Skip to main content

தென்னாப்பிரிக்காவும் கண்ணீரும்



நேற்றைய உலகக்கோப்பை அரையிறுதியில் கிராண்ட் எலியட் ஸ்டெயினின் பந்தில் ஆறு அடித்த நொடி மற்றொரு நாடகம் அரங்கேறியது. தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் மைதானத்தில் மனம் உடைந்து சாய்ந்தனர். மோர்னெ மோர்க்கல், டூப்ளஸி ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர். ஸ்டெயின் அப்படியே படுத்து விட்டார். எலியட் சென்று அவரை தூக்கி விட்டார். இவர்களைப் பார்த்து அதுவரை தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த டிவில்லியர்ஸும் அழ ஆரம்பித்தார். அப்படி ஒரு உணர்ச்சி மேலிடல் கடைசியாக இலங்கையிடம் இந்தியா 96 உலகக்கோப்பையில் தோற்று வெளியேறிய போது பார்த்தது. தென்னாப்பிரிக்க துக்கத்தில் வர்ணனையாளர்கள், நிபுணர்கள், மீடியா, எதிரணியினர் என அனைவரும் கலந்து கொண்டனர். அதாவது அந்த ஆட்டத்தை நியுசிலாந்து வென்றது ஒரு குற்றம் என்கிற கணக்கில் அனைவரும் பேச ஆரம்பித்து விட்டோம். உலகக்கோப்பை இறுதிக்கு செல்லும் தகுதி படைத்த அணி தென்னாப்பிரிக்காவே நியுசிலாந்து அல்ல எனும் ஒரு தொனி பரவலாக தென்பட்டது. இது சரியா?

சரி என்றால் தென்னாப்பிரிக்காவே வென்று இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டியது தானே? அவ்வளவு பெரிய இலக்கை தடுத்தாடி வெல்ல ஏன் இயலவில்லை? இலக்கை வென்றது நியுசிலாந்தின் குற்றமா? தென்னாப்பிரிக்கா போன்ற ஒரு ராட்சத திறமையாள அணி ஒரு குட்டி அணியிடம் வீழ்ந்தது ஒரு துன்பியல் நிகழ்வு தான், ஒத்துக் கொள்கிறேன். தொடர்ந்து நாக் அவுட் போட்டிகளில் அவர்கள் சறுக்குவதும் அவலம் தான். ஆனால் அதற்கு அவர்கள் தானே பொறுப்பு. ஒரு நோ பால் அல்லது வைட் பந்து அல்லது சூப்பர் ஓவரில் தோற்றால் அது பரிதாபமே! 92இல் நடந்தது போல் அடைய முடியாத இலக்கு D/L முறையில் அளிக்கப்பட்டாலும் அது பரிதாபம் தான். ஆனால் மழை ஒன்றைத் தவிர இம்முறை தென்னாப்பிரிக்காவுக்கு பெரிய துரதிஷ்டம் நிகழவில்லை. 43 ஓவர்களில் 298 மிக நல்ல இலக்கு. அதை தடுத்தாட முடியாதது தென்னாப்பிரிக்காவின் அணுகுமுறை மற்றும் வியூகத்தில் உள்ள தவறினால் தான். ஏனோ இவ்விசயத்தை யாரும் கவனித்ததாய் தெரியவில்லை.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா முழுக்க இருவேறான அணி. டெஸ்டில் அவர்கள் பந்து வீச்சாளர்கள் தாக்கி ஆடுவார்கள். ஆனால் ஒருநாள் என்றால் இதே வீச்சாளர்கள் தடுத்தாடுவார்கள். பதற்றமாக வீசுவார்கள். இந்தியாவின் தென்னாப்பிரிக்க பயணங்களின் போது ஒருநாள் போட்டிகளில் இந்தியா பெரிய இலக்குகளை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடைந்து வென்றிருக்கின்றன. டேல் ஸ்டெயின், மோர்க்கல் போன்றோ ஒருநாளில் அவ்வளவு சாமர்த்தியமான வீச்சாளர்கள் அல்ல. நேற்றைய ஆட்டத்தில் கூட பாகிஸ்தான் என்றால் நியுசிலாந்து இவ்வளவு எளிதாக 298ஐ அடைந்திருக்காது. ஆஸ்திரேலியா கூட வென்றிருக்கும். காரணம் இரு அணிகளும் தாக்கி ஆடும். விக்கெட்டுகளை இலக்காக்கி வீசும். ஆனால் நேற்றைய போட்டியில் முதல் இரு ஓவர்களில் மெக்கல்லம் அடிக்க ஆரம்பித்ததும் தென்னாப்பிரிக்க பின்னங்காலுக்கு சென்று விட்டது. அப்போது சுருட்டிய வாலை இறுதி வரை அவர்கள் நிமிர்த்தவில்லை. ஸ்டெயின், மோர்க்கல், தஹீர் வீசும் போது ஸ்லிப்பில் ஆட்களை நிறுத்தவில்லை என்பதை கவனித்திருக்கலாம். மெக்கல்லம், வில்லியம்சன், கப்தில், டெய்லர் ஆகிய நால்வரின் விக்கெட்டுகள் கூட அதிர்ஷ்டவசமாய் தென்னாப்பிரிக்காவுக்கு கிடைத்தது தான். கொஞ்சம் சாமர்த்தியமாக ஆடி இருந்தால் நேற்று நியுசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கலாம்.
தென்னாப்பிரிக்கா இதுவரை உலகக்கோப்பையை வெல்லாததற்கு இந்த எதிர்மறையான, பயந்தாங்கொள்ளி அணுகுமுறை தான் முக்கிய காரணம். உலகக்கோப்பை வரலாற்றில் ஆக்ரோசமாய், இயல்புணர்ச்சியுடன ஆடாத எந்த அணியும் வென்றதில்லை. மே.இ. தீவுகள், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, இந்தியா என ஐந்துமே ஆக்ரோசத்தை ஊக்குவிக்கும், நேர்மறையான, தனிப்பட்ட மேதைமையை கொண்டாடும் அணிகள். ஆனால் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகியவை கராறான திட்டம், ஒழுங்குபடி ஆடும் எதிர்மறையான அணிகள். அவற்றுக்கு உலகக்கோப்பை போன்ற பெருந்தொடர்களை வெல்வதற்கு உள்ள முக்கிய தடை இந்த அணுகுமுறையும் கலாச்சாரமும் தான்.
தென்னாப்பிரிக்காவிடம் உள்ள பந்து வீச்சு திறமைக்கு அவர்கள் சுலபமாய் நேற்று வென்றிருக்க வேண்டும். அதை செய்யாமல் பொம்மை தொலைந்த பாப்பா போல் மீடியா முன் தேம்புவது ஏமாற்றுத்தனம்.
இம்முறை நிச்சயம் தென்னாப்பிரிக்கா சாதாரணமாய் choke ஆகவில்லை. பதற்றத்தினால் மட்டும் விழவில்லை. இது இதுவரையிலான தென்னாப்பிரிக்க அணிகளிலேயே மிகச்சிறந்த அணி. டிவில்லியர்ஸ், ஆம்லா, டூமினி, ஸ்டெயின் போன்ற மேதைகள் இதுவரை தென்னாப்பிரிக்காவில் தோன்றியதில்லை (மற்றொருவர் பீட்டர்ஸன் இங்கிலாந்துக்கு சென்று விட்டார்). ஆனால் திறமையை சுதந்திரமாய் வெளிப்பட அனுமதிக்காத ஒரு அழுத்தமான, கட்டுப்பாடான, மூச்சுமுட்டுகிற கிரிக்கெட் சூழல் தென்னாப்பிரிக்காவின் பிரதான தடையாக உள்ளது. இதைப் பற்றி ஹெர்ஷல் கிப்ஸ் தனது சுயசரிதையில் விமர்சிக்கிறார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஒரு சாமியார் மடம் போல் இயங்கும் வரையில் அவர்களால் உலகை ஆள முடியாது.
தென்னாப்பிரிக்கா விலகினதுடன் உலகக்கோப்பையின் தரம் பல மடங்கு கீழிறங்குகிறது. ஸ்டெயின், ஆம்லா, டிவில்லியர்ஸ் போன்றோர் தம் ஆட்டத்தினால் கிரிக்கெட்டை பல மடங்கு மேலே கொண்டு போகிறவர்கள். மற்றொரு உலகத்தில் கிரிக்கெட்டை கொண்டு சென்று ஆடுகிறவர்கள். முன்பு சச்சின் ஆடும் போது தான் கிரிக்கெட் ஒரு அற்புத செயலாக நமக்குத் தோன்றும். தென்னாப்பிரிக்கா நீங்கினதும் உலகக்கோப்பையில் கிரிக்கெட் மீண்டும் மானுடர்கள் ஆடும் சாதாரண ஆட்டம் ஆகி விட்டது.

அதிமானுடர்கள் அழக் கூடாது. அழுகிற போது மானுடர்கள் நாம் அவர்களை நோக்கி இரங்கக் கூடாது. அதைப் போன்ற கேலிக் கூத்து வேறில்லை.

Comments

Dinesh said…
good analysis on SA defensiveness

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...