Skip to main content

ஏன் யாரும் கவிதைத் தொகுப்புகள் வாங்குவதில்லை?

    

பதிப்பகங்கள் பற்றி முருகேச பாண்டியன் பெப்ரவரி மாத உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அவருக்கு எதிர்வினையாக வா.மணிகண்டனும் ஒரு கட்டுரையை தன் வலைதளத்தில் எழுதி உள்ளார். இருவரும் ஏன் கவிதைகள் இங்கு பரவலாக படிக்கப்படுவதில்லை, ஏன் கவிதைத் தொகுப்புகள் விற்பதில்லை எனும் முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்கள்.


வா.மணிகண்டன் இரு காரணங்கள் சொல்கிறார். ஒன்று, இங்கு ஆயிரணக்கான கவிஞர்கள் உள்ளார்கள். அவர்கள் ஆளுக்கு ஒரு தொகுப்பை பரஸ்பரம் வாங்கினாலே தொகுப்புகள் தாராளமாய் விற்குமே? ஏன் வாங்குவதில்லை? கவிஞர்கள் சககவிஞர்களின் படைப்புகளைப் படிப்பதில்லை என்கிறார். இது சற்றே குழப்பமான வாதம். ஒருவர் கவிஞராக இருந்தாலும் ஒரு புத்தகத்தை வாங்கும் போது வாசகர் தான், கவிஞர் அல்ல. ஒரு கவிஞர் கவிதைத் தொகுப்புகள் தான் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர் நாவல்கள் வாங்குபவராக இருக்கலாம். கட்டுரைகளில் ஆர்வம் கொண்டவராக இருக்கலாம். சொல்லப் போனால் ஒருவர் கவிஞராக இருக்கும் பட்சத்தில் கவிதைகள் மட்டுமே வாங்கி வாசிப்பது ஒரு மோசமான பழக்கம். வெறும் கவிதை மட்டுமே வாசித்தால் நம் எழுத்து தேய்வழக்காகி விடும். எழுத்தை புதுப்பிக்க பல துறை சார்ந்த கட்டுரைகள், கதை, நாவல் ஆகியன நிச்சயம் உதவலாம். ஏன் செய்திக் கட்டுரை கூட நல்ல கவிதைக்கு தூண்டுதல் அளிக்கலாம். மனுஷ்யபுத்திரன் செய்திகளைக் கொண்டு பல அற்புதமான கவிதைகளை எழுதி இருக்கிறார். யுவனிடம் அறிவியல் கட்டுரைகளின் தாக்கத்தை, தேவதச்சனிடம் ஜென் தத்துவம் தரும் புது வெளிச்சத்தை காணலாம். நான் எந்த புத்தகக் கண்காட்சி என்றாலும் கவிதைத் தொகுப்புகளை தேடி வாங்குவேன். ஒருமுறை வா.மணிகண்டனுடன் புத்தகக் கண்காட்சியில் சுற்றும் போது அவர் தான் எந்த புது கவிதைத் தொகுப்பை பார்த்தாலும் வாங்கி விடுவதாய் சொன்னார். அவர் அவ்வருடம் நிறைய தொகுப்புகள் வாங்கினதாய் நினைவு. ஆனால் நான் ரொம்ப கராறாய் இருப்பேன். ஒரு இருபது கவிதைத் தொகுப்புகளை எடுத்துக் கொண்டு ஸ்டாலிலேயே அமர்ந்து பொறுமையாய் படித்து தேர்ந்தெடுத்து தான் வாங்குவேன். இதற்காய் இரண்டு மணிநேரங்கள் கூட செலவிடுவேன். இவ்வாறு தொகுப்புகள் வாங்குவதில் ஆளாளுக்கு அணுகுமுறை மாறும். என்னைப் பொறுத்தவரை புத்தகம் வாங்குவது முழுக்க முழுக்க அந்தரங்கமான தேர்வு. அது சமூக சேவையோ கருணை அடிப்படையிலான தேர்வோ அல்ல. எனது மிக நெருக்கமான நண்பர் என்றாலும் கூட பிடிக்கவில்லை என்றால் அவரது தொகுப்பை வாங்க மாட்டேன்.

இவ்வாறு வாங்குவது வாசகனின் உரிமை. எந்த எழுத்தாளனும் கடைக்குள் நுழைந்தால் எழுத்தாள அடையாளத்தை இழந்து வாசகனாகி விடுவான். அதனால் கவிஞர்கள் பரஸ்பரம் தொகுப்புகளை வாங்க எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.

இரண்டாவது காரணத்துக்கு வருவோம். கவிதைகள் சரியாக முன்னெடுக்கப்படுவதில்லை; அதற்கு காரணம் விமர்சனங்கள் மேலும் மேலும் கவிதையை புரியாத ஒன்றாய் மாற்றுகின்றன என்கிறார் மணிகண்டன். இது முழுக்க உண்மையே. விமர்சனங்கள் ஒன்று ஒரு கருத்தியலை கவிதை மீது திணிப்பதாகவோ, அரூபமான மொழியில் கவிதையை விமர்சிக்கிறேன் என களத்தில் குதித்து குட்டையை குழப்புவதாக உள்ளன. கவிதை அடிப்படையில் மனித மனம், சமூக, அரசியல் வாழ்க்கை பற்றி ஒரு புதுப்பார்வையை தருகின்றன. ஆழமான ஆன்மீக தளம் கொண்ட கவிதைகளும் உண்டு. ஆனால் அவை மிக அரிது. கவிதை விமர்சகனின் வேலை இந்த பார்வையை வாசகனுக்கு கடத்தி விடுவது. முடிந்தவரை இதை எளிதாக செய்ய வேண்டும்.
 மற்றொன்று: கவிதை ஒரு புதிரைப் போன்றதும் தான். கவிதை வாசிப்பதன் சுகம் ஒரு புதிரை அவிழ்க்கும் கிளர்ச்சிக்கு இணையானது. கவிதையை அவிழ்ப்பது புணர்ச்சிக்கு முன் ஒரு பெண்ணின் ஆடையை அவிழ்ப்பதைப் போன்றது. இதை எப்படி செய்வது என கற்க வேண்டும். கற்றுக் கொண்டால் கவிதை நாவல், கட்டுரை நூல்களை விட பல மடங்கு சுகமும் திருப்தியும் தரும். வாசகர்களில் மிக உன்னதமானவன் கவிதை வாசகன். அந்நிலையை அடைய பயிற்சி வேண்டும். விமர்சனங்கள் வாசிப்பதும், கவிதை பற்றின நுணுக்கமான உரையாடல்களை கவனிப்பதும் உதவும். எனக்கு சிறுவயது முதலே முதிர்ந்த வாசகர்களின் பரிச்சயம் கிடைத்தது. அவர்களுடனான உரையாடல் கவிதையை எப்படி ஒரு தாமரை மொட்டைப் போல் திறப்பது என கற்றுத் தந்தது. கவிதை குறித்த ஜெயமோகனின் விமர்சனக் கட்டுரைகள், மனுஷ்யபுத்திரனுடனான உரையாடல்கள் பெரிதும் உதவின. கல்லூரியில் ஐந்து வருட ஆங்கில இலக்கிய படிப்பின் போது அறிமுகமான பரவலான கவிதைகள், கோட்பாடுகள், இலக்கிய வரலாறு ஆகியவை கவிதையின் போக்குகளை தொகுத்துக் கொள்ள உதவின.
ஆனாலும் நான் நவீன கவிதை படிக்க ஆரம்பித்து ஏழு வருடங்களுக்கு பின்பு தான் வாசிப்பது சுலபமாயிற்று. அத்திறப்பு சட்டென ஒருநாள் நிகழ்ந்தது. அதற்கு பின்னால் எனது கடுமையான பிரயத்தனமும் பித்தும் இருந்தது. கவிதையை அறிவது என்பது ஒரு பெண் எதோ ஒரு கணத்தில் நம் மீது மையல் கொள்வது போலத் தான். அந்த கணம் ஏன் எப்போது நிகழ்கிறது எனத் தெரியாது. அது சுலபமும் அல்ல. ஆனால் நிச்சயம் நிகழும். காதலும் தொடர்முயற்சியும் இருந்தால்.

முருகேச பாண்டியன் இதே பிரச்சனையை எழுதுபவனின் பக்கம் இருந்து பார்க்கிறார். அதாவது, கவிதை புரியாதது வாசகனின் குறைபாடல்ல; மோசமான கவிதைகள் தான் இதற்கு காரணம் என்கிறார். மோசமான கவிதை என்றால் வீரியமற்ற செயற்கையான தட்டையான கவிதைகள். இத்தகைய கவிதைகள் வாசகனை துர்நாற்றம் வீசும் ஒரு வாயைப் போல் துரத்தி விடுகின்றன. என்னால் முருகேச பாண்டியனின் கருத்துடன் முழுக்க உடன்பட முடியவில்லை. கடந்த ஐந்து வருடங்களில் தோன்றின சிறந்த இளங்கவிஞர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்களை என்னால் பட்டியலிட முடியும். தமிழ் கவிதைக்கு வளமான மொழி. இங்கு நல்ல கவிஞர்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை யுவன், தேவதேவன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன் போல் தனித்துவமான குரல்கள் உருவாகாமல் இருக்கலாம். ஆனால் இத்தகைய கவிஞர்கள் கடுமையான கலாச்சார அழுதத்தின் விளைவாகத் தான் தோன்றுகிறார்கள். அவ்வளவு தீவிரமான, யாகசாலை போல எரிந்து கனலும் ஒரு வாசிப்பு, விவாதச் சூழல் இங்கு இப்போது இல்லை. இதைத் தான் முருகேச பாண்டியன் சுட்டிக் காட்டுகிறார்.
முன்பு இளம் எழுத்தாளர்கள் அடிக்கடி மூத்த எழுத்தாளர்களை சந்தித்து இலக்கியம் குறித்து உரையாடி வந்தார்கள். இந்த உரையாடல்கள் வழி ஒரு பண்பாட்டு பரிமாற்றம் நடந்தது. கவிதை மரபுடனான தொடர்ச்சி இருந்தது. இன்று அந்த மரபு துண்டுபட்டு விட்டது. இன்றைய கவிஞர்களுக்கு மூத்த கவிஞர்களுடன் பழக்கம் இல்லாதது போகட்டும், மூத்த கவிஞர்களின் கவிதைகளிடம் கூட பழக்கம் இல்லை. எழுத்து இன்று முழுக்க சுயவெளிப்பாட்டு கருவியாகி விட்டது. அதை ஒரு உளவியல், ஆன்மீக, அரசியல், பண்பாட்டு விசாரணையாக நாம் நினைப்பதில்லை. தன்னைப் பற்றி எழுதினால் போதும் என நினைக்கிறவன் எதையும் படிக்க வேண்டியதில்லை. இரண்டு மூன்று தொகுப்பு வெளியிட்ட சில கவிஞர்கள் கூட முக்கியமான கவிஞர்களை ஆழமாக வாசிக்காதவர்களாக இருக்கிறார்கள். இப்பிரச்சனை சிறுகதை, நாவல் போன்ற துறைகளிலும் உள்ளது தான்.

விரிவான ஒரு பண்பாட்டுத் தளத்தில் பார்த்தோமானால் கவிதை என்று  மட்டுமல்ல, வாழ்க்கையில், வேலையில், உறவுகளில், கலைகளில் எங்கும் அடிப்படைகளை அறிந்து கொள்ளாமல் நேரடியாக களமிறங்குவது மோஸ்தராகி விட்டது. ஒரு பெண்ணை புரிந்து கொள்ளாமலே காதலித்து திருமணம் செய்து கொள்கிறோம். ஒரு சாமியார் என்ன சொல்கிறார் என கவனிக்காமலே அவரிடம் சீடராக சேர்ந்து விடுகிறோம். எதற்கும் அவகாசமில்லை; அவசரம்! அவசரம்! கவிதையிலும் இந்த மனநிலை தான் பிரதிபலிக்கிறது.

இன்றும் மூத்த எழுத்தாளர்களை நேரடியாய் சந்தித்து உரையாடுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து அதெல்லாம் வெற்று அரட்டையாக இருக்கிறது என்பது தான் பிரச்சனை. எதையும் கற்காமல், உழைத்து அடையாமல், தனக்கு எல்லாம் தெரியும் எனும் அகந்தை இன்று எடுத்த எடுப்பிலே இளம் எழுத்தாளனுக்கு வந்து விடுகிறது. இதுவும் இந்த காலகட்டத்தின் பிரச்சனை தான். நாம் பவர்ஸ்டார்களின் காலகட்டத்தில் அல்லவா வாழ்கிறோம்!

இந்த சிக்கலுக்கு என்ன தீர்வு என உண்மையில் எனக்குத் தெரியவில்லை. முருகேச பாண்டியன் பரிந்துரைப்பது போல் எழுபது, எண்பதுகளில் போல எழுத்தாளர்கள் தீவிரமாய் உரையாடல் மேற்கொள்வது இனி சாத்தியமா எனத் தெரியவில்லை. வா.மணிகண்டன் சொல்வது போல் ஒரு கவிஞனின் புத்தகத்தை இன்னொருவன் வாங்குவது போல் ஈமு கோழி வணிக கனவுகளுக்கும் நடைமுறை மதிப்புள்ளதாகத் தெரியவில்லை.

இறுதியாக ஆனால் முக்கியமாக நாம் இன்னொன்றையும் பார்க்க வேண்டும். கவிதைத் தொகுப்புகளில் விற்பனை சோர்வு என்பது உலகு தழுவிய போக்கு. உலகின் அனைத்து மொழிகளிலும் கவிதை இரண்டாம் பட்சமாகத் தன இருக்கிறது. குறைவான பிரதிகள் வெளியிடப்பட்டு விற்கப்படாமல் இருக்கின்றன. மாறாக, நாவலுக்கு எங்கும் அமோக வரவேற்பு உள்ளது. இது ஏன்?
கவிதை ஒரு காலத்தில் கிட்டத்தட்ட எல்லா விசயங்களுக்குமான வெளிப்பாட்டு கருவியாக இருந்தது. சோதிடம், காமசூத்திரம், இதிகாசம், தத்துவம், அரசியல் விதிமுறைகள் அனைத்தும் கவிதையில் எழுதப்பட்டன. ஆனால் அறிவியலின் எழுச்சியுடன் அறிவுத்துறைகள் பெருகிட, எந்திரமயமாக்கலின் விளைவால் புத்தகங்கள் அனைத்து மக்களுக்கும் போய் சேரும் நிலை தோன்றிட உரைநடை இதற்கு மேலும் பொருத்தமான வடிவம் ஆகியது. அதீத உணர்வெழுச்சிகளின் பால் மக்கள் நம்பிக்கை இழந்தனர். தர்க்கமும், தகவல் சார்ந்த அறிவும் முக்கியத்துவம் பெற்றது. உலகம் முழுக்க மக்கள் நடைமுறை அறிவுக்கு அதிக முக்கியத்துவம் தரத் தொடங்கினர். மீபொருண்மை (metaphysical) தேடல்கள் காலாவதி ஆகின. மதம் வீழ்ந்தது. கடவுள் மறக்கப்பட்டார். பதிலுக்கு மத நிறுவனங்களூம் குருமார்களும் போற்றப்பட்டனர். இந்த சூழலில் இயல்பாகவே கவிதையும் வீழ்ந்தது. “கடவுள் இறந்து விட்டார்” என நீட்சே அறிவித்த போது கவிதை இறந்து விட்டது என ஏதோ ஒரு மூலையில் கவிஞனும் உணர்ந்தான்.


கவிதை இன்றும் முக்கியமானது தான். அனைத்து எழுத்து வடிவங்களுக்கும் தாய் வடிவம் அது தான். ஆனால் அது உலக மக்களின் பண்பாட்டு மையத்தில் இருந்து விலகி விட்டது. நாம் இன்று கவிதையின் அந்திம காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் வருந்தவோ ஆவலாதிப்படவோ ஒன்றும் இல்லை. அந்திமக் காலம் மாலையில் மெல்ல மெல்ல கூம்பத் தொடங்கியிருக்கும் தாமரையைப் போல அழகானது தான். கவிதையை போற்றவும் கொண்டாடவும் இப்போதும் நேரமுள்ளது.
(இன்மை.காம் மார்ச் மாத இதழில் வெளிவந்த ஆசிரியர் பக்கம்)

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...