முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“தங்கமீன்கள்” மற்றும் “பம்பாய்”: காட்சியும் செய்தியும்



சினிமாவில் ஒரு காட்சி ஒரு செய்தியை சொல்லும் பட்சம் அமைக்கப்படுகிறது. அந்த செய்தி எப்படி சொல்லப்படுகிறது என்பது தான் அக்காட்சியை சுவாரஸ்யமாக அழகாக மாற்றுகிறது. இப்படியான காட்சிகளை உருவாக்கத்தான் பட விவாதங்களின் போது மண்டையை பிய்க்கிறார்கள். இதை “சீன் பிடிப்பது” என்கிறார்கள். ஒரு காட்சி ஒரு செய்தியின் பல்வேறு பரிமாணங்களை காட்டுவதாய், ஆழத்தை நோக்கி பயணிப்பதாய் இருக்கலாம். “தங்கமீன்களில்” குழந்தை செல்லம்மா வெளியூரில் இருக்கும் அப்பாவைத் தேடி வீட்டிற்கு சொல்லிக் கொள்ளாமல் பேருந்து நிறுத்தத்தில் போய் நிற்கிறாள். அவளைத் தேடி வீட்டார் பல இடங்களில் அலைகிறார்கள். பிறகு ஒரு கடைக்காரர் அவளை அழைத்துக் கொண்டு வீட்டில் விடுகிறார். இப்படி அடிக்கடி வீட்டை விட்டு ஓடிப் போவது அவள் வழக்கம் என்பதால் “சரியான காரணம் சொல்லி விட்டு அவள் உள்ளே வந்தால் போதும்” என்கிறார் பாட்டி. அதுவரை அவளை உள்ளே விட வேண்டாம் என்று செல்லம்மாவின் அம்மாவிடம் கூறுகிறார்.


 தாத்தா பாட்டியின் அதிகாரத்தின் கீழ் வாழ்வதால் அம்மாவுக்கும் வேறு வழியில்லை. அவளை வாசலுக்கு வெளியே நிறுத்தி கோபமாய் விசாரிக்கிறாள். இந்த காட்சியில் மூன்று சட்டங்கள் (frames) இருக்கும். ஒன்று வீட்டின் உள்வாசல். அதில் சாய்ந்து நிற்கும் பாட்டி. அடுத்த வெளிவாசல். அதை ஒண்டி நின்று கேள்வி கேட்கும் அம்மா. அடுத்து வெளி சட்டகம். அதாவது வாசலுக்கு வெளியே நிற்கும் செல்லம்மா. மிக அழகான காட்சி அமைப்பு இது. செல்லம்மா ஏன் தன் அப்பாவைத் தேடி பேருந்து ஏறி தனியாக வெளியூருக்கு போகத் துணிந்தாள் என்பதைக் கூறும் அதே நேரம் இக்காட்சி எப்படி அந்த வீடு எனும் அமைப்புக்குள் மூன்று பெண்களும் மூன்று நிலைகளில் அடைபட்டிருக்கிறார்கள் எனக் காட்டுகிறது. பாட்டி வீட்டின் உள் அடுக்கில் அதிகார உச்சத்தில் இருக்கிறாள். ஆனாலும் அவள் அந்த வீட்டுக்குள் அதன் விதிமுறைகளுக்குள் அடைபட்டிருக்கிறாள். அவள் உருவாக்கும் விதிமுறைகளுக்குள் மருமகள் அடுத்த frameஇல் அடைபட்டிருக்கிறாள். இருவரும் சட்டகத்தின் வெளியே நிற்கும் செல்லம்மாவை ஒழுக்கப்படுத்த முயல்கிறார்கள். செல்லம்மா பற்றிய செய்தியை கூறும் அதேவேளையில் இக்காட்சி குடும்ப அமைப்பின் அதிகாரம், அதனுள் பெண்களே எப்படி பிற பெண்களை ஒடுக்குகிறார்கள் என்பதையும் காட்டுகிறது. தமிழ் சினிமாவின் சிறந்த காட்சிகளில் ஒன்று இது. இப்படியான காட்சியை உருவாக்க இயக்குநருக்கு ஒரு தனி பார்வை வேண்டும். அப்பார்வையே கதைகூறும் எளிய நோக்கத்தை கடந்து படக்கருவியின் கோணத்தை தீர்மானிக்கிறது.

ஆனால் தமிழ் சினிமா பொதுவாக மிக வேகமாய் நகர்வது. மேற்சொன்ன வகை காட்சி இங்கு அரிதானது. சுமார் 15 நொடிகளுக்குள் ஒரு செய்தியை முற்றிலும் வித்தியாசமாக காட்ட வேண்டும். இவ்வகையில் ஒரு காட்சியை பாத்திரத்தின் மனநிலையை அல்லது சூழலையும் கூட சேர்த்து சொல்வதாகவும் சித்தரிக்கலாம். மணிரத்னம் இவ்வகையான பல நல்ல காட்சிகளை உருவாக்கியிருக்கிறார். ஒரு பெண் தன் “உண்டாகியிருப்பதை” எப்படி சொல்ல? பொதுவாக அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வாந்தி எடுப்பாள். அதைப் பார்க்கும் நாயகன் வியப்பாக நோக்க அவள் வந்து வெட்கமுடன் ஆமாம் என்பாள். அவன் குதூகலத்தில் அவளை வாரியெடுப்பான். ஒரு பாடல் காட்சி இதைத் தொடரும். இது ஒரு தேய்வழக்கு. “பம்பாயில்” இத்தேய்வழக்கை சற்றே மீறி இருப்பார்கள். மனிஷா பயந்த சுபாவம் கொண்ட பெண். காதலனுடன் ஓடி வந்து பம்பாயில் ஒண்டுக்குடித்தனத்தில் வசிக்கிறார். பத்திரிகையாள கணவன் அரவிந்த சாமி மிக அவசரமாக ஒரு அறிக்கை எழுதிக் கொண்டிருக்கிறான். தொந்தரவு செய்தால் அவனுக்கு பிடிக்காது. இது ஒரு கச்சிதமான மத்திய வர்க்க சூழல். யாரும் நேரமில்லை. இரைச்சல். அவசரம். இதனிடையே தான் ஒரு பெண் கர்ப்பமாகியிருக்கும் இனிய சேதியும் தெரிவிக்கப்பட வேண்டும். சுமூகமான விசயம் சுமூகமற்ற சூழலில் சொல்லப்பட வேண்டும். மேலும் மனிஷாவுக்கு குடும்ப ஆதரவு இன்றி ஒரு அந்நிய நகரத்தில் எப்படி தனியே குழந்தைப் பெறப் போகும் என நடுக்கம் இருக்கலாம். நெருக்கடி தான் இந்த காட்சியின் mood. கர்ப்ப செய்தியை சொல்வதுடன் இதையும் காட்ட வேண்டும். மனிஷா கணவனிடம் வந்து தனக்கு பத்து வினாடிகள் வேண்டும் என்கிறாள். அவன் அவள் வழக்கம் போது ஏதோ அன்றாட பிரச்சனையை கொண்டு வருகிறாள் என நினைத்து அவளை பிறகு வர சொல்கிறான். அவள் மீண்டும் அவகாசம் கேட்கிறாள். எரிச்சலாய் “சரி சொல்லு” என்கிறான். அவள் சொல்ல எத்தனிக்க வார்த்தைகள் தடுமாறுகின்றன. அப்போது பார்த்து அடுக்களையில் குக்கர் விசில் அடிக்கிறது. பதற்றமாய் அங்கு ஓடுகிறாள். குக்கரை எடுக்க முயன்று கை சுட்டு விட கீழே போடுகிறாள். பதற்றம் அதிகம் ஆக மேலும் சில பாத்திரங்களை கீழே போடுகிறாள். கணவன் அங்கு வருகிறான். “உங்க கிட்ட பத்து நொடி தானே கேட்டேன். அப்பவே கேட்டிருந்தா இப்படி எல்லாம் ஆகியிருக்காதே” என மென்மையாய் கோபிக்கிறாள். கோபத்தை விட சங்கடம் தான் அவளை ஆக்கிரமித்திருக்கிறது. அவன் என்ன விசயம் எனக் கேட்கிறான். அவள் நெருங்கிப் போய் அவன் காதில் சொல்கிறாள். அவன் ஆச்சரியமாய் குழப்பமாய் பார்க்கிறான். இந்த இடத்தில் இக்காட்சியை முடித்திருந்தால் உலகத்தரமாய் இருந்திருக்கும். ஆனால் தமிழ் சினிமா ஆயிற்றே! கணவன் காதில் முணுமுணுத்ததை எப்படி பார்வையாளர்களுக்கு சொல்ல? அதனால் மனிஷா அடுத்து தன் வயிற்றை தடவிக் காட்டுகிறாள். கணவனின் கையை எடுத்து அங்கே வைக்கிறாள். அவள் முகம் பூரிப்பதை நெருக்கமாய் காட்டுகிறார்கள். இப்போதும் இது நல்ல காட்சி தான், கொஞ்சம் தேவையின்றி நீட்டிக்கப்பட்டு விட்டது. வணிக திரைக்கதை காட்சிகளை எப்படி இவ்வாறு தரமாகவும் உருவாக்குவது என்பதில் சுஜாதா ஒரு ஆசான். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...