Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

புத்தகக் கண்காட்சியும் சிற்றூரும்

ஜூட் ராஜ் எனும் நண்பர் தூத்துக்குடியை சேர்ந்தவர். அவர் ஒரு கேள்வியை கேட்டார். சென்னை போல் ஏன் தன் ஊரில் புத்தகக் கண்காட்சியே நடப்பதில்லை? சிற்றூர்களில் புத்தகக் கண்காட்சி நடத்துவதன் பிரச்சனைகள் பற்றி சில பதிப்பாளர்கள் என்னிடம் ஏற்கனவே புலம்பி உள்ளதால் இது பற்றி சில விசயங்கள் எழுதத் தோன்றிற்று. அவருக்கு நான் எழுதிய பதில் கீழே:


புத்தகக் கண்காட்சி நிறைய சிற்றூர்களில் லாபகரமாய் நடப்பதில்லை என்பதே நிதர்சனம். ஆனாலும் பல பதிப்பகங்கள் பிடிவாதமாய் சிறு புத்தகக் கண்காட்சிகளில் கலந்து கொண்டு நஷ்டமடைகிறார்கள். ஒரு சிற்றூரில் நடக்கும் கண்காட்சியில் கலந்து கொள்ள பதிப்பாளருக்கு புத்தகங்களை வண்டியில் ஏற்றிப் போகும் செலவு, கடையில் இருக்க வேண்டிய ஊழியரின் சம்பளம், தங்க வேண்டிய விடுதி, சாப்பாடு கட்டணம் இவையெல்லாம் போக புத்தக விற்பனை மூலம் சொற்ப லாபம் எஞ்சும் அல்லது நஷ்டம் ஆகும்.
உங்கள் ஊரிலே புத்தகம் வாங்குவதை ஒரு சொகுசு நடவடிக்கையாகத் தான் பலரும் நினைப்பார்கள். அது உண்மையும் தான். புத்தகங்கள் வாசிப்பது, ஓவியம் ரசிப்பது, இசை கேட்பது ஆகியவை எல்லாம் எலைட்டிஸ்ட் மனப்பான்மையின் நீட்சி தான். ஆனால் எலைட்டிஸ்டாக இருப்பதில் தவறேதும் இல்லை. மேட்டிமைத்தனம் தீண்டாத பட்சத்தில் எலைட்டிசம் ஒரு உயர் பண்பாடாக இருக்கும். ஆனால் அந்த உயர் பண்பாட்டை நுகரும் தேவை கணிசமான மக்களுக்கு இல்லை. அவர்களுக்கு வாழ்க்கையை எப்படியோ வாழ்ந்தால் போதும். உங்களைப் போன்றோருக்கு வாழ்க்கையை உன்னதமாக, நுட்பமாக, ஆழமாக வாழ வேண்டும். வாழ்க்கையை ஆழமாக அழகாக வாழ வேண்டும் எனும் எண்ணத்தை முதல் வகை மக்களுக்குள் ஏற்படுத்தினால் மட்டுமே புத்தக விற்பனை சாத்தியமாகும். ஒருமுறை மனுஷ்யபுத்திரன் சொன்னார் “செல்போன், சோப்பு, ஆடை போன்ற பண்டங்கள் எல்லாம் மக்களுக்கு தேவையானவை. அவற்றை உற்பத்தி பண்ணினாலே மக்கள் வாங்குவார்கள். ஆனால் புத்தகங்களை உற்பத்தி பண்ணி அவற்றுக்கான தேவையையும் ஒரு பதிப்பாளன் உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் அவற்றை வாங்கும் அவசியமே மக்களுக்கு இல்லாமல் போகும்”.
 மக்கள் ஏன் புத்தகம் வாங்குவதில்லை என்பதை அவர்கள் தரப்பில் இருந்து புரிந்து கொள்ளவே இதைச் சொன்னேன். அவர்களை அந்த உயர் பண்பாட்டை நோக்கி வரத் தூண்டுகிற பணியை செய்யும் ஆட்கள் நீங்கள் வசிப்பது போன்ற சிற்றூர்களில் இல்லை.
சென்னை போன்ற பெருநகரங்களிலும் ஒரு உயர்பண்பாடு இல்லை தான். ஆனால் இங்கே ஒரு நுகர்வு பண்பாடு உள்ளது. அதனால் இங்கே புத்தகங்களை விற்க முடிகிறது. சிற்றூர்களை விட அதிகமாய் இங்கு புத்தகக் கூட்டங்கள், மக்கள் சந்திப்புக்கான சாத்தியங்கள் உள்ளன. அவையும் புத்தக விற்பனைக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குகின்றன.
பெரம்பூர் போன்ற சிறு நகரங்களில் அரசின் உதவியுடன், அங்குள்ள கலெக்டர் மற்றும் பஞ்சாயத்து தலைவர்களின் பங்களிப்புடன் புத்தகக் கண்காட்சி மிகவும் சிறப்பாக லாபகரமாக நடக்கிறது. கண்காட்சியின் போது ஒவ்வொரு கிராமத்து நூலகத்துக்குமான புத்தகங்களை பஞ்சாயத்து சார்பில் வாங்கி கொடுக்கிறார்கள். ஒவ்வொரு நாளின் நிகழ்ச்சிக்கான செலவு ஒரு பள்ளிக்கூடம் ஏற்றுக் கொள்கிறது. மாணவர்களை இலவசமாய் பேருந்தில் அழைத்து வந்து கண்காட்சியை காட்டி இலவசமாய் புத்தகங்கள் வாங்கி அளிக்கிறார்கள். அரசு அளவில் தீவிரமான நுண்ணுணர்வுள்ள அதிகாரிகள், ஒரு திறமையான ஆட்சியாளர் உள்ள பட்சத்தில் உங்கள் ஊரிலும் இது போன்று வெற்றிகரமான கண்காட்சிகளை நடத்தலாம்.
நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு வாசகர் வட்டம் ஆரம்பியுங்கள். வாராவாரம் சின்ன சந்திப்புகள் நடத்துங்கள். முகநூல், பிளாக் போன்ற சாத்தியங்களை கொண்டு விளம்பரப்படுத்தி சமூகமாக்கல் செய்யுங்கள். ஒரு சின்ன சலசலப்பை உண்டு பண்ணுங்கள். உங்கள் ஊரில் ஒரு மாற்றம் வர வேண்டும் என தொடர்ந்து பேசுங்கள். எதிரொலி இல்லாத ஒலியே இல்லை. முதல் கல்லை நீங்கள் தூக்கிப் போடுங்கள்.

நாகர்கோயிலில் எங்கள் ஊரில் கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய சின்ன சின்ன கூட்டங்களில் கலந்து கொண்ட உத்வேகத்தில் தான் நான் ஒரு இலக்கிய வாசகன் ஆனேன். புத்தகங்கள் வாங்க கிடைக்காமல் நிறைய அலைந்திருக்கிறேன். கடன் வாங்கி இரவோடு இரவாக தூங்காமல் படித்திருக்கிறேன். இன்று எங்கள் ஊரில் இருந்து தோன்றி வளர்ந்துள்ள பல எழுத்தாளர்கள் இந்த சிறு கூட்டங்களில் இருந்து முதல் தூண்டுதல் பெற்றவர்களே. புத்தகக் கண்காட்சி என்ன உங்கள் ஊர் தூத்துக்குடியில் அண்ணா நூலகம் போன்று உலகத்தரத்திலான ஒரு பெரிய நூலகமே வரும். நம்பிக்கையோடு இருங்கள்! 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...