முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொலைகாரனுக்கு கொலை தண்டனை கொடுக்கலாமா? - ஒரு விவாதம்

இது நண்பர் லஷ்மி கணபதிக்கும் எனக்கும் இடையிலான மரண தண்டனை பற்றி ஒரு விவாதம்.


வணக்கம் அபிலாஷ்.
மரண தண்டனை விதிக்கப்படுவது குறித்து உங்களது கருத்துகளில் எனக்கு ஒரு கேள்வி. கொலை என்பது குற்றமாயினும் போரில் அது குற்றமாக பார்க்கப்படுவதில்லை. தீவிரவாதிகளில் மனிதம் பாராட்டி ஒரு ராணுவ வீரன் இறந்தாக செய்தி சென்ற வாரம் வந்தது. மனிதம் பாராட்டப்படுவது சரி எனில் இவர் இறந்திருக்க மாட்டார் தவறெனில் ஏன் கொலைக்கும் மரண தண்டனைக்கும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு குரல்கள்?
அப்பொழுது யார்வேண்டுமானாலும் போர் செய்கிறோம் எனக்கூறி யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாமா?

இயக்குநர் SPEILBERG SAVING PRIVATE RYAN இல் தன் குழு வீரனை கொல்லும் நாஜி வீரனை மன்னிக்கும் மில்லர் கதாபாத்திரத்தை மீண்டும் அதே நாஜி வீரன் கொலை செய்ய வைத்திருப்பார். உண்மையில் HITLER மாண்டு போகாமல் சரணடைத்திருந்தால் அவரை மன்னித்‌திருக்க முடியுமா?

முடியாமல் போனால் இந்த வாதம் ஏன் இன்னும் தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது?
அன்புடன்
லஷ்மி கணபதி
அன்புள்ள லஷ்மி கணபதி,
நீங்கள் கேட்பது கொலைக்கு எதிரான ஒரு பொது அறம் சாத்தியமா என. நாம் கசாப்பின் மரண தண்டனையை எதிர்க்கும் போது இன்னொரு முனையில் ஒரு ஐ.எஸ்.ஐ எஸ் ஒரு அப்பாவியின் கழுத்தை வெட்டி மரண தண்டனை கொடுத்துக் கொண்டிருப்பார். எல்லை கடந்த பயங்கரவாதத்தில் இந்தியா நிறைய இளைஞர்களை பலி கொடுக்க நேர்கிறது. நாம் கொல்வது தவறென்றால் அவர்கள் கொல்வது மட்டும் சரியா? அவர்களை தடுக்க முடியாவிட்டால் நாம் ஏன் நம்மை தடுக்க வேண்டும்?
இக்கேள்விகளுக்கான என் பதில் இது: கொலைகளை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று பாதுகாப்புக்காகவோ சண்டையின் போது தவிர்க்க இயலாமலோ நடக்கும் கொலைகள். இன்னொன்று திட்டமிட்டு நிறைவேற்றப்படும் கொலைகள்.
 இரண்டாவது வகை கொலைகள் தான் தவிர்க்கப்பட வேண்டியவை. எதிர்க்க வேண்டியவை. அதாவது தீவிரவாத தாக்குதல் கொலை,  அரசு அமைப்பு தனிநபர் மீது நிகழ்த்தும் மரண தண்டனை கொலை. முதல் வகை கொலைகள் தவிர்க்க முடியாதவை. மனிதன் அடிப்படையில் ஒரு கொலைக்கருவி தான். அவனால் கொல்லுவதை முழுக்க தவிர்க்க இயலாது. எந்த நொடியிலும் யாரும் கொலை செய்யும் மனநிலைக்கு தள்ளப்படலாம். ஆனால் இரண்டாவது வகை கொலைகள் உண்மையில் மனிதனை திருத்தவோ குற்றத்தை தடுக்கவோ நடப்படுவதில்லை. அவை மனித உடலை சிதைத்து அழித்து அதன் மூலம் பொது மக்களை அச்சுறுத்தி அடக்குவதற்காக நடக்கிறது.
 மரண தண்டனை என்பது அரசின் ஒரு அதிகார பிரகடனம். சில நேரம் பொது சமூகம் தம்மில் சிலர் மீது அதிகாரம் காட்ட கூட மரண தண்டனையை வலியுறுத்துகிறது. மரண தண்டனை என்பது கையில் மாட்டியனை பொதுமக்கள் மொத்தும் தர்ம அடி போலத் தான். மரண தண்டனைக்கு பயந்து ஏன் குற்றங்கள் குறைவதில்லை என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். மரண தண்டனை என்றல்ல எந்த தண்டனையும் குற்றங்களை குறைப்பதில்லை. சமூக விலக்கம் பற்றின பயம் தான் குற்றங்களை குறைக்கிறது.
போர் கூட திட்டமிட்டு ஒரு நாட்டுக்கு நெருக்கடி கொடுக்கும் பொருட்டு நிகழ்த்தப்படுகிற ஒரு பெரும் மனித பலிச் சடங்கு தான். எளிய மக்களை கொன்று அரசாங்கங்கள் சமரச மேஜையில் தேனீர் அருந்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மறக்கும். மக்களின் உயிர் இவர்களுக்கு (ஷேக்ஸ்பியர் சொன்னது போல்) பீராங்கிக்குள் நிரப்பும் கச்சாப்பொருள் போலத் தான். இதைத் தான் நாம் எதிர்க்க வேண்டும். கொலைகளை அல்ல. நம் உடலை வைத்து அரசும் சமூகமும் பகடையாட்டம் ஆடுவதை எதிர்க்க வேண்டும். அதனால் தான் நான் மரண தண்டனையை எதிர்க்கிறேன்.
கொலைக்குற்றங்களை மட்டுமல்ல பெரும்பாலான குற்றங்களை அன்பினாலும் பண்பாட்டினாலும் மட்டுமே குறைக்க முடியும். தண்டனைகள் குற்றத்திற்கு ஏதுவான சூழலைத் தான் உருவாக்கும். உதாரணமாய் ஒரு முறை குற்றம் செய்தவரை நிரந்தர குற்றவாளி ஆக்குவதே நம் தண்டனைக் கூடங்களின் நோக்கம்.
பழிவாங்கும் உணர்ச்சி நம் மனதில் ஆழத்தில் காமம், அச்சம் போல் உறைந்து கிடக்கிறது. அது சக்தி வாய்ந்த உணர்ச்சி. ஆனால் இவ்வுணர்ச்சி பாதுகாப்பின்மையினால் தோன்றும் பீதியின் மற்றொரு வடிவம் தான். தில்லியில் இளம்பெண் ஒருத்தி கொடூரமாய் பேருந்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட போது இத்தேசத்தின் பெண்களுக்கும், பெண்களின் சார்பில் ஆண்களுக்கும் தாங்கவொண்ணாத அச்சம் ஏற்பட்டது. அந்த மூன்று குற்றவாளிகளையும் தூக்கிலிட வேண்டும் என கூக்குரல் எழுந்தது. ஆனால் கொன்று விட்டால் நம் தெருவில் போகிற பிற பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்து விடுமா என நாம் யோசிப்பதில்லை. அக்குற்றம் நடந்து, குற்றவாளிகளில் இருவர் சிறையிலேயே கொல்லப்பட்ட பின்னரும் கூட பல பலாத்கார குற்றங்கள் நம் தேசத்தில் நடந்தன. இது ஏனென்றால் குற்றம் செய்கிறவர்கள் தாம் பிடிபட மாட்டோம் என பிடிவாதமாக நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை குலைத்தால் உலகில் அத்தனைக் குற்றங்களையும் தடுத்தி விடலாம். ஆனால் அது சாத்தியமில்லை. குற்றம் என்பது ஒரு சாகசம். சாகசத்தின் பின்னால் அபாரமான, தர்க்கத்தை கடந்த ஒரு தன்னம்பிக்கை உள்ளது. மரண தண்டனை என்பது நமது தற்காலிக மனத்திருப்திக்காக ஒருவனின் உடலை சிதைக்கும் ஒரு தற்காலிக சல்ஜாப்பு மட்டும் தான். சாமிக்கு கிடாய் வெட்டி சாந்தி செய்வது போல் இந்நாட்டின் கோடானு கோடி மக்களின் அற்ப மனநிம்மதிக்காக ஒருவனை தூக்குக் கயிற்றில் தொங்க விடுகிறோம். எப்படி வெட்டப்படும் கிடாயை சாமி கேட்பதில்லையோ அது போல் கொல்லப்படும் உயிரை நீதிதேவதையும் கேட்பதில்லை.
அன்புடன்

ஆர்.அபிலாஷ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...