முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்னா கரனீனா: “அதற்கென்ன விருந்து சாப்பிட்டு விட்டு போங்க”


அன்னா கரனீனா நாவலில் எனக்கு ரொம்ப பிடித்த பாத்திரங்களில் ஒன்று ஒப்ளோன்ஸ்கியுடையது. ஒப்ளோன்ஸ்கி கதையின் நாயகியான அன்னாவின் அண்ணன். இவர் ஒரு வெகுளி. ஸ்திரிலோலரும் கூட.
ஒப்ளோன்ஸ்கி தன் குழந்தையின் தாதியின் மீது ஆசைப்படுவார். அவளுக்கு காதல் கடிதங்கள் எழுத அவை அவரது மனைவியிடம் மாட்டும். மனைவி கோபத்துடன் அவரிடம் கடிதம் பற்றி விசாரிக்க ஒப்ளோன்ஸ்கி சிரித்து விடுவார். வேண்டுமென்றே அல்ல. வாழ்க்கையை வெறும் சுகமாக கொண்டாட்டமாக மட்டுமே பார்க்கும் அவருக்கு துரோகம், கோபம், விசுவாசம் ஆகிய விழுமியங்கள் புரியாது. இவற்றுக்காக ஒருவர் உணர்ச்சிவசப்படுவது அவருக்கு நகைச்சுவையாய் தோன்றும். அவரது மனைவியின் அந்த உண்மையான கோபத்தின் ஆழம் அவருக்கு விளங்காமல் சிரித்து விடுவார். எவ்வளவு முயற்சி பண்ணியும் அவரால் முகத்தில் மிளிரும் சிரிப்பை மட்டும் கட்டுப்படுத்த முடியாது.


 சிரித்த முகத்துடன் மனைவியை சமாதானப்படுத்த முயல அவள் வாழ்க்கை வெறுத்து விடுவாள். அதன் பிறகு அவரிடம் பேசவோ குடும்பத்தை பார்த்துக் கொள்ளவோ மறுத்து தனியாய் அறைக்குள் அடைந்து கிடப்பாள். அவளுக்கு அந்தளவுக்கு கணவனை தண்டிக்கும் நோக்கமெல்லாம் இல்லை. ஆனால் அவரது முகத்தில் தெரிந்த அந்த வெகுளிச் சிரிப்பு. அதைத் தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்காகவே அவரை கடுமையாக தண்டிக்க நினைப்பாள்.
பிறகு ஒப்ளோன்ஸ்கியின் தங்கை வந்து அவரது மனைவியை அமைதிப்படுத்தி குடும்ப பிரச்சனையை சரி செய்வார். பிறகு இந்த தங்கை, அதுவும் மணமான அவள், ஒரு இளைஞனைக் காதலித்து அவள் குடும்பம் பெரும் பிரச்சனைக்குள்ளாகும். அவள் கணவன் அவளை விவாகரத்து செய்ய முடிவெடுப்பான். அவன் மனைவியின் அண்ணன் ஒப்ளோன்ஸ்கியை தேடிப் போவோன்.
ஒப்ளோன்ஸ்கி அந்நேரம் தன் வீட்டில் ஒரு விருந்து ஏற்பாடு பண்ணிக் கொண்டிருப்பார். திடீரென மைத்துனர் வந்து விட அவருக்கும் சேர்த்து விருந்து சொல்வார். ஆனால் மைத்துனர் “இனி நம் குடும்பங்கள் இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் உன் தங்கையை விவாகரத்து செய்ய போகிறேன்” என்பார். ஒப்ளோன்ஸ்கி ஒரு நொடி வியப்பாய் மைத்துனரைப் பார்ப்பார். பிறகு சற்றும் யோசிக்காமல் சொல்வார் “விருந்தில் கலந்து கொள்ளுங்கள்”
“ஒப்ளோன்ஸ்கி இனி நமக்குள் எந்த உறவும் இல்லை. நானெப்படி…?”
“இருக்கட்டும். இப்போது நீங்கள் என் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள் அல்லவா. அதனால் என் விருந்தில் கலந்து கொண்டே ஆக வேண்டும். ரொம்ப விசேசமான உணவு வகைகளை நீங்கள் சுவைக்க போகிறீர்கள்”
இப்படித் தான் ஒப்ளோன்ஸ்கியால் பேச முடியும். அவர் வாழ்க்கையை அந்தந்த நொடிகளில் வாழ்பவர். அந்த வாழ்க்கைநோக்கில் இருந்து காண்கையில் திட்டமிட்ட முடிவுகளும் விதிமுறைகளும் ஒட்டுமொத்த கணிப்புகளும் கொண்ட நம் வாழ்க்கை அபத்தமாகவே தெரியும். எது எவ்வாறு நடந்தாலும் அந்த ஒரு நொடியில் எப்படியும் இருக்க மனிதனுக்கு சுதந்திரம் உண்டல்லவா? அதை பரிபூரணமாக அனுபவிப்பவர் ஒபோன்ஸ்கி.
இந்த காட்சியை நேற்று ரோமிடிநவ் அலைவரிசையில் பார்த்த அன்னா கரினீனா படத்தில் கண்டேன். அருமையான திரைக்கதையாக்கம். 2012இல் வெளியான படம். ஜோ ரைட் இயக்கியது. அன்னாவாக கெய்ரா நைட்லி நடித்திருப்பார். அன்னா என் கற்பனையில் சற்று புஷ்டியாகவே இருப்பார். ஆனால் கெய்ரா ஒல்லியாக உணர்ச்சிப்பிழம்பாக படபடவென துடிப்பாய் பேசுபவராக மாறுபட்ட தோற்றத்தில் இருப்பார். நன்றாக நடித்திருப்பார். இந்த படம் நடிக்கும் போது அவருக்கு 26 வயதிருக்கலாம். அதனால் வ்ரோன்ஸிக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் பெரிதாய் தெரியாது. குழந்தை பிறந்தவுடனான உடல் புஷ்டி காட்சியில் தெரியாது. இதெல்லாம் கொஞ்சம் முரணாக பட்டது. ஆனாலும் ஒரு கச்சிதமான படம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.