Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

“தங்கமீன்கள்” மற்றும் “பம்பாய்”: காட்சியும் செய்தியும்



சினிமாவில் ஒரு காட்சி ஒரு செய்தியை சொல்லும் பட்சம் அமைக்கப்படுகிறது. அந்த செய்தி எப்படி சொல்லப்படுகிறது என்பது தான் அக்காட்சியை சுவாரஸ்யமாக அழகாக மாற்றுகிறது. இப்படியான காட்சிகளை உருவாக்கத்தான் பட விவாதங்களின் போது மண்டையை பிய்க்கிறார்கள். இதை “சீன் பிடிப்பது” என்கிறார்கள். ஒரு காட்சி ஒரு செய்தியின் பல்வேறு பரிமாணங்களை காட்டுவதாய், ஆழத்தை நோக்கி பயணிப்பதாய் இருக்கலாம். “தங்கமீன்களில்” குழந்தை செல்லம்மா வெளியூரில் இருக்கும் அப்பாவைத் தேடி வீட்டிற்கு சொல்லிக் கொள்ளாமல் பேருந்து நிறுத்தத்தில் போய் நிற்கிறாள். அவளைத் தேடி வீட்டார் பல இடங்களில் அலைகிறார்கள். பிறகு ஒரு கடைக்காரர் அவளை அழைத்துக் கொண்டு வீட்டில் விடுகிறார். இப்படி அடிக்கடி வீட்டை விட்டு ஓடிப் போவது அவள் வழக்கம் என்பதால் “சரியான காரணம் சொல்லி விட்டு அவள் உள்ளே வந்தால் போதும்” என்கிறார் பாட்டி. அதுவரை அவளை உள்ளே விட வேண்டாம் என்று செல்லம்மாவின் அம்மாவிடம் கூறுகிறார்.


 தாத்தா பாட்டியின் அதிகாரத்தின் கீழ் வாழ்வதால் அம்மாவுக்கும் வேறு வழியில்லை. அவளை வாசலுக்கு வெளியே நிறுத்தி கோபமாய் விசாரிக்கிறாள். இந்த காட்சியில் மூன்று சட்டங்கள் (frames) இருக்கும். ஒன்று வீட்டின் உள்வாசல். அதில் சாய்ந்து நிற்கும் பாட்டி. அடுத்த வெளிவாசல். அதை ஒண்டி நின்று கேள்வி கேட்கும் அம்மா. அடுத்து வெளி சட்டகம். அதாவது வாசலுக்கு வெளியே நிற்கும் செல்லம்மா. மிக அழகான காட்சி அமைப்பு இது. செல்லம்மா ஏன் தன் அப்பாவைத் தேடி பேருந்து ஏறி தனியாக வெளியூருக்கு போகத் துணிந்தாள் என்பதைக் கூறும் அதே நேரம் இக்காட்சி எப்படி அந்த வீடு எனும் அமைப்புக்குள் மூன்று பெண்களும் மூன்று நிலைகளில் அடைபட்டிருக்கிறார்கள் எனக் காட்டுகிறது. பாட்டி வீட்டின் உள் அடுக்கில் அதிகார உச்சத்தில் இருக்கிறாள். ஆனாலும் அவள் அந்த வீட்டுக்குள் அதன் விதிமுறைகளுக்குள் அடைபட்டிருக்கிறாள். அவள் உருவாக்கும் விதிமுறைகளுக்குள் மருமகள் அடுத்த frameஇல் அடைபட்டிருக்கிறாள். இருவரும் சட்டகத்தின் வெளியே நிற்கும் செல்லம்மாவை ஒழுக்கப்படுத்த முயல்கிறார்கள். செல்லம்மா பற்றிய செய்தியை கூறும் அதேவேளையில் இக்காட்சி குடும்ப அமைப்பின் அதிகாரம், அதனுள் பெண்களே எப்படி பிற பெண்களை ஒடுக்குகிறார்கள் என்பதையும் காட்டுகிறது. தமிழ் சினிமாவின் சிறந்த காட்சிகளில் ஒன்று இது. இப்படியான காட்சியை உருவாக்க இயக்குநருக்கு ஒரு தனி பார்வை வேண்டும். அப்பார்வையே கதைகூறும் எளிய நோக்கத்தை கடந்து படக்கருவியின் கோணத்தை தீர்மானிக்கிறது.

ஆனால் தமிழ் சினிமா பொதுவாக மிக வேகமாய் நகர்வது. மேற்சொன்ன வகை காட்சி இங்கு அரிதானது. சுமார் 15 நொடிகளுக்குள் ஒரு செய்தியை முற்றிலும் வித்தியாசமாக காட்ட வேண்டும். இவ்வகையில் ஒரு காட்சியை பாத்திரத்தின் மனநிலையை அல்லது சூழலையும் கூட சேர்த்து சொல்வதாகவும் சித்தரிக்கலாம். மணிரத்னம் இவ்வகையான பல நல்ல காட்சிகளை உருவாக்கியிருக்கிறார். ஒரு பெண் தன் “உண்டாகியிருப்பதை” எப்படி சொல்ல? பொதுவாக அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வாந்தி எடுப்பாள். அதைப் பார்க்கும் நாயகன் வியப்பாக நோக்க அவள் வந்து வெட்கமுடன் ஆமாம் என்பாள். அவன் குதூகலத்தில் அவளை வாரியெடுப்பான். ஒரு பாடல் காட்சி இதைத் தொடரும். இது ஒரு தேய்வழக்கு. “பம்பாயில்” இத்தேய்வழக்கை சற்றே மீறி இருப்பார்கள். மனிஷா பயந்த சுபாவம் கொண்ட பெண். காதலனுடன் ஓடி வந்து பம்பாயில் ஒண்டுக்குடித்தனத்தில் வசிக்கிறார். பத்திரிகையாள கணவன் அரவிந்த சாமி மிக அவசரமாக ஒரு அறிக்கை எழுதிக் கொண்டிருக்கிறான். தொந்தரவு செய்தால் அவனுக்கு பிடிக்காது. இது ஒரு கச்சிதமான மத்திய வர்க்க சூழல். யாரும் நேரமில்லை. இரைச்சல். அவசரம். இதனிடையே தான் ஒரு பெண் கர்ப்பமாகியிருக்கும் இனிய சேதியும் தெரிவிக்கப்பட வேண்டும். சுமூகமான விசயம் சுமூகமற்ற சூழலில் சொல்லப்பட வேண்டும். மேலும் மனிஷாவுக்கு குடும்ப ஆதரவு இன்றி ஒரு அந்நிய நகரத்தில் எப்படி தனியே குழந்தைப் பெறப் போகும் என நடுக்கம் இருக்கலாம். நெருக்கடி தான் இந்த காட்சியின் mood. கர்ப்ப செய்தியை சொல்வதுடன் இதையும் காட்ட வேண்டும். மனிஷா கணவனிடம் வந்து தனக்கு பத்து வினாடிகள் வேண்டும் என்கிறாள். அவன் அவள் வழக்கம் போது ஏதோ அன்றாட பிரச்சனையை கொண்டு வருகிறாள் என நினைத்து அவளை பிறகு வர சொல்கிறான். அவள் மீண்டும் அவகாசம் கேட்கிறாள். எரிச்சலாய் “சரி சொல்லு” என்கிறான். அவள் சொல்ல எத்தனிக்க வார்த்தைகள் தடுமாறுகின்றன. அப்போது பார்த்து அடுக்களையில் குக்கர் விசில் அடிக்கிறது. பதற்றமாய் அங்கு ஓடுகிறாள். குக்கரை எடுக்க முயன்று கை சுட்டு விட கீழே போடுகிறாள். பதற்றம் அதிகம் ஆக மேலும் சில பாத்திரங்களை கீழே போடுகிறாள். கணவன் அங்கு வருகிறான். “உங்க கிட்ட பத்து நொடி தானே கேட்டேன். அப்பவே கேட்டிருந்தா இப்படி எல்லாம் ஆகியிருக்காதே” என மென்மையாய் கோபிக்கிறாள். கோபத்தை விட சங்கடம் தான் அவளை ஆக்கிரமித்திருக்கிறது. அவன் என்ன விசயம் எனக் கேட்கிறான். அவள் நெருங்கிப் போய் அவன் காதில் சொல்கிறாள். அவன் ஆச்சரியமாய் குழப்பமாய் பார்க்கிறான். இந்த இடத்தில் இக்காட்சியை முடித்திருந்தால் உலகத்தரமாய் இருந்திருக்கும். ஆனால் தமிழ் சினிமா ஆயிற்றே! கணவன் காதில் முணுமுணுத்ததை எப்படி பார்வையாளர்களுக்கு சொல்ல? அதனால் மனிஷா அடுத்து தன் வயிற்றை தடவிக் காட்டுகிறாள். கணவனின் கையை எடுத்து அங்கே வைக்கிறாள். அவள் முகம் பூரிப்பதை நெருக்கமாய் காட்டுகிறார்கள். இப்போதும் இது நல்ல காட்சி தான், கொஞ்சம் தேவையின்றி நீட்டிக்கப்பட்டு விட்டது. வணிக திரைக்கதை காட்சிகளை எப்படி இவ்வாறு தரமாகவும் உருவாக்குவது என்பதில் சுஜாதா ஒரு ஆசான். 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...