Skip to main content

கிரிக்கெட் வர்ணனை

Image result for michael holding commentating

இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளையோ அல்லது அணியின் தேர்வையோ விமர்சிக்கலாகாது என ஒரு விதிமுறையை போன வாரிய தலைவர் ஸ்ரீனிவாசன் கொண்டு வந்தார். ஸ்ரீனிவாசனுக்கு எதிராய் சர்ச்சைகள் கிளம்பிய போது கிரிக் இன்போ இணையதளம் ஒரு காணொளி விவாதம் ஒளிபரப்பியது. அதில் சஞ்சய் மஞ்சிரேக்கர் பங்கேற்றார். அவர் ஸ்ரீனிவாசனைப் பற்றி உயர்வாய் சில விசயங்கள் சொன்னாலும் கூட விவாதத்தில் பங்கேற்றமைக்காய் சில தொடர்களுக்கு அவரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனை அண்யில் இருந்து விலக்கி வைத்தார்கள். இதற்கு ஸ்ரீனிவாசனின் குறுக்கீடு காரணம் என்கிறார்கள். அதே போல முன்னாள் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணமும் பெருத்த லாபம் வரும் வர்ணனை ஒப்பந்தங்களும் அளித்து தனக்கு எதிராய் யாரும் வாய் திறக்காதபடி ஸ்ரீனிவாசன் பார்த்துக் கொண்டார். இன்றும் இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அதிகார மையங்களுக்கு கூழை கும்பிடு போடுபவர்களாகவே இருக்கிறார்கள். இந்த அவலநிலையை கடுமையாய் விமர்சித்து ஆங்கிலத்தில் முகில் கேசவன் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வர்ணனையாளர்கள் இன்னும் வெளிப்படையாய் பேசுவதாய் அவர் கூறுகிறார். இதில் மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை.

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க வர்ணனையாளர்களும் வெளிப்படையாய் தம் கிரிக்கெட் வாரியத்தை கண்டிப்பதோ விமர்சிப்பதோ இல்லை. இங்கிலாந்தின் நசிர் ஹுசென் போன்றவர்கள் விழுந்து விழுந்து தம் நாட்டை புகழ்கிறவர்கள். இவர்களின் ஒருதலைபட்சமான பார்வை அடிப்படையில் எரிச்சலூட்டக் கூடியது. வர்ணனையாளர்கள் மட்டுமல்ல இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் பத்திரிகையாளர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கட்டுரைகள் கூட சார்புநிலை எடுப்பவர்களே. இதில் ஒரு தேசத்தின் வளர்ச்சியை பொறுத்து வித்தியாசம் உள்ளது என்பது ஆர்வமூட்டும் சேதி.
ஒரு நாடு புதிதாய் தோன்றி வளரும் நிலையில் அங்கு தேசியவாதம் உச்சத்தில் இருக்கும் என ஜார்ஜ் ஆர்வெல் எழுதினார். வங்கதேசத்தில் முனு நடந்த ஒரு கால்பந்தாட்டத்தில் அயல்நாட்டு அணி வெல்ல கொந்தளித்த பர்வையாளர்கள் மைதானத்தில் இறங்கி எதிரணியினரின் கால்களை உடைத்தனர் என தான் கண்ட ஒரு ஆட்டம் பற்றி கூறுகிறார். இந்த கோணத்தில் யோசிக்கையில் ஜிம்பாப்வே, வங்கதேசம், நியுசிலாந்த், இலங்கை போன்ற தேசங்களின் வர்ணனையாளர்கள் ஆவேசமாய் ஒவ்வொரு சின்ன விசயத்திலும் தம் அணியை போற்றி புகழ்வது நினைவுக்கு வருகிறது. இந்த பட்டியலில் இலங்கை வர்ணனையாளர்கள் சற்று மேல். தம் அணி தோற்றால் அதை ஒத்துக் கொள்வார்கள். ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகியவற்றின் வரணனையாளர்கள் தோல்வியிலும் தம் அணியே சிறப்பாய் ஆடியதாய் பேசிக் கொண்டிருப்பார்கள். சிலர் தம் அணியின் ஏதாவது ஒரு சுமாரான வீரரை அரைமணிக்கு மேலாய் திரும்ப திரும்ப புகழ்ந்து கொண்டிருப்பார்கள்.
வளர்ந்த தேசங்களான தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகியவற்றின் வர்ணனையாளர்களும் ஒருபக்க சார்பானவர்கள் தாம். ஆனால அவர்கள் தம் அணியை விட அணியின் கலாச்சாரம், திட்டம், போக்கு ஆகியவற்றையே அதிகம் புகழ்வார்கள். ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களுக்கு சுயதம்பட்டம் அதிகம் என்றாலும் சிறப்பான ஆட்டத்தை யார் ஆடினாலும் கொண்டாடுவார்கள். கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக அல்லாமல் அடிதடியாக, மோதலாக, வன்முறையாக பார்ப்பது அவர்களின் பாணி. அதனால் யார் பெரிய ரௌடியோ அவருக்கே அதிக பாராட்டு கிடைக்கும். இங்கிலாந்து வர்ணனையாளர்களைப் பொறுத்த மட்டில் வெற்றியை அடைவதை விட தோல்வியை தவிர்ப்பதும் உழைப்பும் உன்னிப்பான ஆட்டமுமே பாராட்டப்படும். தம் அணி மட்டமாய் ஆடினாலும் துளி கூட கலவரப்படாமல் “நன்றாய் போராடினார்கள் எம் வீரர்கள்” என புன்னகைப்பார்கள். எவ்வளவு அடி வாங்கினாலும் தாங்குவார்கள். ஆனால் எப்போதாவது நல்ல அணிக்கு எதிராய் வென்று விட்டாலோ வானுக்கும் மண்ணுமாய் குதிப்பார்கள்.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மே.இ தீவுகள் இவ்விசயத்தில் ஒரே பட்டியலுக்குள் அடங்குவார்கள். இவ்வணியின் வர்ணனையாளர்கள் அணியை விட நட்சத்திரங்களை புகழ்வார்கள். இந்திய வர்ணனையாளர்கள் நம் வீரர்கள் மோசமான ஒரு ஷாட் அடித்து வெளியேறினால் அதைக் கூட கண்டிக்க தயங்குவார்கள். இந்த அம்மாஞ்சித்தனம் காரணமாய் நம் வர்ணனை மிகவும் அலுப்பூட்டக் கூடியதாகி விட்டது. ஆனாலும் சஞ்சய் மஞ்சிரேக்கர், ஹர்ஷா போக்ளே, ஆகாஷ் சோப்ரா, லஷ்மண் சிவராம கிருஷ்ணன் ஆகியோரின் வர்ணனை கூர்மையானது. நான் மிகவும் வெறுக்கும் இந்திய வர்ணனையாளர் கபில் தேவ். அவருடைய மொழிக்குறைபாடு காரணமாய் யோசிப்பதில் 40% தான் பேசுவார். அதிலும் மொண்ணையாய் அர்த்தமற்றதாய் எல்லாருக்கும் தெரிந்த ஏதாவது ஒன்றைத் தான் சொல்லுவார். பந்து வீச்சாளர்கள் ஏன் சரியாய் வீச வில்லை என்று கேட்டால் “அவர்கள் லைன் மற்றும் லெங்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்பார். அவருக்கு அடுத்தபடியாய் ரவிசாஸ்திரி. அவர் தேய்வழக்குகளின் மன்னர். முன்பெல்லாம் யார் நான்கு ஓட்டங்கள் அடித்தால் “went like a tracer bullet” என்பார். நான் காதைப் பொத்திக் கொள்வேன். கவாஸ்கர் ஸ்கூல் வாத்தியார் போல் பேசுவார். திராவிட் மற்றும் லஷ்மணும் அம்மாஞ்சிகள் தாம். யாருக்கும் தொந்தரவில்லாதபடி பேச முயல்வார்கள். அவர்களது அபார தொழில்நுட்ப பார்வையும் பெரும்பாலும் வெளிப்படுவதில்லை. வெங்கடேஷ் பிரசாத்துக்கும் கூர்மையான பார்வை இல்லை.
பாகிஸ்தானில் எனக்கு ரமீஷ் ராஜா பிரியமானவர். அவரது ஆங்கில சரளமும் ஆவேசமான பாணியும் நக்கலும் என்னை கவர்ந்த விசயங்கள். அது போக இனிமையான குரலும் ஸ்டைலான தோற்றமும் கொண்டவர். அவருக்கு வேகவீச்சாளர்களை மிகவும் பிடிக்கும். 130க்குள் வீசுபவர்களைக் கண்டால் கிண்டலடிக்க தொடங்கி விடுவார். ஐ.பி.எல்லில் சைனாமேன் சுழலர் குல்தீப் யாதவ் முதன்முதலில் தோன்றிய போது அவர் மிகவும் உற்சாகமாய் பாராட்டிப் பேசினார். குல்தீப் பாகிஸ்தானில் தோன்றியிருந்தால் இந்நேரம் டெஸ்ட் அணியில் ஆடியிருப்பார். நம் வர்ணணையாளர்கள் பொதுவாய் பந்து வீச்சாளர்களை பொருட்படுத்துவதே இல்லை. பாகிஸ்தானில் கிரிக்கெ வீரர்களிடையே அரசியல் அதிகம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வர்ணனையில் தமக்கு வேண்டாதவர்களுக்கு வேட்டு வைப்பார்கள். மே.இ தீவுகளைப் பொறுத்தமட்டில் நட்சத்திர மதிப்புக்கு இடமில்லை. அவர்கள் தேவையின்றி தம் அணியை தூக்கிப் பிடிப்பதில்லை. மே.இ தீவுகளில் இருந்து இங்கிலாந்தில் குடியேறி இங்கிலாந்துக்காய் வர்ணனை செய்யும் மைக்கேல் ஹோல்டிங்கும் அப்படித் தான். முடிந்தவரை தம் சார்பை காட்டிக் கொள்ளாமலே விமர்சனபூர்வமாய் பேசுவார்கள்.
இப்படி ஒவ்வொரு நாட்டின் பண்பாடு மற்றும் வாரியத்தின் அரசியல் நிலை பொறுத்து வர்ணனை மாறுபடுகிறது. இந்தியாவில் வீரர்கள் நட்சத்திரங்களாய் இருப்பதாலும், வாரியத்திற்கு நெருக்கமானவர்களுக்கு நிறைய அனுகூலங்கள் கிடைக்கும் என்பதாலும் அதற்கேற்றபடி வர்ணனையின் போது சிலர் புகழப்படவும் சிலர் கவனிக்கப்படாமல் போகவும் செய்வார்கள். உதாரணமாய் முன்பு கிடைக்கும் போதெல்லாம் தோனியை புகழ்வார்கள். அவரை விட அதிக ஓட்டமெடுக்கும் மற்றொரு மட்டையாளரை கவனிக்க மாட்டார்கள். மோசமாய் ஆடினாலும் தோனி கேப்டன் கூல் தான். அதே போல் இப்போது கோலியின் ஆவேசத்தை கொண்டாட துவங்கி இருக்கிறார்கள். இதன் பின் ஒரு தெளிவான வணிகப் பார்வையே உள்ளது. நட்சத்திரங்களை முன்னிறுத்தி ஆட்டத்தை விற்பது தான் நோக்கம் . இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சியோ ஆட்டத்தின் வியூகங்களோ இரண்டாம் பட்சம் தான்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கிரிக்கெட் வர்ணனை எளிதல்ல. தமிழில் வர்ணனை அளிக்கும் நண்பர் ஒருவர் இதன் சிரமங்களை என்னிடம் கூறினார், என்னிடம் ஒரு ஓவரைப் பார்த்து அதை வர்ணித்து பதிவு செய்யச் சொன்னார். சில நொடிகளுக்குள் ஒரு பந்து விழுந்து அடிக்கப்படுவதை சரியான படி விளக்கி உங்கள் பார்வையையும் அளிக்க வேண்டும். பார்வையாளர்களுக்கு தெரியாத ஒன்றை சொல்ல வேண்டும். தடையின்றி பேச வேண்டும். “அழகான புல் ஷாட்” என யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் “மிட் விக்கெட் பவுண்டரி அருகில் இருக்கிறார்” என ஹோல்டிங் உடனே கூட சொல்லி விடுவார். மொத்த மைதானத்தின் களத்தடுப்பு விவரங்களையும் அவர் விரல்நுனியில் வைத்திருப்பார். நிமிடத்திற்கு நிமிடம் அப்டேட் செய்வார். வீச்சாளரின் திட்டம் என்னவாக இருக்கும் என ஊகிப்பார். இதையெல்லாம் பொறுமையாய் யோசித்து சொல்லலாம். ஆனால் உடனடியாய் சரியான நேரத்தில் தடுக்காமல் சொல்வது எளிதல்ல.  

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...