Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மோடி எனும் அக்டோபஸ்


Image result for modi 

கேஜ்ரிவாலுக்கும் மத்திய அரசுக்குமான மோதலை கவனித்து வந்திருப்பீர்கள். இன்று நேற்றல்ல ஆரம்பத்தில் இருந்தே தில்லியின் மீது யாருக்கு அதிகாரம் எனும் கேள்வி இருந்து தான் வந்திருக்கிறது. தேசத்தின் தலைநகர் என்பதால் அதன் மீது மத்திய அரசு கட்டுப்பாடு வைத்திருப்பது பாதுகாப்புக்கு நல்லது என சட்டம் அதிகப்படியான அதிகாரத்தை மத்திய அரசுக்கு விட்டு வைத்துள்ளது. அதனால் யார் மத்தியில் இருக்கிறார்களோ அவர்களே தில்லியை ஆள முடியும். தில்லி மாநில அரசு “பன்னீர் செல்வம் அரசாகத்” தான இருக்க முடியும்.
 இதன் விளைவு சட்டம் ஒழுங்கு, அரசு அதிகாரிகளின் குற்றங்கள் ஆகியவற்றை மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாமல் போவது. மாநில ஆட்சி மேல் மைய அரசாலும் அதிக கவனம் செலுத்த இயலாது என்பதால் யாரும் பூரணமாய் ஆட்சி பண்ண முடியாது தலையில்லாத முண்டம் மாதிரி தில்லி ஆகி விடுகிறது. ஷீலா தீக்‌ஷித் ஆட்சி மீது தில்லிக்காரர்களுக்கு ஏற்பட்ட கடும் அதிருப்தி தான் இளம்பெண்ணின் கொடூர பேருந்து கற்பழிப்பை ஒட்டி பெரும் இளைஞர்கள் போராட்டமாய் வெடித்தது. அதன் பின்னணிக் காரணம் இந்த நீண்ட கால ஆட்சி செயலின்மை தான். ஆம் ஆத்மி முளைவிட்ட மண்ணாக அது ஆனதற்கும் இதுவே காரணம். இப்பிரச்சனைக்கு உண்மையில் சரியான உடனடி தீர்வு ஒன்றில்லை.

கேஜ்ரிவால் செய்வதெல்லாம் மத்திய அரசை சீண்டுவது தான். ஊழல் செய்யும் அதிகாரிகளை கைது செய்யும் உரிமை தனக்கு உண்டு என்கிறார். இல்லை அதற்கு ஆளுநர் அனுமதி வேண்டும் என்கிறது மோடி அரசு. இரு சாராரும் நீதிமன்றத்தில் இது பற்றி மோதுகிறார்கள். ஏற்கனவே தில்லி தேர்தலில் மண்ணைக் கவ்விய பா.ஜ.கவுக்கு இது ஒரு மோசமான பெயரைப் பெற்றுத் தரும் என்பதே உண்மை. மோசமான சட்ட ஒழுங்கு சீர்கேடு மீண்டும் ஒரு உணர்ச்சிகரமான சம்பவம் மூலம் மக்களின் கவனத்துக்கு வந்து போராட்டமாய் வெடிக்கும் என்றால் கேஜ்ரிவல் அதை அடக்காமல் தலைமை தாங்க முயல்வார். ஒட்டுமொத்தமாய் இது மோடியின் மீதான அதிருப்தியாய் உருக்கொள்ளும். அதனால் அரசியல் ரீதியாய் மோடி இப்போது மேற்கொள்ளும் அதிகார மல்யுத்தம் அவருக்கே பாதகமானது. சொல்லப் போனால் காங்கிர்ஸ் மத்தியில் இருக்கும் போது இந்தளவு நேரடியாய் தில்லியை கட்டுப்படுத்த முயலவில்லை.
 ஆனால் மோடியின் மனநிலை சர்வாதிகாரிகளுக்கு உரித்தானது. ஒவ்வொரு அசைவும் தன் விரல் நுனி அழுத்தத்தில் இருக்க வேண்டும் என அவர் நம்புகிறார். தனக்கு எதிரான சிறு சலனமும் நடக்கக் கூடாது. அதற்காய் அவர் முதலில் டி.வி மீடியாவை முழுக்க தன் வசப்படுத்துகிறார். டைம்ஸ் நவ், சி.என்.என் போன்றவை முழுநேர பா.ஜ.க பிரச்சார பீரங்கிகளாகி விட்டன. அடுத்து மத்திய அரசு சிறு பிராந்திய சமூக வானொலிகளை குறி வைத்துள்ளது. இந்தியாவில் மொத்தமுள்ள ஆயிரக்கணக்கான சமூக வானொலிகளுக்கு மத்திய அரசு ஒரு ஆணையிட்டுள்ளது. இதன் படி இவை இனி மேல் என்ன நிகழ்ச்சியை ஒலிபரப்பும் முன்னாலும் அதன் ஒரு பிரதியை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி பெற வேண்டும். இப்படி பல நூறு மணிநேர நிகழ்ச்சிகளை பதிவு செய்து அனுப்புவது நடைமுறையில் கிட்டத்தட்ட அசாத்தியம் என புலம்புகின்றன வானொலிகள். அது போக இந்நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய பல லட்சம் சி.டிக்களை கேட்டு தகவல்களை தொகுத்து அலசுவதற்காய் பல கோடிகள் செலவிலான ஒரு துறையையே மத்திய அரசு நியமிக்க போகிறது.
மோடியின் நோக்கம் இந்த சமூக வானொலிகள் மூலம் பெரிய ஊடகங்கள் நுழையாத சிறு உள்ளூர் பகுதிகளையும் ஊடுருவ வேண்டும் என்பது. உண்மையில் இந்த ஆணை ஒரு மறைமுக மிரட்டல் தான். இதன் உள்-உத்தரவு இனிமே மோடியை புகழ்ந்தும் அவரது திட்டங்களை பிரச்சாரம் பண்ணியும் தான் சமூக வானொலிகள் இயங்க வேண்டும் என்பது.
 மோடி அரசு பதவி ஏற்றதும் மும்முரமாய் வரலாற்றை இந்துத்துவா கோணத்தில் மாற்றி எழுத செய்த முயற்சிகளை அறிவோம். அது போல் மோடியின் உரையை தொடர்ந்து தேசிய வானொலியில் ஒலிபரப்புவது, பள்ளியில் டி.வி அமைத்து மாணவர்களுக்கு தன் பேச்சு போய் சேருமாறு பார்த்துக் கொண்டது, ஒரு பெரிய துறையை உருவாக்கி டிவிட்டரில் தனது ஒவ்வொரு சொல்லையும் பிரச்சார உத்தியாக மாற்றி அதை உயிரோட்டமாய் வைத்துக் கொள்வது, தன் ஓராண்டு ஆட்சியின் அதிருப்திக் குரல்களை முடக்கும் விதம் டி.வி, செய்தித் தாள், டிவிட்டர் என எங்கும் அதிரடி பிரச்சார அவதாரங்கள் எடுத்து குட்டித்தலைவர்களின் நூறு குரல்களில் ஒரே சமயம் அவர் பேசியது என முழுக்க முழுக்க பிரச்சாரம் மூலமாகவே ஆட்சியையும் நடத்தலாம் என அவர் நம்புகிறார். இதுவும் சர்வாதிகாரிகளின் ஒரு உளவியல் தன்மையே.
 சர்வாதிகாரிகள் தம் பிம்பத்தை தொடர்ந்து மக்கள் மீது திணிப்பதன் மூலம் அதிகாரத்தை தக்க வைப்பவர்கள். அவர்களுக்கு செயல்பாடு முக்கியமே அல்ல. மக்களுக்கு தம் மீதுள்ள பார்வை எப்படி உள்ளது, அதை வேறெப்படி சாதகமாய் அமைக்கலாம் என்பதிலேயே முனைப்பு கொள்வார்கள். சர்வாதிகாரிகள் தம்மை மக்களின் நீட்சியாக சித்தரிப்பார்கள். மக்களின் தேவை என ஒன்றை கட்டமைத்து, அதை தாம் நிறைவேற்றுவதாய் காட்டுவார்கள். ஹிட்லரும் அதைத் தான் செய்தார். மக்களின் வெறுப்பை திரட்டி ஒரு பொது எதிரியை உருவாக்கி அதன் மூலம் சர்வாதிகாரியானார். அப்போது ஒவ்வொரு பிரஜைக்கும் தான் தான் ஹிட்லர் எனும் எண்ணம் உண்டானது. அதுவே சர்வாதிகாரிகளின் வலிமை. இப்போது இந்திய பிரஜைகளில் ஒரு சாரார் தம்மை மோடியாக கற்பித்துக் கொள்கிறார்கள். இதனால் மோடியின் குற்றங்களை அவர்களால் பார்க்க முடியாது போகும். மனிதனின் அடிப்படை இயல்பு தன் குற்றத்தை பார்க்க மறுப்பது தானே. தனது நீட்சியான சர்வாதிகாரியின் குற்றத்தை அவன் எப்படி பார்க்க இயலும்?
ஊழல், கறுப்புப்பணம், தொழில் உற்பத்தி ஆகியவை பற்றின மோடியின் பார்வையை கவனியுங்கள். எப்போதும் அவர் இவை அரசின் பணி அல்ல மக்களின் கடமை எனக் கூறுகிறார். அதாவது மக்கள் ஒழுக்கமாய் இருக்க வேண்டும். அதே போல் ஊழியர்களும் ஒழுக்கமாய் பணி செய்ய வேண்டும். மக்கள் தெருவைக் கூட்டி சுத்தம் செய்ய வேண்டும். மக்களே ஆளுக்கொரு கழிப்பறை கட்டி அதை உபயோகப்படுத்த வேண்டும். மக்களே கறுப்புப்பணம் ஒழிவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். மக்களே தொழில் உற்பத்தியையும் பெருக்க வேண்டும். அப்படியென்றால் அரசு தான் எதற்கு என நீங்கள் கேட்கக் கூடாது. மோடி தனது பிரஜைகளை தனது பிரதிபிம்பங்களாகப் பார்க்கிறார். தான் இப்படி சொல்லும் போது மக்கள் இதையே கிளிப்பிள்ளைகள் போல் “ஆமாம் நாங்கள் எங்களையே சரி பண்ணினால் தேசம் சரியாகி விடும்” என கூற வேண்டும் என எதிர்பார்க்கிறார். இந்த தந்திரத்துக்கு பலியாகிற மக்கள் என்றுமே மோடியை விமர்சிக்க மாட்டார்கள். ஜெர்மனியில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது ஹிட்லர் பதவிக்கு வருகிறார். அவர் பொருளாதார மேம்பாட்டை விட யூத வெறுப்பை அறுவடை செய்வது, யுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் தேசியவாத எழுச்சியை உருவாக்கி மக்களுக்கு தமக்கு சாதகமான, தாமே பங்கெடுக்கிற ஆட்சி நடப்பது போல் ஒரு தோற்றமயக்கத்தை உருவாக்குவது ஆகியவற்றில் தான் முனைப்பு காட்டினார். சர்வாதிகாரிகளுக்கு என்றுமே ஆட்சி செய்வதில் ஆர்வம் குறைவு தான். தம்மை பலமடங்காய் பெருக்கிக் கொள்வதில் தான் முனைப்பு அதிகம்.
இப்போது மோடி அரசாங்கம் இந்தியாவின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வரும் திட்டம் தீட்டியிருக்கிறது. 29-5-15ஆம் அன்றைய ஆங்கில ஹிந்து நடுப்பக்கத்தில் இதை கடுமையாய் விமர்சித்து ரொமிலா தாப்பர் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அரசின் இந்த திட்டம் கல்வித்தரத்தை மேம்படுத்த என மேம்போக்காய் கூறப்பட்டாலும் உண்மையான இலக்கு இந்தியாவின் உயர்கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுவது அனைத்தும் மோடிக்கு சாதகமாய் இருக்க வேண்டும் என்பது தான். உதாரணமாய் ஜவஹர்லால் நேரு பல்கலையை எடுத்துக் கொண்டால் அங்கு பா.ஜ.க மாணவர் அணியை விட இடதுசாரி அணிகளே வலுவாக உள்ளன. இந்த பாடத்திட்ட மாற்றம் மூலம் மொத்த ஜெ.என்.யுவையும் மோடி தன் பிரச்சார களமாய் மாற்ற இயலும். சமீபமாய் நடந்த சம்பவம் இது. சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் மாணவர் பேரவை மோடிக்கு எதிராய் சில சுவரொட்டிகள் ஒட்டினதற்கு புகார் தெரிவித்து ஒருவர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப, மத்திய அரசு உடனடியாய் இதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கல்லூரி முதல்வருக்கு ஆணை இடுகிறது. அப்பேரவை அதிகாரபூர்வமாய் தடை செய்யப்படுகிறது.
இந்தியா முழுக்க பல்கலைக்கழகங்கள் தன்னிறைவுடன் தம் போக்கில் அரசியல் சுதந்திரத்துடன் இயங்குவது மோடியின் உள்ளங்கையில் நமைச்சலை ஏற்படுத்துகிறது. எப்படியாவது இந்தியாவின் அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும் எந்த ஆசிரியர் எதைப் பேச வேண்டும், எந்த மாணவர் எதைச் செய்ய வேண்டும் என்பதில் ஒரு கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டு வர ஆசைப்படுகிறார். இது நடைமுறையில் முழுக்க சாத்தியமில்லை என்றாலும் அப்படியொரு கட்டுப்பாடு இருப்பதாய் பிரமையை ஏற்படுத்தினாலே மோடி வென்று விடுவார். எங்கும் அவரது கண்காணிப்பு கேமரா இயங்குவதாய் ஒரு அச்சம் தோன்ற அனைவரும் வாயை மூடிக் கொள்வார்கள். அடுத்த சில வருடங்களிலும் இதற்கான முயற்சிகளைத் தான் மோடி அதிகம் செய்யப் போகிறார். பொருளாதார முன்னேற்றத்தை விட centralization இல் தான் அவருக்கு முனைப்பு அதிகம்.

 நன்றி: வெற்றிவேந்தன், ஜூன் 2015

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...