Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

அம்பேத்கர், பகவத் கீதை மற்றும் ஓஷோ

Image result for அம்பேத்கர்

அம்பேத்கரின் “கிருஷ்ணரும் அவரது கீதையும்” எனும் கட்டுரை படித்தேன். முதலில் மொழி பற்றி. அவரது மொழியின் சில அம்சங்கள் மிகவும் வியப்பூட்டுகின்றன. குறிப்பாய் அதன் சமகாலத்தன்மை. இன்றைய எழுத்தின் குணங்களாய் நாம் காணும் நேரடித்தன்மை, விவாத வடிவம், நேரடியாய் வாசகனை அழைத்து உரையாடும் தன்மை, அபாரமான தெளிவு, தயங்காமல் எதிர்கருத்தை பதிவு செய்வது, எளிமை, லௌகீக பார்வை இவை அனைத்தும் அம்பேத்கரிடம் உள்ளன. பெயரை மாற்றி பிரசுரித்தால் நிச்சயம் இணையத்தில் புழங்கும் ஏதோ ஒரு இளைஞன் எழுதியது எனத் தான் தோன்றும்.


 இன்னொரு முக்கியமான விசயம் அம்பேத்கரிடம் சுத்தமாய் லட்சியவாதமே இல்லாதது. அதாவது அரைநூற்றாண்டுக்கு முன் இந்தியர்கள் லட்சியத்துக்காய் உயிர்கொடுக்க துணிந்து வேலை குடும்பம் அனைத்தையும் உதறி தேசப்பணி செய்தனர். அதனால் அக்கால எழுத்து, படைப்புகள், இசை, கலைவடிவங்கள் என அனைத்திலும் லட்சியவாதம் ஊடுருவி இருக்கும். இதன் உச்சம் காந்தியின் எழுத்து தான். காந்திக்கு பிறகு இடதுசாரிகள் வழியாய் எண்பதுகளின் இறுதி வரை மற்றொரு மக்கள் எழுச்சி சார்ந்த லட்சியவாதம் இங்கு ஓங்கியது. இரண்டு வகையான லட்சியங்கள் சார்ந்த பார்வைகளும் இன்று முடிவுற்று விட்டன.

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவரின் சமூக மேம்பாட்டில் நம்பினார். அதற்காய் செயல்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும் தான். ஆனால் எந்த நம்பிக்கையையும் போற்றி கொண்டாடி அதற்காய் செயல்படுபவர் அவர் அல்ல என்பது அவரது எழுத்துக்களை படிக்கையில் தெரிகிறது. அவருக்கு நேரடியாய் மனித வாழ்வில் ஏற்படும் முன்னேற்றங்கள் தாம் முக்கியம். காந்தியும் அது போல் நேரடியாய் நடைமுறை செயல்பாடு பற்றி அக்கறைப்பட்டார் என்றாலும், தேசியம், ஒழுக்கம், கடவுள், பண்பாட்டு விழுமியங்கள் போன்ற அரூப விசயங்களுக்காய் மனிதன் தன்னை தியாகம் செய்ய வேண்டும் என அவர் நம்பினார். இது தான் கருத்துமுதல் வாதம். ஆனால் அம்பேத்கர் இதற்கு எதிர்நிலை. மனிதனின் நடைமுறை உலகம், அது மட்டுமே அவரது அக்கறை. அதனாலே அவர் எழுத்தில் சற்றும் லட்சியவாத கொந்தளிப்புகள், செண்டிமெண்டுகள், அதனாலான வழவழத்தன்மை இல்லை. அரைநூற்றாண்டு காலம் முடிந்து இன்று லட்சியவாதம், அரூப நம்பிக்கைகள் ஆகியவை மண்மூடிப் போய் விட்டன. இன்றைய தலைமுறை மிக மிக லௌகீகமாய் யோசிக்கிறது. இன்றைய எழுத்தும் அவ்வாறே உள்ளது. இன்றைய எழுத்து போலவே அம்பேத்கரின் எழுத்தும் மிக மிக லௌகீகமாய் உள்ளது. கனவுகளில் சயனிக்க மறுக்கிறது.

மேலே சொன்ன கட்டுரை பற்றி சில வரிகள். பகவத் கீதை பற்றின நம் புரிதலை குப்புற திருப்பிப் போடுகிறது இக்கட்டுரை. பகவத் கீதை வர்ணாசிரம தர்மம், யாகங்கள் பற்றின நம்பிக்கைகள், ஷத்ரியர்களின் வன்முறை ஆகியவற்றின் மீது பௌத்தம் தொடுத்த தாக்குதலை எதிர்கொள்வதற்கு தோன்றின ஒரு அரசியல் பிரதி என்கிறார். கீதை ஒரு மதநூலோ தத்துவ நூலோ அல்ல என மறுக்கிறார். புத்தரின் கருத்துக்களும் அவர் உருவாக்கிய சமூக மாற்றங்களும் மக்களுக்கு வன்முறை மீது அவநம்பிக்கை ஏற்படுத்துகிறது. யுத்தம் தேவையில்லை எனும் முடிவுக்கு பிராமணர்கள் கூட வந்து சேர்கிறார்கள். இது ஷத்ரியர்க்ளுக்கு பெரும் நெருக்கடியை அளிக்கிறது. அதே போல் அரசமைப்பின் பிற தூண்களான வர்ணாசிரமும், யாக சடங்குகளூம் புத்தர் பிராமணரல்லாதோரை துறவிகளாக இயங்க தூண்டுவதுடன் ஆட்டம் காண்கின்றன. கீதை வர்ணாசிரமத்தை நியாயப்படுத்த முயல்கிறது. ஆனால் அதிலுள்ள தத்துவார்த்த பிழையை அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். அதை இங்கே விவரிக்க சற்று சிக்கலானது. அடுத்து யாகங்களின் அபத்தத்தை பௌத்தம் நிறுவியதற்கு பதிலாக கீதை அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இறுதியாய், மனித கொலைகளை ஆன்மா வேறு, உடல் வேறு என்றும், கொலை உடலை மட்டுமே இல்லாமல் பண்ணுகிறது என்றும் வாதித்து கீதை நியாயப்படுத்துகிறது. கீதையின் இந்த நியாயப்படுத்தல்கள் இல்லாவிட்டால் ஒருவேளை இம்மூன்று நம்பிக்கைகளும், அவை சார்ந்த அரசமைப்புகளும் காணாமல் போயிருக்கும் என்கிறார் அம்பேத்கர்.

உடல்-ஆன்மா வேறுபாட்டு வாதத்தை அசட்டுத்தனமானது எனும் அம்பேத்கர் கிருஷ்ணர் மட்டும் இவ்வாதத்தை ஒரு நீதிமன்றத்தில் வைத்தால் அவரை பைத்தியவிடுதிக்கு அனுப்பி விடுவார்கள் என்கிறார். எனக்கு இதைப் படிக்க மற்றொரு எண்ணம் தோன்றியது. புத்தர் உடலைக் கடந்து, நடைமுறை உலகை மீறி மற்றொரு ஆன்மீக உண்மை, விழிப்புணர்வு நிலை இல்லை என்கிறார். அவரது ஆன்மீக எழுச்சி இந்த கண்டுபிடிப்புடன் தான் துவங்குகிறது. அவர் இப்படி ஆன்மா-உடல் என மனிதனை இரண்டாக பார்ப்பதை எதிர்க்கிறார். கீதை மீண்டும் இந்த ஆன்மா-உடல் எனும் கோட்பாட்டை வன்முறையை நியாயப்படுத்த முன்வைக்கிறது. புத்தர் பேசிய விட்டேத்தி மனப்பான்மையை வன்முறையில் பிரயோகித்தால் ஒருவன் யோகியாகலாம் என்று கூறுகிறது. அதாவது புத்தரின் தரப்பை தனக்கேற்றபடி பயன்படுத்தி மறுவாதம் செய்கிறது. இது சற்றே சுற்றிவளைத்த வாதம் என்றாலும் புத்திசாலித்தனமான ஒரு பௌத்த-மறுப்பு வாதம் தான். ஆனால் அம்பேத்கருக்கு இந்த தத்துவ விளையாட்டுகளில் நம்பிக்கை இல்லை. நடைமுறையில் எவனாவது விட்டேத்தித்தனமான மனதுடன் உன் குழந்தையை கொன்றால் அதை ஆன்மீக செயல் என நீ ஏற்பாயா என அவர் பதிலுக்கு கேட்பார்.

கீதை பேசும் வன்முறை பற்றி ஓஷோ கூறியுள்ளதும் இதே பரப்பில் வைத்து படிக்க வேண்டியது தான் என நினைக்கிறேன். ஓஷோ எந்த சமூகமும் மிகப்பெரிய போர்களை முன்வைத்து தான் செழித்து ஓங்கி உள்ளன என்கிறார். போருக்கான தயாரிப்புகள் மனிதனின் உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக்கொணர்ந்து சமூகத்தை உச்சபட்ச வளர்ச்சிக்கு இட்டு செல்லும் என்கிறார். இரு உலகப்போர்களுக்கு பின்னால் பெரும் வளர்ச்சி கண்ட தேசங்களை, தொடர்ந்து மோதிக் கொண்டிருந்த பழைய கிரேக்க சமூகங்களை உதாரணம் காட்டுகிறார். போரின் போது மனிதனின் தீய குணங்கள் முழுக்க வெளியாகும் என ஓஷோ ஏற்கிறார். ஆனால் மனிதனின் நற்குணங்கள் இத்தீய குணங்களின் ஊடே தான் வெளிவர முடியும் என்கிறார். தீமையையும் நன்மையையும் பிரிக்க இயலாது. கொலை செய்கிற மனிதன் தான் உன்னதமான தத்துவங்களையும் கவிதை உள்ளிட்ட பண்பாட்டு வடிவங்களையும் தோற்றுவிக்க முடியும். அவன் தான் பொருளாதார மேம்பாட்டுக்கும் காரணமாகிறான். ஆனால் போர் செய்யாதே எனக் கூறி அவனுக்குள் ஒரு குற்றவுணர்ச்சியை விதைத்தால் அவனது ஒட்டுமொத்த படைப்பூக்க ஆற்றல்களும் அடங்கி விடும் என்கிறார் ஓஷோ. அவ்விதத்தில் கீதை போரைப் போற்றியது இந்தியா ஒரு வளர்ந்த பெரும் தேசமாய் இருந்ததற்கு உதாரணம் என்கிறார். ஏனென்றால் பெரும் போர்கள் நடத்த பொருள் வளம் வேண்டும். பாரதப் போருக்கு பிறகு பெரும் போர்கள் நடக்காதது இந்தியாவின் பொருளாதார, கலாச்சார தளர்ச்சிக்கு காரணம் என்கிறார். இதற்கு அவர் பகவத் கீதைக்கு பிறகு தோன்றிய வன்முறை மறுப்பாளர்களின் பிரச்சாரம் தான் காரணம் என்கிறார்.

ஓஷோவின் வாதத்தில் சில பிழைகள் உள்ளன. போரினால் அனைத்து சமூகங்களும் வளர்ந்ததாய் கூற முடியாது. போருக்கு அது நிகழும் சூழலின் அழுத்தங்களுக்கும் சம்மந்தமுள்ளது. போரை முன்னிட்டு சமூகங்கள் தம்மை மேலெடுக்கின்றன என்பது தர்க்கரீதியாய் ஏற்கத்தக்கது அல்ல. மேலெழுந்து வரும் சில சமூகங்களுக்கு அப்போது போர் தவிர்க்க இயலாததாய் இருந்தது என்றும் பார்க்கலாம். தேவ்தத் பட்நாயக் தனது “ஜெயா” எனும் மகாபாரத நூலில் பாரதப் போர் சில குறுங்குழுக்கள் மட்டும் பங்கேற்ற எளிய சண்டையாகத் தான் இருந்திருக்க வேண்டும், லட்சக்கணக்கில் மக்களும், குதிரைகளும் மாண்டதாயும், ரத்தக்கடல் புரண்டதாயும் கூறுவது கவிஞனின் கற்பனை மட்டுமே என்கிறார். இதை அவர் பாரதப்போர் நடந்ததாய் கூறப்படும் இடம், அதன் வரலாறு ஆகியவற்றை சான்றுகளாய் வைத்துச் சொல்லுகிறார். இதன்படி “பெரும் பாரதப்போர் எனும் பண்பாட்டு எழுச்சி சின்னம்” எனும் ஓஷோவின் வாதம் அடிபட்டுப் போகிறது.


Comments

Jjkk said…
Very nice observation ... Geethaya naan idhuvaraikkum apdi paakkala ... Aana andha kaala soozhalla idhu nadandhirukka vaayppu neraya irukku ...

Osho solradhum oru vagaila saridhaan ... Mudhal ulagapporukku apramdhaan Roaring twenties nu our kaalamey vandhadhu ... Beton, Duchamp, Hemingway, Scott Fitzgerald, Malevich, Picasso, Buñuel, Dali pondra pala kalaignargal valarndhadhey por soozhalla dhan ... Por kaatra aazham nidharsana vaazhkai katradhu illa ... Adhanaaladhaan namma ellathulayum konjam pin thangi irukkom ... Aana por vandha samaalikkara alavukku kooda namakku sakthi illa ... Adhaan unma

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...