Skip to main content

குற்றம் கடிதல்

Image result for kutram kadithal


சமீபத்திய சென்னை திரைப்பட விழாவில் என்னை மிகவும் கவர்ந்த படங்களில் ஒன்று “குற்றம் கடிதல்”. அப்போதே அதைப் பற்றி எழுத உத்தேசித்தேன். ஆனால் நேரம் வாய்க்கவில்லை. இப்போது தான் சரியான வேளை. அப்படத்துக்கு இவ்வருடத்துக்கான சிறந்த தமிழ்ப்படம் எனும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் பிரம்மா மற்றும் பிற நடிக, நடிகையர், குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். “குற்றம் கடிதல்” திரையரங்குகளில் வெளியாவதற்கு இந்த விருது வழிகோலும் என எதிர்பார்ப்போம். மிகவும் மகிழ்ச்சி அளிக்கிற விருது இது.

“குற்றம் கடிதல்” பாலாஜி சக்திவேல் பாணியிலான படம். ஒரு ஆசிரியை செய்யும் குற்றம், அதன் சமூக, உளவியல் பின்னணி, கொஞ்சம் அறிவுரை, நுணுக்கமான நடிப்பு, ஆவணப்பட தொனி என படம் பயணிக்கிறது. 

 வகுப்பறைக்குள் ஒரு சிறுவன் இழைக்கிற குற்றம், எதேச்சையாய் அவனை தண்டிக்க நினைத்து ஒரு ஆசிரியை இழைக்கிற மற்றொரு குற்றம், இதற்கான காரணங்கள் என்ன எனும் விவாதம் இது தான் இப்படத்தின் மையம்.

மாணவர்கள் அடிக்கடி இது போல் தாக்கப்படுவது பற்றி செய்தி கேள்விப்படுகிறோம். இப்படம் இதற்கு கூறும் காரணம் ஆசிரியர்கள் குழந்தைகளை தம் குழந்தைகளாக எண்ணி நேசிப்பதில்லை என்பது. படத்தின் பாதியில் பாரதியின் “சின்னஞ்சிறு கிளியே” பாடலின் அருமையான காட்சிப்படுத்தல் வருகிறது. அப்பாடலின் ஊடே ஆசிரியை அச்சிறுவனை தன் மகனாக ஏற்று உண்மையான அன்பை உணர்வது காட்டப்படுகிறது. தமிழ் சினிமாவின் சிறந்த பாடல் காட்சிப்படுத்தல்களில் இது ஒன்று. மிகுந்த காட்சிபூர்வமாய், நெகிழ வைப்பதாய், ஆழம் மிக்கதாய் உள்ளது இப்பாடல்.

அறம், குற்றவுணர்வு, நன்மை தீமைக்கு இடையினான குற்றமனதின் ஊசலாட்டம் ஆகிய கருக்கள் இப்படத்தில் முதிர்ச்சியுடன் கையாளப்பட்டுள்ளன. சொல்லப்போனால் இவை சற்று கிறுத்துவத்தன்மை கொண்ட கருக்கள். பொதுவாக இந்திய சினிமாவில் குற்றவுணர்வின் தத்தளிப்பு பற்றி அதிகம் பேசப்பட்டதில்லை. இது ஒரு ஐரோப்பிய பிரச்சனை. குறிப்பாக ரஷ்ய நாவல்களில் மிக விரிவாக அலசப்பட்டுள்ள விசயங்கள் இவை. அதனால் இவற்றை தமிழ் சினிமாவில் பேசக் கூடாதென்று இல்லை. தாராளமாய் செய்யலாம். படத்திற்கு பெரும் ஆழத்தையும் தீவிரத்தையும் அவை அளிக்கும்.

ஒரு கட்டத்திற்கு மேல் படத்தில் அறிவுரை ரொம்ப தூக்கல் என்பது ஒரு சின்ன பலவீனம். ஆனால் குற்றத்தை அலசுவதில் பாலாஜி சக்திவேலை விட ஆழமாய் பிரம்மா பயணிக்கிறார்.

இப்படத்தில் நாயகியின் தோழியான மற்றொரு ஆசிரியை வருகிறார். அவருக்கு விடுப்பு தேவைப்படுவதால் அவரது வகுப்பை நாயகி எடுக்க நேர்கிறது. அடிவாங்கும் சிறுவனை அந்த ஆசிரியை மிகவும் செல்லங்கொடுத்து அன்பாக பார்த்துக் கொள்வார். அவனது குறும்புகளை அவர் மிகவும் ஊக்குவிப்பார். மெர்லின் ரொம்ப தீவிரம் என்றால் அவர் ஜாலியான பெண். இரண்டு ஆசிரியைகளும் இரு துருவங்கள். இதில் எது சரி?

 அச்சிறுவனும் குற்றம் செய்திருக்க கூடாது தானே. அதற்கு அவனுக்கும் இடம் அளித்தது ஜாலியான ஆசிரியையும் அவரைப் போன்றவர்களும் தானே. என்னைப் பொறுத்த வரையில் மாணவர்களை ஓரளவு கண்டிப்புடன் நடத்த வேண்டும். தண்டிக்கவும் வேண்டும். ஆனால் உடல்ரீதியாகவோ கோபமான மொழியின் வாயிலாகவோ அல்ல. மிக நுணுக்கமாக உளவியல் ரீதியாய் மாணவர்களை கட்டுப்படுத்த இயலும்.

இச்சிறுவனை தனியாக அழைத்து இரண்டு நிமிடம் அவனது அப்பா, அம்மா பற்றி விசாரித்தாலே போதும் அவன் அமைதியாகி விடுவான். அது பலிக்காவிட்டால் அடுத்த கட்டமாக அவனை அசம்பிளியில் மாணவிடம் மன்னிப்பு கேட்க வைக்கலாம். ஒருநாள் முழுக்க வெளியில் நிற்க வைக்கலாம். அவன் அம்மாவிடம் புகார் அளித்து விசாரிக்கலாம். அதுவும் பலிக்காவிட்டால் அவன் வசிக்கிற பகுதிக்கு சென்று அங்குள்ளவர்களிடம் அவனது சுபாவத்தை பற்றி பேசினால் போதும். நான் எத்தனையோ மாணவர்களை முதல் முறையிலேயே அடக்கி இருக்கிறேன். என் வகுப்பில் மிக மோசமான சேட்டைக்காரர்களை பார்த்திருக்கிறேன். அவர்களை நான் திட்டியதோ வெளியே அனுப்பியதோ கூட இல்லை. அவர்கள் பக்கத்தில் போய் உட்கார்த்து பத்து நிமிடம் நட்பாய் பேசுவேன். குடும்ப சூழல் பற்றி விசாரிப்பேன். முன் பெஞ்சில் உட்கார வைத்து அவர்களிடம் பேசிக் கொண்டே இருப்பேன். அவர்கள் அதற்கு மேல் எனது எல்லா வகுப்பிலும் அமைதியாக இருப்பது மட்டுமன்றி அடுத்த மாணவர்களையும் அமைதி ஆக்குவார்கள். என் செல்லம் ஆகி விடுவார்கள். எங்கு போனாலும் என்னைப் பார்த்து அன்பில் குழைவார்கள்.

மாணவர்களை சொந்த குழந்தையாக பாவிப்பது நடைமுறையில் எழுபது பிள்ளைகள் இருக்கிற நெருக்கடியான வகுப்புகளில் சாத்தியமில்லை. மேலும் அன்பு காட்டுவது நமக்கு ஒரு இடைஞ்சலாக கூட மாறும். உணர்ச்சிவசப்பட்டால் பாடம் கற்பிக்க முடியாது. ஒரு நல்ல ஆசிரியருக்கு ஒரு விலகல் மனப்பான்மை அவசியம். மாணவர்களை கட்டுப்படுத்த முயலக் கூடாது. கையாள வேண்டும்.

 அச்சிறுவனை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லையே எனும் கோபம் தான் நாயகியை அவனை தாக்க வைக்கிறது. அவனை எப்படி கையாள்வது என யோசித்திருந்தால் பிரச்சனை சுலபமாக முடிந்திருக்கும். ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்கு தன்னை பொறுப்பாக நினைப்பது ஒரு பிழையான அணுகுமுறை. பொறுப்பாக நம்மை நினைக்கும் போது தான் மாணவரின் நடத்தை நமக்கு கோபம் உண்டு பண்ணுகிறது. மாணவர்கள் அடிப்படையில் குழந்தைகள் என்றாலும் அவர்கள் தீமையும் சிக்கலும் நிறைந்த மனிதர்களே. அவர்களை ஒழுக்கப்படுத்துவது அல்ல வழிகாட்டுவது தான் ஆசிரியரின் பொறுப்பு.

மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டலை ஏற்காத போதும் ஆசிரியர் கவலைப்படல் ஆகாது. எப்போதும் மாணவர்களை நமக்கு இணையாக நினைக்க வேண்டும். எப்படி நம்மால் குற்றமற்றவராக இருக்க இயலாதோ அது போன்றே அவர்களாலும் முடியாது. நாம் அவர்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும். அவர்களுக்கு எது நடந்தாலும் அவர்களே பொறுப்பு. ஆசிரியர் அல்ல. ஆசிரியரால் ஓரளவு உதவ மட்டுமே முடியும். இந்த தெளிவு இருந்தால் எந்த வகுப்பிலும் ஆசிரியருக்கு பிரச்சனைகள் ஏற்படாது. ஆசிரியர்களால் மாணவர்களுக்கு காயங்களும் ஏற்படாது. அடிப்படையில் வகுப்பறை குற்றங்கள் ஆசிரியர்கள் தம் வேலையில் மிதமிஞ்சி உணர்ச்சி வசப்படுவதால் நடக்கின்றன.

நான் முன்னர் வேலை செய்த கல்லூரியில் ஒருநாள் மதியத்திற்கு மேலான மாலை கல்லூரி நடந்து கொண்டிருந்தது. பகல் கல்லூரியை சேர்ந்த மாணவன் ஒருவன் ஒரு வகுப்பின் பக்கமாய் நடந்து ஜன்னல் கதவை தட்டி ஓசை எழுப்பினான். உள்ளே வகுப்பில் இருந்த தமிழ் ஆசிரியர் வெளியே வந்து அவனிடம் கோபமாய் கத்தினார். மிரட்டினார். அவன் எதிர்த்து பேச இருவருக்கும் இடையே தகராறு மூண்டது. கோபத்தில் அவர் அவனை அடித்தார். அவன் லோக்கல் பையன். உடனே சென்று உள்ளூர் ஆட்களை திரட்டி வந்து கல்லூரியை தாக்கினான். மாணவர்களை திரட்டி வேலை நிறுத்தம் ஆரம்பித்தான். தொடர்ந்து ஒருவாரம் கல்லூரி இயங்கவில்லை. கல்லூரியின் கட்டிடங்கள் மற்றும் இயற்கைக்கு கடுமையான சேதம் ஏற்பட்டது. பெயர் களங்கப்பட்டது. இத்தனையும் நடந்தது ஒரு ஆசிரியரின் உணர்ச்சிவேகத்தால். தன்னை எதிர்த்து எப்படி ஒரு மாணவன் பேசலாம் எனும் கர்வத்தால். அப்பையனை அவர் உதாசினித்திருந்தால் அது ஒரு பிரச்சனையே ஆகியிருக்காது.


அதே கல்லூரியில் என்னுடைய வகுப்பொன்றில் வேறொரு துறையின் வேறொரு வகுப்பு மாணவன் இருந்ததை சற்று பிந்தி கண்டுபிடித்தேன். என்னை ஏன் ஏமாற்றி வகுப்பில் உட்கார்ந்தான் என எனக்கு கோபம் ஏற்பட்டது. நான் என் துறைத்தலைவரிடம் தெரிவித்தேன். அவர் அவனை அழைத்து கண்டித்தார். அவன் என்னிடம் வந்து கோபமாய் பேசினான். நான் அவன் துறைத்தலைவரிடம் புகார் சொன்னேன். அவனுக்கு நெருக்கடி அதிகமானது. இதனிடையே அவனது காதலியாகிய ஒரு மாணவி என்னைத் தேடி வந்து நிலவரத்தை விளக்கினாள். என் வகுப்பு துவங்குவதற்கு முன் அவன் அவளைப் பார்க்க வகுப்புக்கு வந்திருக்கிறான். நான் சட்டென உள்ளே நுழைய அவனால் வெளியே போக முடியவில்லை. என் வகுப்பின் மாணவன் போல் நடித்து முழு வகுப்பும் அங்கேயே இருந்தான். இந்த கதை தெரிந்ததும் எனக்கு அந்த ஜோடி மீது பரிதாபம் ஏற்பட்டது. சிரிப்பாகவும் வந்தது. அப்பெண் என்னிடம் மன்னிப்பு கேட்டாள். நான் அப்பையனின் துறைத்தலைவரிடம் சென்று புகாரை பின்வாங்கி பிரச்சனையை பெரிது படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டேன். அதுவரை ஈகோ பிடித்து என்னை பார்க்குமிடமெல்லாம் முறைத்து திரிந்த மாணவன் என்னைத் தேடி வந்து மன்னிப்பு கேட்டான். நான் பரவாயில்லை என்றேன். அவன் அதற்கு பிறகு பத்து தடவையாவது என்னிடம் மன்னிப்பு கேட்டிருப்பான். என்னை எங்கு பார்த்தாலும் மிகுந்த மரியாதையும் அன்பும் காட்டுவான்.

 நான் அவனை தாராள மனதுடன் மன்னித்து விட்டதாய் அவன் நினைத்திருக்கலாம். ஆனால் எனக்கு ஆரம்பத்திலே அவனிடம் கோபம் இல்லை. அவனுக்கு ஒரு வகுப்புக்கு சென்று காதலியுடன் அமர்வது எப்படி ஒரு விளையாட்டோ அது போல் இதுவும் எனக்கு விளையாட்டு தான். அவன் காதலி வந்து உண்மையை சொல்லியிரா விட்டால் இவ்விளையாட்டை இன்னும் சில வாரங்கள் தொடர்ந்திருப்பேன். ஆனால் எப்போதும் அவனை சீரியசாக எடுத்து பழிவாங்கவோ திருத்தவோ முயன்றிருக்க மாட்டேன். அது என் வேலை அல்ல.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...