிஞனால் தவிர்க்க முடியாத சறுக்கல்கள். நகுலனை மேம்போக்காய் மேய்கிறவர்களுக்கு அவர் ஒரு கவிஞரே அல்ல எனத் தோன்றலாம். அல்லது வெறும் துணுக்கு வரிகளை எழுதியவர் என நினைக்கலாம். அப்படி யோசிக்கவும் அவர்களுக்கு சுதந்திரம் உண்டு தான். ஆனால் நகுலன் ஒரு கராறான நவீன கவிதை வடிவை பிரமிள், ஆத்மாநாம் போல் தழுவியதில்லை என்பது தான் அவர் இத்தகைய தாக்குதல்களுக்கு ஆவதற்கு பிரதான காரணம். அவரைப் போன்ற நவீன தன்மை குறைவான வேறு இரு கவிஞர்கள் தேவதேவன் மற்றும் மனுஷ்யபுத்திரன். இவர்களையும் கவிஞர்களாக ஏற்காதாவர்கள் இருக்கிறார்கள். கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய முரண்பாடுகளின் விளைவு தான் இத்தகைய மறுப்புகள்.

நகுலனை எதிர்த்த இன்னொரு முக்கிய தரப்பு ஜெயமோகனுடையது. நகுலன் ஜெயமோகனை எரிச்சலூட்டுகிறார் என்பது தெளிவு. ஏன் என நாம் யோசிக்க வேண்டும். ஜெயமோகனுக்கு இது போல் காப்கா, ஹெமிங்வேயும் எரிச்சலூட்டுகிறார்கள். சொல்லப் போனால் அவருக்கு இருத்தலிய, மறுப்புவாத எழுத்தாளர்கள் மொத்தமாய் எரிச்சலூட்டுகிறார்கள். இந்திரன் சுட்டுவது போல நகுலன் இந்த மேற்கத்திய இருத்தலிய கவிஞர்களின் மரபில் வந்து இந்திய வேதந்தத்தை வெட்டி செல்பவர். அதாவது இந்திய, மேற்கத்திய இருத்தல் சார்ந்த கருத்தாக்கங்களை தனதான முறையில் இணைப்பவர். முக்கியமாக அவரிடம் உள்ள பிடிப்பின்மை நம் வேதாந்தத்தில் உள்ளது தான். ஒரே வித்தியாசம் வேதாந்திகள் வாழ்க்கை இன்மையானது, வெறும் சூன்யம் என்று விட்டு ஒரு பேருண்மையை தழுவிக் கொள்வார்கள். இது தான் இன்மையில் இருந்து முழுமை நோக்கிய அவர்களின் பயணமாக இருக்கும். இப்பயணத்தை நாம் தேவதேவனிடம் காண்கிறோம். தேவதேவன் பூமியில் இருந்து வானம் நோக்கி ஏகும் ஒரு மரமாக, பறந்து பூரணத்துவத்தை தொட முயலும் ஒரு பறவையாக இருக்கிறார். ஆனால் நகுலன் உண்மையை சட்டையாக வெறுமனே உரிந்து கொண்டே இருக்கிறார். அவர் எந்த பேருண்மையையும் – அதாவது ஒரு ஆன்மீக மையத்தை – ஏற்பதில்லை. அதனால் தான் ஒரேவித விசாரம் கொண்ட இரு கவிஞர்களில் தேவதேவனை கொண்டாடும் ஜெயமோகன் நகுலனை கடுமையாய் மறுக்கிறார். ஏனென்றால் நகுலன் பூரணத்துவத்தை ஏளனம் செய்கிறார். வாழ்க்கையில் ஒருவனால் எதையும் பற்றிக் கொள்ள இயலாது, அப்படி ஒன்றை அடைந்து பூரணமடைவதாய் எண்ணுவது ஒரு சுயபாசாங்கு என்கிறார் நகுலன். இந்த பூரணமின்மை, மையமின்மை தான் ஜெயமோகனை கடுமையாய் எரிச்சலூட்டுகிறது. நான் மேலே குறிப்பிட்ட காப்கா, ஹெமிங்வேயிடமும் இந்த பூரணமின்மை உள்ளது. ஜெயமோகன் கூறியதை தான் போகன் சங்கர் தனது பேட்டியில் “நோய்மையை” மட்டும் எழுதிய, அதேவேளை வாசகனின் நோய்மையை குணப்படுத்த தெரியாத எழுத்தாளன் நகுலன் என வேறு மொழியில் கூறி இருக்கிறார்.

நான் சொன்னதற்கு முற்றிலும் மாறுபட்டு தமிழவன் கூறியிருப்பதை நீங்கள் கவனிக்கலாம். தமிழவனிடம் முரண்பட்டு இந்திரன் பேசி இருக்கிறார். முற்றிலும் வித்தியாசமாக நகுலன் மனிதர்களை நேசித்த ஆள் என எஸ்.ரா கூறுகிறார். நேசிக்க நம்ப வேண்டும். மனிதர்களை நகுலன் நம்பினார் என்பது நிச்சயம் வித்தியாசமான பார்வை. இப்படி ஒவ்வொருவரிடமும் வேறுபட்ட பார்வைகள் உள்ளன. ஆனால் ஒன்று – அனைவரும் நகுலனை ஒரு சரக்கடித்து பித்து பிடித்து உளறுகிற கலக ஆளூமையாக பிம்பம் கட்டியமைத்த ஒரு தரப்பினரை விமர்சிக்கிறார்கள். நகுலன் மறைந்த போது எழுதப்பட்ட கணிசமான அஞ்சலிக் கட்டுரைகள் அப்படியானவை என நாம் அறிவோம். ஆனால் இன்று நகுலனை வெறும் ஒரு வயதான ஆளாக, நினைவு பிறழ்ந்தவராக ஒரு கூண்டு மிருகம் போல் பார்க்க வேண்டாம் என நாம் நினைக்க தொடங்கி இருக்கிறோம். இங்கு கருத்து கூறியுள்ளவர்கள் மீண்டும் நகுலனின் ஆளுமை மீதல்லாமல் அவரது கவிதைகள் நோக்கி பார்வையை குவித்திருப்பதை கவனிக்கலாம். இது வரவேற்கத்தக்க போக்கு.


நகுலன் குறித்து ஏராளம் எழுதப்பட்டுள்ளன. அவர் அதற்கு தகுதியானவர் தாம். இந்த சிறப்பிதழில் உள்ள பதிவுகள் நகுலன் எனும் ஒரு ஆழியில் எழும் சிறு அலைகள். மேலும் பல அலைகள் எழட்டும். நவீன கவிதைக்குள் புதிதாய் அடியெடுத்து வைக்கிற ஒவ்வொருவரும் இந்த அற்புதமான கவி ஆளூமையை அறிந்து கொள்ள இது உதவட்டும்.

நன்றி: www.inmmai.com இதழ் 8

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...