Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

அமேசான் காட்டில் தொலைந்த என் பார்சல்


அமேசானில் நான் ஆர்டர் பண்ணின பொருள் ஒன்று மூன்று நாட்களாய் தாமதாகிக் கொண்டிருந்தது. கஸ்டமர் கேர் ஆட்கள் இன்னிக்கு வந்திரும், இப்போ வந்திரும் என விளையாட்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கொரியர் சேமிப்புக் கிடங்கின் முகவரியையோ தொடர்பு எண்ணையோ தரவில்லை. ஆனால் ரொம்ப ஒழுங்காக சமர்த்தாக என்னிடம் தினமும் நான்கு முறையாவது அவர்களாகவே போன் பண்ணி மன்னிப்பு கேட்பதும், இதோ ரெண்டு மணிநேரத்தில் வந்து விடும் என பொய் சொல்வதுமாக தொடர்ந்தது.

எந்திரத்தனமாக பதில் சொல்கிறார்கள் எனத் தோன்ற ஒரு கொரியர் ஆள் மூலமாக அவர்களின் சேமிப்புக் கிடங்கின் (வேர் ஹவுஸ்) முகவரியை தெரிந்து கொண்டு போனேன். அங்கே போன போது அமேசான் என சரியாக தான் பெயர் வைத்திருக்கிறார்கள் எனத் தோன்றியது. அது ஒரு குட்டிக் காடு. காட்டில் திசை தவறினால் சுற்றிக் கொண்டிருக்க வேண்டியது தான் என்பார்கள். அங்கே மூட்டை மூட்டையாய் பார்சல்கள். இரவு பத்து மணி வரை பார்சல்களை ஆட்கள் எடுத்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு வேலை பார்த்தும் தேங்கி நிற்கிற பொதிகளை வெளியேற்ற முடியவில்லை என்றார்கள். பொதுவாக புது பையன்கள் தான் வேலை பார்க்கிறார்கள். சீனியர்கள் பாவனை பண்ணிக் கொண்டு சோம்பி நிற்கிறார்கள். அங்கே போகும் வரை என் பார்சல் தாமதமாவதற்கு ஆள் குறைவே காரணம் என நினைத்தேன். மழை, தீபாவளி நெரிசல் என பல காரணங்கள் தோன்றின. என்னை தொடர்பு கொண்ட கஸ்டமர் சர்வீஸ் ஆட்களும் இதையே கூறினர். என்னைப் போல் வேறு பலருக்கும் இரண்டு வாரங்கள் வரை பொருட்கள் தாமதமானது பற்றி பேஸ்புக்கில் படித்தேன்.
ஆனால் உண்மைக் காரணம் இவை எதுவும் அல்ல என போன போது தான் அறிந்தேன். அமேசான குரியர் அலுவலகம் அல்லது சேமிப்புக் கிடங்கு ஒழுங்காக சீராக இயங்கவில்லை. அன்றன்றைக்கு வந்து குவிகிற பொதிகளை இடத்தை பொறுத்து பொறுக்கிப் போகிறார்கள். சிலர் என்னால் பம்மல் என்றால் போக முடியாது என்கிறார்கள், சிலர் சைதாப்பேட்டை என்றால் போகிறேன் என்கிறார்கள். பொருட்களை அவற்றின் அஞ்சல் தேதி அல்லது அவசரம் பொறுத்து அனுப்புவதில்லை. ஆனால் உடனடி தபால் வசதி அமேசானில் உண்டு. அதற்கு கூடுதல் பணம் செலுத்தினால் அத்தனைய பார்சல்களுக்கு முன்னிரிமை கொடுக்கிறார்கள். இந்த அவசரத்தில் வழக்கமான பார்சல்கள் எங்கோ பின்னுக்கு தள்ளப்பட்டு காணாமல் போகின்றன.
என்னுடைய பார்சலை கொண்டு வந்தவர் அழைத்த போது நான் போனை எடுக்கவில்லை. நான் திரும்ப அழைத்த போது அவர் மறுநாள் தருகிறேன் என்றார். ஆனால் மறுநாள் மட்டுமல்ல அடுத்த மூன்று நாட்களும் அவர் விடுப்பில் போய் விட்டார். அவர் அலுவலகத்தில் என் பார்சலை எங்கோ ஒப்படைக்க அது தொலைந்து விட்டது. அதாவது அவர்களின் அலுவலகம் எனும் காட்டின் பெரும் புதர் ஒன்றுக்குள் மாட்டி விட்டது. திரும்ப தருகிற பொருளை ஒழுங்காய் ஒரு இடத்தில் வைக்கிற வழக்கம் அங்கு இல்லை. பொருட்கள் பல இடங்களிலாய் இறைந்து கிடக்கின்றன. நான் நேரடியாக போனதனால் ஒருவர் எனக்காய் ஒரு மணிநேரம் பல மூட்டைகளில் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. ஏனென்றால் மூட்டைகளை இடம் பொறுத்து பிரிக்காமல் எல்லாம் குழம்பிப் போய் கிடந்தன. கிண்டி மூட்டையில் அண்ணா நகர் பொருட்கள் இருந்தன.
அவர் என்னிடம் நாளை தேடிப் பார்த்து சொல்கிறேன் என்ற போது கஸ்டமர் சர்வீஸில் அழைத்து “உங்கள் பொருள் எங்கள் குரியர் பையனிடம் உள்ளது. நாளை வந்து விடும்” என்றார்கள். நான் சொன்னேன் “எந்திரத்தனமாய் நீங்கள் உங்கள் கணினியைப் பார்த்து எனக்கு பதிலளிக்கிறீர்கள். ஆனால் நான் உங்கள் சேமிப்புக் கிடங்கில் இருந்து நிலவரத்தை பார்த்து சொல்கிறேன். என் பொருள் தொலைந்து விட்டது. அது நாளை வராது”. பிறகும் அவர் அதே பதிலை ரோபோ போல் சொல்ல நான் கத்தினேன். அவர்களைப் பொறுத்த வரையில் கணினியில் குரியர் ஆட்கள் dispatched என்று அப்டேட் செய்தால் பொருள் குரியர் ஆளிடம் இருக்கிறது எனப் பொருள். ஆனால் இரு நாட்களாக என் பார்சலை எந்த குரியர் ஆளும் எடுக்கவில்லை. ஏனென்றால் அது எங்கே என்றே அவர்களுக்கு தெரியவில்லை. இவ்விசயம் கஸ்டமர் சர்வீசுக்கு புரியாமல் தொடர்ந்து உங்க பார்சல் வந்துக்கிட்டு இருக்கு என உளறிக் கொண்டிருந்தனர். இது பேஸ்புக்கில் இரங்கல் தெரிவிப்பது போன்றது. உங்களில் யாராவது ஒருவரின் படத்தைப் போட்டு இன்னார் இறந்து விட்டார் என்றால் அது உண்மையா, ஏன், எப்படி என விசாரிக்காமல் RIP என போட்டு விடுவார்கள். அது போல் அமேசான் கஸ்டமர் சர்வீஸுக்கும் உண்மை தெரியவில்லை. ஆனால் நீங்கள் அவர்களின் பக்கத்தில் போய் கிளிக் செய்தாலோ புகார் தெரிவித்தாலோ அவர்களாகவே கூப்பிட்டு சமர்த்தாய் “பரலோகத்தில் உள்ள ஆவியானவர் உங்களோடு இருக்கிறார்” என கீ கொடுத்த பொம்மை போல் பேசுவார்கள். அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதில் அக்கறை இல்லை. இப்படி ஒரு கஸ்டமர் கேர் இருப்பதில் எந்த பயனும் இல்லை.
இதனிடையே எனக்காக தேடியவர் ஒரு பெரிய மூட்டையை கொண்டு வந்து காட்டி இதெல்லாம் மழையில் நனைந்த பார்சல்கள். முகவரி அழிந்து விட்டன. இவற்றை திரும்ப அனுப்ப போகிறோம். உங்களுடையதும் இதில் இருக்கலாம், நாளை தேடி சொல்கிறோம் என்றார். நான் எனக்கு முதல் நாள் தர வந்தவரின் எண்ணை வாங்கி அழைத்து என் பார்சல் மழையில் நனைந்ததா என கேட்டேன். அவர் இல்லை என்றார். அல்லாவிட்டால் இவர்கள் அது ஒருவேளை வீணான பார்சல் எனும் கணக்கில் விட்டு விடுவார்கள். இப்படி எதை தேடும் போதும் ஒரு அலட்சியம், எளிதில் முன்முடிவுக்கு வருவது.

இப்போது எனக்கு உண்மை நிலவரம் தெரியும். நாளைக்குள் எதேச்சையாய் என் பார்சல் மாட்டினால் உண்டு. மறுநாள் தீபாவளி. விடுப்பு. அதற்கு அடுத்த நாட்கள் அவர்கள் அங்குள்ள கணிசமான பொருட்களை வெளியே அனுப்பி இடம் காலியான பின் ஏதோ கிணற்றை இறைக்கும் போது பழைய வாளி, பிளாஸ்டிக் பொருட்கள் கிடைப்பது போல் என் பார்சலும் கிடைத்தால் உண்டு. அப்படியென்றால் சனியோ அடுத்த திங்களோ வரும். இல்லாவிட்டால் மீண்டும் அவர்கள் கடும் பிரயத்தனம் செய்து கண்டு பிடிக்க வேண்டும். எப்படியும் இப்படித் தான் நடக்கும். நான் அவர்களின் சேமிப்பு கிடங்குக்கு (வேர் ஹவுசுக்கு) போனாலும் இல்லாவிட்டாலும். என்ன இப்போது நான் தெளிவாக குழப்பமில்லாமல் இருக்கிறேன். ஏதாவது நடக்கும் என நம்பிக்கையில் கையை பிசைவதை விட இப்படித் தான் உறுதியாக நடக்கும் என தெரிந்து விட்டால் ஒரு நிம்மதி வருமல்லவா! இன்றைக்கு போய் பார்த்ததன் பயன் அது தான். 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...