Skip to main content

அமேசான் காட்டில் தொலைந்த என் பார்சல்


அமேசானில் நான் ஆர்டர் பண்ணின பொருள் ஒன்று மூன்று நாட்களாய் தாமதாகிக் கொண்டிருந்தது. கஸ்டமர் கேர் ஆட்கள் இன்னிக்கு வந்திரும், இப்போ வந்திரும் என விளையாட்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கொரியர் சேமிப்புக் கிடங்கின் முகவரியையோ தொடர்பு எண்ணையோ தரவில்லை. ஆனால் ரொம்ப ஒழுங்காக சமர்த்தாக என்னிடம் தினமும் நான்கு முறையாவது அவர்களாகவே போன் பண்ணி மன்னிப்பு கேட்பதும், இதோ ரெண்டு மணிநேரத்தில் வந்து விடும் என பொய் சொல்வதுமாக தொடர்ந்தது.

எந்திரத்தனமாக பதில் சொல்கிறார்கள் எனத் தோன்ற ஒரு கொரியர் ஆள் மூலமாக அவர்களின் சேமிப்புக் கிடங்கின் (வேர் ஹவுஸ்) முகவரியை தெரிந்து கொண்டு போனேன். அங்கே போன போது அமேசான் என சரியாக தான் பெயர் வைத்திருக்கிறார்கள் எனத் தோன்றியது. அது ஒரு குட்டிக் காடு. காட்டில் திசை தவறினால் சுற்றிக் கொண்டிருக்க வேண்டியது தான் என்பார்கள். அங்கே மூட்டை மூட்டையாய் பார்சல்கள். இரவு பத்து மணி வரை பார்சல்களை ஆட்கள் எடுத்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு வேலை பார்த்தும் தேங்கி நிற்கிற பொதிகளை வெளியேற்ற முடியவில்லை என்றார்கள். பொதுவாக புது பையன்கள் தான் வேலை பார்க்கிறார்கள். சீனியர்கள் பாவனை பண்ணிக் கொண்டு சோம்பி நிற்கிறார்கள். அங்கே போகும் வரை என் பார்சல் தாமதமாவதற்கு ஆள் குறைவே காரணம் என நினைத்தேன். மழை, தீபாவளி நெரிசல் என பல காரணங்கள் தோன்றின. என்னை தொடர்பு கொண்ட கஸ்டமர் சர்வீஸ் ஆட்களும் இதையே கூறினர். என்னைப் போல் வேறு பலருக்கும் இரண்டு வாரங்கள் வரை பொருட்கள் தாமதமானது பற்றி பேஸ்புக்கில் படித்தேன்.
ஆனால் உண்மைக் காரணம் இவை எதுவும் அல்ல என போன போது தான் அறிந்தேன். அமேசான குரியர் அலுவலகம் அல்லது சேமிப்புக் கிடங்கு ஒழுங்காக சீராக இயங்கவில்லை. அன்றன்றைக்கு வந்து குவிகிற பொதிகளை இடத்தை பொறுத்து பொறுக்கிப் போகிறார்கள். சிலர் என்னால் பம்மல் என்றால் போக முடியாது என்கிறார்கள், சிலர் சைதாப்பேட்டை என்றால் போகிறேன் என்கிறார்கள். பொருட்களை அவற்றின் அஞ்சல் தேதி அல்லது அவசரம் பொறுத்து அனுப்புவதில்லை. ஆனால் உடனடி தபால் வசதி அமேசானில் உண்டு. அதற்கு கூடுதல் பணம் செலுத்தினால் அத்தனைய பார்சல்களுக்கு முன்னிரிமை கொடுக்கிறார்கள். இந்த அவசரத்தில் வழக்கமான பார்சல்கள் எங்கோ பின்னுக்கு தள்ளப்பட்டு காணாமல் போகின்றன.
என்னுடைய பார்சலை கொண்டு வந்தவர் அழைத்த போது நான் போனை எடுக்கவில்லை. நான் திரும்ப அழைத்த போது அவர் மறுநாள் தருகிறேன் என்றார். ஆனால் மறுநாள் மட்டுமல்ல அடுத்த மூன்று நாட்களும் அவர் விடுப்பில் போய் விட்டார். அவர் அலுவலகத்தில் என் பார்சலை எங்கோ ஒப்படைக்க அது தொலைந்து விட்டது. அதாவது அவர்களின் அலுவலகம் எனும் காட்டின் பெரும் புதர் ஒன்றுக்குள் மாட்டி விட்டது. திரும்ப தருகிற பொருளை ஒழுங்காய் ஒரு இடத்தில் வைக்கிற வழக்கம் அங்கு இல்லை. பொருட்கள் பல இடங்களிலாய் இறைந்து கிடக்கின்றன. நான் நேரடியாக போனதனால் ஒருவர் எனக்காய் ஒரு மணிநேரம் பல மூட்டைகளில் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. ஏனென்றால் மூட்டைகளை இடம் பொறுத்து பிரிக்காமல் எல்லாம் குழம்பிப் போய் கிடந்தன. கிண்டி மூட்டையில் அண்ணா நகர் பொருட்கள் இருந்தன.
அவர் என்னிடம் நாளை தேடிப் பார்த்து சொல்கிறேன் என்ற போது கஸ்டமர் சர்வீஸில் அழைத்து “உங்கள் பொருள் எங்கள் குரியர் பையனிடம் உள்ளது. நாளை வந்து விடும்” என்றார்கள். நான் சொன்னேன் “எந்திரத்தனமாய் நீங்கள் உங்கள் கணினியைப் பார்த்து எனக்கு பதிலளிக்கிறீர்கள். ஆனால் நான் உங்கள் சேமிப்புக் கிடங்கில் இருந்து நிலவரத்தை பார்த்து சொல்கிறேன். என் பொருள் தொலைந்து விட்டது. அது நாளை வராது”. பிறகும் அவர் அதே பதிலை ரோபோ போல் சொல்ல நான் கத்தினேன். அவர்களைப் பொறுத்த வரையில் கணினியில் குரியர் ஆட்கள் dispatched என்று அப்டேட் செய்தால் பொருள் குரியர் ஆளிடம் இருக்கிறது எனப் பொருள். ஆனால் இரு நாட்களாக என் பார்சலை எந்த குரியர் ஆளும் எடுக்கவில்லை. ஏனென்றால் அது எங்கே என்றே அவர்களுக்கு தெரியவில்லை. இவ்விசயம் கஸ்டமர் சர்வீசுக்கு புரியாமல் தொடர்ந்து உங்க பார்சல் வந்துக்கிட்டு இருக்கு என உளறிக் கொண்டிருந்தனர். இது பேஸ்புக்கில் இரங்கல் தெரிவிப்பது போன்றது. உங்களில் யாராவது ஒருவரின் படத்தைப் போட்டு இன்னார் இறந்து விட்டார் என்றால் அது உண்மையா, ஏன், எப்படி என விசாரிக்காமல் RIP என போட்டு விடுவார்கள். அது போல் அமேசான் கஸ்டமர் சர்வீஸுக்கும் உண்மை தெரியவில்லை. ஆனால் நீங்கள் அவர்களின் பக்கத்தில் போய் கிளிக் செய்தாலோ புகார் தெரிவித்தாலோ அவர்களாகவே கூப்பிட்டு சமர்த்தாய் “பரலோகத்தில் உள்ள ஆவியானவர் உங்களோடு இருக்கிறார்” என கீ கொடுத்த பொம்மை போல் பேசுவார்கள். அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதில் அக்கறை இல்லை. இப்படி ஒரு கஸ்டமர் கேர் இருப்பதில் எந்த பயனும் இல்லை.
இதனிடையே எனக்காக தேடியவர் ஒரு பெரிய மூட்டையை கொண்டு வந்து காட்டி இதெல்லாம் மழையில் நனைந்த பார்சல்கள். முகவரி அழிந்து விட்டன. இவற்றை திரும்ப அனுப்ப போகிறோம். உங்களுடையதும் இதில் இருக்கலாம், நாளை தேடி சொல்கிறோம் என்றார். நான் எனக்கு முதல் நாள் தர வந்தவரின் எண்ணை வாங்கி அழைத்து என் பார்சல் மழையில் நனைந்ததா என கேட்டேன். அவர் இல்லை என்றார். அல்லாவிட்டால் இவர்கள் அது ஒருவேளை வீணான பார்சல் எனும் கணக்கில் விட்டு விடுவார்கள். இப்படி எதை தேடும் போதும் ஒரு அலட்சியம், எளிதில் முன்முடிவுக்கு வருவது.

இப்போது எனக்கு உண்மை நிலவரம் தெரியும். நாளைக்குள் எதேச்சையாய் என் பார்சல் மாட்டினால் உண்டு. மறுநாள் தீபாவளி. விடுப்பு. அதற்கு அடுத்த நாட்கள் அவர்கள் அங்குள்ள கணிசமான பொருட்களை வெளியே அனுப்பி இடம் காலியான பின் ஏதோ கிணற்றை இறைக்கும் போது பழைய வாளி, பிளாஸ்டிக் பொருட்கள் கிடைப்பது போல் என் பார்சலும் கிடைத்தால் உண்டு. அப்படியென்றால் சனியோ அடுத்த திங்களோ வரும். இல்லாவிட்டால் மீண்டும் அவர்கள் கடும் பிரயத்தனம் செய்து கண்டு பிடிக்க வேண்டும். எப்படியும் இப்படித் தான் நடக்கும். நான் அவர்களின் சேமிப்பு கிடங்குக்கு (வேர் ஹவுசுக்கு) போனாலும் இல்லாவிட்டாலும். என்ன இப்போது நான் தெளிவாக குழப்பமில்லாமல் இருக்கிறேன். ஏதாவது நடக்கும் என நம்பிக்கையில் கையை பிசைவதை விட இப்படித் தான் உறுதியாக நடக்கும் என தெரிந்து விட்டால் ஒரு நிம்மதி வருமல்லவா! இன்றைக்கு போய் பார்த்ததன் பயன் அது தான். 

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...