Skip to main content

இசையின் டினோசர் கவிதைகள்




 இசையின் கவிதைகளை படிக்கையில் அவர் சமகாலத்து கவிதை தடத்தில் இருந்து விலகி இருப்பதை காணலாம். இன்றுள்ள அவநம்பிக்கையும், அக்கறையின்மையும் கலந்த பண்பாடு அவரிடம் இல்லை. எதையும் தயக்கமின்றி பகடி மூலம் மேலோட்டமாய் கடந்து போகும் காலத்தில் வாழ்கிறோம். நமக்கு மிக முக்கியமானவை கூட மிக முக்கியமாக சாதாரணமானவை. ஒரு முக்கியமான விசயத்தை கவனத்தோடு பார்த்து அறிந்து உதறி விடுகிறோம். இது இன்றைய மொழியில் ஒரு கொந்தளிப்பை, சிதறலை, அலைவை ஏற்படுத்தி இருக்கிறது.


மாறாக நவீனத்துவ கவிதை அதன் மையத்தில் ஒரு அமைதியை கொண்டது. கோபமாக பேசும் போதும் நவீன கவிஞனிடம் ஒரு கசப்பான புன்னகை இருக்கும். அவன் தனது நிலையமைதியை இழக்காமல் பேசுவான். அவனது பார்வை ஒரு மையமான தேடலை நோக்கி குவியும். அவன் ஒரு நிரந்தரமான, மறுகேள்வியற்ற உண்மையை நம்புவான். கணிசமான நவீன கவிதைகளில் உன்னதம் பற்றின தேடலாக இது இருந்தது. எழுத்தின், ஆன்மீகத்தின், சிந்தனையின் பூரணமான நிலையில் நாம் ஒரு மையமான அமைதியை அடைவோம் என நம்பினோம். இந்த அமைதி ஒரு உன்னதமாக, அனுபூதியாக நவீன கவிதைகளில் இருந்தது.

இன்னும் குறிப்பாக, நவீன கவிதை ஒரு சிதைவில் இருந்து பூரணத்துவத்தை நோக்கி சென்றது. ஆரம்பம் சிதைவாகவும் முடிவு பூரணமாகவும் இருக்கும். இந்த கட்டமைப்பை அல்லது அச்சை நாம் இசையிடமும் காண்கிறோம். சரி இசையின் கவிதைக்கு போகும் முன் பிரமிளின் இரு சிறு கவிதைகளை இதற்கு உதாரணமாக பார்ப்போம்.
1, சைத்ரீகன்

வெண்சுவர்த் திரையிலென்
தூரிகை புரண்டது.
சுவரே மறைந்தது.
மீந்தது காட்சி.
ஓஹோ,
உயிர்த்தெழும் ஒளிக்கு
இருள் ஒரு திரையா?
பாழாம் வெளியும்
படைப்பினை வரையவோர்
சுவரா?

எழுத்து. டிச. 1961

2. பல்லி

கவிதை -
இறக்கத் துடிக்கும் வாலா?
உயிரை மீண்ட உடலா?

எழுத்து. செப். 1963.

இரண்டுமே எளிய கவிதைகள் தாம். முதல் கவிதையில் ஒருவர் ஓவியம் வரைகிறார். வரைந்த சுவர் காணாமல் ஆகிறது. ஓவியம் நிலைக்கிறது. “சுவர் இன்றி சித்திரம் வரைய முடியாது என்கிற நடைமுறைவாத பழமொழி தெரிந்திருக்கும். பிரமிள் ஒரு ஓவியம் சுவரின்றி நிற்கும் என்கிறார். ஏனென்றால் அதன் நிலைப்பு நம் கற்பனையில், ஆன்மாவில் இருக்கிறது. இறுதி வரியில் பாழ் தான் ஒரு படைப்பு நிலை கொள்ளும் இடம் என்கிறார். அதாவது படைப்பு சூனியத்தில் தோன்றும் என்கிறார். சூனியம் என்றால் ஒன்றுமில்லை என்றல்ல. நிலைத்த அர்த்தங்கள் அற்ற ஒரு சுதந்திரமான வெளி இந்த சூனியம். எதையும் பார்க்காமல் இருந்தால் பார்க்க வேண்டியதை பார்க்கலாம் எனும் ஜென் தத்துவம். இதைத் தான் பிரமிள் சுட்டுகிறார். இங்கு கவனிக்க வேண்டியது ஓவியம் எப்படி சுவர் இல்லாமல் ஆகிறது, அதன் மூலம் கவிதை ஒரு சிதைவில் துவங்குகிறது என்பது. அடுத்து, அது பாழ் எனும் முழுமையில் சென்று முடிகிறது.

பல்லி கவிதை ஒரு கேள்வி கேட்கிறது. கவிதை என்பது பிரபஞ்ச தரிசனத்தில் இருந்து மனிதன் பெயர்த்து எடுத்த சிறு பகுதியா அல்லது என்னதான் அழிந்தாலும் அழியாமல் நிலைக்கும் ஒரு பேருண்மையா? அதாவது கவிதை என்பது கவிஞனின் தரிசனமா அல்லது அதையும் உள்ளடக்கிற அதைக் கடந்த ஒரு பேருண்மையா எனும் தத்துவ விவாதம் இது. அதாவது, பேருண்மையை கவிதையில் காண இயலாது. ஆனால் பேருண்மையின் ஒரு துலக்கமற்ற பிரதிபலிப்பை பார்க்கலாம். பிரதிபலிப்பில் இருந்து கவிதை பேருண்மை நோக்கி நம்மை அழைத்து செல்லும் என்கிறார் பிரமிள். இதிலும் துண்டுபட்ட வால் மற்றும் வாலற்ற உடல் எனும் சிதைவில் துவங்கி ஒரு ஒட்டுமொத்த பூரணத்துவத்தை நோக்கி கவிதை செல்வதை பார்க்கலாம்.

இனி இசையின் இரு கவிதைகளைக் காண்போம்.
1.    
3 கி. மீ

அந்த ஊருக்கு
இந்த வழியே
3 கி.மீ எனக் காட்டிக் கொண்டு
நிற்கும்
கைகாட்டி மரத்திற்கு
அவ்வூரைப் பார்க்கும்
ஆசை வந்துவிட்டது ஒரு நாள்

வாஞ்சை கொண்டு
கிளம்பிய மரம்
நடையாய் நடந்து கொண்டிருக்க

3 கி.மீ. 3 கி.மீ. எனத்
தன்னை பின்னோக்கி
இழுத்துக் கொள்கிறது
அவ்வூர்

2.   வளர்ந்தாலும் நடந்தாலும்


என் தோட்டத்தில்
ஒரு ரோஜா பூத்திருக்கிறது
அதன் கூந்தல் வெகு தொலைவில் இருக்கிறது

ரோஜாவின் கனவில் கூந்தலும்
கூந்தலின் கனவில் ரோஜாவும்
அடிக்கடித் தோன்றி மறைகிறது

கூந்தலை எண்ணி எண்ணி
ரோஜா கறுத்து வருகிறது
கூந்தல் சிவந்து வருகிறது
ரோஜா நடந்து செல்லவோ
கூந்தல் வளர்ந்து நீளவோ
இயலாது

வளர்ந்தாலும் நடந்தாலும்
சென்று சேர இயலாது

மூன்று கிலோமீட்டர் கவிதையில் ஒரு சுட்டித்தனம் உள்ளதை கவனிக்கலாம். இது தான் இசையின் பால் நமக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும் முதல் விசயம். மரம் அந்த 3 கி.மீ தொலைவில் உள்ள ஊரைப் பார்க்க கிளம்புகிறது. ஆனால் அது தன் மீதே அப்பலகையை ஏந்தி இருப்பதால் மூன்று கி.மீ கடந்ததும் அது இன்னும் மூன்று கி.மீ போக வேண்டும் என அந்த பலகை சொல்கிறது. இதைத் தான் இசை ஊர் தள்ளி தள்ளி போகிறது என்கிறார். இது தேடல் பற்றின ஒரு கவிதை. பிரக்ஞை பூர்வ தேடலை பகடி பண்ணுகிறது. கடவுளை மிக உன்னிப்பாய் தேடுகிறவன் எப்போதும் தன்னில் தான் மீண்டும் வந்து முடிவான். மரம் தன் பலகையை உதறுவது போல் பக்தனும் தன் பக்தியை உதற வேண்டும். இக்கவிதை பிரமிளின் பாணியில் ஒரு தேடலை சொல்கிறது. அதே போல் மரம் முதலில் ஊரில் இருந்து தள்ளி இருக்கிறது. இது ஒரு முழுமையின்மை. அது தன்னை முழுமையாக்க பயணிக்கிறது. ஆனால் அது முடிவதில்லை. என்றாலும் கூட ஏன் சாத்தியப்படுவதில்லை, எப்படி சாத்தியப்படும் என நாம் யோசிக்கவும் கவிதையில் இடத்தை உருவாக்குகிறார் இசை. ஒரு மறைமுகமாக பூரணத்துவம் நோக்கிய பயணம் இதில் உள்ளது.

இரண்டாவது கவிதை பிரமிளின் பல்லிக் கவிதையை போன்றது. ரோஜா தரிசனம், கூந்தல் பேருண்மை. ரோஜாவால் கூந்தலை சேர முடியாது தான். ஆனால் அதேவேளை இசை பேருண்மையின் இருப்பையும் ஒத்துக் கொள்கிறார். அதாவது கூந்தல் இன்றி ரோஜா தனியாக இல்லை. அது போல் கடவுள் இன்றி மனிதனும் தனியாக இல்லை.

கீழ் வரும் கவிதை இன்றைய கவிதைகளை போல் விளையாட்டுத்தனமானது. ஆனால் முடிவில் ஒரு உன்னதம் நோக்கிய நகர்தல் உள்ளது. கிறிஸ் கெய்லுக்கு பந்து வீசுமாறு பணிக்கப்படும் கவிதைசொல்லிக்கு கெய்ல் சட்டென சிவனாக தோன்றுகிறார். தன் பந்தை திரும்பி வரவே முடியாதபடி வானத்திற்கு அப்பால் அடிக்க சொல்கிறார். அந்த திரும்பி வராத வானம் தான் பிரமிள் சொல்லும் ஓவியம் வரைகையில் மறையும் சுவர், “பாழாம் வெளி.
க்ரிஷ்கெய்லிற்கு பந்து வீசுதல்

நான்  இந்த  ஆட்டத்திலேயே  இல்லை
சொல்லப்போனால்  ஒரு  பார்வையாளனாக  கூட  இல்லை
மைதானத்திற்குள்   தரதரவென  இழுத்துவரப்பட்டு
பந்துவீசுமாறு  பணிக்கப்பட்டிருக்கிறேன்
எதிரே  க்ரிஷ்கெய்ல்  நின்றுகொண்டிருக்கிறார்
அணித்தலைவர்  ஓடிவந்து
பந்து  அந்தரத்திலேயே  இடப்பக்கம்  சுழன்று
மறுபடியும்  வலப்பக்கம்  சுழன்று
விழுமாறு  வீசச்சொன்னார்
நான்  அவரது  முகத்தையே  பார்த்தேன்
அவர்  திரும்பி  ஓடிவிட்டார்
எதிரே  க்ரிஷ்கெய்ல்  நின்றுகொண்டிருக்கிறார்
அவரின்  சடாமுடி  ருத்ரதாண்டவனை  குறித்து  நிற்கிறது
அடேய்  சுடலையப்பா.
இந்த  பந்தை  வானத்திற்கு  அடி
திரும்பி  வரவே  வராத  படிக்கு  வானத்திற்கு  அடி.
*
இசையின் கவிதையில் சர்ரியலிசத்தில் வருவது போன்ற அதிர்ச்சிகரமான வரிகள் வரும்.

அரூப விரல்

அப்போது என் முன்னே
இரண்டு விரல்கள் நீட்டப்பட்டன.
ஒன்று கொலை
மற்றொன்று தற்கொலை
நான் இரண்டுக்கும் நடுவே நீண்டிருந்த
அந்த அரூப விரலை பற்றினேன்.
இந்த வரிகளை
அந்த விரல் கொண்டே எழுதுகிறேன்.

கவிதைசொல்லியின் முன் இரு தேர்வுகள். ஒன்று கொலை. இன்னொன்று தற்கொலை. இரண்டு வகை மரணங்களுக்கு இடையே மூன்றாவதாய் ஒரு மரணம் வருகிறது. அது உன்னத படைப்பு நிலை. நிலைத்த படைப்பு அனுபவம். அதில் நீங்கள் அழிந்தபடியே இருக்கலாம். அதேவேளை அழியாமலும் இருப்பீர்கள். இக்கவிதையும் மரணம் எனும் சிதைவில் ஆரம்பித்து படைப்பு எனும் பூரணத்தில் முடிகிறது.

நளினக்கிளி கவிதையில் நெடுஞ்சாலையில் செல்லும் லாரியில் இருந்து ஒரு கிளீனர் வழி வேண்டி கை நீட்ட அந்த சைகை இசைக்கு பிரபஞ்ச உண்மையை நோக்கி உன்னத பயணத்திற்கான “ஒரு அற்புத நடன முத்திரையாக தோன்றுகிறது.

ஆனால் சமகால கவிதைகள் இதற்கு மாறாக சிதைவில் ஆரம்பித்து சிதைவிலே முடிகிறது.
உதாரணமாக பா.சரவணனின் “மரணத்தில் கால்கள் எனும் இக்கவிதையை பாருங்கள்.


மரணத்தின் கால்கள்தான்
எவ்வளவு மென்மையானவை


நேற்று
சாலையில் இறந்து கிடந்த
பூனையைப் போலவோ
அன்று
ரயில் நிலைய நடைபாதையில்
தவறி விழுந்து
மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தவனைப் போலவோ
தண்டவாளங்களிடையே
கருத்த துண்டங்களாய்க்
கிடந்தவளைப் போலவோ
ஆகிவிடாமல்

யானைபோல் குனிந்து
கால் மடக்கி
ஏறியபின்
எம்மை
வலிகாமல் தூக்கிச்செல்லும்
மரணத்தின் கால்கள்தான்
எவ்வளவு மென்மையானவை

மரணம் நம்மை அவ்வளவு சல்லிசாக ஆக்குகிறது. நாம் இறந்த பின் காலமும் அவ்வளவு சத்தமின்றி கடக்கிறது. இந்த மென்மையில் ஒரு குரூரமும் தவிப்பும் உள்ளது. ஆனால் மரணம் நம்மை தூக்கி எங்கே போகிறது என்பதில் இக்கவிதையில் எந்த குறிப்பும் இல்லை. மரணம் நம்மை தூக்கி செல்கிறது அவ்வளவு தான். இதுவே இசை என்றால் மரணம் நம்மை தும்பிக்கையில் தூக்கி வானத்திற்கு அப்பால் எறிவதாக எழுதி இருப்பார்.

அன்பரசு ஷண்முகத்தின் “உருமாறும் குதிரை கவிதையை பாருங்கள்.
மெல்லிய ஸ்பரிசங்கள்
குறும்புப் பார்வைகள்
தள்ளிவிட்டுக் கொண்டு
எதிரெதிரே உட்கார்ந்து
காய்கள் நகர்த்த
தயாராக இருக்கிறோம்
குதிரையை ஒரு கட்டம்
நகர்த்தி சிறு புன்னகை
பரிசளிக்கிறாய்.
பெரும்வெளியை கடக்கும ;
வேட்கையுடன் குதிரையாகி
போனோம்.
மாறி மாறி குதிரைகள்
சென்றுகொண்டேயிருந்தன.

ஒரு சதுரங்க ஆட்டமாக வாழ்க்கையை இக்கவிதை பார்க்கிறது. “பெரும்வெளியைக் கடக்கும் வேட்கையுடன் குதிரையாகி போட்டியிட்டு ஓடுகிறார்கள். ஆனால் இந்த விளையாட்டு சதுரங்கத்தின் விதிமுறைகளுக்குள், எளிய சதுரங்களின் எல்லைக்குள் முடிகிற ஒன்று. மாறி மாறி போட்டியிட்டு ஒருவரை ஒருவர் தாண்டி செல்வது அன்றி வாழ்க்கை பயணத்தில் எந்த இலக்குமில்லை என இக்கவிதை சுட்டுகிறது. இன்றைய வாழ்க்கையும் இது போல் விளையாட்டுக்கான விளையாட்டாக மாறி உள்ளது. ஒவ்வொரு நாளும் புதுபுது விதிமுறைகளையும், பரபரப்புகளையும், கற்பனை பயங்களையும் உருவாக்கி வாழ்வின் அர்த்தமின்மையை கடக்க முற்படுகிறோம். இந்த நுட்பமான சித்திரம் இக்கவிதையில் உள்ளது. இக்கவிதை “பிரபஞ்ச ஆட்டத்துடன் சதுரங்க ஆட்டத்தை இணைப்பதில்லை என்பதை கவனிக்கலாம். இது ஒரு எளிய ஆட்டம். சுவாரஸ்யத்திற்கான, விறுவிறுப்புக்கான ஆட்டம். எந்த உயரிய இலக்கும் அற்ற ஆட்டம். ஏனென்றால் இன்றைய வாழ்வில் நாம் எந்த உயரிய இலக்கையும் நம்புவதில்லை.

சமகால கவிதைகள் தமக்கு இலக்காக ஒரு முழுமுற்றான உண்மையை தீர்மானித்துக் கொள்வதில்லை. அவை வானத்திற்கு அப்பால் ஒரு பயணம் இருப்பதாய் நம்பவில்லை. இவ்விதத்தில் தான் இசையின் கவிதைகள் வேறுபடுகின்றன. இப்படித் தான் இசை ஒரு கவிஞராக நம் காலத்தில் தனித்து, சற்று தனியாக நிற்கிறார்.

இசைக்கு நகைமுரணமும் சுயபகடியும் கலந்த பாணி அற்புதமாக கைவருகிறது.

ஒரு கழிவிரக்க கவிதை

ஒரு கழிவிரக்க கவிதை
கண்ணைக் கசக்கிக் கொண்டு
என் முன்னே வந்து நிற்கிறது
அதன் மேனியெங்கும் கூந்தலின் துர்நாற்றம்
ஊசிப்போன வடையை தின்று வாழும் அதை
கண்டாலே எரிச்சலெனக்கு.
போய்த்தொலை சனியனே
கண்ணெதிரே இருக்காதே…”
கடுஞ்சொல்லால் விரட்டினேன்.
காலைத் தூக்கிக் கொண்டு
உதைக்கப் போனேன்.
அது தெருமுனையில் நின்று கொண்டு
ஒருமுறை திரும்பிப் பார்த்தது
நான் ஓடோடிப் போய் கட்டிக் கொண்டேன்

கவிதைசொல்லி கழிவிரக்கத்தை வெறுக்கிறார். அதனால் அதை திட்டுகிறார். துரத்துகிறார். ஆனால் பிறகு அவருக்கு கழிவிரக்கத்தின் மீதே கழிவிரக்கம் தோன்றுகிறது. அது அன்பாக மாறுகிறது. எனக்கு குழு அரசியல் பிடிக்காது என கூறுபவர்கள் ஒரு குழுவாக மாறுவார்கள் இல்லையா? எதிர்க்கலாச்சார எழுத்து என்று கலாச்சார எழுத்தை மறுப்பவர்கள் அதையே ஒரு கலாச்சாரமாக மாற்றுகிறார்கள் இல்லையா? இந்த முரணைத் தான் கிண்டல் செய்கிறார் இசை.

நம் காலத்து நுண்ணுணர்வு இல்லாவிட்டாலும் இசை ஒரு முக்கியமான கவிஞன். ஜேம்ஸ் வசந்தன் இளையராஜாவின் பாணியை கடைபிடிக்கிறவர் தான். நாம் அவரது பல பாடல்களை ரசிக்கிறோமே! இசை நமக்கு பிரமிளையும், ஆத்மாநாமையும், பிச்சமூர்த்தியையும், அப்பாஸையும் நினைவுபடுத்துகிறார். அந்த மரபின் நீட்சியாக, சினிமாத் திரையில் இருந்து வெளிக்குதித்த டினோசராக அவர் இருக்கிறார். அவரை பார்ப்கார்ன் கையுடன் அட என வியந்தபடி ரசிக்கிறோம். அவரது டினோசர் முட்டையை இங்கு கண்டடைய முயற்சி செய்திருக்கிறேன். இந்த எளிய மிருகங்களின் காலத்தில் நமக்கு பிரத்யேகமாய் டினோசர்களை பிடிக்கிறது. எனக்கும் இசையை பிடிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...