முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாட்டுக்கறி விருந்து போராட்டங்களின் பிரச்சனை என்ன?

என்னுடைய சமீபத்திய பகடியில் மாட்டுக்கறி உண்பதை எதிர்ப்பு வடிவமாய் சிக்கலை குறிப்பிட்டிருந்தேன். மாட்டுக்கறி உண்பவர்களை நான் கொச்சைப்படுத்துகிறேனா என சிலர் கேட்டார்கள். அவர்களுக்கானது இந்த விளக்கம்.
தொன்ம ஆய்வாளரும் எழுத்தாளருமான தேவ்தத் பட்நாயிக் இது குறித்து இந்து நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். மாட்டுக்கறியை தடை செய்ய வேண்டும் என இந்துத்துவா அமைப்பினர் கோரும் போது அதன் உள்ளர்த்தம் என்ன? இஸ்லாமியர் பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதற்காய் மாட்டுக்கறி உண்கிறார்கள் அல்லது அவர்கள் உண்பது உணர்வுகளை புண்படுத்துகிறது என்பது தான். முற்போக்காளர்கள் இத்தடையையும், தடையை ஒட்டின ஒடுக்குமுறையையும் எதிர்ப்பதற்காய் வெளிப்படையாய் மாட்டுக்கறி உண்ணும் போராட்டங்களை நடத்த துவங்கினார்கள். எழுத்தாளர் ஷோபா டே “நான் இப்போது மாட்டுக்கறி உண்கிறேன். முடியுமென்றால் என்னை இப்போது வந்து கொல்லுங்கள்” என டிவிட்டரில் எழுதினார். இதைத் தொடர்ந்து வேறு சில பிரபலங்களும் இவ்வடிவத்தை முன்னெடுத்தனர். சமூக வலைதளங்களில் பலரும் தாம் ஓட்டலிலும் வீட்டிலும் மாட்டுக்கறி உண்பதாய் படமெடுத்து வெளியிட்டனர். விரைவில் சென்னையில் பல அறிவுஜீவிகள், போராளிகள் பங்கெடுக்கும் மாட்டுக்கறி விருந்து கருத்தரங்கு ஒன்று நிகழப் போகிறது. மதியம் மாட்டுக்கறி விருந்து, காலை மற்றும் மாலையில் இந்துத்துவாவுக்கு எதிரான விவாதம். இது போன்ற போராட்டங்களில் நாம் மாட்டுக்கறியை உண்பதென்பது உண்மையில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு மகிழ்ச்சியையே அளிக்கும் என்பது பட்நாயிக்கின் வாதம். ஏனென்றால் இந்துக்களின் உணர்வுகளை மேலும் புண்படுத்துவதற்காய் இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் மாட்டுக்கறியை உண்கிறார்கள் என அவர்கள் வாதத்தை வளர்ப்பார்கள். அவர்களின் வாதத்திற்கு இப்படியான போராட்டங்கள் வலு சேர்க்கவே செய்யும்.
மாட்டுக்கறி உண்பது இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் என்பது ஒரு இந்துத்துவா discouse என்றால் நாம் அதை எதிக்கிறோம் எனும் பெயரில் உண்ணும் போது அதே discouseஇல் பங்கு பெற்று அதை செல்லத்தக்கதாக்குகிறோம்.
உணர்ச்சி பெருக்கில் யோசிக்கும் போது மாட்டுக்கறியை உண்பதாய் பிரகடனம் செய்வது ஒரு துணிச்சலான காரியமாய் தோன்றும். ஆனால் அது எதிர்தரப்புக்கு நியாயம் சேர்ப்பதாயே போய் முடியும்.
சரியான வழிமுறை என்ன? இந்துத்துவா அமைப்பினரின் “பசுமாடு புனிதம்” எனும் பரப்புரையின் அபத்தத்தை அம்பலப்படுத்துவதன் தான் சரியான வழிமுறை. நான் சமீபத்தில் பங்கேற்ற சன் நியூஸ் விவாத மேடை இதை சரியாக செய்தது. நண்பர் மனுஷ்யபுத்திரன் தொடர்ச்சியாக இந்த இந்துத்துவா அரசியல் “ஒரு போலியான கட்டமைப்பு” என நிறுவி வருகிறார். மேற்சொன்ன கருத்தரங்கும் மிக முக்கியமான எதிர்ப்பு வடிவமாய் இருக்கும். ஆனால் அங்கும் நாம் ஷோபா டே போல் “வாங்கடா நான் மாட்டுக்கறி தின்கிறதை தடுங்கடா” என முழங்கி நம் கத்தியால் நம் கையையே அறுத்துக் கொள்ள கூடாது. நிதானமாய் யோசித்தால் என் வாதம் உங்களுக்கு புரியும்.
மற்றொரு உதாரணம் தருகிறேன். ராமதாஸ் “காதல் நாடகம்” என ஒரு சர்ச்சையை கிளப்பினார். இதை ஒட்டி தன் கட்சியை பயன்படுத்தி இளவரசனை காவு கொடுத்தார். திட்டமிட்டு தலித் குடியிருப்புகளை தாக்க வழிவகுத்தார். தலித்துகள் திட்டமிட்டு மேல் சாதி பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார்கள் என்பது அவரது பரப்புரை. அப்போது “ஆமாம் அப்படித் தான் செய்வோம்” என நாம் பேசியிருந்தால் அது ராமதாஸின் வாதத்தை செல்லத்தக்கதாக்கியிருக்கும். ஆனால் நம் மீடியாவும் முற்போக்காளர்களும் இதை சரியாக கையாண்டார்கள். ஆனால் இந்துத்துவா பசுவதை தடை என்பது ராமதாஸின் பரப்புரை போல் வெளிப்படையானது அல்ல. அது நுணுக்கமானது. நாம் மிக எளிதாய் அந்த பொறியில் போய் மாட்டிக் கொள்கிறோம்.
கர்த்தர் “ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தை காட்டு” என சொன்னது தியாகத்திற்காகவோ அன்புக்காகவோ அல்ல. திரும்ப அடித்தால் நாம் எதிரியின் வன்முறை discourseஐ ஏற்று நியாயப்படுத்தி விடுவோம் என்பதால் தான். நான் இதை ஒரு முக்கியமான அரசியல் அறிவுரையாகத் தான் பார்க்கிறேன். ஆன்மீக கூற்றாக அல்ல.
“மாட்டுக்கறி சாப்பிட்டு விட்டு வீட்டு செல்ல நாய் ஊளையிட்டால் அரசாங்கம் நடுங்காது” என நான் எழுதியது மிகையாக, புண்படுத்தும் நோக்கம் கொண்டதாய் தோன்றலாம். ஆனால் அதன் அடிப்படை கருத்து மேற்சொன்ன விளக்கம் தான். உடனே போராளிகளை “நாய்” என்று கூறி விட்டாய் என நீங்கள் கொந்தளித்தால் உங்களை நான் காப்பாற்ற முடியாது. எல்லாவற்றையும் நேரடியான பொருளில் தான் எடுத்துக் கொள்வேன் என அடம் பிடித்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...