முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புத்தகக் கண்காட்சியும் சிற்றூரும்

ஜூட் ராஜ் எனும் நண்பர் தூத்துக்குடியை சேர்ந்தவர். அவர் ஒரு கேள்வியை கேட்டார். சென்னை போல் ஏன் தன் ஊரில் புத்தகக் கண்காட்சியே நடப்பதில்லை? சிற்றூர்களில் புத்தகக் கண்காட்சி நடத்துவதன் பிரச்சனைகள் பற்றி சில பதிப்பாளர்கள் என்னிடம் ஏற்கனவே புலம்பி உள்ளதால் இது பற்றி சில விசயங்கள் எழுதத் தோன்றிற்று. அவருக்கு நான் எழுதிய பதில் கீழே:


புத்தகக் கண்காட்சி நிறைய சிற்றூர்களில் லாபகரமாய் நடப்பதில்லை என்பதே நிதர்சனம். ஆனாலும் பல பதிப்பகங்கள் பிடிவாதமாய் சிறு புத்தகக் கண்காட்சிகளில் கலந்து கொண்டு நஷ்டமடைகிறார்கள். ஒரு சிற்றூரில் நடக்கும் கண்காட்சியில் கலந்து கொள்ள பதிப்பாளருக்கு புத்தகங்களை வண்டியில் ஏற்றிப் போகும் செலவு, கடையில் இருக்க வேண்டிய ஊழியரின் சம்பளம், தங்க வேண்டிய விடுதி, சாப்பாடு கட்டணம் இவையெல்லாம் போக புத்தக விற்பனை மூலம் சொற்ப லாபம் எஞ்சும் அல்லது நஷ்டம் ஆகும்.
உங்கள் ஊரிலே புத்தகம் வாங்குவதை ஒரு சொகுசு நடவடிக்கையாகத் தான் பலரும் நினைப்பார்கள். அது உண்மையும் தான். புத்தகங்கள் வாசிப்பது, ஓவியம் ரசிப்பது, இசை கேட்பது ஆகியவை எல்லாம் எலைட்டிஸ்ட் மனப்பான்மையின் நீட்சி தான். ஆனால் எலைட்டிஸ்டாக இருப்பதில் தவறேதும் இல்லை. மேட்டிமைத்தனம் தீண்டாத பட்சத்தில் எலைட்டிசம் ஒரு உயர் பண்பாடாக இருக்கும். ஆனால் அந்த உயர் பண்பாட்டை நுகரும் தேவை கணிசமான மக்களுக்கு இல்லை. அவர்களுக்கு வாழ்க்கையை எப்படியோ வாழ்ந்தால் போதும். உங்களைப் போன்றோருக்கு வாழ்க்கையை உன்னதமாக, நுட்பமாக, ஆழமாக வாழ வேண்டும். வாழ்க்கையை ஆழமாக அழகாக வாழ வேண்டும் எனும் எண்ணத்தை முதல் வகை மக்களுக்குள் ஏற்படுத்தினால் மட்டுமே புத்தக விற்பனை சாத்தியமாகும். ஒருமுறை மனுஷ்யபுத்திரன் சொன்னார் “செல்போன், சோப்பு, ஆடை போன்ற பண்டங்கள் எல்லாம் மக்களுக்கு தேவையானவை. அவற்றை உற்பத்தி பண்ணினாலே மக்கள் வாங்குவார்கள். ஆனால் புத்தகங்களை உற்பத்தி பண்ணி அவற்றுக்கான தேவையையும் ஒரு பதிப்பாளன் உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் அவற்றை வாங்கும் அவசியமே மக்களுக்கு இல்லாமல் போகும்”.
 மக்கள் ஏன் புத்தகம் வாங்குவதில்லை என்பதை அவர்கள் தரப்பில் இருந்து புரிந்து கொள்ளவே இதைச் சொன்னேன். அவர்களை அந்த உயர் பண்பாட்டை நோக்கி வரத் தூண்டுகிற பணியை செய்யும் ஆட்கள் நீங்கள் வசிப்பது போன்ற சிற்றூர்களில் இல்லை.
சென்னை போன்ற பெருநகரங்களிலும் ஒரு உயர்பண்பாடு இல்லை தான். ஆனால் இங்கே ஒரு நுகர்வு பண்பாடு உள்ளது. அதனால் இங்கே புத்தகங்களை விற்க முடிகிறது. சிற்றூர்களை விட அதிகமாய் இங்கு புத்தகக் கூட்டங்கள், மக்கள் சந்திப்புக்கான சாத்தியங்கள் உள்ளன. அவையும் புத்தக விற்பனைக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குகின்றன.
பெரம்பூர் போன்ற சிறு நகரங்களில் அரசின் உதவியுடன், அங்குள்ள கலெக்டர் மற்றும் பஞ்சாயத்து தலைவர்களின் பங்களிப்புடன் புத்தகக் கண்காட்சி மிகவும் சிறப்பாக லாபகரமாக நடக்கிறது. கண்காட்சியின் போது ஒவ்வொரு கிராமத்து நூலகத்துக்குமான புத்தகங்களை பஞ்சாயத்து சார்பில் வாங்கி கொடுக்கிறார்கள். ஒவ்வொரு நாளின் நிகழ்ச்சிக்கான செலவு ஒரு பள்ளிக்கூடம் ஏற்றுக் கொள்கிறது. மாணவர்களை இலவசமாய் பேருந்தில் அழைத்து வந்து கண்காட்சியை காட்டி இலவசமாய் புத்தகங்கள் வாங்கி அளிக்கிறார்கள். அரசு அளவில் தீவிரமான நுண்ணுணர்வுள்ள அதிகாரிகள், ஒரு திறமையான ஆட்சியாளர் உள்ள பட்சத்தில் உங்கள் ஊரிலும் இது போன்று வெற்றிகரமான கண்காட்சிகளை நடத்தலாம்.
நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு வாசகர் வட்டம் ஆரம்பியுங்கள். வாராவாரம் சின்ன சந்திப்புகள் நடத்துங்கள். முகநூல், பிளாக் போன்ற சாத்தியங்களை கொண்டு விளம்பரப்படுத்தி சமூகமாக்கல் செய்யுங்கள். ஒரு சின்ன சலசலப்பை உண்டு பண்ணுங்கள். உங்கள் ஊரில் ஒரு மாற்றம் வர வேண்டும் என தொடர்ந்து பேசுங்கள். எதிரொலி இல்லாத ஒலியே இல்லை. முதல் கல்லை நீங்கள் தூக்கிப் போடுங்கள்.

நாகர்கோயிலில் எங்கள் ஊரில் கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய சின்ன சின்ன கூட்டங்களில் கலந்து கொண்ட உத்வேகத்தில் தான் நான் ஒரு இலக்கிய வாசகன் ஆனேன். புத்தகங்கள் வாங்க கிடைக்காமல் நிறைய அலைந்திருக்கிறேன். கடன் வாங்கி இரவோடு இரவாக தூங்காமல் படித்திருக்கிறேன். இன்று எங்கள் ஊரில் இருந்து தோன்றி வளர்ந்துள்ள பல எழுத்தாளர்கள் இந்த சிறு கூட்டங்களில் இருந்து முதல் தூண்டுதல் பெற்றவர்களே. புத்தகக் கண்காட்சி என்ன உங்கள் ஊர் தூத்துக்குடியில் அண்ணா நூலகம் போன்று உலகத்தரத்திலான ஒரு பெரிய நூலகமே வரும். நம்பிக்கையோடு இருங்கள்! 

கருத்துகள்

ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
சென்னை, நாகர் வாசக வட்ட நண்பர்கள் சிறு தொகை ஒதுக்கலாம், பிற ஊர் புத்தக கண்காட்சிக்கு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...